Wednesday 20 January 2016

அவரைத் தொடவேண்டுமென்று .......!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது.

நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் நாளை இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது.

தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். 'அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர்.

 "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம்.

கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம்.


இயேசு புகழுக்காக வாழவில்லை, மக்கள் போற்ற வேண்டும் என விரும்பவில்லை. மாறாக, கடவுளின் அன்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என விரும்பினார். நாமும் நம் வாழ்வின் மூலம் கடவுளின் அன்பை மற்றவர்கள் உணரச்செய்வோம்.

புகழும், பாராட்டும் நம்மை தொட்டுவிடாதவாறு , நாம் விழிப்பாயிருக்க வேண்டும் .

இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம்.


No comments:

Post a Comment