Friday 7 October 2016

பேறுபெற்றோர் யார்?

ஓர் ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஊருக்கு வெளியே பெரிய காய்கறித் தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டத்தில் வேலையாட்கள் இருவர் இருந்தார்கள்.

அந்த இருவரில் ஒருவன் தன்னுடைய எஜமானனைப் பார்த்தவுடன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவான். அவரிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி அவருக்கே தெரியாமல் காரியம் சாதிப்பான். ஆனால் அவர் அங்கிருந்து போய்விட்டால் அவ்வளவுதான், ஒருவேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாய் சுற்றுவான். அது என்னவோ அவனைத் தான் எஜமானனுக்குப் பிடித்திருந்தது.

இன்னொரு வேலையாளோ தன் வேலையுண்டு, காரியமுண்டு என்று இருப்பான். கடின உழைப்பாளி. தன்னுடைய எஜமானன் வந்தாலும்கூட சிறிதாக மரியாதை செலுத்துவதோடு சரி, வேறு ஒன்றும் செய்யமாட்டான். இதனால் அந்த பணக்காரருக்கு இரண்டாவது வேலையாளைக் கொஞ்சம் பிடிக்கவில்லை. “என்ன இவன், நாம் வருவதைக்கூட கண்டுகொள்ளாமல் இப்படி இருக்கிறானே” என்று உள்ளுக்குள் புழுங்கித் தள்ளினார்.

நாட்கள் சென்றன. ஒருநாள் அந்த பணக்காரர் திடிரென்று தன்னுடைய காய்கறித் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அங்கே முதலாவது வேலையாளோ, தண்ணீர் தோட்டத்திற்குப் பாய்ந்து, அருகே இருந்த தரிசு நிலத்திற்கு பாய்வதைக்கூட அறியாமல், ஒரு மரத்திற்குக்கீழே துண்டை விரித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் அந்த பணக்காரருக்கு சரியான கோபம் வந்தது.

உடனே அருகே கிடந்த ஒரு கம்பை எடுத்து,  அவனை அடிஅடியென அடித்தார். “உன்னை நான் மிகவும் நம்பினேனே. நீ இப்படி நடந்துகொள்வாய் என்று கொஞ்சமும் நம்பவில்லை” என்று சொல்லி, அவனை வேலையிலிருந்து தூக்கினார்.

ஆனால் அவர் இரண்டாவது வேலையாளைப் பார்த்தபோது, அவன் தன்னுடைய வேலையை மிக மும்முரமாகச் செய்துகொண்டிருந்தான். தோட்டத்திலிருந்த காய்கறிகளை எல்லாம் பறித்து, சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த்தும் அவருக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. உடனே அவர் அந்த பணியாளரிடம் சென்று, “இதுவரை உன்னை நான் தவறாக நினைத்துவிட்டான். ஆனால் இப்போதுதான் புரிந்தது நீ எவ்வளவு கடின உழைப்பாளி, பொறுப்புள்ளவன் என்று. எனவே நான் உன்னை இந்த காய்கறித் தோட்டம் முழுமைக்கும் பொறுப்பாளராக நியமிக்கிறேன்” என்றார்.

இது விவேகானந்தர் சொன்ன ஓர் உருவகக் கதை. இந்தக் கதையில் வரும் எஜமானன் கடவுள், எஜமானனைக் கண்டதும் குலைவதும், அவரைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டு, அவர் சென்றபிறகு ஒருவேலையும் செய்யாது இருக்கின்ற வேலையாள் கடவுளின் வார்த்தையைக் கேட்டுவிட்டு அத்தோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று திருப்திகொள்பவர்களைப் போன்றவர்கள். எஜமானன் கொடுத்த வேலையை கண்ணும் கருத்துமாய் செய்கின்ற வேலையாளோ இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடைய வாழ்வை அமைத்துக்கொள்பவர்களைப் போன்றவர்கள். இவர்கள்தான் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்பவர்கள் என்பார் அவர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக் கொண்டிருத்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர் எழுந்து, “உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கிறார். அதற்கு ஆண்டவர் இயேசுவோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பவர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்கிறார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு ஒருசில உண்மைகளை உணர்த்துக்கின்றன. அதில் முதலாவது நாம் இயேசுவின் உறவினர் என்பதாலோ அல்லது கிறிஸ்தவர்கள் என்பதால் மட்டும் பேறுபெற்றவர்கள் ஆகிவிடமுடியாது. மாறாக இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும்போதுதான் பேறுபெற்றவர்கள் ஆகமுடியும் என்பதாகும்.

ஏனென்றால் யூதர்கள் தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கடவுளின் மக்கள் என நினைத்துக்கொண்டு எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் தாங்கள் கடவுளின் மக்கள்தான் என்று நினைத்து வாழ்ந்தார்கள். இதற்கு திருமுழுக்கு யோவான் மிகத் தெளிவாக பதிலளிக்கிறார். “ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார் ( மத் 3:9). இயேசுவும் இதே கருத்தைதான் இங்கே வலியுறுத்துகிறார். ஆகவே நம் குலப் பெருமையோ அல்லது நாங்கள் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க முயல்வோம்.

இயேசு கூறும் இரண்டாவது உண்மை. தன்னைப் பெற்றெடுத்த அன்னை மரியாள் தன்னை பெற்றெடுத்தனால் மட்டும் பேறுபெற்றவள் இல்லை, இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்ததாலும் பேறுபெற்றவர் ஆகிறார் என்பதாகும். ஆம், அன்னை மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் இறைவார்த்தையின்படி நடந்தவள். அதனால் அவள் இரண்டு  விதங்களில் பேறுபெற்றவள் ஆகிறாள்.

ஆகவே, நாம் யூதர்களைப் போன்று பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல் இறைவார்த்தையைக் கேட்டு, அன்னை மரியைப் போன்று நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Tuesday 4 October 2016

தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்!

இரண்டாம் உலகப்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அப்போது ஹிட்லரின் நாசிப் படையானது பிரான்சு நாட்டின் கடற்கரைப் பகுதியான டன்கிர்க்கை சுற்றி வளைத்துக்கொண்டது. அதில் மூன்று லட்சத்திற்கும் மேலாக மக்கள் இருந்தார்கள். இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டுப் படைவீரர்களும் ஏராளமானவர்கள் அங்கே தங்கி இருந்தார்கள். மிகக் குறைந்த அளவு படைவீரர்களை வைத்துக்கொண்டு நாசிப்படையை எப்படி எதிர்கொள்வதென்று நேசநாடுகளான பிரான்சும், இங்கிலாந்தும் செய்வதரியாமல் விழித்தார்கள்.

நாசிப்படை டன்கிர்க்கை சுற்றிவளைத்துக் கொண்ட செய்தி பிரான்சு நாட்டு அதிபருக்கும், இங்கிலாந்து நாட்டு அதிபரான வின்சென்ட் சர்ச்சிலுக்கும் சென்றது. அப்போது வின்சென்ட் சர்ச்சில் தன்னுடைய நாட்டு மக்களிடம் வானொலி வழியாக இவ்வாறு பேசினார்.

“அன்பு மக்களே நம்முடைய படைவீரர்களும், மக்களும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்காக இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் ஜெபம் செய்வதுதான். எனவே அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தீயோரிடமிருந்து விடுபடவேண்டும் என்று ஜெபியுங்கள்” என்றார். அதிபரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் டன்கிர்க் பகுதி மக்களுக்காக ஜெபித்தார்கள்.

அது கோடைகாலம். வெயில் வேறு வெளுத்து வாங்கியது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக டர்கிர்க் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டது. எதிரே யார் இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாட்டுப் போர்க்கப்பல்கள் டன்கிர்க் பகுதியில் நுழைந்து, நாசிப் படையினருக்குத் தெரியாமல் அங்கிருந்து மக்கள் அனைவரையும் வேறு இடங்களுக்கு இடம்மாற்றினார்கள். அவர்கள் மக்கள் அனைவரையும் இடமாற்றுவதற்கும் பனிப்பொழிவு நின்றுபோவதற்கும் சரியாக இருந்தது. ஒருவார காலம் இருந்த பனிப்பொழிவில் நேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் டன்விர்க் பகுதியில் இருந்த எல்லாரையும் அப்புறப்படுத்தினார்கள்.

பனிப்பொழிவு முடிந்து மக்களைப் பார்த்த நாசிப் படையினருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆம், டன்கிர்க் பகுதியில் யாருமே இல்லை.

ஆபத்திலிருந்து தங்களுடைய நாட்டுமக்களை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டியதால், இறைவன் அவர்களை அற்புதமாக எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார். டன்கிர்க் பகுதியில் நடந்த இந்த நிகழ்வு “Dankirk Miracle” என்று அழைக்கப்படுகிறது. இது வரலாற்றில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு.

துன்ப வேளையில் இறைவனை நோக்கி அழைத்தால் இறைவன் நம்முடைய வேண்டுதலுக்குப் பதில் தருவார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரை அணுகி வந்து, “யோவான் தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல்  எங்களுக்கும் கட்டுக்கொடும்” என்கிறார்கள்.. இதைக் கேட்ட இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத்தருகிறார்.

