Monday 16 October 2017

உள்ளத் தூய்மை

அமெரிக்காவைச் சார்ந்த ஜெனே துன்னி (Gene Tunney) என்பவர் பளுதூக்கும் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றதும் நீயூயார்க்கில் இருந்த அவருடைய நல விரும்பிகள் சிலர் அவரை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். ஜெனே துன்னியும் அவர்களுடைய அழைப்பினை ஏற்று விருந்துக்குச் சென்றிருந்தார்.
விருந்து மிகவும் தடபுடலாக நடந்தது. அவருடைய நலவிரும்பிகள் அவரை விழுந்து விழுந்து கவனித்தார்கள். அந்த விருந்து முடிந்ததும் அரை குறை ஆடையுடன் ஒருசில பெண்கள் ஆடும் அரைநிர்வாண ஆட்டக் காட்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெனே துன்னிக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. அவர் ஏதோ பாராட்டுக்கூட்டத்தைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், நேரம் ஆனதும் மேடையில் சில பெண்கள் அரை குறை ஆடையுடன் தோன்றி, ஆட்டம் போடத் தொடங்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ஜெனே துன்னி விழாக் குழுவினரிடம், “நான் இங்கு வந்தது நீங்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்குத்தான். இப்படி அரைகுறை ஆடையோடு ஆடும் பெண்களின் ஆட்டத்தினால் அவமானத்திற்கு உள்ளாக அல்ல; எந்தவொரு நிகழ்விலும் தூய்மையானது காப்பாற்றப்படவேண்டும். அது இல்லாதபோது இங்கு நான் இருந்து என்ன பயன்” என்று சொல்லிவிட்டு, அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
அவரைப் பின்தொடர்ந்து, அந்த விருந்துக்கு வந்திருந்த ஒருசில முக்கியப் பிரமுகர்களும் அங்கிருந்து கிளம்பிப் போக, கடைசியில் அந்த அரை நிர்வாணக் காட்சியானது ரத்து செய்யப் பட்டது.
வெளிப்புறத்தில் மட்டும் நாம் தூய்மையைக் கடைப்பிடிப்பவர்களாக அல்லாமல், உட்புறத்திலும் – உள்ளத்திலும் – நாம்  தூய்மையைக் கடைபிடிக்கவேண்டும் என்னும் உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பளுதூக்கும் போட்டியில் உலகச் சாம்பியனாகிய விளங்கிய ஜெனே துன்னி வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் தூய்மையான விளங்கினார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவருந்தச் செல்கிறார். இயேசு உணவருந்தச் சென்ற இடத்தில், அவர் கைகளைக் கழுவாமல் பந்தியில் அவர்வதைப் பார்த்த பரிசேயர் வியப்படைகின்றார். அப்போது இயேசு அவரிடம், “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகின்றீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்” என்கிறார்.
இயேசு தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயரிடம் கூறிய வார்த்தைகள் ஆழமான சிந்தனைக்குரியவை. யூதர்கள் அதிலும் குறிப்பாக பரிசேயர்கள் வெளியடையாளங்களை பின்பற்றுவதிலும், மூதாதையர்களின் சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். இப்படி அவர்கள் செய்ததன் வழியாக தங்களை அவர்கள் மக்களுக்கு முன்பாக தூயவர்கள் போன்று காட்டிக்கொண்டார்கள். ஆனால, உட்புறத்திலோ – உள்ளத்திலோ – அவர்கள் தீமை நிறைந்தவர்களாக இருந்தார்கள்; சாதாராண ஏழை எளிய மக்களையும் கைம்பெண்களையும் வஞ்சித்து அவர்களிடமிருந்து உடைமைகளை அபகரித்துக் கொண்டார்கள். அதனால் இயேசு அவர்களை வெளிப்புறத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்றொரு அழைப்பினைத் தருகின்றார்.
எதற்காக ஆண்டவர் இயேசு உள்ளத் தூய்மையினை வலியுறுத்திப் பேசுகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். உள்ளத்தின் நிறைவே வாய் பேசும் என்று சொல்வார்கள். வெளிப்புறத்தை எவ்வளவுதான் அழகு படுத்திக்கொண்டாலும் உள்ளத்தில் இருக்கின்ற வஞ்சனை எண்ணம், வெறுப்பு, பொறாமை, கயமை போன்றவை எல்லாம் என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டு அது மனிதனையே பாழ்படுத்திவிடும் என்பதால்தான் முதலில் உள்ளத்தினைத் தூய்மையாக வைத்திருக்கச் சொல்கின்றார்.
அது மட்டுமல்லாமல் எல்லாம் வல்ல கடவுள் தூயவர் (லேவி 19:2), எனவே அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூயவராக இருக்கவேண்டும் என்பதால் இயேசு வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்றொரு வேண்டுகோள் விடுகின்றார்.
பல நேரங்களில் நாம் வெளிப்புறத்தை அழுகுபடுத்த எவ்வளவோ செலவு செய்கின்றோம். ஆனால், உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஒன்றுமே செய்வதில்லை. உள்ளத்தை தூய்மையானதாக மாற்றினால், இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வே தூய்மையானதாக மாறிவிடும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
எனவே, நாம் விண்ணகத் தந்தையைப் போன்று தூயவர்களாக இருப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Sunday 15 October 2017

இயேசுவை நம்பாது அடையாளம் கேட்கும் மானிடர்கள்!

