Tuesday 31 January 2017

வாழ்கை அனுபவங்கள் பல!

ஆண்டவர் இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது. அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சொந்த ஊரினர் அவரை நம்ப மறுத்தனர்.

அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும். எனவேதான், இயேசுவே கூறினார்; சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் என்று.

இத்தகைய அனுபவங்கள் சில நேரங்களில் நமக்கும் நடந்திருக்கும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது ஆர்வங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தபோது நாமும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்போம்.

நமது பெற்றோர், உடன் பிறந்தோர் நமது திறமைகளை, ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது நாமும் மிகுந்த வேதனை அனுபவித்திருப்போம்.

ஆனால், இன்று இந்த வாசகம் வழியாக ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்பே பிறர் நமக்குச் செய்த தவறுகளை, நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்பதுதான். எனவே, நமது வீட்டில் நம்மோடு வாழ்பவர்களை இனி நிறைவான பார்வையால் பார்க்கக் கற்றுக்கொள்வோம்.

அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, தன் மதிப்பை வழங்க முன் வருவோம். அதுபோல, நம்மோடு பணிபுரிகி;ன்ற, உழைக்கின்ற, படிக்கின்ற நண்பர்கள், தோழியரின் திறமைகளை, ஆற்றல்களை ஊக்கப்படுத்துவோம். அவரவர்க்குரிய தன் மதிப்பை வழங்குவோம்.

Sunday 29 January 2017

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்!


காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன் உறவுகளை இழந்த மனிதனாக இருந்தான். இயற்கையிடமிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தான்.(5:3 கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்). மனிதர்களிடமிருந்கு ஒதக்கி வைக்கபட்டிருந்தான் (5:4 விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டியிருந்தார்கள்). கடவுளின் சாயலை இழந்திருந்தான். (5:5 தம்மையே கற்களாலும், காயப்படுத்தி வந்தார்). ஆக, அடிப்படை உறவுகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தான். இயேசு, அந்த மனிதன் இழந்த மூன்று உறவுகளையும் புதுப்பித்துக்கொடுக்கிறார். அந்த மனிதன் இயேசுவுக்கு சாட்சியாக மாறி, இறைவன் தனக்கு செய்த நன்மைகளையெல்லாம், அந்தப்பகுதி முழுவதும் அறிவிக்கிற உண்மையுள்ள சீடராக மாறுகிறான்.

"உன்னத கடவுளின் மகனே உமக்கு இங்கு என்ன வேலை?" நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி. ஆமாம். இறைமகனுக்கு பேய்களோடு என்ன வேலை? கடவுளுக்கு கல்லரையில் என்ன வேலை? பாவமும் பாவச் செயல்களும் நடைபெரும் இடத்தில் பக்தனுக்கு என்ன வேலை? அநீதியும் அவமானமும் மலிந்த இடத்தில் ஆண்டவனின்அடியானுக்கு என்ன வேலை? மனிதமும் மனிதாபிமானமும் சிதைக்கப்படும் இடத்தில் மதத்திற்கு என்ன வேலை? கொள்ளையும் கொலையும் குவியும் இடத்தில் கோயில் தெய்வத்திற்கு என்ன வேலை? ஏழ்மையும் வறுமையும் வளர்த்து உருவாக்கப்படும் இடத்தில் வானக இறைவனை வழிபடும் மக்களுக்கு என்ன வேலை? நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி.

இறைவன் விண்ணகத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆண்டவன் ஆலயத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆயர்கள் ஆட்டுப்பட்டியோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! நல்லவர்கள் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிட வேண்டியதுதானே? திருச்சபை, திருவருட்சாதனங்களோடு நின்று விடவேண்டும். வழிபாடு, தேர், திருவிழா, அர்ச்சனை, ஆராதனை இவற்றோடு முடித்துக்கொள்ள வேண்டும். இதுவும் நியாயமான கேள்விதானா?

இன்று எழும்பும் இத்தகைய கேள்விகளுக்கும் சருக்கல்களுக்கும் சவாலாக இயேசு செயல்பட்டதைப் பார்க்கிறோம். தெய்வம் பேயை சந்திக்கிறது. கடவுள் கல்லரையை நெருங்குகிறார். புனிதர்; பாவியை அரவணைக்கிறார்.

அநீதியை, அசிங்கத்தை அப்புறப்படுத்த காலம், நேரம், இடம் பார்க்க அவசியமில்லை. ஒதுங்கி, ஒடுங்கி, அடங்கிப்போக அவசியமில்லை. வேதம் வீதிக்கு வர வேண்டும். தெய்வம் தெருவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பற்றிப் படர்ந்து சுடர்விட்டு எரியவேண்டும்.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வீச நல்லவர்கள் நாம் ஒதுங்காமல் ஓரம்கட்டாமல் உட்புகுந்து செயல்பட வலுவேண்டுகிறேன்,தெய்வமே.

