Tuesday 24 January 2017

பவுலின் மனமாற்றம் !

இன்று நாம் புனித பவுலின் மனமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அவரது மனமாற்ற நிகழ்வு திருத்தூதர் பணிகள் நூலில் மூன்று இடங்களில் (9:1-19, 22:1-21, 26:12-18) தரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

இந்நிகழ்வைப் பவுலின் மனமாற்றம் என்பதோடு, அவரது அழைப்பு என்றும் கூறலாம். திருத்தூதர் பணிகள் நூலில் இரண்டு இடங்களில் "சவுல் அழைப்புப் பெறல்" "பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்" எனத் தலைப்பிடப்பட்டிருப்பதும் நம் கவனத்தை ஈர்க்கிறது. பவுலை இறைவன் மனம் மாற்றியபோது, அவரைத் தமது திருப்பணிக்காக அழைத்தார்.

எனவே, ஒவ்வொரு மனமாற்றமும் ஒரு அழைப்பே எனக் கொள்ளலாம். நாம் மனம் திரும்பும்போது, நமது வாழ்வு மாறுபடுவது மட்டுமல்லாது, பிறரது வாழ்வையும் மாற்றவேண்டிய கடமை நம்மேல் சுமத்தப்படுகிறது. எனவே, நாம் நமது தீய வழிகள், பழக்கங்களைவிட்டு விலகினால், மட்டும் போதாது, நமது மனமாற்ற அனுபவத்தைக் கொண்டு, பிறரையும் மனமாற்றத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே இந்த விழா நமக்குத் தரும் செய்தி.

நமது வாழ்வு முறை மாறவும், நாமும் திருத்தூதர்களாக ஆகவும் வரம் வேண்டுவோம்.

No comments:

Post a Comment