முதலாவதாக ஜெபம் என்றால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போவது கிடையாது, மாறாக குறைவான வார்த்தைகளாக இருந்தாலும் அவற்றை மனமுருகிச் சொல்லவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுக்கிறார். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நீண்ட நேரம் ஜெபித்தால்தான் ஜெபம் அல்லது ஜோடனையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் ஜெபம் என்ற தவறான கற்பிதத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியை நமக்கு முன் வைக்கிறார். அதுதான் குறைவான வார்த்தைகளானாலும், அவற்றை மனமுருகி ஜெபிக்கவேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து ஜெபிக்கக் கற்றுத் தரும்போது இறைவனை தந்தையே என்று அழைக்கக் கற்றுத்தருகிறார். இது யூத மரபைப் பொறுத்தளவில் மிகப்பெரிய புரட்சி என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் இறைவனின் திருப்பெயரைச் சொல்வது மிகப்பெரிய குற்றம் என்று நினைத்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படிப்பட்ட எண்ணத்தை புரட்டிப் போடுகிறார். இறைவனை அப்பா தந்தையே என அழைக்கச் சொல்லித்தருகிறார்.

நிறைவாக இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தைப் பொறுத்தளவில் முதல் பகுதி இறைப்புகழ்ச்சியாகும், இரண்டாவது பகுதி நமது தேவைகளுக்காக மன்றாடுவதாகவும் இருக்கின்றது. எப்போது நாம் இறைவனைப் புகழ்ந்து, அவர் செய்த நன்மையாக நன்றி செலுத்துகிறோமோ அப்போதுதான் நமது ஜெபம் முழுமை பெறும். வெறுமனே வேண்டுதல்களை அடுக்கிக்கொண்டே போவதால் மட்டும் நம்முடைய ஜெபம் முழுமை பெறாது.

எனவே முதலில் நாம் இறைவனைப் புகழ்வோம், அதன்பிறகு அன்றாட தேவைகளுக்காக மன்றாடுவோம்; தீயோனிடமிருந்து விடுவிக்கும்படியாக வேண்டுவோம். அப்போது இறைவன் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து நமது வாழ்வினை ஆசிர்வதிப்பார்.

இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் இந்த அற்புதமான ஜெபத்தின் மகிமையை உணர்வோம். இறைவனைப் புகழ்வோம், அதன்வழியாக இறையருள் பெற்று, இடர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.

Friday 30 September 2016

இயேசுவின் குழந்தை தெரசா விழா!

இன்று திருச்சபையானது புனிதையும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியுமான தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

குழந்தைத் தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  2 ஆம் நாள்  பிரான்சு நாட்டில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசித்து வந்த லூயிஸ் மார்டின் என்பவருக்கு கடைசி மகளாகப் பிறந்தாள். தெரசாவின் குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். இவருடைய சகோதரிகள் இருவர் ஏற்கனவே கார்மேல் மடத்தில் சேர்த்து துறவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களைப் பார்த்து வளர்ந்த தெரசா தானும் கார்மேல் மதத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு துறவுமடத்தில் சேர்வதற்கான போதிய வயது வராத காரணத்தினால் அவர் துறவு மடத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தெரசாவும், அவருடைய பெற்றோரும் ரோம் நகரில் அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் லியோவின் குருத்துவ வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார்கள். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது தெரசா எழுந்து, கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டுமே. குழந்தைத் தெரசாவிடம் இருந்த ஆர்வத்தை பார்த்த திருத்தந்தை அவர்கள், அவரை கார்மேல் மடத்தில் துறவியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் என்ற ஒப்புதல் அளித்தார். அன்று குழந்தைத் தெரசா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

1890 ஆம் ஆண்டு தெரசா கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கே ஒரு சாதாரண வாழ்க்கையை, அசாதாரண முறையில் வாழ்ந்துகாட்டினார். ஆம், தெரசா கன்னியர் மடத்தில் செய்த அனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் செய்தார். இது அவரை மற்ற துறவிகளிடமிருந்து பிரித்துக்காட்டியது. ஒருநாள் இவரைச் சந்தித்த இல்லத் தலைவி அக்னேஸ், துறவு மடத்தில் நீ சந்திக்கின்ற ஒவ்வொரு அனுபவத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வடிக்கச் சொன்னார். இல்லத் தலைவியின் வேண்டுகோளுக்கு இணங்க தெரசா தன்னுடைய துறவற வாழ்க்கையில் சந்திக்க அனுபத்தை எல்லாம் “ஓர் ஆன்மாவின் கதை” (The Story of Soul) என்ற புத்தகமாகப் படைத்தார்.

“ஓர் ஆன்மாவின் கதை” என்ற அந்தப் புத்தகத்தில் தெரசா குறிப்பிடும் மிக முக்கியமான காரியம் “சிறிய வழி” (Little Way) என்பதாகும். அதாவது நாம் செய்யும் சிறு செயலாக இருந்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால், அதன்வழியாக ஓர் ஆன்மாவை மீட்டெடுக்க முடியும் என்பதே குழந்தைத் தெரசா உணர்ந்தும் உண்மையாகும்.  அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை “To Pick up a pin for love can convert a soul” என்பதாகும்.

தெரசா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடும் இன்னொரு உண்மை யாதெனில், அவர் நான்கு சுவர்களுக்குள் இருந்துகொண்டு பல்வேறு நாடுகளில் மறைப்பணி செய்துகொண்டு வந்த குருக்களுக்காகச் ஜெபித்தார்; உலக மக்களுக்காகச் ஜெபித்தார். அந்த ஜெபத்தின் வழியாக அவர் ஆன்மாக்களை இறைவன்பால் கொண்டு வந்து சேர்த்தார். இவ்வாறு அவர் துறவு மடத்தில் வாழ்ந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராளமான ஆன்மாக்கள் மனந்திரும்பக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட புனிதை தன்னுடைய  இருபத்தி நான்காம் வயதில் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.

இவருடைய வாழ்வைப் பார்த்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1999 ஆம் ஆண்டு இவரை மறைபரப்பு நாடுகளுக்குப் பாதுகாவளியாக ஏற்படுத்தினார்.

தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவருடைய வாழ்வைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், அவருடைய வாழ்க்கை நமக்கு எத்தகைய செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்றுதான். அது மீட்பை, இறைவனின் அருளைப் பெற பெரிய பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, மாறாக சிறிய காரியங்களைச் செய்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால் அதுவே போதுமானதாகும் என்பதாகும். ஆண்டவர் இயேசுகூட நம்மை பெரிய பெரிய காரியங்களைச் செய்யச் சொல்லவில்லை. மாறாக பசித்தோருக்கு உணவிடச் சொல்கிறார், தாகமாக இருப்போருக்கு தண்ணீர் தரச் சொல்கிறார், நோயாளியைக் கவனிக்கச் சொல்கிறார், சிறையில் இருப்போரைப் பார்க்கச் சொல்கிறார்..... (மத் 25:40) இப்படிச் செய்வதனால் நாம் விண்ணரசைப் பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதியும் தருகிறார். எனவே நாம் சிறிய சிறிய காரியங்களை குழந்தைத் தெரசாவைப் போன்று இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இயேசுவின் அன்புக்கு உரியவர்களாவோம்.

இறுதியாக ஒரு நிகழ்வைச் சொல்லி நிறைவு செய்வோம். ஒருமுறை பத்திரக்கையாளர் ஒருவர் எட்மன்ட் ஹிலாரியிடம், “உங்களோடு பணிசெய்யும் குழுவை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், “சின்னதாகவோ, பெரிதாகவோ செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன்” என்றார். தொடர்ந்து அவர் அவரிடம்,. சிறிய முயற்சிகளில் சிறப்பாகச் செய்தவர்கள் பெரிய முயற்சிகளில் பரிமளிப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதனால்தான் நான் சிறிய விசயங்களில் பொறுப்புள்ளவர்களாக இருப்பவர்களை, பெரிய விசயங்களுக்கு பொறுப்பாளர்களாக அமர்த்துகிறேன்” என்றார்.

இதனை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெற்றி என்பது உடனே கிடைத்துவிடகூடிய ஒன்று அல்ல, அது படிப்படியாக கிடைப்பது. நாம் சிறிய சிறிய காரியங்களை முனைப்போடு செய்தால் பெரிய பெரிய காரியங்கள் நமக்கு ஒருநாள் கைகூடும்.

ஆகவே தூய குழந்தை தெரசாவைப் போன்று சிறிய சிறிய காரியங்களை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இறைவன் நம்மை பெரிய காரியங்களுக்கு பொறுப்பாளராக உயர்த்துவார்.

Thursday 29 September 2016

மனம்மாறுங்கள்; கனிதரும் வாழ்க்கை வாழுங்கள்!

டாரி என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகச் சிறந்த போதகர் மற்றும் மறைப் பணியாளர் (Dr. B.A. Torrey, 1856– 1928). ஆனால் அவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் மிகவும் தாறுமாறாக வாழ்ந்துவந்தார்.  எந்தளவுக்கு என்றால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் தன்னுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துவந்தார்..

ஒருநாள் அவருடைய அன்னை அவரைக் கண்டிக்கவே, அவர் வீட்டைவிட்டே ஓடிப்போனார். அவர் ஓடிப்போகும் முன்பாக அந்த அன்னை அவரைப் பார்த்துச் சொன்னார், “அன்பு மகனே இப்போது நான் உனக்குச் சொல்வது மிகவும் கசப்பாக இருக்கலாம், எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள் நீ கடவுளைவிட்டுப் பிரிந்து வெகு தொலைவில் சென்று கொண்டிருக்கிறாய். ஒருநாள் நீ இந்த மண்ணுலகில் வாழவே முடியாது  என்றொரு நிலை வரலாம். அப்போது நீ கடவுளைப் பார்த்து ‘உம்மை விட்டுப் போன உதாரிப்பிள்ளையான என்னைக் காத்தருளும் என்று மட்டும் ஜெபி” என்று கூறினார்.