கடவுள் நமது வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகளைச்செய்து வந்திருக்கிறார். அவரது அளவுகடந்த இரக்கத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சாட்சியாக மாற வேண்டும். இறைஇரக்கத்தை மற்றவர்கள் உணரும் வண்ணம் தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனைப்போல, நம்முடைய வாழ்வே மற்றவர்களுக்கு ஒரு நற்செய்தியாக விளங்க வேண்டும்.

வாழ்வில் வசந்தம் வீச வேதம் வீதிக்கு வர வேண்டும்.

Friday 27 January 2017

ஆழமான விசுவாசம்!

கலிலேயா கடல் ஒரு சில விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. எப்போது புயல் அல்லது கடுமையான காற்று வீசும் என்று தெரியாத அளவுக்கு, தீடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக்கடல். பொதுவாக புயல் சின்னம் உருவாவதை இயற்கையின் அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். வானம் மேகமூட்டமாகத்தோன்றும். காற்று வழக்கத்திற்கு மாறாக பலமாக வீசும்.

ஆனால் கலிலேயக்கடல் இதிலிருந்து வேறுபட்டது. வானம் தெளிவாக இருந்தாலும், காற்றே இல்லாத சூழ்நிலை இருந்தாலும் அதனை நம்பி புயல் வருவதற்கில்லை என்று ஒருவராலும் அறுதியிட்டுச்சொல்ல முடியாது. கலிலேயா கடல் அமைந்திருக்கின்ற அந்த இட அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்திற்கு காரணம்.அதேபோல எப்போது புயலும், காற்றும் ஓயும் என்பதையும் பருவநிலை மாற்றத்தை வைத்து அறுதியிட்டுச்சொல்ல முடியாது.

சீடர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத்தெரியும். எனவே, சாதாணமானச்சூழ்நிலை என்றால் அவர்கள் இயேசுவின் உதவியை நாடியிருக்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வே கடல்தான். ஆனால், இயேசுவோடு பயணம் செய்த அன்றைக்கு கடலில் பார்த்த மாற்றம், அவர்கள் என்றைக்குமே சந்தித்திராதது. உயிர்ப்பயம் அவர்களை கலக்கமுறச்செய்துவிட்டது.

சாவு பற்றிய பயம் அவர்களை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. கடைசியில் இயேசுவின் உதவியை நாடுகிறார்கள். இயேசு கடலை அமைதிப்படுத்தியபின் சீடர்களைப்பார்த்துக்கேட்கும் கேள்வி: உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்பது. காரணம்: கடலின் மாறுதலுக்கு தீய ஆவிகள்தான் காரணம் என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த நம்பிக்கை. மாற்கு 1: 21 – 28 ல் இயேசு தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துகிறார்.

மக்கள் அவரைப்பார்த்து “இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்: அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று வியந்து போற்றினார்கள். அப்போது சீடர்களும் உடனிருந்து இயேசுவின் ஆற்றலைப்பார்த்து வியந்துநின்றனர். அப்படிப்பட்டவர்கள் உயிர்ப்பயம் வந்தவுடன், கடவுளின் ஆற்றலை, வல்லமையை மறந்து, நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். இயேசு மீண்டும் அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

வாழ்க்கைக்கவலைகளும், ஏமாற்றங்களும் கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எந்தச்சூழ்நிலையிலும் நம் நம்பிக்கையை இழந்துவிடச்செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், நாம் பெற்றிருப்பது உண்மையான, ஆழமான விசுவாசம் அல்ல. வெறும் மேலோட்டமான விசுவாசம் தான். ஆழமான விசுவாசத்தில் வளர முயற்சி எடுப்போம்.

Thursday 26 January 2017

விதையுங்கள் !

நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. அறிவியல் ஒரு எல்லைவரை எட்டிச்சென்று, பயிர் வளர்வதற்கும், வளர்ந்த பயிர் விளைச்சலுக்கான காரணத்தை விளக்கலாம். அந்த எல்லைக்குப் பின், அறிவியலும் மௌனம் சாதித்துவிடுகிறரது. மனிதனின் கையை மீறிய ஒரு சக்தி அந்த பயிறுக்குள் இருந்து, நிலம் தானாக விளைச்சல் கொடுக்கச் செய்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தன் கையை மீறிய ஒரு ஆற்றல் நம்மை அறியாமல் நமக்குள்ளும் புறமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் இறை ஆட்சி. சில விசித்திரமான நிகழ்ச்சிகள் நம்மில் குருக்கிடும்போது, ஆச்சரியமாக அந்த தெய்வீக சக்தி நம்மை பத்திரமாக பாதுகாத்த சம்பவங்கள், நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்களுக்கும் நிகழ்ந்தது நாம் அறியாததல்ல.

