நாளை(11.1.2017) என் தெய்வம் விண்ணில் பிறந்த நான்காவது வருடம்.என் அக்கா வெர்ஜின் அவர்கள் இறை வேண்டலிலும் நற்செயல்கள் செய்வதிலும் சிறந்து விளங்கியவர்.இந்த நாளில் நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.
நீண்ட நேரமாகப் பாலைவனத்தில் அலைந்து திரிந்த இளைஞன் ஒருவன் தூரத்தில் ஒரு காட்டுப் பங்களா இருப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் அங்கு யாராவது இருக்கிறார்களா? என அவன் பார்க்கச் சென்றான். அவன் அதன் அருகே சென்றதும், ஒரு தோட்டத் தொழிலாளி நிற்பதைக் கண்டான். உடனே அவன் அவரிடம், “ஐயா! இது என்ன இடம்?, இங்கு யார் இருக்கிறார்?” என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தோட்டத் தொழிலாளி, “இது இளந்துறவிகள் பயிற்சி பெறும் துறவறமடம், இங்கே இளந்துறவிகளும், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் ஒரு பெரிய துறவியும் இருக்கிறார்கள்” என்று பதில்கூறினார். அதற்கு அந்த இளைஞன், “ஐயா! இந்த துறவற மடத்தை உள்ளே சென்று ஒரு முறை பார்த்துவிட்டு வரலாமா?” என்று கேட்டான். “ஓ! தாராளமாக, நீங்கள் உள்ளே சென்று பார்த்துவிட்டு வரலாம்” என்றார் அந்த தோட்டத் தொழிலாளர்.
துறவுமடத்தின் உள்ளே சென்ற இளைஞன் அங்கே இருக்கும் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.
ஓர் அறையில் வயதான துறவி, தன்னுடைய மாணவர்களுக்கு – இளந்துறவிகளுக்குப் - போதித்துக்கொண்டிருந்தார். உடனே அந்த இளைஞன் வயதான துறவியிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, “உங்களுடைய போதனையை நானும் இங்கே அமர்ந்து கேட்கட்டுமா?” என்றான். துறவியும் அதற்குச் சரியென்று சொல்ல, அவன் அந்த அறையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து துறவியின் போதனையை காதுகொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.
துறவி தொடக்கத்தில் ஜெபத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினார், அதன்பின்னர் எப்படி தியானம் செய்வது என்பதைக் குறித்து போதித்தார். எல்லாவற்றையும் அவன் பொறுமையாகவும் மிகவும் கவனமாகவும் கேட்டுக்கொண்டிருந்தான்.
மாலை வேளையானதும் துறவி தன்னுடைய மாணவர்களிடம், “இத்தோடு இன்றைய போதனை முடிந்துவிட்டது. இப்போது நாம் பக்கத்து ஊரில் சேதமடைந்து கிடக்கும் சாலையை செப்பனிடச் செல்லலாமா? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அனைவரும் சரி என்று பதில்கூறினார்கள். இளைஞனால் மட்டும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவன் நேராகத் துறவியிடம் சென்று, “துறவிகள் என்றால் ஜெபம், தவம், தியானம் என்றுதானே இருப்பார்கள், இப்படி சாலையுமா அமைப்பார்கள்?” என்றான். அதற்கு அந்த வயதான துறவி, “ நாங்கள் இதுபோன்ற சேவைகளைச் செய்யவில்லை என்றால், நாங்கள் செய்யும் ஜெபம், தவம், தியானம் அத்தனையும் வீண்” என்றார். துறவியின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தவனாய் அவன் அவர்களோடு சேர்ந்து பக்கத்து ஊரில் இருந்த சேதமடைந்த சாலையைச் செப்பனிடச் சென்றான்.
ஜெபமும் வாழ்வும் இணைந்து போகவேண்டும். அதுதான் உண்மையான ஆன்மீக வாழ்வு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இறைவேண்டலும் நற்செயல்களும் (நல்வாழ்வும்) கிறிஸ்தவத்தின் இரண்டு கண்கள். அதைத்தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்கு போதித்து வாழ்ந்து காட்டுகின்றார்.
இயேசு தொழுகைக்கூடத்தில் போதித்து முடித்தவுடன் சீமோன் பேதுருவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே காய்ச்சலால் படுத்துக் கிடந்த சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுகின்றார். அது மட்டுமல்லாமல் மாலை வேளையில் அங்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு பிணியாளர்களைக் குணப்படுத்துகின்றார்.
மீண்டுமாக அவர் தனிமையான ஓரிடத்திற்குச் சென்று இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றார். இவ்வாறு அவருடைய வாழ்க்கை ஜெபம், நற்செயல்கள் மீண்டுமாக ஜெபம் என்று மாறி மாறிப் போகின்றது.
இங்கே ஒரு காரியத்தை நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அது என்னவெனில், இயேசு கிறிஸ்து இறைமகன்; எல்லாம் வல்லவர்; அவர் எதற்கு ஜெபிக்கவேண்டும் என்று நாம் கேட்கலாம்.
ஆனால் அவருக்கும் ஜெபமானது தேவையான ஒன்றாக இருக்கின்றது. அதைதான் அவருடைய வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இவ்வாறு குறிப்பிட்டார், “நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் நான் செய்யும் ஜெபத்திலிருந்தே பெறுகின்றேன்” என்று. ஆம், நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் வல்லமையையும் ஜெபம் மட்டுமே தரமுடியும்.
அதே நேரத்தில் ஜெபத்திலிருந்து நாம் பெறும் ஆற்றலையும் வல்லமையையும் பிறருடைய நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவைப் போன்று முழு மனிதராக மாறமுடியும், இல்லையென்றால் நாமும் பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் போன்றுதான் இருக்க முடியும்.
அவர்கள் ஜெபித்தார்கள், போதித்தார்கள், ஆனால் போதித்ததை வாழ்வாக்கவில்லை. நாம் பரிசேயர்களை, மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்லாமல், இயேசுவைப் போன்று ஜெப வீரர்களாகவும் அதே நேரத்தில் செயல்வீரர்களாகவும் வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்க்கை நிறைவாகப் பெறுவோம்.
“ஜெபமில்லாத வாழ்க்கை கூரையில்லாத வீட்டிற்குச் சமம். நற்செயல்கள் இல்லாத வாழ்க்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம்”.