வீட்டை விட்டு ஓடிப்போன டாரி இன்னும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இந்த மண்ணகத்திலே எல்லாவகையான இன்பங்களையும் அனுபவித்து விடலாம் என்று ரீதியில் வாழ்ந்தான். ஆனால் அவன் இன்பத்தை அனுபவிப்பதாக நினைத்து, துன்பத்தில் விழுந்தான். ஆம், டாரி தன்னுடைய வாழ்க்கையில் ஒருவிதமான வெறுமையை உணர்ந்தபின்பு, தன்னுடைய அறைக்குச் சென்று, துப்பாக்கியை எடுத்து, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான். அப்போது அவன், “வாழ்வில் இக்காட்டான சூழ்நிலையை அடைந்தால் ‘கடவுளே என்னைக் காத்தருளும்’ என்று முன்பொரு காலத்தில் தாயானவள் தனக்குச் சொல்லிக்கொடுத்த ஜெபத்தை சொல்லிப்பார்த்தான். அப்போது அவன் தன்னிலே ஒரு மாற்றத்தை உணர்ந்தான்.

டாரி, தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போலியானது, பொய்யானது, அருவருக்கத் தக்கது என நினைத்து வருந்தி அழுதான். அதன்பிறகு தன்னுடைய வாழ்க்கையே மாற்றுக்கொண்டு மறைபோதகராகவும், நற்செய்திப் பணியாளராகவும் வாழத் தொடங்கினான்.

பாவ வாழ்க்கை வாழும் ஒவ்வொரும் தன்னுடைய தவறை உணர்ந்து, மனமாற வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொராசின் நகரையும் பெத்சாய்தா நகரையும் கப்பர்நாகும் நகரையும் கடுமையாகச் சாடுகின்றார். எதற்காக என்றால், அந்த நகர்களில் வாழ்ந்த மக்கள்தான் இயேசுவின் போதனையை அதிகமாகக் கேட்டவர்கள், அவர் ஆற்றிய புதுமையை, அற்புதத்தைக் கண்கூடாகப் பார்த்தவர்கள். அப்படியும் அவர்கள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழாததால்தான் இயேசு அந்த நகர்களில் வாழ்ந்த மக்கள்மீது கடுமையாகச் சினம் கொள்கிறார்.

இயேசுவைப் பார்ப்பதும், அவருடைய போதனையைக் கேட்பதும் காணக்கிடைக்காத ஒரு பாக்கியம். யூத மக்கள் அப்படிப்பட்ட பேற்றினை அதிகமாகப் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டும், அவர் ஆற்றிய புதுமைகளைக் கண்டும் மனம்மாறாததால்தான் அவர்கள் இயேசுவின் சினத்திற்கு ஆளாகிறார்கள். பல நேரங்கில் இறைவார்த்தையைக் கேட்டும், திருவிருந்தில் பங்கு கொண்டும் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாதவர்களாக இருக்கின்றோம்.

இறைவார்த்தை சொல்கிறது, “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சியளிக்கிறது” என்று. (யோவான் 15:8). ஆனால் நாம் உண்மையிலே கனிதரும் வாழ்க்கை வாழ்கிறோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

“உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். கிடைத்ததை நெஞ்சார வாழ்த்த வேண்டும். நம்பிக்கையோடு வளர்ச்சியை எதிர்கொள்ளவேண்டும். இதுவே வாழ்க்கை” என்று வாழ்க்கைக்கு நல்ல இலக்கணம் தருவார் புத்த பெருமான். நாம் அனைவரையும் நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பல நேரங்களில் நமக்கு இறைவனின் போதனையோ, அல்லது பெரியவர்களின் அறிவுரையோ எதுவுமே முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எதை நினைக்கிறோமோ அதனை நம்முடைய வாழ்க்கையில் செய்துவிடத் துடிக்கின்றோம் அது இறைத் திருவுளத்திற்கு எதிராக இருக்கிறது என்பதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் நாம் கடவுளின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகின்றோம்.

ஆகவே, கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்திருக்கும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ முயற்சிப்போம். பாவத்திலிருந்தும், தீய பழக்கவழத்திலிருந்தும் விடுதலை பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். 

Tuesday 27 September 2016

தன்னை இழக்காமல் ஒருவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது!

முன்பொரு காலத்தில் உப்பு மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக தண்ணீரையும் அதன் பல்வேறு வடிவங்களான ஆறு, ஏரி, குளம், கடல் போன்றவற்றைப் பார்க்கவேண்டும் என்றும், அது எப்படியிருக்கிறது என்று அனுபவித்துப் பார்க்கவேண்டும்ம் என்று விருப்பம். அதனால் அந்த உப்பு மனிதன் தண்ணீரைத் தேடித் புறப்பட்டான்.

ஓரிடத்தில் உப்பு மனிதனுக்கு ஆற்று நீர் காணக் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அவன் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தான். மேலும் மேலே இருந்த நீலநிற வானமும் நிலவும் ஆற்றில் பட்டு பிரதிபலித்ததால் அந்த ஆற்று நீர் இன்னும் அழகாகத் தெரிந்தது. இதனால் உப்பு மனிதனுக்கு ஆற்று நீர் எப்படியிருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கும் ஆசை இன்னும் அதிகமாக ஏற்பட்டது.

எனவே உப்பு மனிதன் ஆற்றில் மெல்ல இறங்கினான். அவன் உள்ளே இறங்க இறங்க ஒருவிதமான பரவசத்தை உணர்ந்தான். இதுவரை அவன் அனுபவித்திராத ஒருவிதமான குளுமை, சுகம் அவனை என்னவோ செய்தது. அதனால் அவன் மேலும் மேலும் உள்ளே சென்றான்.

ஒருகட்டத்தில் அவன் தன்னுடைய கால் தன்னுடைய கண்முன்னாலே ஆற்றில் கரைந்துபோவதை உணர்ந்தான். அவனுக்குள் ஒருவிதமான திகிலும், பயமும் ஏற்பட்டது. எங்கே தான் இந்த ஆற்றிலே மூழ்கி இறந்துபோய்விடுவோமோ? என்று கலங்கினான். அதனால் அவன் கரைக்குத் திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்தான். அதன்படி அவன் கரையை நோக்கி நடக்க முற்பட்டான். ஆனால் அதற்குள் தண்ணீர் இடுப்பு, கழுத்து வரை வந்துவிட்டது.

இனிமேலும் கரைக்குச் செல்வது வீண் என நினைத்து, ஆற்று நீரோடு தன்னையே ஐக்கியமாக்கிக்கொண்டான். இப்போது அவன் உப்பு மனிதனாக இல்லை. ஆற்று நீராக மாறியிருந்தான். ஆற்றுநீராக மாறிய பிறகு அவன் உப்பு மனிதனாக இருந்ததைவிடவும் சுவை மிக்கவனாக இருந்தான்.

உப்பு மனிதர்களாக நாம் ஆற்று நீராகிய இறைவனோடு கலக்காதவரை நாம் சுவைமிக்கவர்களாக மாற முடியாது என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவரும் இயேசுவோடு/ இறைவனோடு ஒன்றாகக் கலக்காதவரை அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்கமுடியாது என்ற உண்மையையும் இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நற்செய்தி வாசகம் இயேசுவைப் பின்தொடர்ந்து வரவிரும்ப மக்களையும், அவர்களுக்கு இயேசு எத்தகைய பதிலைத் தந்தார் என்பதையும் குறித்துப் பேசுகிறது. நற்செய்தியில் முதலாவதாக வரும் மனிதர் இயேசுவிடம், “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். அதற்கு இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்கிறார். இதைக் கேட்டதும் அந்த மனிதர் அப்படியே போய்விடுகிறார்.

அம்மனிதர் நினைத்திருக்கலாம் இயேசுவைப் பின்தொடர்ந்து வாழ்வது என்பது எளிதான காரியம் என்று. இன்றைக்கும்கூட பலர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள கஷ்டம் சீடத்துவ வாழ்க்கை வாழ்கின்றவர்களுக்குத்தான் புரியும். இயேசுவைப் பின்பற்றினால் பதவியும், புகழும் கிடைக்கும் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருக்கிறார். அதனால்தான் இயேசு சீடத்துவ வாழ்க்கையில் உள்ள உண்மையச் சொன்னதும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் விலகிச் செல்கிறார்.

இரண்டாவதாக வரும் மனிதரை இயேசுவே, “என்னைப் பின்பற்றி வாரும்” என்கிறார். ஆனால் அவர் கடவுளது அழைப்பின் மகிமையை உணராமல், “முதலில் நான் போய் என்னுடைய தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கிறார். இறைவனின் அழைப்பு எல்லாருக்கும் கிடையாது. எப்போதோ, யாரோ ஒரு மனிதருக்குத்தான் கிடைக்கும். ஆனால் இந்த மனிதரோ கடவுள் தனக்குக் கொடுத்த அழைப்பைக் கூட உணர்ந்துகொள்ளாமல், அதனைத் தட்டிக்கழிக்கிறார். அதனால் பாதிக்கப்பட்டதோ அவர்தான்.

பெரும்பாலான நேரங்களில் நாமும்கூட கடவுள் கொடுக்கும் மேலான அழைப்பை உணர்ந்துகொள்ளாமல், அதனைத் தட்டிக்கழிக்கிறோம்.

மூன்றாவதாக வரும் மனிதர், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன். ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்கிறார். அழைத்தல் வாழ்வில் இதுவும் ஒரு தவறுதான். கடவுளிடமிருந்து அழைப்பு வரும்போது அதற்கு உடனே செவிகொடுக்காமல், பிறகு பார்த்துக்கொள்ளலாம், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக்கழிக்கிறோம். ஆனால் இயேசு சீமான் பேதுருவை, அவருடைய சகோதரரை அழைக்கும்போது அவர்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்கள்.

ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுள் நம்மை அழைக்குபோது அதற்கு உடனே செவிகொடுப்போம். ஏதாவது சாக்குப் போக்கு சொல்வதைத் தவிர்ப்போம். கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருந்து இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Thursday 22 September 2016

நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?

முன்பொரு காலத்தில் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான். தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே!, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.  தூதுவன் அரசரிடம் சென்று, “நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை” என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான். இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான்
உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள்,  நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான். நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே? “ஆம், அதுவேதான்”. “தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார். அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென். அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார். துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது. “அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார். “அது எப்படி? அவை நுகத்தடிகள், அது ரதமல்ல”.

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை. துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப்பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார். அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘? நீ எங்கேயும் ‘நானை’ கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று
சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும். (ஓஷோ சொல்லக்கூடிய கதை இது)

நான், நான் என்று அலைபவர்கள் “நான்” என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் கதை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?, நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். இயேசுவின் இந்த கேள்வி ஆணவத்தில் எழுந்த கேள்வி அல்ல. இயேசு தாழ்ச்சியே உருவானவர்), மாறாக தான் பணிபுரிந்த இடங்களில் இருந்த மக்கள், தன்னோடு இருந்த சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி. இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அளித்த பதிலைப் பார்த்துவிட்டு சற்று அதிருப்திகொள்கிறார். பின்னர் அவர்களுக்கு தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் (சீடர்களும் இதில் அடங்கும்) மெசியா என்பவர் எல்லா மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் அரசராக பார்த்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர் மெசியா என்பவர் மக்களுக்காக, அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக துன்புறக்கூடியவராகப் பார்த்தார். மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக தன்னுடைய உயிரையே பலியாகத் தந்தார். எனவே நம் இயேசுவைப் பற்றிய/ மெசியாவைப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டு வாழ்வோம்.

இறையியலாளரான மோல்ட் மோர்கன் கூறுவார், “மெசியாவைப் பற்றிய பார்வைக்கும் நமது வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்று. எப்படி என்றால் நாம் மெசியாவை அதிகாரம் செலுத்துபவராகப் பார்த்தால், நாமும் பிறர்மீதும் அதிகாரம் செலுத்துகின்றவர்களாவோம். மாறாக மெசியாவைத் துன்புறும் ஊழியராக, பிறருக்காகத் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணிப்பவராகப் பார்த்தால், நாமும் பிறருக்காகத் துன்புறத் தயாராவோம்.

எனவே இயேசுவே மெசியா என உணர்வோம். அவரைத் துன்புறும் ஊழியராக உணர்ந்துகொள்வோம். பிறருக்காக, பிறர் வாழ்வு நலமடைய துன்புறும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Tuesday 20 September 2016

இன்றைய புனிதர் - புனித எஸ்தாக்கியுஸ் St. ஐஸ்தாசிஸ்

எஸ்தாக்கியுஸ் என்பது ஓர் கிரேக்கப்பெயர். இவர் மனமாற்றம் பெறுவதற்கு முன் பிளாசிடஸ் Placidus என்றழைக்கப்பெற்றார். உரோமில் அதிரியான் Adrian ஆட்சி செய்த காலத்தில் தேயோபிஷ்டா Theopista மற்றும் அவரின் மகன்கள் அகாபியஸ்(Agapius), தேயோபிஷ்டஸ்(Theopistus) என்பவர்களுடன் சேர்த்து துன்பப்படுத்தப்பட்டார். எஸ்தாக்கியுஸ் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி மறைப்பணியை ஆற்றியுள்ளார். இவர் தனது 12 வயதிலிருந்து திருச்சபைக்காக உழைத்தார்.

இவர் இறந்தபிறகு இவரின் உடலிலிருந்த எலும்புகள் அனைத்தையும் ஒன்றாக் சேர்த்து 1567 ல் பாரிஸ் நாட்டில் புனித எஸ்தாக்கியுஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது, இவர் நீதியோடும், நேர்மையோடு வாழ்ந்தார். மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். சாதி, மதம் பார்க்காமல் பணியாற்றினார். மனசாட்சிக்கு மட்டுமே செவிசாய்த்தார். இவருக்கு தீங்கு செய்தவர்களிடமும் அன்பாக இருந்தார். அவர்களை மன்னித்து, அவர்களிடத்தில் அளவில்லா அன்பு காட்டி, வாழ்வையும் மாற்றினார். பிறரை பாராட்டுவதிலும் எப்போதும் முதலிடம் வகித்தார்.

மற்றவர்களின் பலவீனங்கலை அறிந்து, அவைகளிலிருந்து வெளியேற உதவினார். இவரின் நல்ல குணங்கலை அறிந்த எதிரிகள் , சமுதாயத்தில் இவரின் பெயரை கெடுக்க திட்டமிட்டனர். கொடூரமான பழிகளை அவரின் மேல் சுமத்தினர். பல அநீதிகளை செய்ததாக குற்றம் சாட்டினர். அப்போதும் கூட இவர் பொறுமையை கடைபிடித்து, கடவுளை மட்டுமே தன் வாழ்வின் மையமாக கொண்டு செயல்பட்டார். எதிரிகளின் இதயங்களிலும், ஈரத்தை ஏற்படுத்தி இறையுறவை வளர்த்து, மனமாற்றினார்.

பாதுகாவல்: தீயணைப்பு வீரர்கள், வேட்டைக்காரர்கள், பெண்விடுதலை

இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடத்தல்!

இராணுவ முகாமில் தங்கி பயற்சி எடுத்துக்கொண்டு வந்த கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த இராணுவ வீரன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல இரயில் நிலையத்தில் வேக வேகவேகமாக ஓடிவந்தான். எப்படியாவது இரயிலில் இடம் பிடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பில் இருந்ததால் அவன் எதிரே வந்த பழங்களைக் கூடையில் வைத்து விற்கும் சிறுவனைக் கவனிக்கவில்லை. அதனால் அவன் சிறுவன்மீது மோதி, சிறுவன் வைத்திருந்த பழங்கள் எல்லாம் சிதறி ஓடின.

ஒரு நிமிடம் அவன்  நிலைகுலைந்து நின்றான். நாம் இருக்கும் அவசரத்தில் இது வேறு நடக்கவேண்டுமா? என்று தன்னுடைய நிலையை நினைத்து நொந்துக்கொண்டான். பின்னர் அவன் அந்த சிறுவனைப் பார்த்தபோது அவனுடைய உள்ளத்தில் ஓர் இரக்க உணர்வு தோன்றியது. ஏனென்றால் அந்த சிறுவன் ஒரு பார்வையற்றவன். எனவே தன்னால் நடைபாதை எங்கும் சிதறிக் கிடக்கும் பழங்களை ஒன்றாக சேர்த்துத்தருவது என்று முடிவு செய்தான். அதன்படி ஆங்காங்கே சிதறிக் கிடந்த பழங்களை ஒன்றாகச் சேர்ந்து அவன் அந்த சிறுவனின் பழக்கூடையில் வைத்தான்.

இதை அறிந்து அந்தச் சிறுவன் இராணுவ வீரனின் கைகளை பிடித்துக்கொண்டு, “நீங்கள்தான் இயேசுவா?” என்று கேட்டான். அதற்கு அந்த இராணுவ வீரன், “இல்லை இல்லை. நான் இயேசு அல்ல, இயேசுவைப் போன்று வாழ முயற்சிப்பவன்” என்றான்.

ஆம், ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துவாழும்போது, வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது நாம் இயேசுதான், அவருடைய அன்புப்  பணியாளர்கள்தான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப் போதித்துக் கொண்டிருகும்போது, அவரைக் காண அவருடைய தாயும், சகோதரர, சகோதரிகளும் வருகிறார்கள். இச்செய்தியை மக்கள் இயேசுவிடம் சொல்லியபோது அவர் அதற்கு பதில்மொழியாக, “இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்” என்கிறார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு பல உண்மைகளை எடுத்துக்கூறுகிறது. முதலாவதாக இயேசு இரத்த உறவுகளைக் கடந்தவராக இருக்கின்றார் என்பதே ஆகும். இயேசு தன்னுடைய தாய், சகோதர, சகோதரிகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு வாழவில்லை. இன்றைக்கு தங்களை மக்கள் பணியாளர்கள், எல்லாருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் தலைவர்களைப் போன்று அல்லாமல் இயேசு எல்லாரும் ஒரே குடும்பம் என்ற மனநிலையில் வாழந்தவர். அதனால்தான் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும் யாவருமே என்னுடைய தாயும், சகோதரர்களும் ஆவார்கள் என்கிறார்.

அடுத்ததாக நாம் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறவேண்டும் என்றால் தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று நடக்கவேண்டும் என்று சொல்கிறார். இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரிகளாக மாறுவது என்பது  மிகப்பெரிய கொடை, மிகப்பெரிய பாக்கியம்.  இது யாருக்குமே கிடைக்காத ஒரு வரம். அப்படிப்பட்ட வரத்தை ஆண்டவர் இயேசு தன்னுடைய தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக அடையலாம் என்கிறார்.