வாசிக்கும் அனைவரும் உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் இறையாட்சி செயல்பட்டு உங்களை பாதுகாத்த நிகழ்வுகளை மின் அஞ்சலில் எழுதுங்கள். இறை ஆட்சியின் செயல்பாட்டை அனைவரும் அறிய வாய்ப்பாகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியைத் தானாகவே முளைத்து வளரும் விதைக்கு ஒப்பிடுகிறார். நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அத்துடன், அவரது பணி முடிந்துவிடுகிறது. பின்னர், அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. பின்னர், விளைச்சல் அளிக்கிறது.

இந்த உவமை நம் அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருக்கிறது. நமது பணிகளுக்கு நேரடியாக வெற்றியோ, பலனோ கிடைக்கவில்லை என்று நாம் வருந்தினால், இந்த உவமை நமக்கு உற்சாகம் தருவதாக அமைந்திருக்கிறது. நாம் விதை விதைப்பவர்கள். அதை வளரச் செய்து, பலன் தருபவர் இறைவனே.

எந்த நேரத்தில், எத்தகைய பலன் தரவேண்டும் என்பது அவரது திருவுளமே என்பதை ஞானத்தோடு ஏற்றுக்கொள்வோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல எண்ணங்களை, நல்ல திட்டங்களை விதையாகத் தூவுவது மட்டுமே. மற்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார்.

 இந்த நம்பிக்கையில் நம் பணிகளை ஆர்வமுடன் செய்வோம்.இறை ஆட்சி வெளிப்படையாக ஒருநாள் வெளிப்படும். அதுவரை காத்திருப்போம், விழிப்போடு செபிப்போம்.

Wednesday 25 January 2017

விளக்கு எதற்காக ?

இன்று ஆயர்களான புனித திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம். தொடக்கத் திருச்சபையின் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்குப் பவுலடியார் எழுதிய மூன்று திருமடல்களும் தொடக்கத் திருச்சபை எவ்வாறு இயங்கியது, ஆயர்கள், மூப்பர்கள், இறைமக்கள் என்னும் படிமுறை அப்போதே எவ்வாறு செயல்பட்டது என்னும் தகவல்களைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?" எனக் கேட்கிறார். விளக்கு விளக்குத் தண்டின்மீது வைக்கப்பட்டு, ஒளி தரவேண்டும். அதனால், நமது பணிகள் இருளையும் பொருட்படுத்தாது தொடரவேண்டும் என்பதே விளக்கைக் கொண்டுவருவதன் நோக்கமாகும்.

திருச்சபையின் தலைமைப் பொறுப்புகளும் அவ்வாறே விளக்குகள்போலவே. ஆயர்கள், குருக்கள், பொதுநிலைத் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை, திறமைகளை மரக்காலின்கீழோ, கட்டிலின்கீழோ வைக்காமல், அதாவது எப்பணியும் செய்யாது சோம்பியிராமல், விளக்குத் தண்டின்மீது அனைவரும் காணும்படியாகப் பணியாற்றவேண்டும். அப்போதுதான், அதைப் பார்க்கின்ற பிறரும் பணியாற்றுவர், பிறருக்கு அது எடுத்துக்காட்டாகவும் அமையும்.

தொடக்கத் திருச்சபையின் ஆற்றல்மிகு ஆயர்கள் திமொத்தேயு, தீத்து போலவே, இன்றைய தலைவர்களும் தங்கள் பணிகளை அனைவரும் கண்டு பின்பற்றும் வண்ணம் ஆற்ற மன்றாடுவோம்.

Tuesday 24 January 2017

பவுலின் மனமாற்றம் !

இன்று நாம் புனித பவுலின் மனமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அவரது மனமாற்ற நிகழ்வு திருத்தூதர் பணிகள் நூலில் மூன்று இடங்களில் (9:1-19, 22:1-21, 26:12-18) தரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

இந்நிகழ்வைப் பவுலின் மனமாற்றம் என்பதோடு, அவரது அழைப்பு என்றும் கூறலாம். திருத்தூதர் பணிகள் நூலில் இரண்டு இடங்களில் "சவுல் அழைப்புப் பெறல்" "பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்" எனத் தலைப்பிடப்பட்டிருப்பதும் நம் கவனத்தை ஈர்க்கிறது. பவுலை இறைவன் மனம் மாற்றியபோது, அவரைத் தமது திருப்பணிக்காக அழைத்தார்.

