Wednesday 11 January 2017

பரிவின் தொடுதல் !

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, “இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம்.

தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.

என்னதான் தகவல் அறியும் சட்டம் வைத்தாலும், பதிலே கிடைப்பதில்லை. யாரிடமாவது சில விவரங்கள் கேட்டால் மௌனம் மட்டுமே பதிலாகிவிடும். பிறருக்கு உதவுவதில், தெளிவுகள், விளக்கங்கள் விவரங்கள் கொடுத்து உதவவும் உறவை ஏற்படுத்தவும் நாம் தயங்குகிறோம், பயப்படுகிறோம்.

ஆனால் இயேசு ஒரு தயக்கம் நிறைந்த கேள்வி கேட்டவனுக்கு, கேக்காத கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாகவும் விரிவாகவும் பதில் கொடுக்கிறார்.அந்த தொழுநோயாளியைத் தொட்டு தூக்கி, குணமாக்கியதோடு நில்லாமல், அந்தச் சமுதாயத்தில் மீண்டும் அவன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வழிகாட்டுகிறார். நோய் நீங்கினால் மட்டும் போதாது. அவன் சமுதாயத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகக் குருவிடம் காட்ட ஆலோசனை கொடுக்கிறார். இதுபோன்ற கூடுதல் கரிசனை உடையவர் நம் இயேசு.

நீங்கள் தயங்கலாம்.பின் வாங்கலாம். ஆனால் இயேசு தாராளமானவர். தாமாக முன்வந்து உதவுவார். ஆறுதலும் ஆலோசனையும் தருவார். ஆகவே எதையும் தயங்காமல் கேளுங்கள். கேட்பதற்கும் மேலாக தருபவர் நம் தெய்வம். அதுபோல உங்களிடம் கேட்கத் தயங்குவோருக்கு நீங்களாக முன்வந்து உதவுங்கள். நீங்கள் மகிழ்வீர்கள்.

No comments:

Post a Comment