Wednesday 6 January 2016

குழந்தைகள் வளர்ப்பு!

“இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார்” என்று குறிப்பிடும் நற்செய்தியாளர், முத்தாய்ப்பாகத் தரும் செய்திதான் “எல்லாரும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்”.

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும் ” என்று பாடினான் ஒரு திரையிசைக் கவிஞன். இயேசுவுக்கு அந்தப் பேரும், புகழும் கிடைத்தன. என்ன காரணத்தால்?

அதற்கான காரணத்தை நற்செய்தியாளர் நாளை முதல் வாக்கியத்திலேயே சொல்லிவிடுகிறார். “இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்”. ஆம், இதுதான் அந்தப் பெருமைக்குக் காரணம். இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் இருந்தார்.

அவரது சொற்களில் ஆற்றலும், வலிமையும் இருந்தன. தூய ஆவியால் நிரம்பியவராய் இருந்ததால், அவரது செயல்பாடுகள் வரங்களும், கொடைகளும், கனிகளும் நிறைந்தனவாக இருந்தன. எனவேதான், வியத்தகு செயல்களை அவர் செய்தார்.

மக்கள் எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள். நமது வாழ்விலும் தூய ஆவியானவரை நிறைவாகச் செயல்பட அழைப்போம், அனுமதிப்போம். அப்போது நாமும் பெருமைமிகு செயல்களைச் செய்யலாம்.

மேலும்,  பிள்ளை வளர்ப்புக்கு அருமையான எடுத்துக்காட்டாக இப்பகுதியைச் சொல்லலாம். பெற்றோருக்குப் பணிந்திருப்பது, தொழுகைக்கூடம் சென்று கற்றுக்கொள்வது, விவிலியம் வாசிப்பது,செபிப்பது,பலரும் பாராட்ட வாழ்வது, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வாழ்வது,இக்கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொல்லுகிறது இந்த பகுதி;.

கலிலேயாவில் உள்ள நசரேத்துக்குச் சென்று தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்திருக்கின்றார். தினமும் தொழுகைக்கூடம் சென்று விவிலியம் வாசித்து கற்றுக்கொண்டு இறை அருளிலும் வளர்ந்தார். இயேசுவின் பெற்றோர்கள் அவரை இவ்வாறு வளர்த்து ஆளாக்கினர்.

இயேசு இளம் வயதில் இப்பண்புகளில் வளர்ந்து தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளர். அவரது அறிவாற்றல், அருள்வாக்கு,அமைந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்ததால், வைத்த கண் வாங்காமல் இயேசுவையே பார்த்த வண்ணமாய் இருந்துள்ளனர். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" என்று பாராட்டியுள்ளனர்.

இன்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்கைகளை இவ்வாறு வளர்க்க வேண்டும். உலகக் கல்வி கொடுத்தால் மட்டும் போதாது. இறை அறிவையும் அனுபவத்தையம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள்  உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உலகம் உங்களைப் பாராட்டும்.

No comments:

Post a Comment