எனவே, ஒவ்வொரு மனமாற்றமும் ஒரு அழைப்பே எனக் கொள்ளலாம். நாம் மனம் திரும்பும்போது, நமது வாழ்வு மாறுபடுவது மட்டுமல்லாது, பிறரது வாழ்வையும் மாற்றவேண்டிய கடமை நம்மேல் சுமத்தப்படுகிறது. எனவே, நாம் நமது தீய வழிகள், பழக்கங்களைவிட்டு விலகினால், மட்டும் போதாது, நமது மனமாற்ற அனுபவத்தைக் கொண்டு, பிறரையும் மனமாற்றத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே இந்த விழா நமக்குத் தரும் செய்தி.

நமது வாழ்வு முறை மாறவும், நாமும் திருத்தூதர்களாக ஆகவும் வரம் வேண்டுவோம்.

Monday 23 January 2017

யார் இயேசுவினுடைய தாய்?, யார் இயேசுவின் உடன்பிறப்புகள்?


சபீதா ஜோசப் என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு வேடிக்கையான கதை.
ஓநாய் ஒன்று பசியோடு அலைந்து கொண்டிருந்தது. கிராமத்தின் தெருக்கோடியில் இருந்த ஒரு குடிசை அருகே அது வந்தபோது, குடிசையினுள்ளே அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை அவனது தாய் திட்டிக்கொண்டிருப்பது காதில்விழ நின்று கவனித்தது.
“அழுகையை நீ மட்டும் நிறுத்தாவிட்டால் உன்னைத் தூக்கி ஓநாயிடம் கொடுத்துவிடுவேன்” என்று மகனை மிரட்டினாள் தாய். மகனோ தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். “நமக்கு சீக்கிரம் அருமையான விருந்து கிடைக்கப் போகிறது” என்று ஓநாய் காத்திருந்தது.
நேரம் ஓடியது. இரவும் வந்துவிட்டது. இன்னும் அழுதுகொண்டே இருந்த மகனை சமாதனப்படுத்தும் விதமாய் தாய் சொன்னாள், “கண்ணா அழுவாதே... உன்னை ஓநாய்க்கிட்டே போடமாட்டேன். அந்த திருட்டு ஓநாய் இந்தப் பக்கம் வரட்டும் அடிச்சுச் கொன்னுடலாம்”. அவள் பேச்சைக் கேட்ட ஓநாய், “சே! இந்த மனுசங்க சொல்வது ஒன்று. செய்வது வேறாய் இருக்கிறதே. இவர்களை நம்பவே கூடாது” என்றபடியே ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் மறைந்தது.
மனிதர்களாகிய நாம் எப்படி முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றோம் என்பதனை இந்தக் கதையானது வேடிக்கையாகப் பதிவுசெய்கின்றது. இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருப்பவர்கள் யாரும் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக மாறும் பேற்றினைப் பெற முடியாது என்பது மட்டும் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் வருகிறார்கள். அவர்கள் வந்த செய்தி இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர் தம்மைச் சூழ்ந்து நின்ற மக்களைப் பார்த்துச் சொல்கிறார், “இதோ! என் தாயும் என் சகோதர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”. இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது இயேசு தன்னுடைய தாயும் சகோதர சகோதரிகளையும் இழிவுபடுத்தியது போன்று தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
இயேசு, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவர்” என்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவராக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படி என்றால் வானதூதர் கபிரியேல் முன்மொழிந்த ஆண்டவரின் திட்டத்திற்கு ஆம் என்று சொன்ன மரியா, அத்திட்டம் நிறைவுபெற தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரையும் முயன்றார். அதற்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார். ஆகவே, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டும் இயேசுவுக்குத் தாயாகிவிடவில்லை, மாறாக இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றியதாலும் இயேசுவுக்குத் தாயாகின்றார்.
நாம் மரியாவைப் போன்று இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மக்களாக வாழ்கிறோமா? அதன்வழியாக இயேசு அளிக்கின்ற அவருக்குத் சகோதர சகோதரியாகும் பேற்றினைப் பெருகின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் தாயினைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும், வழிபடுவது ஒன்றும் வாழ்வதும் ஒன்றான முன்னுக்குப்பின் முரணான வாழ்க்கையாகத் தான் நம்முடைய வாழ்க்கை இருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் எப்படி இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவது என்பதுதான் நமக்கு முன்பாக உள்ள சவாலாக இருக்கின்றது.
இறைவனின் திருவுளம் யாது? அது வேறொன்றுமில்லை. ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்வதும், ஒருவர் மற்றவர்மீது உண்மையான பரிவு, இரக்கம் அக்கறையோடு வாழ்வதுதான். அன்னை மரியா அப்படித்தான் வாழ்ந்தார். அதனால்தான் அவர் இரண்டு விதங்களில் இயேசுவுக்கு தாயாக மாறினார். நாமும் இறைவனின் திருவுளத்தை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுவோம், அதன்வழியாக இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரியாக மாறும் பேற்றினைப் பெறுவோம்.

