Sunday 15 October 2017

இயேசுவை நம்பாது அடையாளம் கேட்கும் மானிடர்கள்!

ஆலன் ஸ்மித் என்கிற ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய கதை இது.
ஒரு ஊரில் இளைஞன் இருந்தான் ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த ஒரு விவசாயின் மகள்மீது காதல் கொண்டான். அவளும் அந்த இளைஞனை அதிகமாக அன்பு செய்தாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள். எனவே, இளைஞன் அந்த இளம்பெண்ணின் தந்தையிடம் சென்று, “நான் உங்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள ஆசையாக இருக்கின்றேன். அதற்கு உங்களுடைய விரும்பம் என்ன?” என்று கேட்டான்.
விவசாயியோ அந்த இளைஞனிடம், “நான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்துத் தருவதில் எனக்கு மனப் பூர்வமான சம்மதம்தான், ஆனால், நான் உனக்கு ஒரு போட்டி வைக்கிறேன், அந்தப் போட்டியில் நீ வெற்றி பெற்றால்தான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்துத் தருவேன். போட்டியின் விதிமுறை இதுதான் ‘நீ புல்வெளியில் நின்றுகொள்ளவேண்டும். நான் தொழுவத்திலிருந்து மூன்று காளை மாடுகளை ஒவ்வொன்றாக திறந்துவிடுவேன். நீ மூன்று காளை மாடுகளில் ஏதாவது ஒரு காளை மாட்டின் வாலைப் பிடித்தாலே போதும்” என்றார். இளைஞனும் அதற்குச் சம்மதம் தெரிவித்து போட்டிக்குத் தயாரானான்.
விவசாயி சொன்னது போன்றே அந்த இளைஞன் புல்வெளியில் நின்றுகொண்டான். அப்போது விவசாயி தொழுவத்திலிருந்து ஒரு காளைமாட்டை அவிழ்த்து விட்டார். அந்தக் காளை மாடு பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகவும், மூர்க்கத்தனம் நிரம்பியதாகும் கொம்புகள் மிகவும் கூர்மையாகும் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துப் பயந்துபோன அந்த இளைஞன், சரி இந்தக் காளை மாட்டை விட்டுவிடுவோம், அடுத்த காளை மாட்டை எப்படியும் பிடித்து விடுவோம் என்று முடிவு செய்து, முதலில் வந்த காளை மாட்டை விட்டுவிட்டான்.
இளைஞன் முதலில் வந்த காளை மாட்டின் வாலை பிடிக்காமல் விட்டுவிட்டதால் இரண்டாவது காளை மாட்டை அவிழ்த்துவிட்டார் அந்த விவசாயி. அந்தக் காளைமாடோ முதலில் வந்த காளைமாட்டை விடவும் பெரிதாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அவன் அந்த காளைமாட்டைப் பார்த்ததுமே பயந்து நடுங்கினான். இதனுடைய வாலை பிடிப்பது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் என்று நின்று அந்தக் காளைமாட்டின் வாலையும் பிடிக்காமல் விட்டுவிட்டான்.
இறுதியாக விவசாயி மூன்றாவது காளை மாட்டை அவிழ்த்துவிட்டார். அதுவோ பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து போய் காணப்பட்டது. இந்தக் காளைமாட்டை எப்படியும் பிடித்துவிடலாம் என்ற முடிவோடு இருந்த இளைஞன் அந்த காளைமாட்டைப் பிடிப்பதற்கு மிகவும் தயாராக இருந்தான். அந்தக் காளைமாடு அருகே வந்ததும், அதன்மீது பாய்ந்து அந்தக் காளைமாட்டின் வாலைப் பிடிப்பதற்கு முயன்றான். ஆனால், அதற்கு வாலே இல்லாததால், தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு தன் காதலியை மணக்க முடியாமல் வீடு திரும்பினான்.
நம்முடைய வாழ்க்கையை நாம் நல்லமுறையியல் வாழ்வதற்கு கடவுள் நமக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தருகின்றார். ஆனால், நாமோ இன்னும் வாய்ப்புகள் வரும், வாய்ப்புகள் வரும் என்று வரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு கடைசியில் நாம் எந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தாமல் வாழக்கையையே கேள்விக்குரியதாக மாற்றிவிடுகின்றோம் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் வாழ்வினை வழங்க வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்பாமல், அவரிடம் யூதர்கள் சிலர் அடையாளம் கேட்கின்றார்கள். அவர்கள் கேட்கக் கூடிய அடையாளம் என்பது சாதாரணமானது கிடையாது. அவை வானத்திலிருந்து மின்னல்கள்  தோன்றச் செய்வது, கடலை இரண்டாகக் கிழிப்பது இது போன்ற அடையாளங்கள். இப்படிப்பட்ட அடையாளங்களைச்  செய்தால்தான் இயேசுவை மெசியா என நம்பி ஏற்றுக்கொள்வோம் என்ற ரீதியில் அவர்கள் அடையாளம் கேட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ அவர்களிடம், “உங்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் தரப்பட மாட்டது” என்று சொல்கின்றார். ஏனென்றால் யோனா அறிவித்த இறைவார்த்தையைக் கேட்ட நினிவே நகர மனம் மாறினார்கள். இயேசுவோ யோனாவை விடப் பெரியவர். அப்படியிருந்தும் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு மக்கள் மனம் மாறாமல் இருந்ததுதான் மிகவும் வியப்பாக இருக்கின்றது.
அன்று யூதர்கள் மனம்மாறுவதற்கு ஆண்டவர் இயேசுவே இறங்கி வந்து, அவர்களுக்கு நற்செய்தி, அவர்கள் மனம்மாறி வாழ ஒரு வாய்ப்பினைக் கொடுத்தார். ஆனால் அவர்கள் திருந்தாமலே போனார்கள். அன்று போல் இன்றும் நாம் நல்வழியில் நடக்க இறைவார்த்தை, திருவழிபாடுகள் போன்ற வாய்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தாமல் போனால், கடவுளுடைய சாபத்தைப் பெற்றுக்கொள்வது என்பது உறுதி.
எனவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை, கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்துவோம்; இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


No comments:

Post a Comment