Monday 23 January 2017

யார் இயேசுவினுடைய தாய்?, யார் இயேசுவின் உடன்பிறப்புகள்?


சபீதா ஜோசப் என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு வேடிக்கையான கதை.
ஓநாய் ஒன்று பசியோடு அலைந்து கொண்டிருந்தது. கிராமத்தின் தெருக்கோடியில் இருந்த ஒரு குடிசை அருகே அது வந்தபோது, குடிசையினுள்ளே அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை அவனது தாய் திட்டிக்கொண்டிருப்பது காதில்விழ நின்று கவனித்தது.
“அழுகையை நீ மட்டும் நிறுத்தாவிட்டால் உன்னைத் தூக்கி ஓநாயிடம் கொடுத்துவிடுவேன்” என்று மகனை மிரட்டினாள் தாய். மகனோ தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். “நமக்கு சீக்கிரம் அருமையான விருந்து கிடைக்கப் போகிறது” என்று ஓநாய் காத்திருந்தது.
நேரம் ஓடியது. இரவும் வந்துவிட்டது. இன்னும் அழுதுகொண்டே இருந்த மகனை சமாதனப்படுத்தும் விதமாய் தாய் சொன்னாள், “கண்ணா அழுவாதே... உன்னை ஓநாய்க்கிட்டே போடமாட்டேன். அந்த திருட்டு ஓநாய் இந்தப் பக்கம் வரட்டும் அடிச்சுச் கொன்னுடலாம்”. அவள் பேச்சைக் கேட்ட ஓநாய், “சே! இந்த மனுசங்க சொல்வது ஒன்று. செய்வது வேறாய் இருக்கிறதே. இவர்களை நம்பவே கூடாது” என்றபடியே ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் மறைந்தது.
மனிதர்களாகிய நாம் எப்படி முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றோம் என்பதனை இந்தக் கதையானது வேடிக்கையாகப் பதிவுசெய்கின்றது. இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருப்பவர்கள் யாரும் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக மாறும் பேற்றினைப் பெற முடியாது என்பது மட்டும் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும் வருகிறார்கள். அவர்கள் வந்த செய்தி இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர் தம்மைச் சூழ்ந்து நின்ற மக்களைப் பார்த்துச் சொல்கிறார், “இதோ! என் தாயும் என் சகோதர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”. இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது இயேசு தன்னுடைய தாயும் சகோதர சகோதரிகளையும் இழிவுபடுத்தியது போன்று தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
இயேசு, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவர்” என்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவராக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படி என்றால் வானதூதர் கபிரியேல் முன்மொழிந்த ஆண்டவரின் திட்டத்திற்கு ஆம் என்று சொன்ன மரியா, அத்திட்டம் நிறைவுபெற தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரையும் முயன்றார். அதற்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார். ஆகவே, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டும் இயேசுவுக்குத் தாயாகிவிடவில்லை, மாறாக இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றியதாலும் இயேசுவுக்குத் தாயாகின்றார்.
நாம் மரியாவைப் போன்று இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மக்களாக வாழ்கிறோமா? அதன்வழியாக இயேசு அளிக்கின்ற அவருக்குத் சகோதர சகோதரியாகும் பேற்றினைப் பெருகின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் தாயினைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும், வழிபடுவது ஒன்றும் வாழ்வதும் ஒன்றான முன்னுக்குப்பின் முரணான வாழ்க்கையாகத் தான் நம்முடைய வாழ்க்கை இருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் எப்படி இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவது என்பதுதான் நமக்கு முன்பாக உள்ள சவாலாக இருக்கின்றது.
இறைவனின் திருவுளம் யாது? அது வேறொன்றுமில்லை. ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்வதும், ஒருவர் மற்றவர்மீது உண்மையான பரிவு, இரக்கம் அக்கறையோடு வாழ்வதுதான். அன்னை மரியா அப்படித்தான் வாழ்ந்தார். அதனால்தான் அவர் இரண்டு விதங்களில் இயேசுவுக்கு தாயாக மாறினார். நாமும் இறைவனின் திருவுளத்தை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுவோம், அதன்வழியாக இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரியாக மாறும் பேற்றினைப் பெறுவோம்.

No comments:

Post a Comment