Saturday 30 January 2016

உறவுக்கு ஒரு சவுக்கடி!

"உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்"

எந்த நிமிடம் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க முன்வந்தாரோ அந்த நிமிடமே அவரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை என்று எப்போது பேசத் தொடங்கினாரோ, அப்போதே கொலை செய்யவும் அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது.

 ஆமாம்."அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்" (லூக்4:29)

உண்மையும் எதார்த்தமும் எல்லா நேரமும் உயிருக்கு எதிரி. உண்மையின் விலை மிக மலிவு. எதார்த்தம் மலிவுச் சரக்கு.

போலி கௌரமும் அந்தஸ்தும்,காசு கொடுத்து வாங்கிய பெயரும் புகழும், செட்அப் செய்த மதிப்பும் மரியாதையும், படிக்காமல் வாங்கும் பட்டமும், அலைந்து அனுபவிக்கும் பதவியும் உண்மையின் கருவறுக்கும் எதிரிகள் அல்லவா.

கொலையும் செய்வதை கொள்கையாக, தர்மமாகக் கருதுவார்கள். இயேசுவை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றது இன்றைக்கு பெரிய விஷயம் அல்ல.

இந்த சமுதாயத்தை இன்றைக்கு வாழ வைப்பது இது போன்ற நவீன இயேசுக்கள்தான். உண்மைக்கும் எதார்த்தத்துக்கும் சான்று பகரும் நீங்கள் இருந்தால் மட்டுமே சமுகம் திருந்தும்.

இயேசு சுட்டிக்காட்டிய இரு நிகழ்ச்சிகளும் தன் இன, சமூக, உறவுக்கு ஒரு சவுக்கடி. நேரம் வரும் வரை யாரும் எவரும் எதையும் செய்ய முடியவி;ல்லை. நம்மையும் யாரும் அசைக்க முடியாது. உண்மையை உரக்க உரைப்போம். இனிது வாழ்வோம்.

Friday 29 January 2016

சாதாரண நிகழ்வல்ல!

நாளைய  நற்செய்தியில் இயேசு காற்றையும், கடலையும் அமைதிப்படுத்துகின்ற புதுமையை நாம் பார்த்தோம்.

கடலில் புயற்காற்று எழகிறது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ஆனால், இயேசுவோ அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்.

 புயற்காற்று அடித்து, படகில் தண்ணீர் இருக்கிறபோது, இயேசுவால் இவ்வளவு அமைதியாக தூங்க முடிகிறது? என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒருவேளை இயேசுவின் உடல் மிகவும் களைப்பாக இருந்திருக்கலாம்.

ஓய்வில்லாத நற்செய்திப்பணி அவருக்கு களைப்பைக்கொடுத்திருக்கலாம். எனவே, அடிக்கடி படகில் பயணம் செய்து, கடலின் இரைச்சலுக்கும், அலைகளுக்கும் பழகிவிட்ட இயேசுவுக்கு, வெளியில் நடப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

சற்று ஆழமாக இந்த இறைவார்த்தையைச் சிந்திக்கிறபோது, அதிலே மறைந்து கிடக்கிற இறையியலை நாம் உணர முடிகிறது. இயேசு கடும்காற்றுக்கு மத்தியில் அமைதியாகத் தூங்குவது, சாதாரண நிகழ்வல்ல.

அது இறைவன் மீது வைத்திருக்கக்கூடிய ஆழமான நம்பிக்கை. இறைப்பராமரிப்பில் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதனின் தன்னிகரற்ற விசுவாசம். கடவுள் மீது நம்பிக்கை இருந்தால், சீறி எழுகிற அலையும், பொங்கி எழும் கடலும் ஒரு பொருட்டல்ல என்பதுதான், அது நமக்கு உணர்த்துகிற உண்மை.

அந்த நம்பிக்கை  விழித்திருக்கக்கூடிய சீடர்களுக்கு இல்லை. ஆனால், தூங்கிக்கொண்டிருக்கிற இயேசுவுக்கு இருக்கிறது. கடவுளின் வல்லமையைத்தாண்டி இந்த உலகத்தில் எதுவும் நடக்காது என்கிற, ஆழமான விசுவாசத்தை இங்கே நாம் பார்க்க முடிகிறது.

பிரச்சனைகளும், துன்பங்களும் நம் அன்றாட வாழ்வில் இருக்கக்கூடியவை. நம்மை பயமுறுத்தக்கூடியவை. வாழ்வு முடிந்து விட்டதோ என்று நம்மை நினைக்க வைப்பவை. ஆனாலும், கடவுளின் பராமரிப்பிலும், வல்லமையிலும் நாம் நம்பிக்கை வைத்தால், எதுவும் நம் கைமீறிப்போகாது.

வாழ்க்கைக்கவலைகளும், ஏமாற்றங்களும் கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எந்தச்சூழ்நிலையிலும் நம் நம்பிக்கையை இழந்துவிடச்செய்வதாக இருக்கக்கூடாது.

அப்படி இருந்தால், நாம் பெற்றிருப்பது உண்மையான, ஆழமான விசுவாசம் அல்ல. வெறும் மேலோட்டமான விசுவாசம் தான். ஆழமான விசுவாசத்தில் வளர முயற்சி எடுப்போம்.

Thursday 28 January 2016

விண்ணகம் என்றாலே, மகிழ்ச்சி, அன்பு, அமைதி.............!

நாளைய நற்செய்தியில் நாம் காண்பது கடுகு விதை முளைத்து வளர்ந்து பெருங்கிளைகள் விடுமாம். வானத்துப் பறவைகள்; அதன் கிளைகளில் தங்குமாம்.

அறிவியல் கடுமையாக உதைக்குதல்லவா! நண்பர்களே, இது அறிவியல் ஆராய்ச்சி புத்தகம் அல்ல. இறைவனைப்பற்றியும் மனித மீட்பும்பற்றிய வெளிப்படுத்துதல் அடங்கிய புத்தகம்.

கடுகு விதையிலிருந்து பெரிய மரம் தோன்றுகிறது, அதற்கு பெரிய பல கிளைகள் இருக்கிறது, இவை சொல்லும் செய்தி என்னவென்றால் - 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை' கடுகிலிருந்து மரமும் வளரும். கடவுளும் மனிதனாவார். கன்னியின் வயிற்றில் மனிதனாக  பிறப்பார். நாம் செயல்படுகிறோம். நாம் வல்லமையுள்ள இறைவன்.

இறையாட்சியை கடுகு விதையிலிருந்து கிளைகள் உள்ள மரத்தை உண்டாக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகிறார். இறை அரசு அத்தனை வியப்புமிக்கது. இறை ஆற்றல் அதிர்ச்சிiயுயம் ஆச்சரியத்தையும் தரும் வல்லமைகொண்டது.

எத்தனை கிளைகள், வேர்கள், விழுதுகள் வெட்டப்பட்டும், இறையரசின் செயல்பாடுகளில் தயக்கமோ தடுமாற்றமோ இருப்பதில்லை. ஏனென்றால் செயல்படுவது இறைவன். அவரது ஆற்றலின் வெளிப்பாடுகள் அதிசயமானவை.

இறையரசின் செயல்பாடு கடவுளின் வல்லமைக்குச் சான்று. இறைவன் ஆற்றலோடு திருச்சபையில் செயலாற்றுகிறார் என்பதற்குச் சொல்லப்பட்டதே இவ்வுவமை. உம் திருச்சபையை இறைவா நீர் வழிநடத்தும் விதம் ஆச்சரியமானதே. இதை ஏற்றுக்கொள்வோம். இனிது வாழ்வோம்.

இறையரசு என்பது கடவுளுடைய அரசைக்குறிக்கிறது. கடவுள் விண்ணகத்தை ஆண்டு வருகிறார் என்பது அனைவரின் நம்பிக்கை. விண்ணகம் என்றாலே, மகிழ்ச்சி, அன்பு, அமைதி போன்றவை தான் நமது நினைவுக்கு வருகிறது.


ஏனென்றால், அங்கே கடவுள் ஆட்சி செய்கிறார். கடவுளின் ஆட்சியில் இருளுக்கு வேலையில்லை. துன்பங்கள், துயரங்கள் அங்கே இல்லை. அத்தகையதொரு நிலைதான் மண்ணகத்திலும் வர இருக்கிறது. மண்ணகமும் கடவுளால் ஆளப்பட இருக்கிறது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு விதை மனித இயலாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விதையை மனிதன் வளர்க்க முடியும். ஆனால், அந்த விதையை உருவாக்க முடியாது. அதற்கு உரமிடலாம், அதை அழகுபடுத்தலாம். அதிலிருந்து பயனைப்பெறலாம். ஆனாலும், விதையை உருவாக்குவது மனிதனால் முடியாதது.

கடவுளின் வல்லமை அங்கே வெளிப்படுகிறது. மனித இயலாமையை, மனித ஆளுமையின் எல்கையை அங்கு நாம் காண முடிகிறது. ஏனென்றால், படைப்பு கடவுளுக்குரியது. கடவுளுடைய படைப்பின் மேன்மையையும், கடவுளின் அதிகாரத்தையும், வல்லமையையும் இது பறைசாற்றுவதாக இருக்கிறது.

கடவுளின் அரசு இந்த உலகத்தில் வருவதற்கு நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். நாம் நாமாக வாழ வேண்டும். நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். நாம் அடுத்தவர்க்காக வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோது, கடவுளின் அரசு நம்மிலும் செயல்பட ஆரம்பிக்கிறது.

Wednesday 27 January 2016

இறையறிவில் வளர்வோம்!

நாளை நற்செய்தியில் ”உள்ளவருக்குக்கொடுக்கப்படும்” என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது.


 இதை ”அறிவு” என்கிற கொடையோடு பொருத்திப்பார்க்கலாம். நாம் எந்த அளவுக்குக் கற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமது அறிவு வளரும்.


நாம் எடுக்கக்கூடிய முயற்சிதான், நம்மை ஒரு பாடத்தில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். எந்த அடிப்படை ஞானமும் இல்லாமல் ஒன்றில் நாம் சிறந்த புலமை பெற முடியாது.


கடவுளைப்பற்றிய நமது புரிதலும் இதுதான். எந்த அளவுக்கு கடவுளைப்பற்றிய அறிவில் நாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் கடவுளைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். கடவுளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், கடவுளைப்பற்றி நாம் எந்தக்கருத்தையும் சொல்ல முடியாது.

செபத்தின் பலன் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், அவர் செபிக்க வேண்டும். ஒவ்வொருநாளும் செபிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் செபிக்க வேண்டும். அப்படி செபிக்கிறபோதுதான், செபத்தின் மேன்மையை நாம் அறிய முடியும். செபத்தின் ஆழத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

கடவுளைப்பற்றி அறிவில் நாம் தினமும் வளர, கடவுளைப்பற்றி அறிய அதிகமான முயற்சிகள் எடுக்க வேண்டும். கடவுளைப்பற்றி அறிய நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் தான் நாம் கடவுள் அறிவில் வளர துணைசெய்யும். அத்தகைய ஒரு முயற்சியை நாம் எடுப்போம். இறையருளில், இறையறிவில் வளர்வோம்.