நிறைவாக ஒருவர் இயேசுவைப் பெற்று எடுப்பதானாலோ அல்லது இயேசுவோடு பிறப்பதனாலோர் இயேசுவுக்கு தாயாகவோ அல்லது சகோதர, சகோதரிகளாக மாறிவிடமுடியாது. யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வந்தார்கள். அவர்களின் நினைப்பு எல்லாம் தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வந்தாலும் கடவுளின் மக்கள் என்பதுதான். ஆனால் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, “ஆபிரகாம் எங்கள் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என்கிறார் (மத் 3:9).

இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது ஒருவர் இயேசுவைப் பெற்றெடுப்பதனாலும், இயேசுவோடு பிறப்பதனாலும் அவருக்குத் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறிவிட முடியாது. மாறாக தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும்.

இயேசு கூறும் இந்த வரையறைகளை வைத்துப் பார்க்கும்போது அன்னை மரியா இயேசுவை பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்ததனாலும் இயேசுவுக்குத் தாயாகிறார். ஆகவே, நாம் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் நமக்கு மீட்பு உண்டு என்ற தவறான எண்ணத்தில் வாழாமல், உண்மையிலே தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று வாழ்வோம். இயேசுவின் தாயாகும், சகோதர சகோதரிகளாகும் பேற்றினைப் பெறுவோம்.

Wednesday 7 September 2016

அன்னை மரியாளின் பிறப்பு விழா - தாயின் அன்பு!

இன்றைக்கு நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான நாள். மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். நம் தாய் அன்னை கன்னிமரியாளின் பிறந்த நாள்.

இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற கத்தோலிக்கத் திருச்சபை அந்த தாயின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் அகமகிழ்கிறது. எத்தனை சோதனைகள், எத்தனை தப்பறைக்கொள்கைகள், எத்தனை எதிர்ப்புக்கள் – இவற்றிற்கு நடுவில், நிச்சயம் அன்னை கன்னிமரியாள் மீது வைத்திருக்கிற மக்களின் பக்தி, நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

அகில உலக திருச்சபையின் தூணாக இருந்து, தனது செபத்தாலும், பரிந்துரையாலும் ஒவ்வொருநாளும் அன்னை கன்னிமரியாள் நம்மைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற ஆலயங்களில் அன்னை கன்னிமரியாளுக்குத்தான் அதிகம் என்கிற அளவுக்கு, அன்னை மரியாளின் மீது மக்கள் அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றனர்.

இதற்கு அடித்தளமாக இருப்பது, அன்னை நம்மீது, தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கிற, நிரந்தரமான அன்பு. ஒரு தாயின் அன்பை நாம் ஒரு குறுகிய எல்கைக்குள் அடக்கிவிட முடியாது. அது அனைத்தையும் கடந்தது. எதனையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புகொண்டது. தான் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளை, தன் மகன் இயேசுவுக்கும் ஊட்டி, அவரையும் இந்த உலகம், வரலாற்றைப்பிரிக்கக்கூடிய அளவுக்கு வலிமை மிகுந்தவராக எண்ண, காரணராக இருந்திருக்கிறார்.

அந்த தாயிடம் நம்மையே ஒப்படைப்போம். அவரிடத்தில் நமக்கு வேண்டியதைக் கேட்போம். அவர் நமக்கு நிச்சயமாக, தந்தையாகிய கடவுளிடமிருந்து, நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொடுப்பார் என்கிற உறுதியான உள்ளத்தோடு, அன்னையின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்.

Tuesday 6 September 2016

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்!

ஆங்கில அகராதியை முதல் முதலாகத் தொகுத்தளித்தவர் சாமுவேல் ஜான்சன்  (1709 -1984) என்பவர். இவர் ஆங்கில இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். எளிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டவர்.

இவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும்போது பாதையோரம் இருக்கின்ற பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காமல் போகவே மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தங்க இடமில்லாத வறியவர்களையும், எளியவர்களையும், பிச்சைக்காரர்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு இடமளிப்பார். இதனால் சில நேரங்களில் பிச்சைகாரார்களால் அவருடைய வீடு நிரம்பி வழியும்.

இதைப் பார்த்த சாமுவேல் ஜான்சனின் பணக்கார நண்பர் ஒருவர் அவரிடம், “எதற்காக நீங்கள் உங்களுடைய வீட்டில் பிச்சைக்காரார்களுக்கும், அனாதைகளுக்கும் இடமளித்து வருகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒருவேளை நான் அவர்களுக்கு வீட்டில் தங்குவதற்கு இடமளிக்கவில்லை என்றால், அவர்கள் தெருக்களிலும், பாதையோரங்களிலும்தான் படுக்க நேரிடும். மேலும் என்னைத் தவிர வேறு யாரும் இவர்களுக்கு தங்குவதற்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் நான் அவர்களுக்கு இடமளிக்கிறேன்” என்றார்.

சாமுவேல் ஜான்சனின் பேச்சைக் கேட்ட அந்த பணக்கார நண்பர், “எவ்வளவு வசதிகள் இருந்தும் நான் அவர்களுக்கு இடமளிக்கவில்லையே” என்று வருந்தினார்.

ஏழைகள் – எளியவர்கள் – எப்போதும் இரக்கமும், அடுத்தவர் மட்டில் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேறுபெற்றவர்கள் யாராரென்றும் கடவுளின் கோபத்திற்கு ஆளாகுபவர்கள் யாராரென்றும் பட்டியலிடுகிறார். அப்படி இயேசு பேறுபெற்றவர்கள் என்று பட்டியலிட்டவர்களில் முதலாவதாக வருபவர்கள் ஏழைகளே. எதற்காக இயேசு ஏழைகளைப் பேறுபெற்றவர்கள்? என்று அழைக்கிறார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதற்கு முன்னதாக இப்பகுதியை நாம் ஒத்தமை நற்செய்தியான மத்தேயு நற்செய்தியோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நமக்கு ஒருசில உண்மைகள் புலப்படும்.

மத்தேயு நற்செய்தியில் இப்பகுதி மலைப்பொழிவு என அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கோ இப்பகுதி சமவெளிப்பொழிவு என அழைக்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறுபவை மூன்றாம் நபரிடம் பேசுவது போன்று இருக்கும் (ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது). ஆனால் இங்கோ இயேசு நேரடியாகப் பேசுவது போன்று இருக்கின்றது (ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே). மத்தேயு நற்செய்தியாளர் ஆன்மீக ஏழ்மையையும் (Spiritual Poverty), லூக்கா நற்செய்தியாளர் பொருளாதார ஏழ்மையையும் (Economical Poverty)பற்றிப் பேசுவதாக விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் ஏழைகள் எப்போதும் இறைவனின் சிறப்புக் கவனத்திற்கு உரியவர்கள் என்பதை நாம் நமது மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இயேசு ஏழைகளை எதற்காகப் பேறுபெற்றவர்கள் என்று அழைக்கிறார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். பொதுவாகவே ஏழைகள் இரக்கமுள்ளவர்களாக, அடுத்தவர் மட்டில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடவுள் மட்டில் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் பற்றும் கொண்டிருப்பார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வும் ஒரு சான்று. இன்னொரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி ஒருமுறை பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்த ஓட்டுநரும், லியோனியும் பலத்த காயத்தோடு அடிப்பட்டுக் கிடக்கிறார்கள். அப்போது அந்த வழியாக எத்தனையோ மனிதர்கள் கடந்து போனார்கள். ஆனால் யாருமே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

காட்டு வேலைக்குச் சென்ற ஒரு சாதாரண மூதாட்டிதான் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு தன்னிடம் இருந்த கேழ்வரகுக் கஞ்சியைக் கொடுத்தார். பின்னர் அவர்கள் தெளிவு பெற்றதும் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்தவர்களை அழைத்துவந்து, அவர்களுடைய உதவியுடன் லியோனியையும், ஓட்டுநரையும் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்து ஆவணசெய்தார். ஏறக்குறைய இயேசு கூறும் நல்ல சமாரியன் உவமை போன்றுதான் இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை ஏழைகளுக்கு இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

எனவேதான் இயேசு அவர்களை பேறுபெற்றவர்கள் என்று பாராட்டுகிறார். ஆகவே நாமும் ஏழைகளைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம். 

இறைவேண்டல் (ஜெபம்) வாழ்விற்கான ஆற்றல்!

ஒரு பிரபலமான பங்கில் இருந்த கிறிஸ்தவர் ஒருவர் கோவிலுக்குப் போகாமல், ஜெபம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அவர், கடவுளைத் தான் நேரடியாக வணங்கிவிட்டுச் சென்றுவிடலாமே, எதற்காக கோவில், குரு எல்லாம் என்று, தான் சந்தித்த மக்களிடம் சொல்லிவந்தார்.

இச்செய்தி பங்குத் தந்தையின் காதுகளை எட்டியது. உடனே பங்குத்தந்தை அந்த கிறிஸ்தவருக்கு ஜெபம், கோவில் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய இல்லத்திற்கு வந்தார். இல்லத்திற்கு வந்ததும் குருவானவர் அவரிடம், “நாம் இருவரும் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வருவோமா? என்று கேட்டார். பங்குத்தந்தையின் வருகையை சிறிதும் எதிர்பாராத அந்த கிறிஸ்தவர் குருவானவர் ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால் குருவானவர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அவர்கள் இருவரும் நீண்ட தூரம் நடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் போகிற வழியில் பெண்ணொருத்தி பெரிய அடுப்பில் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் அந்த கிறிஸ்தவரை அடுப்பிற்க்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றார். பின்னர் கொழுந்துவிட்டு எரிகின்ற அந்த அடுப்பிலிருந்து ஒரு துண்டு கங்கினை எடுத்து ஓரமாக வைத்தார். சிறுது நேரம் குருவும், அந்த கிறிஸ்தவரையும் கங்கினையே உற்று நோக்கினார்கள். அந்த கங்கானது  சிறுது நேரத்தில் சாம்பலாகிப் போனது.