Saturday 21 January 2017

".. .. .. .. பின்பற்றினார்கள்"

பேதுருவும் அவர் சகோதரர் அந்திரேயாவும் இயேசுவைப் பின்பற்றினார்கள்.(மத் 4:20) செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவைப் பின்பற்றினார்கள். (மத் 4:22) தொடர்ந்து வரும் பகுதியிலும் மக்கள் கூட்டம் பெருந்திரளாய் இயேசுவைப் பின்தொடர்ந்ததையும் (மத்4:25) மத்தேயு குறிப்பிடுவதில் உள்ள உட் பொருளைக் காண்பது அவசியம்.

'பின்பற்றுவதும்' 'பின்தொடர்வதும்' தனக்காக வாழாமல், தான் பின்பற்றும் அல்லது தொடரும் இயேசுவுக்காக வாழ்வது என்னும் உட் பொருளைக் கொண்டுள்ளது. இவ்வாறு இயேசுவுக்காக, ஆகவே பிறருக்காக வாழும் வாழ்க்கை ஒரு 'தனிமனித வாழ்க்கை' அல்ல மாறாக 'குழுவாழ்வு' என்னும் உட்பொருளை தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே இயேசுவைப் பின்பற்றுவோரும் பின்தொடர்வோரும் இத்தகைய குழு வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம்.

இக்குழு வாழ்வுக்குத் தன்னையும் சொந்த பந்தத்தையும்(மத்8:18-22) சொத்து சுகத்தையும்(மத் 19:21) தியாகம் செய்ய வேண்டும்.ஆண்டவனையும் அயலானையும் முன்னிலைப்படுத்தி குழுமமாக வாழ இப்பின்தொடர்தல் வலியுறுத்துகிறது. எனவே, கிறிஸ்தவத்தில் குழு வழிபாடு, குழு வாழ்க்கை, அன்பியம், பங்கு, ஆகிய எண்ணங்கள் புதிது அல்ல, மாறாக கிறிஸ்தவத்தில் உள்ளடங்கியது. இயேசுவைப் பின்தொடரும் நாம் இவற்றைப் பின்பற்றுவோம். வாழ்கை வளமாகும். வாழ்த்துக்கள். ஆசீர்;.

Thursday 19 January 2017

தம்மோடு இருக்க...!

 இயேசு தம் திருத்தூதர்களை அழைத்த நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். நமக்கு நன்கு அறிமுகமான பகுதிதான். அதில் இன்று நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் இரு செய்திகள்:

1. அவர் தாம் விரும்பியவர்களை தம்மிடம் அழைத்தார். கிறித்தவ அழைத்தல் என்பது ஒரு கொடை. அது சம்பாதிப்பது அல்ல, இறைவன் தாமாக விரும்பி இலவசமாகக் கொடுப்பது. அந்த அழைத்தலுக்குத் தகுதி என்று எதுவுமில்லை. இறைவனின் இரக்கம் ஒன்றுதான் அலகு. யாரையெல்லாம் அவர் அழைத்திருக்கிறாரோ, அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள். நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

2. தம்மோடு இருக்க... என்பது அவரது அழைத்தலின் நோக்கங்களுள் ஒன்று. அவரால் அழைக்கப்பட்டவர்கள் அடிப்படையில் செய்யவேண்டியது அவரோடு ஒன்றி வாழ்வது, அவரோடு வாழ்வது. இந்த இரு செய்திகளையும் இன்று நம் இதயத்தில் பதித்துக்கொள்வோம்.

“இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;  அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”(மாற் 3:13-15) பன்னிரெண்டு திருத்தூதரை அழைக்க, இவ்வளவு சிரமப்பட்டு மலை உச்சிக்குப்போய், தந்தை இறைவனோடு செபத்தில் கலந்தாலோசித்து  தேர்ந்தெடுத்துள்ளார்.

