Friday 15 January 2016

நல் மருத்துவர்!

இயேசு தம் சீடரை அழைத்த வரலாறு பல விதங்களில் கூறப்பட்டுள்ளது. கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோன் போன்றோரை இயேசு அழைத்தார். அவர்கள் தம் வலைகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

லேவி என்பவர் வரிதண்டும் தொழிலைச் செய்தவர். அவர் வழக்கம்போல சுங்கச் சாவடியில் அமர்ந்து தம் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயேசு அவரை அழைத்தார். லேவியும் ''எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற் 2:14).


வரிதண்டும் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. மக்களிடமிருந்து உரோமைப் பேரரசு வரியாகப் பணம் பெற்றது; வேறு பல வரிகளும் மக்களுக்குச் சுமையாயின. வரிதண்டுவோர் தமக்கென்றும் ஒரு பகுதியை அநியாயமாகப் பிரித்தனர். எனவே பொது மக்கள் வரிதண்டுவோரை வெறுத்ததில் வியப்பில்லை. இத்தகைய ஒரு மனிதரையே இயேசு அழைத்தார்.

 நம் வாழ்க்கையில் கடவுளின் அழைப்பு எப்போது எவ்வாறு வரும் என நாம் முன்கூட்டியே அறிய இயலாது. ஆனால் கடவுளின் குரல் நம் உள்ளத்தின் ஆழத்தில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாம்தாம் சில வேளைகளில் அக்குரலைக் கேட்க மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம்.

நம் உள்ளத்தைத் திறந்து வைத்துக் கடவுளுக்கு அங்கே இல்லிடம் அமைத்துக் கொடுத்தால் அவருடைய குரலை நாம் எளிதில் கேட்கலாம். அக்குரல் நம்மிடம் கோருவதை நாம் மனமுவந்து செய்வோம்.

இயேசுவைப் பின்பற்றிச் செல்வதற்கு வருகின்ற அழைப்பு முதல் படி என்றால் அந்த அழைப்புக்கு நாம் தருகின்ற பதில் மொழி இரண்டாம் படி எனலாம். அவ்வாறு மனமுவந்து நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்லும்போது நம் வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக அமையும். நம் உள்ளத்தில் கடவுள் தரும் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.


"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை."இந்த ஒரு முத்தான வசனம் இயேசுவிடமிருந்து வருவது ஆச்சரியமில்லை. ஆனால் மத்தேயுவின் வீட்டிலிருந்தபோது வந்தது இன்னும் ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. மத்தேயு படித்தவர்.

பெரிய பதவியில் சுங்க இலாக்காவில் இருந்தவர். கை நிறையவும் பை நிறையவும் பணம் படைத்தவர். அவரது வீட்டில் விருந்தில் இந்த முத்தான வார்த்தையை சொல்லும்போது, மத்தேயுவும் இதில் தொடர்புடையவர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

செல்வம், பதவி இருந்தும் மத்தேயு ஒரு நோயாளியாக இருந்தார் என்று உணர முடிகிறது. இயேசுவின் சந்திப்பின் மூலமும் விருந்தின் மூலமும் மத்தேயு ஒரு நோயாளி என்பதையும் இயேசுவே அவருக்கு சிறந்த மருத்துவர் என்றும் இயேசுவே சிறந்த மருந்து என்றும் உணர்த்துகிறார்.

பணம் பதவிகளோடு வாழும் நாம் பல நேரங்களில் நமக்கு இருக்கும் நோயை நாம் அறிவதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் பதவியில் இருப்பவர்கள் இயேசுவோடு தொடர்பு இல்லாததால் தானும் நோயுற்று தன் குடும்பத்தையும் அழிப்பதை காண்கிறோம்.

 இயேசுவின் முன் நம்மை நிறுத்துவோம். அவருக்கு நம் வீட்டில் விருந்து கொடுப்போம். அப்போது நம் நோயை அறிவோம்.இயேசு நல் மருத்துவர் என்பதை உணர்வோம். நோயற்று குறையறற செல்வத்தோடு வாழ்வோம்.


No comments:

Post a Comment