பின்னர் குருவானவர் அந்த கிறிஸ்தவரை அழைத்து, தனியே எடுத்து வைக்கப்பட்ட ஒரு துண்டுக் கங்கு விரைவிலே சாம்பலானது. ஆனால் அடுப்பிலே இருக்கும் கங்கு இன்னும் அணையாமல் நெருப்பாகவே இருக்கிறது. இது போன்றுதான் நீயும் ஜெபம் வேண்டாம், கோவில் வேண்டாம் என்று தனித்து வாழ்ந்தாய் என்றால் விரைவிலே நீ அழிந்து போய்விடுவாய். மாறாக நெருப்பு என்னும் ஜெபத்தோடு நீ இணைத்திருந்தாய் என்றால் நீண்ட நாட்கள் அணையாது வாழ்வாய். ஆதலால் ஜெபத்தில் இணைந்திரு” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த கிறிஸ்தவர் தன்னுடைய தவற்றை உணர்ந்துகொண்டு அன்றிலிருந்து கோவிலுக்கு வழக்கமாக வந்து, ஜெபத்தில் கடவுளோடு இணைந்திருந்தார். ஜெபம்தான் நம்முடைய வாழ்விற்கான உற்று, ஆற்றல், எல்லாம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனியாக ஒரு மலைக்குச் சென்று, அங்கே இரவெல்லாம் இறைவனிடம் ஜெபித்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகன், மூவொரு கடவுளில் இரண்டாமாளாகிய சுதன். அப்படியிருந்தும் அவர் தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்றால், நாமெல்லாம் எந்தளவுக்குச் ஜெபிக்கவேண்டும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார். தன்னுடைய பணியைத் தொடங்கும்போது ஜெபித்தார்; சீடர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஜெபித்தார்; கெத்சமணி தோட்டத்தில் ஜெபித்தார்; தன்னுடைய இறுதி மூச்சை விடும்போது ஜெபித்தார்.  இவ்வாறு அவர் தந்தைக் கடவுளோடு ஜெபத்தில் இணைத்திருந்தார். அந்த ஜெபம்தான் அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வதத்தையும் தந்தது.  ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். அதுவும் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நாம் இறைவனிடமிருந்து எல்லா ஆசிர்வாதங்களையும் பெறமுடியும்.

ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் ஜெபத்திலிருந்துதான் பெறுகிறேன்” என்று. இது உண்மை. ஜெபம் செய்யாமல், நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

நற்செய்தி வாசகம் உணர்த்தும் இன்னொரு உண்மை. உண்மையான இயேசுவின் சீடன் என்பவன் ஜெபத்தில் மட்டும் தன்னுடைய காலத்தைக் கழிக்கக் கூடாது. மாறாக அவன் செயல்வீரனாக இருக்கவேண்டும். இயேசு மலையிலிருந்து ஜெபித்து, சீடர்களைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவர் அப்படியே மலையில் நிற்கவில்லை. மாறாக சமவெளிக்கு வருகிறார். சமவெளி என்பது மக்கள் இருக்கும் பகுதி. மக்கள் மத்தியில் தன்னுடைய பணியை ஆற்ற முன்வருகிறார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஜெபிக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்வீரர்களாக இருக்கவேண்டும். ஜெபம் மட்டும் இருந்து செயல் இல்லையென்றால் நமது வாழ்வு அடித்தளமற்றதாகிவிடும். அதேநேரத்தில் செயல் இருந்து ஜெபம் இல்லையென்றால் அது உயிரற்றதாகிவிடும்.

ஆகவே இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் இயேசுவைப் போன்று ஜெபத்திலும், செயலிலும் இணைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Friday 2 September 2016

அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்கும் மனது அழுக்கான மனது!

ஒரு நகரில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே அடுத்தவரிடம் குறை கண்டுபிடிப்பதையே தன்னுடைய குலத்தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்தார். மக்கள் ஒன்றை எவ்வளவு நேர்த்தியாக, நிறைவாகச் செய்திருந்தாலும் அதில் அவர் குறைகண்டுபிடிப்பார். இதனால் மக்களுக்கு அவர்மீதான ஒரு வெறுப்புணர்வே இருந்தது.

ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அகன்ற சாலை ஒன்றில் அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். அவருடைய முதுகில் பெரிய சுமை ஒன்று இருந்தது. அந்த சுமை எப்படிப்பட்டது, என் வந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. அவர் நடக்க நடக்க அவர் முதுகில் இருந்த சுமை அவரை அழுத்தத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் அவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், “கடவுளே எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை?. இதை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்று கேட்டார். அதற்கு வானத்திலிருந்து கடவுள், “இந்த சுமை வேறொன்றும் இல்லை. மற்றவர்களிடம் நீ கண்டுபிடித்த குறைதான் இப்படி சுமையாக இருக்கிறது. எல்லாரும் நல்லதையே பார்த்தபோது, நீ மட்டும் குறைகளையே பார்த்தாய். ஆதலால்தான்  நீ கண்டுபிடித்த குறைகளை இப்போது நீ சுமந்துகொண்டு வருகிறாய்” என்றார்.

உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்; அறிவொளி பெற்றார். அன்றிலிருந்து அவர் மக்களிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே கண்டார்.

பிறரிடம் குறைகாண்போரது வாழ்க்கை பரிதாபத்திற்கு உரியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நாளைய  நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள் இயேசுவிடம், “உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார்கள்” என்று குறைசொல்கிறார்கள். அதற்கு இயேசுவின் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

கதிர்களைக் கொய்து தின்னுதல் என்பது குற்றம் கிடையாது (இச 23:24-25). ஆனால் சீடர்கள் கதிர்களைக் கொய்து, கசக்குதால்தான் மிகப்பெரிய குற்றமாக பரிசேயர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குறைகூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்.

பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு, அவர்கள் ஏற்றுக்கொண்ட மறைநூலிலிருந்தே விளக்கம் தருகிறார். தாவீதும், அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ணுகிறார்கள் (1 சாமு 21:1-6) என்ற இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி ஆண்டவர் இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிட மகனுகுக் கட்டுப்பட்டதே” என்கிறார். மேலும் மத்தேயு நற்செய்தி 9:13ல் “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லி இக்கருத்துக்கு இன்னும் வலுவூட்டுகிறார்.

பல நேரங்களில் நாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரக்கமே இல்லாமல் நடந்துகொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் யாருக்காக? மனிதர்களுக்குத் தானே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் தராமல், சட்டத்தைத் தூக்கிப் பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?.

சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் தாதரி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி முகமது அக்லாக் என்பவரும் அவருடைய மகனும் கொல்லப்பட்டார்கள். ஒரு மாட்டை கொன்று சாப்பிட்டதற்காக இரண்டு உயிர்களைக் கொன்ற இந்த நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதைக் காட்டுகிறது?. மனிதர்களைவிட சம்பிரதாயங்களும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதியமும் அல்லவா பெரிது என்று காட்டுகிறது. மனிதர்கள் இல்லாமல், சட்டமும், சம்பிரதாயங்களும் வீணிலும், வீண்.

எனவே சட்டங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த சட்டங்கள் குறித்துக் காட்டும் மானுட நேயத்தை நம்மில் வளர்ப்போம்.

அதைவிடவும் பிறரிடம் குறை கண்டுபிடிக்கும் எண்ணத்தை அடியோடு தவிர்ப்போம். “அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன” என்பார் கார்லைல் என்ற அறிஞர். ஆம், நம்மிடத்தில் அன்பு குறைந்தால் பிறரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரியும். மாறாக நம்மிடம் அன்பு பெருகினால், குற்றம் காணும் மனப்பான்மை குறையும்.

ஆகவே, குறைகாணும் போக்கைத் தவிர்ப்போம். சட்டங்களைக் கண்டு, மானுட நேயம் காப்போம். அதன்வழியாக் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Thursday 1 September 2016

உண்மையான நோன்பு எது?

ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார்.

நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார். ”இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால்/ நோன்பால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை” என சத்தமாக சூளுரைத்தார்.

அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், “அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை.” என்றது.

ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார்.

 நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார். துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். “துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அக மகிழ்கிறேன்.”என்று சொன்னார்.

ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி, “துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது” என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார்.  “துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?” என கேட்டார். அதற்கு அவர் “துறவியாரே, நான் ஒரு வணிகன் தான்.

அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை; என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை.” எனக் கூறினார்.

“இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை.” எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன. ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார். இருவரும் சிறந்த நண்பர்களாகி நிறைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

உண்மையான தவம்/நோன்பு ஒருவரிடத்தில் அன்பையும், பிறர்மீது  கரிசனையையும் வளர்க்கவேண்டுமே ஒழிய ஆணவத்தையும், அகங்காரத்தையும் வளர்க்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை” என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம், “மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருப்பதில்லை, மாறாக அவர் அவர்களைவிட்டுப் பிரியும் காலம் வரும், அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்” என்கிறார். அதாவது நோன்பிருக்க ஒரு காலமுண்டு அதை அந்தந்த நேரத்தில் செய்தால்போதும் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

இங்கே நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவர் நோன்பிருப்பதும், இருக்காததும் அவரவர் விருப்பம். அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. திருமுழுக்கு யோவானின் சீடர்கள் நோன்பிருந்தார்கள் என்றால், அவர்கள் அவர்களுடைய விருப்பப்படி செய்திருக்கலாம்.