சாதிக்கு ஒரு திருத்தூதர், சங்கத்துக்கு இன்னொருவர், கோடி பணம் கொடுத்தவர் மற்றொருவர், குடும்பத்தில் பாதிபேர் என்று மிக எளிதாக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு குருமாணவனைப்பற்றிய ஒரு புகார் அந்த ஆயரிடம் வந்தபோது, ‘நான் செபித்து முடிவு செய்வேன்’ என்றார். அவர் இன்று இல்லை.

அது ஆயராக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், குருக்களாக இருக்கலாம், குருத்துவப் பணியிடமாக இருக்கலாம், உங்கள் கணவனாக மனைவியாக இருக்கலாம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால வாழ்வாக இருக்கலாம். மலைக்குச் செல்லுங்கள். ஆண்டவரின் உதவியைத் தேடுங்கள். சரியான முடிவு எடுப்பீர்கள். நடப்பவை நல்லவையான இருக்கும்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே நற்செய்தி அறிவிக்கும்பணி இருக்கிறது. நாம் இறைவார்த்தை கேட்டதோடு நமது வாழ்வு நின்றுவிடக்கூடாது. அது நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும். இறைவார்த்தை தொடர்ந்து நமது வாழ்வில், வாழ்வு மூலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

Wednesday 18 January 2017

.. ..அவரைத் தொடவேண்டுமென்று .. .. ..!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது.

நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது. தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். 'அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர். "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம்.

கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம்.

இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

Tuesday 17 January 2017

"ரௌத்திரம் பழகு" !

"ரௌத்திரம் பழகு" என்றார் பாரதி தமது புதிய ஆத்திச்சூடியில். கோபப்படப் பழகு என்பது அதன் பொருள். பொதுவாக, சினம் என்பது ஒரு தவறான உணர்வுநிலைதான். பெரும்பாலான வேளைகளில், சினமும், சீற்றமும் மானிடரைக் குற்றப் பழிக்கு இட்டுச்செல்கின்றன என்பதுவும் உண்மைதான். இருப்பினும், கோபம் கொள்ளவேண்டிய வேளைகள் இருக்கின்றன. அவ்வேளைகளில் கோபம் கொள்ளாமல் இருப்பதுவும் தவறே என்பது இந்தப் புதிய ஆத்திச்சூடியின் பாடம்

அது உண்மைதான். எப்போது நாம் கோபம் கொள்ளவேண்டும்? நமக்கு தீமையோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதைப் பொறுத்துக்கொள்வதும், அமைதி காப்பதும் சிறந்த பண்புகள். ஆனால், பிறருக்குத் தீமை, அநீதி நிகழும்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காப்பது என்பது தவறு. அந்த நேரத்தில்தான் நமக்குக் கோபம் பொங்கி எழவேண்டும்.

நாளைய(18.01.2017)   நற்செய்தி வாசகத்தில் இயேசு கொள்ளும் சினம் அத்தகையதே. தொழுகைக்கூடத்தில் கை சூம்பிய மனிதரைப் பார்த்தபோது, இயேசுவின் பரிவுள்ளம் அவரைக் குணமாக்கத் துடித்தது. ஆனால், அங்கிருந்தவர்களோ ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று "குற்றம் சுமத்தும் நோக்குடன்... அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்". அதுமட்டுமல்ல, ஓய்வுநாளில் நன்மை செய்வது, குணப்படுத்துவது முறையா? என்று அவர்களிடம் இயேசு கேட்டபோது, அவர்கள் பிடிவாத உள்ளத்துடன் "பேசாதிருந்தார்கள்". எனவேதான், இயேசு சினம் கொண்டார். அது நியாயமான சினம். அத்துடன், அந்த சினத்தின் விளைவாக அந்த மனிதரை இயேசு குணப்படுத்தினார். நாமும் நியாயமான சினம் கொள்வோமாக!

Wednesday 11 January 2017

பரிவின் தொடுதல் !

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, “இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம்.

தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.

என்னதான் தகவல் அறியும் சட்டம் வைத்தாலும், பதிலே கிடைப்பதில்லை. யாரிடமாவது சில விவரங்கள் கேட்டால் மௌனம் மட்டுமே பதிலாகிவிடும். பிறருக்கு உதவுவதில், தெளிவுகள், விளக்கங்கள் விவரங்கள் கொடுத்து உதவவும் உறவை ஏற்படுத்தவும் நாம் தயங்குகிறோம், பயப்படுகிறோம்.

