Thursday 22 September 2016

நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?

முன்பொரு காலத்தில் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான். தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே!, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.  தூதுவன் அரசரிடம் சென்று, “நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை” என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான். இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான்
உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள்,  நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான். நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே? “ஆம், அதுவேதான்”. “தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார். அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென். அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார். துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது. “அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார். “அது எப்படி? அவை நுகத்தடிகள், அது ரதமல்ல”.

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை. துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப்பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார். அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘? நீ எங்கேயும் ‘நானை’ கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று
சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும். (ஓஷோ சொல்லக்கூடிய கதை இது)

நான், நான் என்று அலைபவர்கள் “நான்” என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் கதை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?, நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். இயேசுவின் இந்த கேள்வி ஆணவத்தில் எழுந்த கேள்வி அல்ல. இயேசு தாழ்ச்சியே உருவானவர்), மாறாக தான் பணிபுரிந்த இடங்களில் இருந்த மக்கள், தன்னோடு இருந்த சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி. இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அளித்த பதிலைப் பார்த்துவிட்டு சற்று அதிருப்திகொள்கிறார். பின்னர் அவர்களுக்கு தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் (சீடர்களும் இதில் அடங்கும்) மெசியா என்பவர் எல்லா மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் அரசராக பார்த்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர் மெசியா என்பவர் மக்களுக்காக, அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக துன்புறக்கூடியவராகப் பார்த்தார். மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக தன்னுடைய உயிரையே பலியாகத் தந்தார். எனவே நம் இயேசுவைப் பற்றிய/ மெசியாவைப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டு வாழ்வோம்.

இறையியலாளரான மோல்ட் மோர்கன் கூறுவார், “மெசியாவைப் பற்றிய பார்வைக்கும் நமது வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்று. எப்படி என்றால் நாம் மெசியாவை அதிகாரம் செலுத்துபவராகப் பார்த்தால், நாமும் பிறர்மீதும் அதிகாரம் செலுத்துகின்றவர்களாவோம். மாறாக மெசியாவைத் துன்புறும் ஊழியராக, பிறருக்காகத் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணிப்பவராகப் பார்த்தால், நாமும் பிறருக்காகத் துன்புறத் தயாராவோம்.

எனவே இயேசுவே மெசியா என உணர்வோம். அவரைத் துன்புறும் ஊழியராக உணர்ந்துகொள்வோம். பிறருக்காக, பிறர் வாழ்வு நலமடைய துன்புறும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

No comments:

Post a Comment