அதற்காக இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. பல நேரங்களில் நாமும் பிறர்மீது நம்முடைய கருத்துகளை, எண்ணங்களை திணிக்கிறோம். இது ஒருவிதத்தில் வன்முறைதான்.

ஆகவே, நோன்பிருப்பது  இருக்காதது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என உணர்ந்துகொள்வோம். மேலும் நாம் மேற்கொள்ளும் நோன்பு நம்மில் பிறர்மீதான அக்கறையை வளர்க்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

துறவி கில்லஸ் (ஏகிடியுஸ்) Gilles (Ägidius)!

இவரின் கிரேக்கப்பெயர்: ஏகிடியுஸ் (Ägidius). ஜெர்மானியப்பெயர்: ஷில்டுஹால்டர் (Schildhaltar). பிரெஞ்ச் பெயர்: கில்லஸ் (Gilles) இவர் ஓர் துறவி. இவர் பிரான்சு நாட்டில் உள்ள ரோன்(Rhone) என்ற ஆற்றின் அருகே புனிதராக வாழ்ந்துள்ளார்.

இவர் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் எப்போதும் தனிமையிலேயே வாழ்ந்துள்ளார். இவருக்கு துணையாக மான் ஒன்று இருந்திருக்கிறது. இவர் காட்டில் வாழ்ந்தபோதும் சைவ உணவு மட்டுமே உட்கொண்டுள்ளார்.

அரசர் ஒருவர் காட்டில் வேட்டையாட வந்தார். அப்போது கில்லசுக்கு சொந்தமான மானை வேட்டையாட அம்பு எறிந்துள்ளார். அம்பானது மானில் பாய்ந்தும், அடிபடாமல் இருந்தது. இதைக் கண்ட கில்லஸ் மானை குத்திய அம்பை பிடுங்கி எறிந்துவிட்டார்.

செபம்:
காடு, மரம், பறவைகள், வனவிலங்குகள் என்று இயற்கையோடு வாழ்ந்து, இறைவனை போற்றிய துறவி கில்லஸைப்போல நாங்களும் இயற்கையை போற்றி பாதுகாக்க வரம் தாரும். நீர் படைத்த இந்த அழகான உலகை மென்மேலும் அழகூட்டி உம்மை மகிமைப்படுத்துவேன். ஆமென்.
இவற்றை பார்த்த அரசர் கில்லசின் புனிதத்துவ வாழ்வை அறிந்தார். அவரை பின்பற்ற விரும்பினார். அவரின் வழியில் செல்ல கடினமாக இருந்தபோதும் முயற்சி செய்தார். கில்லசின் பெயரால் அக்காட்டில் மடம் ஒன்றை கட்டினார்.

கில்லஸ் தன் ஏழ்மையான வாழ்வின் வழியாக காட்டை சுற்றி வாழ்ந்த மக்களை மனந்திருப்பினார். நல்வாழ்வை வாழ கற்பித்தார். காட்டிலிருந்த தாவரங்களைக்கொண்டு, மக்களின் நோய்களை குணமாக்கினார். காட்டில் வாழ்ந்த விலங்குகள் இவரின் புனிதத்துவத்தைக் கண்டு, இவரை சந்திக்க வந்து சென்றது.

இவர் பல மடங்களை அரசரின் உதவி கொண்டு கட்டினார். பல துறவிகளை உருவாக்கினார். இவர் வாழ்ந்த வாழ்வையே, இவரின் மடத்துறவிகளும் வாழ்ந்தனர். இவர் இறந்தபிறகு, பிரான்சு நாட்டிலிருந்து எடுத்துச் சென்று காட்டில் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரின் கல்லறை இன்று யாத்திரை தலமாக உள்ளது. 

Thursday 4 August 2016

புனித ஜான் மரிய வியான்னி St. John Mary Vianney!

மரிய வியான்னி தன்னுடைய மறைபரப்பு பணியில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தார். பெல்லேய் (Bellei) என்ற மறைமாவட்டத்தில் இருந்த ஆர்ஸ்(Ars) என்ற கிராமத்தில் பல ஆண்டுகள் மறைப்பணியை ஆற்றினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, தன்னுடைய எளிய மறையுரையினாலும், செபத்தாலும் ஈர்த்தார். பாவிகள் மனந்திரும்ப இடைவிடாமல் செபித்தார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் இறையடியார்கள் இவரின் மறையுரையைக் கேட்கவும், பாவமன்னிப்பு பெறவும் வந்து குவிந்தனர். பங்குத்தந்தையர்கள் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டுமென்பதில் இவர் அக்கறை காட்டி வந்தார். இவர் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 

இவர் சிறு வயதிலேயே குருப்பட்டம் பெற்றார். கடுந்தவம், செபம், அயராத உழைப்பு இவைகளில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் தன் பங்குமக்களிடையே நிலவிய அநீதிகளை எளிதாக நீக்கினார். அம்மக்களுக்காக இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். திருப்பலி முடிந்தவுடன், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் பாவமன்னிப்பு தொட்டியில் அமர்ந்து, பாவமன்னிப்பு வழங்குவார். தனது ஓய்வு நேரத்திற்கென்று வெகு குறைந்த நேரமே ஒதுக்கினார். பல கட்டிடங்களையும், ஆலயங்களையும் கட்டி எழுப்புவதைவிட, ஆன்மாக்களின் இதயங்களை கட்டி எழுப்புங்கள். அப்போது விண்ணுலகில் இடம் கிடைக்கும் என்று இப்புனிதர் அடிக்கடி கூறிவந்தார். 


செபம்:
அன்பான ஆண்டவரே! புனித ஜான் மரிய வியான்னிக்கு மனவுறுதியையும், வல்லமையும், இரக்கமும் அளித்து வழிநடத்தினீர். உம் வல்லமையால் அவர் மறைப்பரப்பு பணியை சிறப்பாக ஆற்றினார். நாங்களும் அவரது முன்மாதிரியை பின்பற்றி, உம் மக்களை பாவ வாழ்விலிருந்து மீட்பதற்கு தேவையான அருளை நீர் தந்தருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday 23 July 2016

புனித பிரிஜித்தா (St.Bridget)!

இவர் தனது 14 ஆம் வயதிலேயே ஸ்வீடன் நாட்டு அரசர் மாக்னஸ்(Magnes) என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 8 பிள்ளைகளைப்பெற்று தாயானார். தன் பிள்ளைகளை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி வளர்த்தார். சிறுவயதிலிருந்தே இறைவன் மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார்.


திருமணத்திற்கு பின்னும் ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டு, பல துறவற சபைகளுக்கு உதவி செய்தார். அப்போது தன் கணவர் இறந்துவிடவே, தன்னை புனித பிரான்ஸ்கன் 3 ஆம் சபையில் இணைத்துக்கொண்டு ஆன்ம வாழ்வில் வளர்ந்து, பிறருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். இளம் வயதிலிருந்தே கடுமையான தவ வாழ்வில் வளர்ந்த இவர் சபையில் சேர்ந்தபின்னும் அதை மிக கடுமையாக கடைபிடித்து வாழ்ந்தார்.

இவர் அரசர் மனைவி என்பதால், கணவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே கொடுக்கப்பட்டது. இவர் அவை அனைத்தையும் வைத்து இவர் பெயரில் ஒரு துறவற மடத்தை நிறுவினார். அதன்பிறகு உரோமைக்கு சென்று, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஆன்ம வாழ்வில் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார்.

தான் மேற்கொண்ட கடுந்தவத்தின் காரணமாய், பல நாட்டிற்கு திருப்பயணம் சென்றார். அப்பயணங்களில் பல நூல்களையும் எழுதினார். இளம் வயதிலிருந்தே இறைவனிடமிருந்து தான் பெற்ற காட்சிகள் அனைத்தையும், புத்தகங்களில் வடிவமைத்தார். புனித நாட்டிற்கு பயணம் செய்யும்போது தன்னுடைய மகன்களில் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை கேட்டார்.


இதனால் மிகவும் மனத்துயர் அடைந்து, புனித நாட்டிற்கு செல்லாமல் மீண்டும் உரோம் நகர் திரும்பினார். தனது மற்ற பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போகவே, மனத்துயர் அடைந்து நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்.

இறக்கும்வரை இறைவனை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்தார். இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார்

Monday 20 June 2016

புனித.மர்கரீத் எப்னர்(St.Margarete Ebner)!

தில்லிங்கன் என்ற ஊரில் இவருக்கென்று ஓர் ஆலயம் உள்ளது. அங்குதான் இவர்தான் இறுதி நாட்களை கழித்துள்ளார். பலவித கலாசாரத்தை கொண்ட மக்களிடத்தில் இவர் பணியாற்றினார்.

இவர் தனது 15 ஆம் வயதில் புனித டொமினிக்கன் சபையில் சேர்ந்து துறவியானார். அவர் அச்சபையில் வாழ்ந்தபோது 1312 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆண்டவரின் காட்சிகளை பலமுறை கண்டார்.

 இவர் மிகவும் கடுமையான நோயால் தாக்கப்பட்டு, படுக்கையிலேயே தன் வாழ்நாட்களை கழித்தார். நோயால் மிகவும் வேதனைக்குள்ளானார். இதனால் இறைவனின்மீது தன் முழு நம்பிக்கையையும் வைத்து, இடைவிடாது செபித்தார்.

ஆண்டவரின் பாடுகளில் அவ்வப்போது பங்கெடுத்தார். இவரின் ஆன்ம வழிகாட்டி தந்தை ஹென்றி அவர்களின் அறிவுரைப்படி, தொடர்ந்து ஆண்டவரின் பாடுகளில் பங்கெடுத்தார். ஒருநாள் ஆண்டவர் கொடுத்த காட்சியை கண்டுகொண்டிருக்கும்போதே, தன் கண்களை மூடியபடியே உயிர் நீத்தார்.

இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையை எண்ணிலடங்கா மக்கள் சந்திக்க வந்தனர். அங்கு வந்த அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் புதுமைகளை செய்தார். இவர் இறந்த சில ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறைமேல் இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட ஒரு சுரூபம் தானாகவே வளர்ந்தது.

 1751 ல் சாதாரணமாக இருந்த இவரின் கல்லறைமேல் 1751-1755 வரை ஓர் ஆலயம் கட்டப்பட்டு, இன்றும் அவ்வாலயத்தில் அவரின் பெயரால் வழிபாடுகள் நடக்கின்றது.


Saturday 4 June 2016

புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo)!

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார்.

இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார்.

அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார்.

குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளிக்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துடனும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளிகளையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.

இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களை கொண்டு ஏழைகளை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கினார்.

1588 ஆம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திருத்தந்தை 5ஆம் சிக்டஸ்(Pope Sixtus V) அவர்களால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ(Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவராக தேர்ந்தெடுத்தார்.

1593 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் டி கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட்டார். மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது.

இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44 ஆம் வயதில் இறந்தார்.

Friday 3 June 2016

புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles)!

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதியில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப்பணியில் இறங்கினர்.

1879 ஆம் ஆண்டு பெரிய சனிக்கிழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்றனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக்கரானவர்கள்.


கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண்டுதலால் 1886 ல் முவாஷ்கா(Muwashka) என்ற அரசன் கத்தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான். சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கைக்கு அடிமைப்பட்டவனாக இருந்தான்.

அவன் அரச அலுவல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்த போது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடுமையானது" என்று அறிவுரை கூறி ஓரினசேர்க்கை ஈடுபடாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ(Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயிரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது.

ஆப்பிரிக்காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட்டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமையான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.

மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடிப்பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலைவெட்டப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவர்கள் பலுகி பெருகினர்.

Thursday 2 June 2016

புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter)!

மார்சலினஸ் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, குருத்துவ நிலையை அடைந்தார். பீட்டர் திருச்சபை வழங்கும் "பேய்களை ஓட்டும்" அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார்.

 இருவரும் தங்களின் வேத விசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கெனவே விசுவாசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் கிறிஸ்தவர்களை விசுவாசத்தின்பேரில் கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களை இவர்கள் இருவரும் மனந்திருப்பினர். அவர்களை கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றினர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக் காவலன் ஆர்த்தியுஸ், அவர் மனைவி, மகள் ஆகியோர் கூட கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று, நாயக்ரா என்றழைக்கப்படும் ஒரு காட்டிற்குள் கொண்டு போகப்பட்டனர். அங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படும்முன் இவர்களை புதைக்க ஒரு குழித்தோண்டப்பட்டிருந்தது.

உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்துவிட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார். லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து "திபூர்சியஸ் புதைக்குழி"யில் அடக்கம் செய்தனர். மன்னன் கான்ஸ்டாண்டின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர்.

 இவர் கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன், புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் செய்தார். இவர்களின் வீரச்சாவு தொடக்கத் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் ரோமன் கேனன்(Roman Canon) என்று சொல்லப்படும். திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் "மாறாத ஜெபங்கள்" என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலங்காலமாக நினைவு கூரப்பட்டனர்.

"நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. வான் வெளியில் திரியும் தீய ஆவிகளோடு போராடுகிறோம், எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீது வெற்றி அடைந்து, நிலை நிற்க வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்" (எபே 6:12) என்ற இறைவாக்கை வாழ்வாக வாழ்ந்தனர்.

Wednesday 1 June 2016

புனித ஜஸ்டின் (St.Justin)!

இவர் கிரேக்கமொழி பேசும் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே தத்துவ கலையை ஆழமாகக் கற்றுத்தேர்ந்தார்.

இவரது காலத்தில் இருந்த ப்ளேட்டோ(Plato) போன்ற தத்துவமேதைகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார்.

எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்த தத்துவ ஞானம் தனக்கு முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலெக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்கொண்டிருந்தார்.

தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரை சந்தித்தார்.. அவருடன் நெடுநேரம் உரையாடினார். அதன்பயனாக விவிலியத்தில், இறைவாக்கினர்கள் எழுதிய இறைவாக்குகளைப்படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பு இறைவாக்கை சரியாக புரிந்துகொண்டார்.

கிறிஸ்தவர்கள் எத்தனை மனவலிமையுடன் கிறிஸ்துவிற்காக வேதனைகளை தாங்கிக்கொண்டார்கள். என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். இறைவாக்கினர்களை நினைத்து வியப்படைந்தார்.


சாவைத் தழுவினாலும், இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும், ஆர்வமும் அவரை மிக ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலைப் படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.

கிறிஸ்துவுக்காக வாழ முடிவெடுத்தார். பின்னர் தமது தத்துவமேதைக்குரிய உடையிலேயே பல பயணங்களை மேற்கொண்டு, இறுதியாக உரோம் நகரை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதிய இறைவாக்குகளைப் பற்றி தெளிவாகப்படித்தார். முடிவில் அவர்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.

இதன் பயனாக, இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைப்பற்றி விரிவாக எழுதிவைத்தார். அனைத்திற்கும் மேலாக, திவ்விய நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை பற்றியும் அதில் நாம் கொண்டிருக்கவேண்டிய விசுவாசப் பற்றுறுதி பற்றியும் மிகவும் ஆழமாக விவரித்து எழுதியுள்ளார்.

147 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல, இனியும் துன்புறுத்தப்படக்கூடாது. என்று மன்னன் ஆன்றோனினுஸ் பயஸ்(Androninus Pius) ஆணை பிறப்பித்தான்.

 ஜஸ்டின் எழுதிய பல நூல்களில் ஒன்றில் "உலகில் எப்பகுதியிலும், எக்காலத்திலும் உண்மையை சுட்டிக்காட்டிய ஞானிகள் அனைவரும் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மிக அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

166 ல் ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூலில், நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் இந்நூல் அப்போதைய அரசன் மார்க்ஸ் அவுரேலியுசுக்கு(Marks Aureliyas) எரிச்சல் மூட்டியது. இதனால் கோபம்கொண்ட அரசன், கிறிஸ்துவ விசுவாசத்தையும், ஜஸ்டினையும் அழிக்க எண்ணி, அவரை சிறைப்பிடித்து சென்றான். அங்கு பல கொடுமைகளை அனுபவித்த

ஜஸ்டின் தனது 67 ஆம் வயதில் தலைவெட்டப்பட்டு இறந்தான். அவர்தான் இறக்கும்வரை, எந்த ஒரு தத்துவக்கலையும், இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டு சேர்க்கமுடியும் என்பதை இடையூறாது போதித்தார்.


Monday 30 May 2016

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )

இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர்.

பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர்.

 பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

 இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார்.

1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார்.

அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார்.

 ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார்.

செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர்.

அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார்.

பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


Saturday 28 May 2016

புனித கெர்மானூஸ் (St.Germanus)!

தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார்.

 அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார்.

தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது.

இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார்.

அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார்.

அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.

இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.

இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.

Friday 27 May 2016

புனித அகஸ்டின் (St. Augustine)!

இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

 அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென்றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சியைக் கண்டு அச்சமுற்றார்கள்.

அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங்கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசுவின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந்தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ்சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப்பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதியுள்ளார்.

இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வாலயம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந்தனர்.

இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ்நானம் பெற்றனர்.

நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெற்றது.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும்போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம்.

மிக மேலான காரியங்களையும் இறைவனின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன்னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.

Thursday 26 May 2016

புனித பிலிப்புநேரி(St. Philip Neri)!

இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம் வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோம் நகர் சென்றார்.

அங்கு இவர் வேதக்கலை, தத்துவக்கலையைப் பயின்றார். அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியாரின் புதைக்குழி வளாகத்தில் தங்கினார்.

அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர் தெரு வழியாக நடந்துசெல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இனங்கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளினாலும் அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.

பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவர்களை ஒருங்கிணைத்து, திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை இறைவன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக்கவும் வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார்.

அப்போது இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவதை நாட பணித்தார். பின்னர் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 33 ஆண்டுகள் ஆரட்டரி(Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து நடத்தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

அதன்பிறகு இக்குழுவை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ் செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார். இன்றுவரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழிலாளர் பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும் வந்த வண்ணமாய் இருந்தனர். \

பல குருக்களும், கர்தினால்களும் இவரது ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார்.

இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின் அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டார்.

பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம், அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.

இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு, ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும் மறவாமல் ஜெபிப்பார்.

Wednesday 25 May 2016

புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)!

இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். 

இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர் இவருக்கு 7 வயது நடக்கும்போது நார்த்தம்பிரியாவில்(Narthampriya) இருந்த துறவற மடத்தில், புனித பெனடிக்ட் பிஸ்கோப்(Benedict Piskop) என்பவரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். 

அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுதேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம். 

இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும். 


அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர்.

 அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். 

அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார். 


Tuesday 24 May 2016

சாலையோர மாதா!

இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம்.

இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.

கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது.

அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது.

 புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

 இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.


இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார்.

இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.