ஆனால் இயேசு ஒரு தயக்கம் நிறைந்த கேள்வி கேட்டவனுக்கு, கேக்காத கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாகவும் விரிவாகவும் பதில் கொடுக்கிறார்.அந்த தொழுநோயாளியைத் தொட்டு தூக்கி, குணமாக்கியதோடு நில்லாமல், அந்தச் சமுதாயத்தில் மீண்டும் அவன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வழிகாட்டுகிறார். நோய் நீங்கினால் மட்டும் போதாது. அவன் சமுதாயத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகக் குருவிடம் காட்ட ஆலோசனை கொடுக்கிறார். இதுபோன்ற கூடுதல் கரிசனை உடையவர் நம் இயேசு.

நீங்கள் தயங்கலாம்.பின் வாங்கலாம். ஆனால் இயேசு தாராளமானவர். தாமாக முன்வந்து உதவுவார். ஆறுதலும் ஆலோசனையும் தருவார். ஆகவே எதையும் தயங்காமல் கேளுங்கள். கேட்பதற்கும் மேலாக தருபவர் நம் தெய்வம். அதுபோல உங்களிடம் கேட்கத் தயங்குவோருக்கு நீங்களாக முன்வந்து உதவுங்கள். நீங்கள் மகிழ்வீர்கள்.

Tuesday 10 January 2017

இறைவேண்டலும் நற்செயல்களும்!

நாளை(11.1.2017) என் தெய்வம் விண்ணில் பிறந்த நான்காவது வருடம்.என் அக்கா வெர்ஜின் அவர்கள் இறை வேண்டலிலும் நற்செயல்கள் செய்வதிலும் சிறந்து விளங்கியவர்.இந்த நாளில் நம்  அனைவரையும்  எல்லாம் வல்ல இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.
 
நீண்ட நேரமாகப் பாலைவனத்தில் அலைந்து திரிந்த இளைஞன் ஒருவன் தூரத்தில் ஒரு காட்டுப் பங்களா இருப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் அங்கு யாராவது இருக்கிறார்களா? என அவன் பார்க்கச் சென்றான். அவன் அதன் அருகே சென்றதும், ஒரு தோட்டத் தொழிலாளி நிற்பதைக் கண்டான். உடனே அவன் அவரிடம், “ஐயா! இது என்ன இடம்?, இங்கு யார் இருக்கிறார்?” என்று கேட்டான்.

அதற்கு அந்தத் தோட்டத் தொழிலாளி, “இது இளந்துறவிகள் பயிற்சி பெறும் துறவறமடம், இங்கே இளந்துறவிகளும், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் ஒரு பெரிய துறவியும் இருக்கிறார்கள்” என்று பதில்கூறினார். அதற்கு அந்த இளைஞன், “ஐயா! இந்த துறவற மடத்தை உள்ளே சென்று ஒரு முறை பார்த்துவிட்டு வரலாமா?” என்று கேட்டான். “ஓ! தாராளமாக, நீங்கள் உள்ளே சென்று பார்த்துவிட்டு வரலாம்” என்றார் அந்த தோட்டத் தொழிலாளர்.
துறவுமடத்தின் உள்ளே சென்ற இளைஞன் அங்கே இருக்கும் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.

ஓர் அறையில் வயதான துறவி, தன்னுடைய மாணவர்களுக்கு – இளந்துறவிகளுக்குப் - போதித்துக்கொண்டிருந்தார். உடனே அந்த இளைஞன் வயதான துறவியிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, “உங்களுடைய போதனையை நானும் இங்கே அமர்ந்து கேட்கட்டுமா?” என்றான். துறவியும் அதற்குச் சரியென்று சொல்ல, அவன் அந்த அறையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து துறவியின் போதனையை காதுகொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.

 துறவி தொடக்கத்தில் ஜெபத்தைக் குறித்துப் பேசத் தொடங்கினார், அதன்பின்னர் எப்படி தியானம் செய்வது என்பதைக் குறித்து போதித்தார். எல்லாவற்றையும் அவன் பொறுமையாகவும் மிகவும் கவனமாகவும் கேட்டுக்கொண்டிருந்தான்.

மாலை வேளையானதும் துறவி தன்னுடைய மாணவர்களிடம், “இத்தோடு இன்றைய போதனை முடிந்துவிட்டது. இப்போது நாம் பக்கத்து ஊரில் சேதமடைந்து கிடக்கும் சாலையை செப்பனிடச் செல்லலாமா? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அனைவரும் சரி என்று பதில்கூறினார்கள். இளைஞனால் மட்டும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் நேராகத் துறவியிடம் சென்று, “துறவிகள் என்றால் ஜெபம், தவம், தியானம் என்றுதானே இருப்பார்கள், இப்படி சாலையுமா அமைப்பார்கள்?” என்றான். அதற்கு அந்த வயதான துறவி, “ நாங்கள் இதுபோன்ற சேவைகளைச் செய்யவில்லை என்றால், நாங்கள் செய்யும் ஜெபம், தவம், தியானம் அத்தனையும் வீண்” என்றார். துறவியின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தவனாய் அவன் அவர்களோடு சேர்ந்து பக்கத்து ஊரில் இருந்த சேதமடைந்த சாலையைச் செப்பனிடச் சென்றான்.