Tuesday 26 January 2016

வாழ்வை வாழ்வோம்!

வாழ்வு என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கின்றபோது நெருக்கடிகள், இன்னல்கள், சோதனைகள், இடர்பாடுகள் வருவது இயல்பு.

இவை அனைத்தும் இருந்தாலும், துணிவோடு முன்னேறிச்சென்று வாழ்வில் வெற்றி வாகை சூடுவதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது.

நமது வாழ்க்கையே சோகமயமாவதற்கு முக்கியக்காரணம், துன்பமே இல்லாத வாழ்வை வாழ நாம் ஆசைப்படுகிறோம். எனவேதான், சிறிய கஷ்டம் வந்தாலும், நம்முடைய வாழ்வே முடிந்துவிட்டது போன்று நாம் வேதனைப்படுகிறோம். துவண்டுவிடுகிறோம்.

 ஆனால், துன்பம் வாழ்வின் அங்கம் என்பதை உணர்ந்து வாழ்கிறவர்களின் வாழ்வு நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்க முடியும். அதற்காக கடவுள்தான் துன்பத்தைத்தருகிறார் என நாம் நினைத்துவிடக்கூடாது. காரணம் கடவுள் நமக்கு துன்பத்தைத்தருவதற்காக இந்த உலகத்தை படைக்கவில்லை.

நாம் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். யாக்கோபு 1: 13 சொல்கிறது: “சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை”.

வாழ்வில் சோதனைகள் வரும்போது அவற்றை மனவுறுதியுடன் தாங்க வேண்டும். அதற்கான வல்லமையைக் கடவுளிடம் கேட்டால், அவர் நிச்சயம் தருவார்.

அனைத்துத்தடைகளையும் தாண்டி, நாளை நற்செய்திக்கு ஏற்றவாறு  முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காக பலன் தருகின்றபோது, கடவுள் நமக்கு வாழ்வைத்தந்ததற்காக மகிழ்ச்சியடைவார். அப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ்வோம்.

குடியரசு!

இந்திய  மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம் நாட்டின் குடியரசு!!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! – அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! – இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! – மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! – இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

நம் மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!

ஜெய்ஹிந்த்!!!

Sunday 24 January 2016

நாமும் திருத்தூதர்களாக !

புனித பவுலடியாரின் மனமாற்றத்தை நாளை  கொண்டாடுகிறோம். பவுலடியாரின் வாழ்க்கையின் இந்த நாள் வரலாற்றை மாற்றி அமைத்த நாள்.

ஆகவே இந்த நாள் மிக முக்கியமான நாள்.சிறியதோ பெரியதோ எல்லா மனமாற்றத்திலும் இறைவன்தான் அதைத் தொடங்கி வைக்கிறார். ஆகவே அவரே அதை முடித்தும் வைப்பார்.

மனமாற்றம் அறிவு சார்ந்ததல்ல. கொள்கை சார்ந்ததல்ல. கோட்பாடுகளின் மாற்றம் அல்ல.உடலில், உடையில், உணவில் உள்ள மாற்றம் அல்ல.

 இயேசுவோடு உண்டான தனிப்பட்ட நெருக்கமான உறவில் விளைந்த ஒன்று. இந்த உறவை மறுக்க முடியாது. அதன் கவர்ச்சி எந்த ஈர்ப்பையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது.அப்படித்தான் பவுலடியார் மாட்டிக்கொண்டார்.

இத்தகைய மனமாற்றம் யாருக்கும் எப்பொழுதும் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.அதற்கென தகுதி, நேரம் காலம் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை அவசியமில்லை. அந்தஸ்து, அறிவு முக்கியமில்லை.

அன்புச் சகோதரா, அருமைச் சகோதரி, இயேசுவின் உறவில் நீ மகிழ்ந்து வாழவும், பிறரை வாழ்விக்கவும் உன்னையும் எதிர்பாராத வேளையில் அழைக்கலாம். வரலாற்றை நீ மாற்றலாம்.

 ஒவ்வொரு மனமாற்றமும் ஒரு அழைப்பே எனக் கொள்ளலாம். நாம் மனம் திரும்பும்போது, நமது வாழ்வு மாறுபடுவது மட்டுமல்லாது, பிறரது வாழ்வையும் மாற்றவேண்டிய கடமை நம்மேல் சுமத்தப்படுகிறது.

எனவே, நாம் நமது தீய வழிகள், பழக்கங்களைவிட்டு விலகினால், மட்டும் போதாது, நமது மனமாற்ற அனுபவத்தைக் கொண்டு, பிறரையும் மனமாற்றத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே இந்த விழா நமக்குத் தரும் செய்தி.

நமது வாழ்வு முறை மாறவும், நாமும் திருத்தூதர்களாக ஆகவும் வரம் வேண்டுவோம்.

Every Saint Has A Past And Every Sinner Has A Future!!!


அனுபவம்!

வேறு எந்த நற்செய்தியாளரும் எழுதாத வகையில், லூக்கா நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் முகவுரையில், தன்னை அறிமுகப்படுத்துகிறார். ”நானும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆராய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை…”.

மற்றவர்கள் எழுதிய நற்செய்தியை மட்டும் வைத்து, லூக்கா நற்செய்தியாளர் திருப்தியடையவில்லை. இயேசுவுடனான தன்னுடைய அனுபவத்தை மையமாக வைத்து, இந்த நற்செய்தியை எழுதுவதாக அவர் சொல்கிறார்.

உண்மையான நம்பிக்கை என்பது நேரடி அனுபவத்திலிருந்து பெறக்கூடியது. அது தனிப்பட்ட நபரின் நேரடி அனுபவம். இரண்டாம் தரமாக பெறுவது கிடையாது. தான் கேட்டதை உறுதி செய்தபிறகு எழுதினாலும், தனிப்பட்ட முறையில் அவரின் இயேசுவுடனான உறவின் அடிப்படையில், நற்செய்தியை எழுதுவதாக லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

இயேசுவினுடைய அன்பின் ஆழத்தை, தனிப்பட்ட முறையில் தான், நாம் அதிகமாக உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இயேசு அனுபவத்தைப் பெற, இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைக்கு நாம், மற்றவரின் அனுபவத்தின் அடிப்படையில் இயேசுவைப்பின்பற்ற விரும்புவதுதான், நமக்கு விசுவாசத்தளர்ச்சியையும், உறுதியில்லாத தன்மையையும் ஏற்படுத்துகிறது. நமது விசுவாசம், நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி எடுப்போம்.

Friday 22 January 2016

சவாலான வாழ்வு!

இயேசுவின் உறவினர்கள் அவருக்கு மதிமயங்கி விட்டது என்று எண்ணி, அவரைப்பிடிக்கச் சென்றதாக நாளைய  நற்செய்தியில்  நாம் பார்க்கிறோம். ஏன் இத்தகைய ஒரு முடிவுக்கு, இயேசுவின் உறவினர்கள் வந்திருக்க வேண்டும்? அதற்கு காரணம் இல்லாமலில்லை.

1. இயேசுவின் தந்தை தச்சுத்தொழில் செய்து வந்தார். தச்சுத்தொழில் என்பது நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்தது. தச்சருக்கு ஏராளமான வேலையும் இருந்தது.

இவ்வளவு வருமானம் தொழில் கையில் இருந்தாலும், இயேசு அத்தகைய தொழிலை விட்டுவிட்டு, போதிப்பதற்காகச் சென்றது, அவருடைய உறவினர்களின் மத்தியில் பெருத்த வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

2. இயேசு அதிகாரம் நிறைந்த யூத மதத்தின் தலைவர்களிடம் பிரச்சனையை வளர்த்துக்கொண்டார். எப்போதுமே அதிகாரம் நிறைந்தவர்களிடம் தவறு இருந்தாலும், அதை கண்டுகொள்ளாத மனநிலையோடு தான் மக்கள் வாழ்வர். ஏனென்றால், அதிகாரத்தை எதிர்த்து வெற்றிபெறுவது இயலாத காரியம்.

அதேபோல, அதிகாரத்தை எதிர்த்தவர்கள் மகிழ்ச்சியோடு, நிம்மதியோடு வாழ முடியாது என்பதும் அனைவரும் அறிந்தது. எனவே, அதிகாரத்தோடு விளையாடுவது நமக்கு தீங்கினைத்தான் விளைவிக்கும் ஆனால், இயேசு துணிந்து அதிகாரவர்க்கத்தினர்க்கு எதிராக நிற்கிறார்.

3. இயேசு புதிய ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த குழு ஒட்டுமொத்த சமுதாயத்தின் பார்வையில் வேறுபட்ட குழு. மீனவர்களும், வரிவசூலிப்பவரும், தீவிரவாதிகளும் என, ஒன்றுக்கு முரணானவர்கள் இருக்கும் குழு. மேற்கூறிய மூன்று காரணங்களால், இயேசுவின் உறவினர்கள், இயேசுவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர்.

ஒருவிதத்தில் இயேசு மதிமயங்கித்தான் போனார் எனலாம். அவருடைய சிந்தனை முழுவதும் கடவுளைப் பற்றியும் மனிதரின் நலன் பற்றியும் இருந்ததால் தம்மைப் பற்றி எண்ணுவதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. கடவுளிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட பணியைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதிலேயே இயேசு கருத்தாய் இருந்ததால் அவரைப் பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொண்டார்கள்.

 இயேசு கடவுளின் சக்தியால் செயல்பட்டாரா அலகையின் வல்லமையால் அதிசயங்கள் புரிந்தாரா என்று கேட்கும் அளவுக்குச் சிலர் போய்விட்டிருந்தனர். கிறிஸ்துவை நம்புவோர் அவருடைய நற்செய்தியைத் தம் உயிர்மூச்சாக மாற்றும்போது கடவுளுக்காக ''மதிமயங்கி'' செயல்படத் தொடங்குவார்கள். அப்போது ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்னும் கேள்வியை நம்மைப் பார்த்து யாராவது கேட்டால் நாம், ''கடவுளுக்காக நான் பைத்தியம்தான்'' எனப் பதில் கூறமுடியும்.

இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாத அனைவரும், பைத்தியக்காரன் என்ற முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதையெல்லாம் தாண்டி, வாழ்வது தான் சவாலானது. உண்மையானது. அப்படிப்பட்ட வாழ்வை நாம் அனைவரும் வாழ்வோம்.

Thursday 21 January 2016

உண்மையான சீடர்கள்!

இந்த உலகப்போக்கின்படி பார்த்தால், இயேசு எப்படி இந்த படிக்காத பாமரர்களை தனது திருத்தூதர்களாக தேர்ந்தெடுத்தார் என்பது நமது கேள்வியாக இருக்கும். காரணம், அவர்கள் செல்வந்தர்கள் அல்ல, அந்த சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள்.

அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்களுக்கென்று எந்த செல்வாக்கும் கிடையாது. அவர்கள் படிக்காதவர்கள். மறைநூலைப்பற்றிய அறிவே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி போதனையாளர்களாக மாற முடியும்? இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுவின் போதனையைப் புரிந்து, அறிவிக்க முடியும்? எந்த அடிப்படையில் இயேசு இவர்களை தனது சீடர்களாக அழைத்தார்?

இரண்டு காரணங்களை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்? இயேசுவிடத்தில் அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் இயேசு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல், அவரைப்பின்தொடர்ந்தனர்.

அதாவது, இயேசுவை தங்களது போதகராக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறந்த போதகர் என்கிற நம்பிக்கை அவர்களுடைய மிகப்பெரிய பலம். இரண்டாவது காரணம், அவர்கள் இயேசுவின் சார்பில் துணிவோடு நின்றார்கள்.

 ஏனென்றால், இயேசு பாரம்பரியம் என்ற பெயரில் நடந்துகொண்டிருந்த அநீதிகளை, அக்கிரமங்களை துணிவோடு எதிர்த்து நின்றார். எதிர்ப்பைச் சம்பாதித்தார். அவருக்கு பல முனைகளிலிருந்து எதிர்ப்புகள் வரத்தொடங்கின. அந்த சமயத்தில், சீடர்கள் துணிவோடு அவர் பக்கம் நின்றார்கள். துணிவு, சீடர்களின் மிகப்பெரிய பலம்.

இயேசுவைப் பின்பற்றுகிற நம்மிடத்தில், சீடர்களிடம் இருந்த இந்த இரண்டு குணங்களும் இருக்கிறதா? என்று சிந்திப்போம். இயேசுவிடத்தில் நமக்குள்ள நம்பிக்கையும், இயேசுவோடு நிற்கக்கூடிய துணிவும் தான், நம்மை உண்மையான சீடர்களாக அடையாளம் காட்டும்.


Wednesday 20 January 2016

அவரைத் தொடவேண்டுமென்று .......!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது.

நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் நாளை இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது.

தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். 'அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர்.

 "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம்.

கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம்.


இயேசு புகழுக்காக வாழவில்லை, மக்கள் போற்ற வேண்டும் என விரும்பவில்லை. மாறாக, கடவுளின் அன்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என விரும்பினார். நாமும் நம் வாழ்வின் மூலம் கடவுளின் அன்பை மற்றவர்கள் உணரச்செய்வோம்.

புகழும், பாராட்டும் நம்மை தொட்டுவிடாதவாறு , நாம் விழிப்பாயிருக்க வேண்டும் .

இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம்.


Tuesday 19 January 2016

போர்!

"அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்;
நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்.
இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்"; நாளைய வாசகத்தின் இந்த வரிகள் மிக மிக முக்கியமானவை மற்றும் சிந்திக்க  கூடியவை.  

கடவுளை முக முகமாய் கண்டு அனுபவித்த ஒருவன் தன் அனுபவத்தால் கூறக்கூடிய வார்த்தைகள்.இங்கு தாவீது தொடுத்திருக்கும் போர் சொற்ப்போர்.அதுவும் கடவுள் நம்பிக்கையினால் வந்த சொற்ப்போர்.

போர்கள் பல வகைப்படும்.அவைகள்
1.வான் போர்
2.விண் போர்
3.தரைப்போர்
4. ஏவுகணைபோர்
5.கப்பல் போர்
6.பாரதப் போர்
7 உலகப்போர்
8.ஆண்டவரின் போர்

ஆண்டவரின் போர் என்பது - அது  இன்று நாம் காண்பது.

இங்கு நாம் இரு முக்கிய நிகழ்வுகளை பார்க்கிறோம்.என்னவென்றால் போருக்குச் செல்பவன் எப்படி வரவேண்டுமோ அப்படி வந்திருக்கான் பெலிஸ்தியன் ஆனால் தாவீதோ ஏதோ நம்ம ஊரில் காட்டாம்  புளி வார் வைத்து காக்கை,கொக்கு பிடிப்பது போல் வருகிறார் தாவீது.இங்கு தாவீதிடம் இருந்தது நம்பிக்கை ஏனென்றால் இது ஆண்டவரி போர் என்ற நம்பிக்கை.

ஆனால் நம்ம பெலிஸ்தியன் ஆணவத்துடன் நான் வீரன் என மார்தட்டி வருகிறான் கடவுள் அச்சம் சிறிதும் இல்லாமல்.


அந்த நிகழ்வு பெலிஸ்தியனை ஏமாற்றுவது போல் உள்ளது.அதனால் கோபப்படுகிறான் தாவீதின் மேல்.கோபப்பட்டு என்ன பயன் தாவீது வந்திருப்பதோ கடவுளின் சார்பில்.அப்போ வெற்றி யாருக்கு?

ஆணவம் இல்லாத மனிதராய் இருந்தால் பெலிஸ்தியன் தாவீது கூறிய வார்த்தையைக் கேட்டவுடன் நாடு நடுங்கி இருக்க வேண்டும்.அது தான் அவனுக்கு இல்லை.

இதனைத் தொடர்ந்து  நாளைய நற்செய்தியில் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியவரைக் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சியை நாம் பார்க்கின்றோம்.

இதுவும்  ஒரு வகையான போர்.இதன் மூலம் தான் இயேசுவுக்கு சிலுவைப் போர் ஆரம்பமாகிறது.

ஓய்வுநாளில் மருத்துவ உதவி என்பது உயிர் ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் செய்ய முடியும் என்பது ஓய்வுநாள் ஒழுங்குகளில் ஒன்று.
பேறுகால வேதனையில் துடிக்கிற பெண்ணுக்கு ஓய்வுநாளில் மருத்துவ உதவி செய்யலாம். ஆனால் வெட்டுப்பட்ட ஒருவருக்கு வெட்டப்பட்ட இடத்தில் துணியால் சுற்றலாம். மருத்துவ உதவி செய்ய முடியாது. ஏனெனில் அங்கே உயிருக்கு ஆபத்து இல்லை.

 நாளையப் பகுதியிலே கைசூம்பிப்போன மனிதருக்கு உயிர் ஆபத்து ஒன்றுமில்லை. அவருக்கு இயேசு அடுத்தநாளில் கூட குணம் தந்திருக்கலாம்.

 ஆனால், எப்படி அவரை ஒழிக்கலாம் என்று சூழ்ச்சி செய்கிற கூட்டம் குற்றம் காணுகிற நோக்கத்தில் அங்கிருக்க, எதற்காக இயேசு தானே அவர்களின் வலையில் விழ வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம்.

 நன்மை செய்வதற்கு நாளோ, இடமோ, மனிதர்களோ தடையாக இருக்கக்கூடாது என்பது தான் இயேசு அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம். நன்மை செய்வதனால் சட்டத்தை மீறுவதானால், அதை இயேசு துணிவோடு மீண்டும் மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறார்.

நன்மை செய்வது தான் ஒருவரின் வாழ்வில் முழுமையான அர்ப்பணமாக இருக்க முடியும் என்று இயேசு கற்றுத்தருகிறார். நன்மை செய்ததற்காக இயேசு தன்னுடைய இன்னுயிரையே மகிழ்ச்சியோடு கொடுத்தார். நம்முடைய வாழ்வில் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதை வாழ்வின் நோக்கமாகக் கொள்வோம்.
அவ்வாறு  கொண்டு வாழ்வோமாகில் நாம் எந்தப் போரையும் கண்டு பயப்பட தேவை இல்லை.எல்லாப் போரும் நன்மையிலேயே முடியும்.

பல நேரங்களிலும் சில நேரங்களிலும் நாம் செய்யும் காரியங்கள் இவ்வாறே கடவுளின் பார்வையில் அருவருக்கத் தக்கதாக உள்ளது.ஆகவே வாழ்வில் தோல்வி அடைகிறோம்.

நாம் அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று ஆண்டவரின் போருக்கு  ஆண்டவர் வாளையும் ஈட்டியையும் ஒரு நாளும் பயன் படுத்தியதே இல்லை. அவர் பயன் படுத்தியது எல்லாம் உண்மையான சொற்களும்,நீதியும், நேர்மையும் நிறைந்த செயல்களும் தான்.
அம்மக்களையே அவர் தேடுகிறார்,தேர்ந்தெடுக்கிறார்.அந்த வரிசையில் தான் தாவீது வருகிறார்.

நாம் எப்பொழுது இந்த வரிசையில் இடம் பெறப்போகிறோம் என்று ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் நோக்கி கேட்கிறார்.


Monday 18 January 2016

மனிதன்-முகம், அகம் - ஆண்டவன்!

நாளைய வாசகங்கள் நமக்கு உரைப்பது இருவகைப் பார்வையைப் பற்றி. நாம் நாளை நினைவில் வைக்க வேண்டிய கடவுளின் இந்த வார்த்தை மிக மிக முக்கியம்.அதாவது "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்;
ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்றார்.

 பார்வை என்பது பல வகைப்படும். பார்வைகளில் எது நல்ல பார்வை என்பதை உணர்வதே பார்வையின் உண்மையான நிலை. கண்ணால் காண்பதும் பொய்,  காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்பார்வை என்பது மெய்மைகளை நோக்கியதாக உன்னதத்தை நோக்கியதாக, ஞானத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். உண்மையான பார்வை என்பது அகத்தை ஆழ்ந்து நோக்கி ஆண்டவரை அறிவதும், உணர்வதும், அனுபவிப்பதும் ஆகும்.

நல்லவைகளைப் பார்த்து நன்மைகளைச் செய்வதும் நல்ல பார்வை. சில நேரங்களில் பார்வைகளில் பழுதுகள் உண்டாகும், இருட்டில் கயிறுகூட பாம்பாகத் தெரியும், பேருந்துப் பயணம் செய்யும் போது மரங்கள் ஓடுவது போல தோன்றும், வலதுகை சாப்பிட முற்பட்டு கண்ணாடியில் பார்த்தால் இடது கையால் உண்பதுபோல தெரியும். இது பார்வைகளில் உண்டாகும் சில பழுதுகள். பார்வைகளில் உண்மைகளை உணர்வதுதான் சிறந்த பார்வை.

நாம் நம் அகப்பார்வைகளை அகலமாக்குவோம்  .அகம் ஆண்டவனை நோக்கிப் பாயும். ஆனால், உடல் பார்வை உலகத்தை மனிதர்களை  நோக்கிப் பாயும். பார்வைகளில் தான் பாவங்கள் தொடங்குகிறது. இது குறுகிய பார்வை குறுகிய கண்ணோட்டம். இப்படி ஒரு பார்வையோடுதான்  ஈசாய் தன் பிள்ளைகளை அழைத்து சாமுவேலிடம் நிறுத்துகிறார்.


