Thursday 19 January 2017

தம்மோடு இருக்க...!

 இயேசு தம் திருத்தூதர்களை அழைத்த நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். நமக்கு நன்கு அறிமுகமான பகுதிதான். அதில் இன்று நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் இரு செய்திகள்:

1. அவர் தாம் விரும்பியவர்களை தம்மிடம் அழைத்தார். கிறித்தவ அழைத்தல் என்பது ஒரு கொடை. அது சம்பாதிப்பது அல்ல, இறைவன் தாமாக விரும்பி இலவசமாகக் கொடுப்பது. அந்த அழைத்தலுக்குத் தகுதி என்று எதுவுமில்லை. இறைவனின் இரக்கம் ஒன்றுதான் அலகு. யாரையெல்லாம் அவர் அழைத்திருக்கிறாரோ, அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள். நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

2. தம்மோடு இருக்க... என்பது அவரது அழைத்தலின் நோக்கங்களுள் ஒன்று. அவரால் அழைக்கப்பட்டவர்கள் அடிப்படையில் செய்யவேண்டியது அவரோடு ஒன்றி வாழ்வது, அவரோடு வாழ்வது. இந்த இரு செய்திகளையும் இன்று நம் இதயத்தில் பதித்துக்கொள்வோம்.

“இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;  அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”(மாற் 3:13-15) பன்னிரெண்டு திருத்தூதரை அழைக்க, இவ்வளவு சிரமப்பட்டு மலை உச்சிக்குப்போய், தந்தை இறைவனோடு செபத்தில் கலந்தாலோசித்து  தேர்ந்தெடுத்துள்ளார்.

சாதிக்கு ஒரு திருத்தூதர், சங்கத்துக்கு இன்னொருவர், கோடி பணம் கொடுத்தவர் மற்றொருவர், குடும்பத்தில் பாதிபேர் என்று மிக எளிதாக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு குருமாணவனைப்பற்றிய ஒரு புகார் அந்த ஆயரிடம் வந்தபோது, ‘நான் செபித்து முடிவு செய்வேன்’ என்றார். அவர் இன்று இல்லை.

அது ஆயராக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், குருக்களாக இருக்கலாம், குருத்துவப் பணியிடமாக இருக்கலாம், உங்கள் கணவனாக மனைவியாக இருக்கலாம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால வாழ்வாக இருக்கலாம். மலைக்குச் செல்லுங்கள். ஆண்டவரின் உதவியைத் தேடுங்கள். சரியான முடிவு எடுப்பீர்கள். நடப்பவை நல்லவையான இருக்கும்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே நற்செய்தி அறிவிக்கும்பணி இருக்கிறது. நாம் இறைவார்த்தை கேட்டதோடு நமது வாழ்வு நின்றுவிடக்கூடாது. அது நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும். இறைவார்த்தை தொடர்ந்து நமது வாழ்வில், வாழ்வு மூலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

1 comment: