Sunday 10 January 2016

புறப்படுவோம் இலக்கை நோக்கி!

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது.

கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது.

இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும்.

எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள், படிக்காதவர்கள், சாதாரணமானவர்கள் எப்படி, இறையாட்சியைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க முடியும்? அது எப்படி சாத்தியமாகும்?

இங்கு தான் கடவுளின் அருட்கொடை வெளிப்படுகிறது. நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், அந்த தகுதியைக் கொடுக்கிறவர் கடவுளாக இருக்கிறார். நல்ல மனது இருந்தால் போதும். அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நாம் பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அதனுடைய பொருள் இதுதான். நமது மனது நன்றாக இருந்தாலே, நிச்சயம், கடவுளின் அருள் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

பலவேளைகளில் கடவுளின் பணியைச் செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களா? கடவுளின் பிரசன்னத்தை நம்மால் உணர முடியுமா? என்ற சந்தேகங்கள், உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு எழலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கடவுளின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டாலும், அந்த வல்லமைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சீடர்கள் என்பவர்கள் அழைக்கப்பட்டவர்கள். அழைப்பவர் ஆழுமை நிறைந்தவர். அழைப்பு மறுக்கமுடியாதது. அழைக்கப்படுபவர் அந்தஸ்து அவசியமில்லை. அழைக்கப்படுபவர் முற்றிலும் புதிய, உயரிய ஒரு பணிக்காக அழைக்கப்படுகிறார்.

அழைப்பின் இலக்கு அழைக்கப்படுவோர் அனைவருக்கும் பொதுவானது. மனிதர்களைப் பிடிப்பது. மனிதனை முழு மனிதவாழ்வுக்கு அழைத்துச் செல்வது. அழைக்கப்படுவோர் யாராகவும் இருக்கலாம், என் நிலையிலும் இருக்கலாம்.

முதியவராக இருக்கலாம் இளைஞனாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். யோவான்போல கூலியாட்கள்வைத்து வேலை செய்யும் உயர்நிலையிலும் இருக்கலாம்.ஆயராக இருக்கலாம். அடித்தள விசுவாசியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் பணியின் இலக்கு ஒன்றே.

எனவே, நீங்களும் இயேசுவின் உன்னத மனிதர்களைப் பிடித்து முழு மனிதனாக்கும் உயர் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் நிலையும் இயேசுவின் தனிப்பட்ட அழைப்பு.

இந்த அழைப்பை நீங்கள் தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டியது உங்கள் கடமை. அதை சிறப்புடன் செய்யும்போது இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.

இப்பொழுதே புறப்படுவோம் நமது இலக்கை நோக்கி!!!

No comments:

Post a Comment