ஜெபமும் வாழ்வும் இணைந்து போகவேண்டும். அதுதான் உண்மையான ஆன்மீக வாழ்வு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.    
இறைவேண்டலும் நற்செயல்களும் (நல்வாழ்வும்) கிறிஸ்தவத்தின்  இரண்டு கண்கள். அதைத்தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக  நமக்கு போதித்து வாழ்ந்து காட்டுகின்றார்.

இயேசு தொழுகைக்கூடத்தில் போதித்து முடித்தவுடன் சீமோன் பேதுருவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே காய்ச்சலால் படுத்துக் கிடந்த சீமோன் பேதுருவின் மாமியாரைக் குணப்படுகின்றார். அது மட்டுமல்லாமல் மாலை வேளையில் அங்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு பிணியாளர்களைக் குணப்படுத்துகின்றார்.

மீண்டுமாக அவர் தனிமையான ஓரிடத்திற்குச் சென்று இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றார். இவ்வாறு அவருடைய வாழ்க்கை ஜெபம், நற்செயல்கள் மீண்டுமாக ஜெபம் என்று மாறி மாறிப் போகின்றது.
இங்கே ஒரு காரியத்தை நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அது என்னவெனில், இயேசு கிறிஸ்து இறைமகன்; எல்லாம் வல்லவர்; அவர் எதற்கு ஜெபிக்கவேண்டும் என்று நாம் கேட்கலாம்.

ஆனால் அவருக்கும் ஜெபமானது தேவையான ஒன்றாக இருக்கின்றது. அதைதான் அவருடைய வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இவ்வாறு குறிப்பிட்டார், “நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் நான் செய்யும் ஜெபத்திலிருந்தே பெறுகின்றேன்” என்று. ஆம், நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் வல்லமையையும் ஜெபம் மட்டுமே தரமுடியும்.

அதே நேரத்தில் ஜெபத்திலிருந்து நாம் பெறும் ஆற்றலையும் வல்லமையையும் பிறருடைய நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவைப் போன்று முழு மனிதராக மாறமுடியும், இல்லையென்றால் நாமும் பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் போன்றுதான் இருக்க முடியும்.

அவர்கள் ஜெபித்தார்கள், போதித்தார்கள், ஆனால் போதித்ததை வாழ்வாக்கவில்லை. நாம் பரிசேயர்களை, மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்லாமல், இயேசுவைப் போன்று ஜெப வீரர்களாகவும் அதே நேரத்தில் செயல்வீரர்களாகவும் வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்க்கை நிறைவாகப் பெறுவோம்.

“ஜெபமில்லாத வாழ்க்கை கூரையில்லாத வீட்டிற்குச் சமம். நற்செயல்கள் இல்லாத வாழ்க்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம்”.

Monday 2 January 2017

பாலைவனக் குரல்!

ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் கேட்க வேண்டிய கேள்வி, நீ யார்? என்ன பதில் சொல்லப்போகிறோம்? திருமுழுக்கு யோவானிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. 'நான் பாலை வனக் குரல்' என்று ஏசாயா இறைவாக்கை (40'3) மேற்கோள்காட்டி பதில் சொன்னார்.

நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் முன்னோடிகள். அவரது வருகைக்குத் தயார் செய்யும் தயாரிப்பாளர்கள். அவரது வருகையை முன்னறிவிக்கும் ஒலிப்பான்கள்.

நம்முடைய சொல், செயல், நடவடிக்கை அனைத்தும் இயேசுவை எதிரொலிப்பதாய், பிறதிபலிப்பதாய் இருக்க வேண்டும். நம் வாழ்வு இயேசுவை அடையாளம் காட்டி அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும்.

தன் எதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டார். தன் உண்மை நிலையை மறுக்கவில்லை. தன்னை தாழ்த்துவதற்குத் தயங்கவில்லை. தான் ஒரு 'பாலை வனக் குரல்' என்றும், "எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" தாழ்த்தினார்.

பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம் ஒவவொருவரும் ஒரு திருமுழுக்கு யோவான், இயேசுவின் முன்னோடி, ஒரு பாலைவனக் குரல். வாழ்த்துக்கள். ஆசீர்.



Sunday 1 January 2017

அன்னையின் ஆசியோடு!

இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!

இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன? குறி;ப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது.

எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன.

உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.

இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.