Tuesday 26 January 2016

வாழ்வை வாழ்வோம்!

வாழ்வு என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த வாழ்வை நாம் வாழ ஆரம்பிக்கின்றபோது நெருக்கடிகள், இன்னல்கள், சோதனைகள், இடர்பாடுகள் வருவது இயல்பு.

இவை அனைத்தும் இருந்தாலும், துணிவோடு முன்னேறிச்சென்று வாழ்வில் வெற்றி வாகை சூடுவதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது.

நமது வாழ்க்கையே சோகமயமாவதற்கு முக்கியக்காரணம், துன்பமே இல்லாத வாழ்வை வாழ நாம் ஆசைப்படுகிறோம். எனவேதான், சிறிய கஷ்டம் வந்தாலும், நம்முடைய வாழ்வே முடிந்துவிட்டது போன்று நாம் வேதனைப்படுகிறோம். துவண்டுவிடுகிறோம்.

 ஆனால், துன்பம் வாழ்வின் அங்கம் என்பதை உணர்ந்து வாழ்கிறவர்களின் வாழ்வு நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்க முடியும். அதற்காக கடவுள்தான் துன்பத்தைத்தருகிறார் என நாம் நினைத்துவிடக்கூடாது. காரணம் கடவுள் நமக்கு துன்பத்தைத்தருவதற்காக இந்த உலகத்தை படைக்கவில்லை.

நாம் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். யாக்கோபு 1: 13 சொல்கிறது: “சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை”.

வாழ்வில் சோதனைகள் வரும்போது அவற்றை மனவுறுதியுடன் தாங்க வேண்டும். அதற்கான வல்லமையைக் கடவுளிடம் கேட்டால், அவர் நிச்சயம் தருவார்.

அனைத்துத்தடைகளையும் தாண்டி, நாளை நற்செய்திக்கு ஏற்றவாறு  முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காக பலன் தருகின்றபோது, கடவுள் நமக்கு வாழ்வைத்தந்ததற்காக மகிழ்ச்சியடைவார். அப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ்வோம்.

No comments:

Post a Comment