ஆலன் ஸ்மித் என்கிற ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய கதை இது.
ஒரு ஊரில் இளைஞன் இருந்தான் ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த ஒரு விவசாயின் மகள்மீது காதல் கொண்டான். அவளும் அந்த இளைஞனை அதிகமாக அன்பு செய்தாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள். எனவே, இளைஞன் அந்த இளம்பெண்ணின் தந்தையிடம் சென்று, “நான் உங்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள ஆசையாக இருக்கின்றேன். அதற்கு உங்களுடைய விரும்பம் என்ன?” என்று கேட்டான்.
விவசாயியோ அந்த இளைஞனிடம், “நான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்துத் தருவதில் எனக்கு மனப் பூர்வமான சம்மதம்தான், ஆனால், நான் உனக்கு ஒரு போட்டி வைக்கிறேன், அந்தப் போட்டியில் நீ வெற்றி பெற்றால்தான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்துத் தருவேன். போட்டியின் விதிமுறை இதுதான் ‘நீ புல்வெளியில் நின்றுகொள்ளவேண்டும். நான் தொழுவத்திலிருந்து மூன்று காளை மாடுகளை ஒவ்வொன்றாக திறந்துவிடுவேன். நீ மூன்று காளை மாடுகளில் ஏதாவது ஒரு காளை மாட்டின் வாலைப் பிடித்தாலே போதும்” என்றார். இளைஞனும் அதற்குச் சம்மதம் தெரிவித்து போட்டிக்குத் தயாரானான்.
விவசாயி சொன்னது போன்றே அந்த இளைஞன் புல்வெளியில் நின்றுகொண்டான். அப்போது விவசாயி தொழுவத்திலிருந்து ஒரு காளைமாட்டை அவிழ்த்து விட்டார். அந்தக் காளை மாடு பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகவும், மூர்க்கத்தனம் நிரம்பியதாகும் கொம்புகள் மிகவும் கூர்மையாகும் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துப் பயந்துபோன அந்த இளைஞன், சரி இந்தக் காளை மாட்டை விட்டுவிடுவோம், அடுத்த காளை மாட்டை எப்படியும் பிடித்து விடுவோம் என்று முடிவு செய்து, முதலில் வந்த காளை மாட்டை விட்டுவிட்டான்.
இளைஞன் முதலில் வந்த காளை மாட்டின் வாலை பிடிக்காமல் விட்டுவிட்டதால் இரண்டாவது காளை மாட்டை அவிழ்த்துவிட்டார் அந்த விவசாயி. அந்தக் காளைமாடோ முதலில் வந்த காளைமாட்டை விடவும் பெரிதாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அவன் அந்த காளைமாட்டைப் பார்த்ததுமே பயந்து நடுங்கினான். இதனுடைய வாலை பிடிப்பது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் என்று நின்று அந்தக் காளைமாட்டின் வாலையும் பிடிக்காமல் விட்டுவிட்டான்.
இறுதியாக விவசாயி மூன்றாவது காளை மாட்டை அவிழ்த்துவிட்டார். அதுவோ பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து போய் காணப்பட்டது. இந்தக் காளைமாட்டை எப்படியும் பிடித்துவிடலாம் என்ற முடிவோடு இருந்த இளைஞன் அந்த காளைமாட்டைப் பிடிப்பதற்கு மிகவும் தயாராக இருந்தான். அந்தக் காளைமாடு அருகே வந்ததும், அதன்மீது பாய்ந்து அந்தக் காளைமாட்டின் வாலைப் பிடிப்பதற்கு முயன்றான். ஆனால், அதற்கு வாலே இல்லாததால், தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு தன் காதலியை மணக்க முடியாமல் வீடு திரும்பினான்.
நம்முடைய வாழ்க்கையை நாம் நல்லமுறையியல் வாழ்வதற்கு கடவுள் நமக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தருகின்றார். ஆனால், நாமோ இன்னும் வாய்ப்புகள் வரும், வாய்ப்புகள் வரும் என்று வரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு கடைசியில் நாம் எந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தாமல் வாழக்கையையே கேள்விக்குரியதாக மாற்றிவிடுகின்றோம் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் வாழ்வினை வழங்க வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்பாமல், அவரிடம் யூதர்கள் சிலர் அடையாளம் கேட்கின்றார்கள். அவர்கள் கேட்கக் கூடிய அடையாளம் என்பது சாதாரணமானது கிடையாது. அவை வானத்திலிருந்து மின்னல்கள்  தோன்றச் செய்வது, கடலை இரண்டாகக் கிழிப்பது இது போன்ற அடையாளங்கள். இப்படிப்பட்ட அடையாளங்களைச்  செய்தால்தான் இயேசுவை மெசியா என நம்பி ஏற்றுக்கொள்வோம் என்ற ரீதியில் அவர்கள் அடையாளம் கேட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ அவர்களிடம், “உங்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் தரப்பட மாட்டது” என்று சொல்கின்றார். ஏனென்றால் யோனா அறிவித்த இறைவார்த்தையைக் கேட்ட நினிவே நகர மனம் மாறினார்கள். இயேசுவோ யோனாவை விடப் பெரியவர். அப்படியிருந்தும் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு மக்கள் மனம் மாறாமல் இருந்ததுதான் மிகவும் வியப்பாக இருக்கின்றது.
அன்று யூதர்கள் மனம்மாறுவதற்கு ஆண்டவர் இயேசுவே இறங்கி வந்து, அவர்களுக்கு நற்செய்தி, அவர்கள் மனம்மாறி வாழ ஒரு வாய்ப்பினைக் கொடுத்தார். ஆனால் அவர்கள் திருந்தாமலே போனார்கள். அன்று போல் இன்றும் நாம் நல்வழியில் நடக்க இறைவார்த்தை, திருவழிபாடுகள் போன்ற வாய்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தாமல் போனால், கடவுளுடைய சாபத்தைப் பெற்றுக்கொள்வது என்பது உறுதி.
எனவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை, கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்துவோம்; இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.