ஆனால் சாமுவேலோ கடவுள் உரைத்ததில் கவனமாய் இருக்கிறார்.உன் பிள்ளைகள் இவ்வளவு தானா என்று ஈசாயிடம் கேட்டு அவரது பார்வையை அகலமாக்குகிறார். அப்பொழுது  தான் ஈசாய் தாவீது இருப்பதை கூறுகிறார்.பின் ஆண்டவர் கூறியவாறு தாவீதுக்கு அருள்பொழிவு நடக்கிறது.ஆக,நாம் கடவுளின் பார்வையில் இருந்து தப்புவது என்பது மிக மிக கடினம்.ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது மேல் இருந்தது ஆண்டவரின் அகப்பார்வை.

 
அகப்பார்வை ஆண்டவரின் பிள்ளைகளுக்கே உரித்தானது.தீமைகளை அறிந்து அதை துரத்தும் போதே  நாம் ஞானம் பெற்றவர்களாகிறோம்.கடவுளும் இதையே விரும்புகிறார்.

தீமைகளைத் துரத்த எண்ணுவதே சிறந்த பார்வை அவனுக்குள் ஞானம் தொடங்கிவிட்டது, தொடரும் ஞானம் தீமைகளை நீக்கி ஞானப்பார்வைகளை உண்மைப் பார்வைகளை நமக்குத் தரும். ஒரு ஞானியிடம் இரண்டு பெண்கள் வந்தார்கள். அவர்கள் அவரிடம் ‘ஐயா எங்களிலே அழகுள்ளவள் யார்’ என்று கேட்டார்கள். இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டோமே என்று உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். ஒருவள் “ஹீதேவி” என்றாள். இன்னொருவள் “மூதேவி” என்றாள். அந்த ஞானி சொன்னார் “இருவரும் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பி வாருங்கள்” என்றார் அவ்வாறே இருவரும் நடந்து சென்று திரும்பி வந்தார்கள். ஞானி சொன்னார் “ஹீதேவி வரும் போது அழகு” “மூதேவி போகும்போது அழகு” என்றார். அவர் உண்மையைத் தெரிந்ததினாலும் அகப்பார்வை சரியாக இருந்ததாலும் உண்மையைச் சொன்னார்.

அகம் புறம் என்ற இரண்டையும் ஒரே மனிதனில் படைத்த ஆண்டவன் ,நல்லதையும் கெட்டதையும் ஆராய்கின்ற ஒரே மூளையை ஒவ்வொருவருக்கும் தனி தனியாய் படைத்திருக்கின்றான்.நல்லவைகளை தேர்ந்து அகத்தில் விதைத்து வாழ்கின்றவனே அழகான மனிதன் .அந்த அழகை புறத்தில் செதுக்கி ,சிலர் மனதில் அழகையும் ,பலர் முகத்தில் புண் முறுவலையும் புதைக்கின்றவனோ புனிதன் .

மல்லிகை ,அதை அப்புறபடுத்திய பின்னும் மணத்தை பின் விட்டு செல்வது போல் ,மானிடன் அழகான மனதையே ,இறுதியில் விட்டு செல்ல வேண்டும் .நாம் மாண்ட பின்னும் ,பலர் மனதில் மணக்க வேண்டும்.
இது மட்டும் நடந்து விட்டால் கண்ணீரும் இல்லை ,கவலைகளும் இல்லை.


ஆம் எப்போதும் மனிதனை விட்டு தீமை அகலும் போது மனிதன் புனிதமடைகிறான், நன்மை அவனுக்குள் வரும்போது அகப்பார்வை பெறுகிறான். எப்போது நமது அகப்பார்வை விரிவடைகிறதோ அப்போது நமக்குள் ஞானம் வளரும். ஞானத்தை நிறைத்துக் கொண்டு பார்க்கும் பார்வைதான் உண்மையான பார்வை. ஆண்டவரே என் பார்வைகளை அகலமாக்கும் ஞானத்தின் ஆழத்தை உணர அருள்தாரும்.

Sunday 17 January 2016

நோன்பு இருப்பார்கள் !

தமது சீடர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை என்று வாதம் செய்யும் இயேசு, "மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்று சொல்லத் தவறவில்லை.

அவ்வாறே, இயேசுவின் விண்ணேற்புக்குப் பிறகு, திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவரும் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம்.

இறைவாக்கினரும், போதகருமான பர்னபா, லூக்கியு, மனாயீன், சவுல் ஆகியோர் நோன்பிருந்து வழிபடும்போது தூயஆவியாரின் வழிநடத்துதலைப் பெற்றுக்கொண்டார்கள் (திப 13:3). அதுபோல, மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம் நோன்பிருந்து செபிக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது என்பதையும் (திப 14: 23) அறிகிறோம்.

நோன்பிருந்து செபிப்பது வலிமையானது என்பதை ஆண்டவர் இயேசுவே "இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" (மாற் 9:29) என்னும் சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவின் சீடர்களான நாமும் நோன்பிருப்போமாக! நோன்புடன் கூடிய இறைவேண்டலினால் வலிய செயல்களை நிகழ்த்துவோமாக!

யோவானுடைய சீடர்களைப் போல, இயேசுவின் சீடர்களும் ஏன் நோன்பிருப்பதில்லை என்னும் கேள்விக்கு இயேசு தரும் பதில்: அவர்களும் நோன்பு இருப்பார்கள். மணமகன் அவர்களோடு இருக்கும்வரையில் அவர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

கிறிஸ்தவ வாழ்வில் நோன்பு என்பது இன்றி அமையாத ஒன்று. இந்த நோன்பினை மூன்று வகைகளில் அமைக்கலாம்.
1. உணவை மறுக்கும் உண்ணா நோன்பு.
2. தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றின்மீது கட்டுப்பாடு கொள்ளும் ஊடக நோன்பு.
3. நமது சொற்களின்மீது தன்கட்டுப்பாடு கொள்ளும் சொல்நோன்பு.

இந்த மூன்று வகையான நோன்புகளும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, மணமகனாம் இயேசுவைப் பிரிந்து, அவரது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும், இக்காலத்தில் இந்த மூன்று நோன்புகளையும் வாரமொருமுறை கடைப்பிடிப்போமாக!

Saturday 16 January 2016

இட ஒதுக்கீடு !

கானாவூர் திருமணவிழா பற்றிய செய்தியைப் பலமுறை வாசித்து, சிந்தித்திருக்கிறோம். இன்று "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்னும் வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

திராட்சை இரசம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம், விருந்தின் அடையாளம், உறவின் அடையாளம். திராட்சை இரசம் தீர்வது என்பது அவமானத்தின் அடையாளமாக, உறவுச் சிக்கலின் அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அச்சிக்கலைத் தீர்க்க தம் மகனை அணுகினார் அன்னை மரியா.

நமது வாழ்வில், பணியில், குடும்பத்தில் "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதா?" என்று அவ்வப்போது நம்மைக் கண்காணித்துக்கொள்வது நல்லது. பல பணிகளில் பரபரப்பாக இருக்கும் பலரும், தங்களது நெருங்கிய உறவுகள் ஆழம் குறைந்துவருவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பணம் சேகரிப்பதிலே கவனம் செலுத்தும் இல்லத் தலைவன் மனைவி, பிள்ளைகளின் பாசம் குறைந்துவருவதைக் கவனிப்பதில்லை. பணியிலே நிறைவின்றி, மகிழ்ச்சியின்றி வேலைசெய்வது "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்பதைக் காட்டுகிறது.

இன்றைய நாளில் நமது வாழ்வை, பணியை, உறவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கண்டால், மனங் கலங்காமல், அன்னை மரியாவை நாடுவோம். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமது வாழ்விலும் புதிய திராட்சை இரசம் என்னும் இனிமையை ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவார்.

அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தாரகை என்று வர்ணித்தால் அது மிகையல்ல. ஒடுக்கப்பட்டோருக்கும், ஓரங்கட்டப்பட்டோருக்கும் சார்பாக வாதிட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உயரிய பங்கைப் பெற்றுத் தந்தார் அன்னை மரியா.


திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும்தான் அமர்வர். அவர்களுக்கெல்லாம் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், திருமண வீட்டாரால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படாதோர் முதலியோரே அமர்ந்திருப்பர்.

இவர்களுக்குத்தான் இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தி தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார்.

எனவே, ஒதுக்கப்பட்ட கடைசிப் பந்தில் அமர்ந்திருந்தவர்கள் முதல் பந்திகளில் அமர்ந்து இரசம் குடித்த செல்வாக்கு மிக்கோரைவிட அதிக சுவை நிறைந்த, நல்ல இரசத்தை அவர்கள் மனம் நிரம்பும்வரை அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, ஒதுக்கப்பட்டோருக்கு அதிக தரமும், அளவும் மிக்க திராட்சை இரசம் கிடைத்தது. எனவே, அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டின் தாய் என்று பெருமையுடன் அழைக்கலாம்.


Friday 15 January 2016

நல் மருத்துவர்!

இயேசு தம் சீடரை அழைத்த வரலாறு பல விதங்களில் கூறப்பட்டுள்ளது. கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோன் போன்றோரை இயேசு அழைத்தார். அவர்கள் தம் வலைகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

லேவி என்பவர் வரிதண்டும் தொழிலைச் செய்தவர். அவர் வழக்கம்போல சுங்கச் சாவடியில் அமர்ந்து தம் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயேசு அவரை அழைத்தார். லேவியும் ''எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற் 2:14).


வரிதண்டும் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. மக்களிடமிருந்து உரோமைப் பேரரசு வரியாகப் பணம் பெற்றது; வேறு பல வரிகளும் மக்களுக்குச் சுமையாயின. வரிதண்டுவோர் தமக்கென்றும் ஒரு பகுதியை அநியாயமாகப் பிரித்தனர். எனவே பொது மக்கள் வரிதண்டுவோரை வெறுத்ததில் வியப்பில்லை. இத்தகைய ஒரு மனிதரையே இயேசு அழைத்தார்.

 நம் வாழ்க்கையில் கடவுளின் அழைப்பு எப்போது எவ்வாறு வரும் என நாம் முன்கூட்டியே அறிய இயலாது. ஆனால் கடவுளின் குரல் நம் உள்ளத்தின் ஆழத்தில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாம்தாம் சில வேளைகளில் அக்குரலைக் கேட்க மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம்.

நம் உள்ளத்தைத் திறந்து வைத்துக் கடவுளுக்கு அங்கே இல்லிடம் அமைத்துக் கொடுத்தால் அவருடைய குரலை நாம் எளிதில் கேட்கலாம். அக்குரல் நம்மிடம் கோருவதை நாம் மனமுவந்து செய்வோம்.

இயேசுவைப் பின்பற்றிச் செல்வதற்கு வருகின்ற அழைப்பு முதல் படி என்றால் அந்த அழைப்புக்கு நாம் தருகின்ற பதில் மொழி இரண்டாம் படி எனலாம். அவ்வாறு மனமுவந்து நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்லும்போது நம் வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக அமையும். நம் உள்ளத்தில் கடவுள் தரும் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.


"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை."இந்த ஒரு முத்தான வசனம் இயேசுவிடமிருந்து வருவது ஆச்சரியமில்லை. ஆனால் மத்தேயுவின் வீட்டிலிருந்தபோது வந்தது இன்னும் ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. மத்தேயு படித்தவர்.

பெரிய பதவியில் சுங்க இலாக்காவில் இருந்தவர். கை நிறையவும் பை நிறையவும் பணம் படைத்தவர். அவரது வீட்டில் விருந்தில் இந்த முத்தான வார்த்தையை சொல்லும்போது, மத்தேயுவும் இதில் தொடர்புடையவர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

செல்வம், பதவி இருந்தும் மத்தேயு ஒரு நோயாளியாக இருந்தார் என்று உணர முடிகிறது. இயேசுவின் சந்திப்பின் மூலமும் விருந்தின் மூலமும் மத்தேயு ஒரு நோயாளி என்பதையும் இயேசுவே அவருக்கு சிறந்த மருத்துவர் என்றும் இயேசுவே சிறந்த மருந்து என்றும் உணர்த்துகிறார்.

பணம் பதவிகளோடு வாழும் நாம் பல நேரங்களில் நமக்கு இருக்கும் நோயை நாம் அறிவதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் பதவியில் இருப்பவர்கள் இயேசுவோடு தொடர்பு இல்லாததால் தானும் நோயுற்று தன் குடும்பத்தையும் அழிப்பதை காண்கிறோம்.

 இயேசுவின் முன் நம்மை நிறுத்துவோம். அவருக்கு நம் வீட்டில் விருந்து கொடுப்போம். அப்போது நம் நோயை அறிவோம்.இயேசு நல் மருத்துவர் என்பதை உணர்வோம். நோயற்று குறையறற செல்வத்தோடு வாழ்வோம்.


Thursday 14 January 2016

GOD CARES ABOUT YOU!

He’s the first person to ever care about you, and He cares about you more deeply than anyone else ever could. 

He’s been waiting for you to acknowledge Him, to turn to Him and to thank Him — for He has been faithfully caring for you throughout your whole life; He alone has sustained you.

Though other people and forces have sought to exploit you, to undermine you and to steal from you because of greed and a lust for power, God has protected you so that you could hear this message about His goodness and great love – so that you can forever escape the weakness, ignorance and selfishness of this world by running into His arms.

He wants to lift you up; up and out of the “lowest common denominator” situation that you may be finding yourself in. Though everyone around you may be devoid of hope, you do not have to “settle”!

God’s desire for you is abundant life – like a parent’s sincere desire for their child.

Have you ever seen “that look” in your parent’s eyes, when you know that they just want you to be happy, to be successful, and to have peace and security in your life?

Imagine this same kind of loving goodwill being directed to you from God – but much more powerfully, and with none of the “baggage” or fears that your biological parents are likely to carry with them.

Now turn to Him, talk to Him, acknowledge Him; spend some time focusing on God. If you have a Bible, read it.

Pray and ask God to help you read it, and to lead you to where in the bible He wants you to read – God uses the bible as one means of communicating with us – He can talk through the bible in very specific ways to meet our immediate needs; if the first one or two times you try this nothing special seems to be coming, don’t be discouraged, just try again. It could be that you just need to press into God and ask again.

How do I know that God loves us? He proved it to me by pulling my life “out of the pit” as it were. I called out to Him and He answered; He plucked me out of the situation I had found myself in after I called out to Him in prayer, and set my life on a new unshakable path, surrounded me with God-loving people, and gave me joy, hope, peace and inner strength. 

He gave me a family as a congregation, and even a personal relationship with Himself. He gives me heavenly dreams and visions, special gifts, and unending encouragement.


Wednesday 13 January 2016

இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சி இறையடியார் தேவசகாயம்பிள்ளை!

இன்று எனக்கு ஆரல்வாய்மொழி என்றாலே எழில் கொஞ்சும் சோலையாக திகழும் நம் காற்றாடி மலை தான் ஞாபகத்திற்கு வரும். இதுவே நம் ஆரல்வாய்மொழி சுற்றுச்சூழல்.

இங்குள்ள மணியடிச்சாம் பறையில் சென்று நான் புனிதை ஆகவேண்டும் என்று ஜெபித்து நிறைய நேரம் பாறை மீது மூன்று தடவை தட்டியது உண்டு.

எனக்கு  பிடித்த இரண்டு  இடம். ஒன்று  இறையடியார் தேவசகாயம்பிள்ளை ஆலயம் அமைந்துள்ள இடம்.மற்றொன்று அவர் ஞானஸ்நானம் பெற்ற வடக்கன்குளம் ஆலயம்.

அங்கு மூன்று ஆண்டு கல்லூரியில்  பணிசெய்தபோது நான் அடிக்கடி சென்று  தரிசித்து இறையாசீர் பெற்ற ஆலயங்கள் இவை இரண்டும்.இவரை நினைக்கும் போது மனதே பூரிப்பு அடையும்.

ஏனென்றால், விசுவாசத்திற்காக தன்னையே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைமகன் இயேசுவுக்காக தன்னையே கையளித்தார்.ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர்.அவரைப் போல் நானும் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

நாளை இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சி இறையடியார் தேவசகாயம்பிள்ளை விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது பெருவிழா வாழ்த்துக்கள்.

இவரைப்பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.இவர் தமிழ் மண்ணின் தென்கோடியிலுள்ள குமரியில் நட்டாலம் ஊரில் 1712-ல் நாயர் குலத்தில் பிறந்த நீலகண்டன் போர் வீரர், கோயில் பணியாளர், அரச கருவூல அலுவலர் என பலப்பொறுப்புகளுடன் சிறப்பு பெற்றிருந்தார். அவருக்கு மனைவியாய் வாய்த்தவர் பார்கவியம்மாள்.

     1741-ல் டச்சுப்படையை குளச்சல் போரில் வென்ற மன்னர் மார்தாண்ட வர்மாவால் சிறைபிடிக்கப்பட்ட டச்சுத்தளபதி எஸ்தாக்கியூஸ் பெனடிக்ட் டிலனாய், பின்னாளில் தளபதியாக்கப்பட்டார். நீலகண்ட பிள்ளைக்கு நண்பராக மாறிய டிலனாய் அவருக்கு யோபுவின் வாழ்க்கையையும், யேசுவைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

 இப்போதனைகளால் ஈர்க்கப்பட்ட நீலகண்ட பிள்ளை கிறிஸ்தவ மறையில் இணைய விரும்பி 1745 மே 14-ல் வடக்கன்குளம் கோயிலில் அருட்தந்தை புத்தேரியிடம் திருமுழுக்குப்பெற்று தேவசகாயம்பிள்ளை (லாசர்) எனப் பெயர் பெற்றார்.

     இயேசுவை ஏற்றுக்கொண்ட தேவசகாயம்பிள்ளையின் வாழ்வில் மாற்றம் தெரிந்தது.சாதிய வேலிகளைத் தாண்டி ஒதுக்கப்பட்ட மக்களோடு உறவு பாராட்டினார். அங்கிருந்த சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்த, மன்னரிடம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோள்மூட்டி மன்னனை தேவசகாயம்பிள்ளைக்கு எதிராகத் திருப்பினர்.


இதன் விளைவாக 1749 பிப்ரவரி 23-ல் தேவசகாயம்பிள்ளை கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு இரையானார். கழுதையின் மீது ஏற்றி, எருக்கன்மாலை அணிவித்து ஊர்கள் அணிவித்து ஊர்கள் தோறும் கொண்டு செல்லப்பட்டார். பசியோடும் தாகத்தோடும் போராட இயேசுவை வேண்டிக்கொண்டே வழியில் புலியூர்குறிச்சியில் பாறையில் தன் கைமுட்டால் இடிக்க, தண்ணீர் ஊற்றெடுத்து அவர் தாகம் தீர்தது. அது இன்றும் வற்றாமல் ஊற்றெடுத்து வரலாறாக திகழ்கின்றது.


 துன்பப் பயணத்தின் 1752 ஜனவரி  14-ல் ஆரல்வாய்மொழி மலையில் சுட்டு கொலைசெய்யப்பட்டார். காட்டு விலங்குகளுக்கு வீசப்பட்ட அவரது உடலின் பகுதிகள் கோட்டாறு தூய சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோட்டாறு மறைமாவட்டம் அவருக்கு மறைசாட்சிப் பட்டம் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.


     திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்களால் தேவசகாயம்பிள்ளை முக்திபேறுபெற்ற மறைசாட்சி என ஒப்புதல் வழங்கப்பட்டு வரும் 02-12-2012 அன்று நடைபெறும் மாபெரும் விழாவில் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் அமாத்தோ அவர்களால் அறிக்கையிடப்பட்டது. இவர் இந்தியாவின் முதல் பொதுநிலையினர் மறைசாட்சி.

இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம்பிள்ளை இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து , இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, “இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை நாளை  வாசிக்கிறோம்.

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும்.

நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.


இதையே தேவசகாயம்பிள்ளையும் தான் ஞானஸ்நானம் பெற்ற அந்த நொடியிலிருந்து செய்தார்.ஆக எல்லா சமூகத் தடைகளையும் தகர்த்தெறிய இறையடியார் தேவசகாயம்பிள்ளையின் வழியாக இறைவனை மன்றாடுவோம்.

Tuesday 12 January 2016

உதவி செய்வோம்!

நாளைய நற்செய்தியில்  இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது.

அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.

இன்று நாம் இயேசுவின் பணிவாழ்வை பார்த்தோம் என்றால்  மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார்.

1. தொழுகைக்கூடம்
2. நண்பர்களில் இல்லம்
 3. தெரு வீதி.

எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை.

தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை நாளை  நற்செய்தி தெளிவாக்குகிறது.

உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். உதவி செய்வதற்கு நமக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது.

அப்படி இருந்தால், எதையும் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், அது உதவியாக இருக்க முடியாது.

Monday 11 January 2016

அன்னை வெர்ஜினும் நானும்!

விண்ணக வீட்டில் இன்று இறைவனோடு மூன்றாம்   ஆண்டு  பிறந்தநாள் கொண்டாடும் அன்னை வெர்ஜினுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!

வாழ்நாளெல்லாம் நலமுடன் வாழ்க
என  வாழ்த்தும்,
வாழும் தெய்வம்
என் அன்னை வெர்ஜின்!

வந்தாரை இன்முகம் கொண்டு
வருக என வரவேற்கும்
வள்ளல்தெய்வம்
என் அன்னை வெர்ஜின்!

இனியசொல்லால் எல்லோரிடமும்
வாய் திறந்து பேசும்
பெருந் தெய்வம்
என்  அன்னை வெர்ஜின்!

என்னிடம் வாழ்வின் புரிதல் இல்லாத போது
வாழ்வின் அர்த்தத்தை சொல்லி  வளர்த்த
நல்ல  தெய்வம்
 என் அன்னை வெர்ஜின்!

உன்னை அக்கா என்பதா அல்லது அன்னை என்பதா.......
தவம் இல்லை புண்ணியம் செய்யவில்லை
தேடி அலைந்து எனக்காய்
இறைவன் எதுவும் தரவும் இல்லை
இருந்தும் ... எனக்காய் நீ

வாழ்வின் நெடும்பரப்பில் - என்னில்
முழுப்பக்கங்களை சொந்தமானதாய்
ஆக்க முடியும் என்கிறாய்
அதுவும் உன்னால் மட்டும் என்கிறாய்
அது எப்படி சாத்தியமாகும் ??

உடல் விட்டு கூடுபாயும் ஆவியும்
நான் இல்லை
உன்வார்த்தைகள் என் காலத்தின்
பரப்பில் விரிந்து கிடக்கையில்
அதை எப்படி நான் தட்டிப் பிரிவேன்
என் உடலின் இரத்த ஓட்டங்கள்
உன் கையின் அசைவின் மூலம்
எனக்கு உயிர் தருபதாக ....

நீ பூமியாய் இருக்கையில்
உன்னை சுத்திவரும் துணைக்கோள்
நான் ஆக
செய்கையில் மாற்றம் வரும் ஆகின்
உன்னில் தான் மாறுதல் வேண்டும்
அப்பொழுது சொல்
நான் உன்னை தாண்டிச்செல்கின்றேன்
என ........... மொழிந்தவள் நீர்!


நான் பள்ளி பயிலுகையில்,
என்னை கூடப்பிறந்த தங்கைப்போல்
பாவித்தவள் நீர்!

நான் கல்லூரி பயில்கையில்
நீர் பழஞ்ச்சூருக்கு வந்தால்
புன்னகையால் பாச மழை பொழிபவள் நீர்!

நான் நவகன்னியராக   இருந்த போது
என் கரம் பற்றி என்னோடு நடந்த
என் இரண்டாம் அன்னை நீர்!

நான் இளவலாக  இருந்த போது
என்னோடு சேர்ந்து கூடப்பிறந்த
அக்கவைபோல் விளையாடிய அன்னை நீர் .

நான்  உன்னை  புரிந்து  கொள்ளாத  போது
நம்மிடையே நடந்த செல்ல  சண்டையில்
நீ என்னை  அரவணைத்து
கலை தங்கச்சி நான் உன் அக்கா நீ என் தங்கை
எனக்கு உன்மேல் உரிமை இருக்கு என்று
ஆறுதல் கூறியவள்    நீர் !


நான் பணித்தலங்களில்  இருந்து
தொலைபேசியில் உன்னை
அழைக்கும் போது
நீ கேட்கும் முதல் வார்த்தை
கலை தங்கச்சி எல்லோரும்   நல்லா இருக்கீங்களாம்மா!
உன் கவலை மறந்து நான் மகிழ்வாய் இருக்க
என்னை மகிழ்வுடன் நலம் விசாரித்தவள் நீர்!

பணி நிமித்தம் DMI தங்கைகள்,    MMI  தம்பிகள்  ஃபாரின் செல்லும்போது
பாசத்துடன் அனுப்பி வைத்து
தாயைப் போல பெரும் மன நிறைவு கண்டவள் நீர்! !

தன் துறவறப்பணியினிலே கடவுளுக்காய் வாழ
தனிக்கவனம் செலுத்தியவள் நீர்!
உம்மைப் போல் தன் DMI மற்றும்  MMI  பிள்ளைகள்
கடவுளில் வளர வாழ
தவமாய்த் தவம் கிடந்தவள் நீர்!

அத்தனையும் அன்னை செய்திருந்தால்
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்
அத்தனையும் அக்கா செய்ததால்
அவளையே தெய்வம் என்றிடுவேன்!

இது போன்று,
இன்னும் எத்தனை பாசங்களை
என் மீது காட்டப்போகிறாய்?
அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்
இனி வரும் காலங்களில்..........
கண்ணீருடன் உன் நினைவுகளில் வாழும் தங்கை கலை!

Sunday 10 January 2016

புறப்படுவோம் இலக்கை நோக்கி!

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது.

கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது.

இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும்.

எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள், படிக்காதவர்கள், சாதாரணமானவர்கள் எப்படி, இறையாட்சியைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க முடியும்? அது எப்படி சாத்தியமாகும்?

இங்கு தான் கடவுளின் அருட்கொடை வெளிப்படுகிறது. நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், அந்த தகுதியைக் கொடுக்கிறவர் கடவுளாக இருக்கிறார். நல்ல மனது இருந்தால் போதும். அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நாம் பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அதனுடைய பொருள் இதுதான். நமது மனது நன்றாக இருந்தாலே, நிச்சயம், கடவுளின் அருள் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

பலவேளைகளில் கடவுளின் பணியைச் செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களா? கடவுளின் பிரசன்னத்தை நம்மால் உணர முடியுமா? என்ற சந்தேகங்கள், உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு எழலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கடவுளின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டாலும், அந்த வல்லமைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சீடர்கள் என்பவர்கள் அழைக்கப்பட்டவர்கள். அழைப்பவர் ஆழுமை நிறைந்தவர். அழைப்பு மறுக்கமுடியாதது. அழைக்கப்படுபவர் அந்தஸ்து அவசியமில்லை. அழைக்கப்படுபவர் முற்றிலும் புதிய, உயரிய ஒரு பணிக்காக அழைக்கப்படுகிறார்.

அழைப்பின் இலக்கு அழைக்கப்படுவோர் அனைவருக்கும் பொதுவானது. மனிதர்களைப் பிடிப்பது. மனிதனை முழு மனிதவாழ்வுக்கு அழைத்துச் செல்வது. அழைக்கப்படுவோர் யாராகவும் இருக்கலாம், என் நிலையிலும் இருக்கலாம்.

முதியவராக இருக்கலாம் இளைஞனாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். யோவான்போல கூலியாட்கள்வைத்து வேலை செய்யும் உயர்நிலையிலும் இருக்கலாம்.ஆயராக இருக்கலாம். அடித்தள விசுவாசியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் பணியின் இலக்கு ஒன்றே.

எனவே, நீங்களும் இயேசுவின் உன்னத மனிதர்களைப் பிடித்து முழு மனிதனாக்கும் உயர் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் நிலையும் இயேசுவின் தனிப்பட்ட அழைப்பு.

இந்த அழைப்பை நீங்கள் தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டியது உங்கள் கடமை. அதை சிறப்புடன் செய்யும்போது இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.

இப்பொழுதே புறப்படுவோம் நமது இலக்கை நோக்கி!!!

Saturday 9 January 2016

திருச்சபையில் நல்ல மகனாக,மகளாக வாழ்வோம்!

நாளை ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார்.

அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன:

1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?

2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா?

3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா?

"மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி.

இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், "கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம்.

நாளைய  நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம்.

தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு.

நாமும் நம்மை ஈன்றெடுத்த நம் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழ உறுதிபூணுவோம். நமக்கு உயிர் தந்து, நம்மை இருக்கவும், இயங்கவும், வாழவும் செய்யும் வானகத் தந்தை மகிழ்ச்சி அடையும்படியாக வாழவும் உறுதிகொள்வோம்.

ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம்.

Friday 8 January 2016

உண்மைத்தொண்டன்!

''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவான் 3:28)

 திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர் என்பது நற்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. சில மாத இடைவெளியில்தான் இருவரும் பிறந்தனர். இயேசுவின் தாய் மரியாவும் யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்.

இவ்வாறு நெருங்கிய உறவுகொண்டிருந்த யோவானும் இயேசுவும் திருமுழுக்குக் கொடுத்தனர் என்னும் செய்தியை யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (காண்க: யோவா 3:22-30). இருவரும் இறைவாக்கினர் போல மக்களுக்குத் தோற்றமளித்தனர். இருவரும் கடவுளின் ஆட்சி பற்றியும் மக்கள் மனமாற்றம் பெறவேண்டிய தேவை பற்றியும் எடுத்துரைத்தனர்.

எனவே மக்களிடையே ஒரே குழப்பம். இயேசு பெரியவரா யோவான் பெரியவரா என்னும் கேள்வி எழுந்தது. இக்கேள்விக்குத் திருமுழுக்கு யோவானும் இயேசுவும் அளித்த பதில்கள் நற்செய்தி நூல்களில் பதிவாகியுள்ளன.

யோவான் தம்மைப் பற்றிக் கூறும்போது, ''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவா 3:28) என உரைக்கிறார். தம்மைவிடவும் இயேசு பெரியவர் என்றும், இயேசுவே உலக மீட்பராக வருகிறார் என்றும் யோவான் அறிக்கையிடுகிறார்.

 யோவான் தம்மை ஒரு ''முன்னோடி'' என அறிமுகப்படுத்துகிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற நாமும் கிறிஸ்துவுக்கு முன்னோடிகளாகத் திகழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வருகிறார் என்றும் கிறிஸ்து நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் மக்களுக்கு அறிவித்துச் சான்று பகர்கின்ற பணி நமக்குத் தரப்பட்டுள்ளது.

யோவானைப் போல நாமும் இயேசு யார் என மக்களுக்குச் சுட்டிக்காட்ட அழைக்கப்படுகிறோம். இயேசுவே மெசியா என நாம் நாவினால் மட்டும் அறிக்கையிடுவதோடு நின்றுவிடாமல் நம் சொல் செயல் வழியாகவும் சிந்தனைப் பாணிகள் வழியாகவும் இயேசுவிடம் மக்களை இட்டுச் செல்ல வேண்டும். யோவான் நமக்கு முன் உதாரணமாக உள்ளார்.

நாம் வாழும்; இக்காலத்தில் இந்த திருமுழுக்கு யோவான்போல தாழ்ச்சியும் தயாகமும் உள்ள மனிதர்களைப் பார்ப்பது அறிதாக உள்ளது. ஒண்ட இடம் கொடுத்தால் வீட்டையும் ஊரையும் அபகரித்துக்கொள்ளும் அவல நிலையைக் காண்கிறோம்.

வேலை வசதி இல்லாத மனிதன் என்று இரக்கப்பட்டு நம் தொழிலில் ஒரு வாய்ப்புக் கொடுத்தால், சில நாட்களில் அவனே நமக்கு எதிராக அதே தொழிலில் ஈடுபட்டு போட்டியும் பொறாமையும் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். வளர்ச்சியையும் முன்னேற்றத்;தையும் இங்கு குறை சொல்லவில்லை.

திருமுழுக்கு யோவானிடமிருந்த நற்பண்பு இருந்தால் நம் வாழ்வில் குறை இருக்காது. எப்பொழுதும் முன்னேற்றம் இருக்கும். உண்மையான தொண்டனாக, உடன் உழைப்பாளியாக, நன்றி மறவா ஊழியனாக திருமுழுக்கு யோவான் திகழுகிறார்.

 தன் எஐமானின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைகிறார். "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்"(யோவா 3:30) என்ற திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி நிறைந்த இவ் வார்த்தைகள் அவரது தொண்டு மனப்பான்மையை அருமையாக விவரிக்கின்றன.

"நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்" என்ற அவரின் ஏற்புடைமை உண்மைத் தொண்டனின் தியாகத்திற்குச் சான்று.

அரசியலிலும் அன்றாட வாழ்விலும் குழப்பம் உண்டாக்கி, புரட்சிசெய்து ஆட்சியை, சொத்துக்களை அபகரிக்கும் இன்றைய உலகுக்குத் திருமுழுக்கு யோவான் ஓரு மேல்வரிச்சட்டம், ஒரு பாடம். அவரிடம் கற்றுக்கொள்வோம். வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தேடிவரும்.

நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று  உண்மைத் தொண்டனாக வாழ்ந்து இயேசுவுக்ககாக  உயிர் துறப்போம்.

Thursday 7 January 2016

அள்ளி அணைத்தல்!

நாளைய  நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து, தொழுநோயாளி, நீர் விரும்பினால் குணமாவேன் என்று சொல்கிறான். இயேசு தாமதிக்கவில்லை. உடனடியாக, “விரும்புகிறேன், குணமாகு“ என்று சொல்கிறார்.

 இயேசு நாம் நோயிலும், துன்பத்திலும் அவதியுற வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. நாம் நன்றாக  இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அவரே இந்த உலகத்திற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாக வந்தார்.

நாம் குணம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறபோதெல்லாம், அவர் குணம் கொடுத்தார். ஓய்வுநாள் என்று கூட பார்க்கவில்லை. அதனால், தான் பலரது எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் சந்திக்க வேண்டியது வரும், என்பது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை.

நன்மை என்றால் நினைத்தமாத்திரத்தில் அதை செய்து முடித்தார். பலவேளைகளில் நாம் கடவுள் எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார். நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள் தான் காரணம், என்று பதில் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறபோது, கடவுளை பதிலாக நினைக்க ஆரம்பிக்கிறோம்.

ஆனால், அது உண்மையல்ல. கடவுள் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். நமது வாழ்விலும் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள  அழைக்கப்படுகிறோம்.

இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. உலகத்தோடு மனித மனங்களும் சுருங்கிவிட்டது. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும், அடுத்த அறையில் கொலையே நடந்தாலும், நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும், என்கிற மோசமான மனநிலை இன்றைய சமுதாயத்தில் மலிந்துபோய்விட்டது. அந்த மனநிலை மாற்றம் பெற வேண்டும். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளின் என்கிற பரந்த உணர்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


காலில் விழுவது பெரிய சாதனையோ  சாமார்த்தியமோ அல்ல. விழுந்துகிடப்பவனை அள்ளி அணைத்து ஆளாக்கிவிடுவதுதான் சாதனையும் சாமார்த்தியமும் .அந்த தொழுநோயாளி காலில் விழுந்தான். அவன் நோயாளி. விழுவது அவன் இயல்பு. இன்று காலில் விழுவதும், விழுந்தவனை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கௌரவமாக மேடைகளில் அரங்கேறுகின்றன.

நீ அவர் காலில் விழ காத்திருப்பவர் அல்ல உன் தெய்வம். யாருடைய காலில் விழவும், கை நீட்டி காத்திருக்கும் நிலையைக் காணவும் கணமும் விரும்பாதவர். உடனே தன் கையை நீட்டி, தாங்கி, நல் வாழ்வுக்கு வழிநடத்துவார்.

அவரைக் காணும் முயற்சியல் உடனே இறங்குவோம். நம் கஷ்டங்கள் தலைக்குமேல் போகும்வரை காத்திருக்க வேண்டாம். உடல் முழுவதும் தொழுநோய் பரவிய பின் இயேசுவின் காலில் விழ காத்திருக்க வேண்டாம். என்றும் எப்பொழுதும் இயேசுவைக் காண்போம். அன்றே அப்பொழுதே அவர் நம்மைக் குணமாக்குவார்.

Wednesday 6 January 2016

குழந்தைகள் வளர்ப்பு!

“இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார்” என்று குறிப்பிடும் நற்செய்தியாளர், முத்தாய்ப்பாகத் தரும் செய்திதான் “எல்லாரும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்”.

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும் ” என்று பாடினான் ஒரு திரையிசைக் கவிஞன். இயேசுவுக்கு அந்தப் பேரும், புகழும் கிடைத்தன. என்ன காரணத்தால்?

அதற்கான காரணத்தை நற்செய்தியாளர் நாளை முதல் வாக்கியத்திலேயே சொல்லிவிடுகிறார். “இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்”. ஆம், இதுதான் அந்தப் பெருமைக்குக் காரணம். இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் இருந்தார்.

அவரது சொற்களில் ஆற்றலும், வலிமையும் இருந்தன. தூய ஆவியால் நிரம்பியவராய் இருந்ததால், அவரது செயல்பாடுகள் வரங்களும், கொடைகளும், கனிகளும் நிறைந்தனவாக இருந்தன. எனவேதான், வியத்தகு செயல்களை அவர் செய்தார்.

மக்கள் எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள். நமது வாழ்விலும் தூய ஆவியானவரை நிறைவாகச் செயல்பட அழைப்போம், அனுமதிப்போம். அப்போது நாமும் பெருமைமிகு செயல்களைச் செய்யலாம்.

மேலும்,  பிள்ளை வளர்ப்புக்கு அருமையான எடுத்துக்காட்டாக இப்பகுதியைச் சொல்லலாம். பெற்றோருக்குப் பணிந்திருப்பது, தொழுகைக்கூடம் சென்று கற்றுக்கொள்வது, விவிலியம் வாசிப்பது,செபிப்பது,பலரும் பாராட்ட வாழ்வது, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வாழ்வது,இக்கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொல்லுகிறது இந்த பகுதி;.

கலிலேயாவில் உள்ள நசரேத்துக்குச் சென்று தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்திருக்கின்றார். தினமும் தொழுகைக்கூடம் சென்று விவிலியம் வாசித்து கற்றுக்கொண்டு இறை அருளிலும் வளர்ந்தார். இயேசுவின் பெற்றோர்கள் அவரை இவ்வாறு வளர்த்து ஆளாக்கினர்.

இயேசு இளம் வயதில் இப்பண்புகளில் வளர்ந்து தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளர். அவரது அறிவாற்றல், அருள்வாக்கு,அமைந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்ததால், வைத்த கண் வாங்காமல் இயேசுவையே பார்த்த வண்ணமாய் இருந்துள்ளனர். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" என்று பாராட்டியுள்ளனர்.

இன்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்கைகளை இவ்வாறு வளர்க்க வேண்டும். உலகக் கல்வி கொடுத்தால் மட்டும் போதாது. இறை அறிவையும் அனுபவத்தையம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள்  உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உலகம் உங்களைப் பாராட்டும்.

Tuesday 5 January 2016

வாய்க்கால்!

வாய்க்கால் என்பது எத்துனை நன்மை பயக்க கூடியது என்று நாம் அறிவோம்.கிராமங்களில் வாய்க்கால் என்றும் நகரங்களில் ட்ரைனேஜ் என்றும் சொல்வார்கள்.

ஆனால், இந்த வாய்க்காலும்,ட்ரைநேஜும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி பார்த்தோம் என்றால் ஒரு உண்மை விளங்கும்.என்னவென்றால், வயல்கள் மத்தியில் வாய்க்கால் தண்ணீர்,மணல்,மீன்கள் போன்றவைகளை சுமந்து செல்லும்.வாய்கால் வற்றினால் மீன்கள் இறந்து விடும், பயிர் வளராது ,விவசாயிகள் வாடுவார்கள்.

இதேபோல் ட்ரைனேஜ் அழுக்குத் தண்ணீர்,குப்பைகளை சுமந்து செல்கிறது.ஒருநாள் இவைகள் ஓடாமல் நின்றால் யாரும் வீட்டில் இருக்க முடியாது.ஏனென்றால் நாற்றம் எடுக்கும்.

ஆக,வாய்க்காலும், ட்ரைநேஜும் நாம் வாழும் இடங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

இதை நாம் நாளைய நற்செய்தியில் வைத்து சிந்தித்தோம் என்றால் உண்மை புரியும்.அதாவது, ஜெபத்தின் மூலம் வாய்க்காலனது கடவுள் அருளை சுமந்து நம்மிடம் வருகிற ஒன்றாக இருப்பதை நாம் அறிவோம்.ஜெபம் என்பது நம் வாழ்வில் குறைந்தால் ,வாய்க்கால் வற்றும்.நாமும் சோர்ந்து போய்விடுவோம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நாளைய  நற்செய்தி நூல்களில் காணலாம்.

இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம்.

இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது.

 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார்.

எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை.

 2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார்.

அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால் அசாத்தியமாக செய்ய முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவருடைய செபம்.

எத்தகைய இடர்பாடுகளையும், இன்னல்களையும் எதிர்த்து நிற்பதற்கு அவருக்கு துணையாக இருந்தது செபம்.

 3. இறைவனின் அருளைப் பெற உதவும் வாய்க்காலாக இருந்தது. எப்போதெல்லாம் இயேசு நோயாளர்களுக்கு சுகம் தந்தாரோ, அப்போதெல்லாம், அவர் தந்தையிடம் செபித்தார்.

அவரின் அருளைப் பெற்றுக்கொள்ள செபத்தை வல்லமைமிகுந்த ஆயுதமாகப் பயன்படுத்தினார். இறை அருளைப் பெற்றுக்கொண்டார்.

நமது கிறிஸ்தவ வாழ்வில் செபம் முக்கியத்துவம் மிகுந்தததாக இருக்க வேண்டும். கடவுளோடு நாம் நெருங்கியிருப்பதற்கும், வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும், இறைவனின் சிறப்பான அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இருக்கக்கூடிய செபத்தின் மீது நாம் பற்றுள்ளவர்களாக இருப்போம்.

அவ்வாறு செபத்தில் நிலைத்து வாழ்ந்தால் நாமும் வற்றாத வாயகால்களே! 
ஆக,கடவுளின் அருளை சுமந்து செல்லும் வாய்க்கால்களாக மாறுவோம்.மாற்றம் மட்டுமே நிரந்தரம்!

Monday 4 January 2016

முன்னுதாரணம்!

"அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்".(மாற் 6'42-43).

"நீங்களே உணவு கொடுங்கள்" என்று  இயேசு தம் சீடர்களை நோக்கிச் சொன்ன இந்த வார்த்தைகளை நாளை   சிந்திப்போம். “நீங்களே உணவு கொடுங்கள் ” என்று அவர்களிடம் சொன்னதன் மூலம் உணவு கொடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கிறார் இயேசு.


பாலைநிலத்தில் இறை வார்த்தைக்காக ஆவலோடு காத்திருந்த மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், அதற்கான பொறுப்பையும் தம் சீடர்களே ஏற்கவேண்டும் என்னும் இயேசுவின் சிந்தனை பாராட்டுக்குரியது.

இன்று உலகம் முழுவதும் உணவின்றி வாடும் மக்கள் தொகை ஏராளம். நமது நாட்டிலேகூட வறுமைக் கோட்டிற்குக் கீழ் மூன்று வேளை உணவின்றி வாடும் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் உள்ளனர். அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய பொறுப்பு அரசைச் சாரும் என்று நாம் சும்மா இருக்க முடியாது.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளையை ஏற்று, நாம் உணவுப் பகிர்வை நிகழ்த்த முன்வர வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒருவேளை உணவைத் துறக்க அனைவரும் முன்வந்தால், ஏராளமானவர்களுக்கு உணவு கிடைக்கும்.

உலகம் முழுவதும் சாப்பிடுகின்ற இறைச்சியின் அளவைக் குறைத்தால், சுற்றுச்சூழல் முன்னேறும். உணவுப் பகிர்வும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். நமது உணவைக் குறைப்பதன் மூலமும், உணவுப் பகிர்வின் மூலமும், ”நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ” என்னும் ஆண்டவர் இயேசுவின் கட்டளையை நாம் நிறைவேற்றலாம்.


பல சாதனைகளைப் படைப்பதற்கும் பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நம்மையும் நம்மைச் சுற்றிலும் உள்ள அறிவை விட நமக்குள் இருப்பவர்பற்றியும் அவரது ஆற்றல்பற்றியும் உள்ள அறிவும் நம்பிக்கையும் மிக அவசியம்.

சீடர்கள் முதல் பகுதியை அறிந்திருந்தனர். அதாவது, கூட்டம் மிகப் பெரிது, நேரம் நெடு நேரமாகிவிட்டது. அநேகமாக பொழுது சாயும் நேரம். இடமும் பாலைநிலம். சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று உணவு வாங்கி வருவதும் இப்போதைக்கு முடியாத காரியம்.

அப்படியே வாங்குவதாக இருந்தாலும் 200 தெனாரியம் ஆகும். தற்சமயம் கைவசம் ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. இந்த விவரங்களும் தெளிவும் இருந்தன.

ஆனால் இரண்டாம் பகுதியை அறியவில்லை. இயேசுவைப்பற்றிய விவரங்களும் தெளிவும் இன்னும் பெறவில்லை. அவர் கையாளும் வழி முறைகளை தெறிந்திருக்கவில்லை. இயேசு கையாண்ட வழி முறையைக் காண்போம். முதலில் கும்பலை குழுவாக்குகிறார். ஐம்பது நூறாக அமரச் செய்கிறார்.

 அமைதியாக அமர்ந்து நிதானமாக சிந்திக்கத் தூண்டுகிறார். அதன் பின், வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றியதன் மூலம், மக்களுள் புதைந்திருக்கும் கடவுள் உணர்வை தூண்டி துலக்குகிறார்.


சுயநலம் தவிர்த்து பிறர்நலம் பாராட்டும் பெரிய மனதை தட்டி எழுப்புகிறார். இறுதியாக, உங்களிடம் இருப்பதை முதலில் பரிமாருங்கள் என்று முன்னுதாரணம் காட்டுகிறார்.அவ்வளவுதான். இதை நாமும்  நம் வாழ்வில் முயற்சி செய்வோம்.

Sunday 3 January 2016

உள்ளார்ந்த மாற்றம்!

''இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'
எனப் பறைசாற்றத் தொடங்கினார்'' (மத்தேயு 4:17).


நாளை இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார்.

அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார்.


அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின் ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.

 மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின் பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால் மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும்.


சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும். மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி.

எனவே மனம் மாறும்போது நம்மில் உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு அருள்வார்.


ஹென்றி நூவென் எனும் ஆன்மீக  எழுத்தாளர் சொல்வார்,"நானும் எனக்குள் இருக்கும் கடவுளும் இணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் என்று எண்ண ஆரம்பியுங்கள்.எதுவுமே நம்மை வேதனைப்படுத்தாது.கடவுளை உணரும் கடினமான காரியத்தைத் தவிர்க்கும் எந்த மனிதரும் மேலோட்டமான, சுமையான வாழ்வைத்தான்  வாழ முடியும்"என்றார்.

ஆக,கடவுள் பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் உணர்ந்து வாழ்வோம்.

Saturday 2 January 2016

விண்மீனால் வாழ்வு!

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
அவரது விண்மீண் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2).

நாளை  திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர்.

அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது.

நாளைக்கு  திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள் மெசியாவை ஆராதிப்பதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் உள்ளம் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தபோது, வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தாலும், அந்த நேர்மையான எண்ணம், அவர்களைக் கடவுளின் மகனிடம் கொண்டு சேர்த்தது.

நமது எண்ணம் சிறந்து இருந்தால் சிறப்பு. நிச்சயம் நாம் செல்ல வேண்டிய எல்லையை அதுவே நமக்குக்காட்டும். நமது வாழ்வில் நாம் எப்போதும் நல்லவற்றை எண்ணுவோம். மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடாமல், நாமே நல்ல உதாரணமாக வாழ, முயற்சி எடுப்போம்.


இயற்கை இறைவனின் குரல். விண்மீன் சிலருக்கு வாழ்வைக் கொடுத்தது. சிலருக்கு அழிவைக் கொடுத்தது. சிலர் மகிழ்ந்தனர். வேறு சிலர் கலங்கினர். சிலர் அறிவு தெழிவு பெற்றனர். மற்றும் சிலர் குழப்பமடைந்தனர். இறைவனின் குரலைக் கேட்டோர் மகிழ்ந்தனர், தெழிவு பெற்றனர். அவர் குரலைக் கேளாதோர் கலக்கமும் குழப்பமும் அடைந்தனர்.

விண்மீன், சுனாமி, நில நடுக்கம் எல்லாம் இறைவன் பேசும் விதம். நோவா காலத்துப் பெரு வெள்ளம், "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டதன்"(தொ.நூ 6'5-6) விழைவு. சோதோம்,கொமோராவின் அழிவு "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது"( தொ.நூ 18'20) என்பதை உணர்த்தவில்லையா!

விண்மீனும், சுனாமியும், பெரு வெள்ளமும், கந்தகமும், நெருப்பும் தோன்ற வேண்டும். அதன் மூலமாகத்தான் கடவுள் பேச வேண்டும் என்று காத்திருப்பது அறிவீனம். வீட்டிலும் வீதியிலும் நடக்கும் சிறு நிகழ்ச்சியிலும் கடவுள் பேசுகிறார். இக்குரலைக் கேட்கும் இறை அமைதி நம்மிலும் நம்மைச் சுற்றலும் நிலவுமாயின் தவறைத் திருத்திக்கொள்வோம். குழப்பத்திற்கு அவசியம் இல்லை. மகிழ்ச்சி உங்களில் நிலவும். வாழ்த்துக்கள்.

Friday 1 January 2016

நாம் திருமுழுக்கு யோவான்!

நாளைய   நற்செய்தியில், திருமுழுக்கு யோவானிடம் இரண்டு தரப்பினர் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியை கேள்விகேட்கின்றனர். முதல் தரப்பு, குருக்களும், லேவியர்களும்.


திருமுழுக்கு யோவான் செக்கரியா என்கிற குருவின் மகன். குருத்துவம் என்பது குடும்ப வழியில் வருவது. அதிகாரவர்க்கத்தினரின் எண்ணப்படி, திருமுழுக்கு யோவான் ஒரு குரு. எனவே, அவருடைய நண்பர்கள், உறவுகள், திருமுழுக்கு யோவான் ஏன் இப்படி வேறுபாடான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்? என்று அவரிடத்தில் கேள்விகேட்க வருவது இயல்பு.


அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அதேவேளையில், பரிசேயர்களும், திருமுழுக்கு யோவானை விசாரிக்க வருகிறார்கள். அவர்களின் விசாரணைக்குப்பின், நிச்சயம் தலைமைச்சங்கம் இருப்பதை நாம் உணர முடிகிறது.


ஏனென்றால், பாலஸ்தீனத்தில் எந்த ஒருவர் இறைவனின் பெயரால் வார்த்தை அறிவித்தாலும், அவர் உண்மையான இறைவாக்கினரா? அல்லது போலியானவரா? என்பதை விசாரிக்கும் உரிமை தலைமைச்சங்கத்திற்கு இருந்தது. அதனை விசாரிப்பதற்காக, அவர்கள் பரிசேயர்களை அனுப்பி இருந்தார்கள்.

திருமுழுக்கு யோவான் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நற்செய்தி அறிவிப்பு ஒன்றையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். போதனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், போதிப்பவர் இப்படித்தான் போதிக்க வேண்டும் என்ற மரபை உடைத்தவர் அவர்.


பொதுவாக, மரபு என்ற பெயரில் நாம் சிறையில் அடைக்கப்படுகிறோம். அது நமக்குள்ளாக இருக்கக்கூடிய புதுமை எண்ணங்களையும், நம்மோடு அடைத்துவிடுகிறது. திருமுழுக்கு யோவானைப்போல, துணிவோடு, நமது நேர்மையான எண்ணத்தை வெளிப்படுத்துவோம்.

திருமுழுக்கு யோவானின் தன் உணர்வு (Self Awareness) மற்றும் தன்வெளிப்பாடு (Self Disclosure) இரண்டையும் நாளைய  நற்செய்தி வாசகம் நன்கு எடுத்துக்காட்டுகிறது. தாம் மெசியா அல்லர், மெசியாவின் முன்னோடி என்ற தன் உணர்வை யோவான் கொண்டிருந்தார்.

எனவே, அவர் தாழ்ச்சி உள்ளவராக, பெரிய எதிர்பார்ப்புகள் அற்றவராக, எளிமையாக வாழ முடிந்தது. அதைவிட முக்கியமாக, தாம் மெசியா அல்லர், அவரது முன்னோடியே என்பதைப் பிறரிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், அறிக்கையிடவும் அவரால் முடிந்தது. மானிடரில் பெரும்பாலானோர் தமது உண்மையான தன்மையை  மறைத்து, தாம் இல்லாத வேறொரு ஆளாக முகமூடி அணிந்துகொண்டு வாழ்கின்றனர் எனச் சொல்கின்றனர் உளவியலாளர்.

பிறரது பாராட்டை, அங்கீகரிப்பை; பெற வேண்டும் எனத் துடிப்போர்தாம் இத்தகைய முகமூடிகளை அணிந்துகொண்டு, நாடகம் ஆடுகின்றனர். யோவானுக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. ஒரு முன்னோடியாக, மிதியடி வாரை அவிழப்பவராக இருப்பதில் அவர் நிறைவு கொண்டார். இறையருளில் மகிழ்ந்தார்.


ஆக,பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம் ஒவவொருவரும் ஒரு திருமுழுக்கு யோவான்.


நாம் எப்படி? பிறரின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக பொய்யான வேடங்கள் புனைந்து, முகமூடிகள் அணிந்து வாழ்கிறோமா? அல்லது நமது நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோமா?

இனிய  புத்தாண்டு  வாழ்த்துக்கள்!!!