Friday 26 May 2017

புனித ஃபிலிப் நேரி ✠ (St. Philip Neri)

 புனித ஃபிலிப் நேரி ✠
(St. Philip Neri)

பாவமன்னிப்பு அளிப்பவர்நிறுவனர் :
(Confessor and Founder)


பிறப்பு : ஜூலை 22, 1515
ஃப்ளோரன்ஸ் (Florence)


இறப்பு : மே 25, 1595 (அகவை 79)
ரோம்திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : மே 11, 1615
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)


புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை 15ம் கிரகோரி
(Pope Gregory XV)


நினைவுத் திருநாள் : மே 26


சித்தரிக்கப்படும் வகை :
லீலி மலர்குருத்துவ உடைபற்றியெரியும் இருதயம்


பாதுகாவல் :
ரோம்ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தனிப்படைகள்மகிழ்ச்சிசிரிப்பு


புனிதர் ஃபிலிப் நேரிகத்தோலிக்க திருச்சபையின் குருவும்புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் (Saints Peter and Paul) ஆகியோருக்குப் பிறகு "ரோம் நகரின் மூன்றாம் திருத்தூதர்" (Third Apostle of Rome) என்னும் சிறப்புப் பெயர் கொண்டவரும்மறைமாவட்ட குருக்களுக்கான "இறைவேண்டல் சபை" (Congregation of the Oratory) என்றொரு அமைப்பை நிறுவியவரும் ஆவார்.


இளமைப் பருவம் :
ஃபிலிப் நேரிஇத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் 1515, ஜூலை 22ம் நாள் பிறந்தார். வழக்குரைஞரான ஃபிரான்செஸ்கோ நேரி” (Francesco di Neri)என்பவருக்கும் அவருடைய மனைவி லூக்ரேசியா தா மோஷியானோ” (Lucrezia da Mosciano) என்பவருக்கும் கடைசிக் குழந்தையாக அவர் பிறந்தார். அவருடைய பெற்றோர் அரசுப் பணி சேர்ந்த மேல்குடி மக்கள்.


சிறு பருவத்தில் ஃபிலிப் நேரி ஃப்ளாரன்ஸ் நகரில் சான் மார்கோ” (San Marco)என்ற இடத்திலுள்ள புகழ் பெற்ற டோமினிக்கன் துறவு மடத்தில்” (Dominican monastery) கல்வி பயின்றார். அவருக்குப் பதினெட்டு வயது ஆனபோது அவருடைய பெற்றோர் ஃபிலிப்பின் மாமனாகிய ரோமோலோ (Romolo)என்பவரிடம் அனுப்பினார்கள். ரோமோலோ நேப்பிள்ஸ் நகருக்கு அருகே சான் ஜெர்மானோ” (San Germano) என்னும் நகரில் பெரிய வணிகராக இருந்தார். ஃபிலிப் தம் மாமனாரிடமிருந்து வணிகக் கலையைக் கற்றுத் தேர்ச்சிபெற்று,அவருடைய சொத்துக்கு உரிமையாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ரோமுலோவின் அன்பும் மதிப்பும் பிலிப்புக்கு கிடைத்தாலும்அவருக்கு இவ்வுலக சொத்துக்களில் ஆர்வம் இருக்கவில்லை. எனவே அவர் தனது 26ம் வயதில் வணிகத் தொழிலை விட்டுவிட்டுதமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் 1533ம் ஆண்டு ரோம் நகருக்குச் சென்றார்.


ரோமில் ஆற்றிய பணி :
ரோம் நகருக்கு வந்த ஃபிலிப் நேரிமுதலில் உயர்குடியைச் சேர்ந்த கலேயோட்டோ காச்சியா (Galeotto Caccia) என்பவரின் வீட்டில் தனிப்பயிற்சி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மூன்றாண்டு காலமாக அவர் அகுஸ்தீன் (Augustinians) சபைத் துறவியரின் கீழ் கல்வி பயின்றார்.


அதன்பின்அவர் ரோம் நகரில் ஏழைமக்கள் மற்றும் நோயுற்றோர் நடுவே பணிபுரிந்தார். அதன் காரணமாக மக்கள் அவரை "ரோம் நகரின் திருத்தூதர்" (Apostle of Rome) என்று அழைக்கலாயினர். அதே சமயம் அவர் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பாலியல் தொழிலாளரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடையேயும் பணிபுரிந்தார்.


1538ம் ஆண்டிலிருந்து ஃபிலிப் நேரி ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றுமக்களை நேரடியாக சந்தித்துஉரையாடிஅவர்களைக் கடவுள் பற்றியும் ஒழுக்க நெறி பற்றியும் சிந்திக்கத் தூண்டினார்.


மூவொரு கடவுள் குழு உருவாக்கம் :
1548ம் ஆண்டுஃபிலிப் நேரி பெர்ஸியானோ ரோஸ்ஸா” (Persiano Rossa) என்னும் குருவோடு இணைந்து "திருப்பயணிகள் மற்றும் நோயுற்று குணமானோருக்கான மகா பரிசுத்த திரித்துவத்தின் குழு" (Confraternity of the Most Holy Trinity of Pilgrims and Convalescents) என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். அக்குழுவின் நோக்கங்கள் இவை: ரோம் நகருக்குத் திருப்பயணமாக வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பணிபுரிவதுமருத்துவ மனைகளிலிருந்து வெளியேறியும் வேலை செய்யத் திறனற்ற நிலையிலிருந்தோரின் துயரம் போக்குதல்.


அக்குழுவைச் சார்ந்தவர்கள் ரோமில் சான் சால்வட்டோர் இன் காம்போ” (Church of San Salvatore in Campo) என்னும் கோவிலில் கூடி இறைவேண்டல் செய்தனர்; 40 மணி நற்கருணை ஆராதனை செய்தனர். இந்த பக்தி முயற்சியை முதன்முதலாக ரோமில் அறிமுகம் செய்தவர் ஃபிலிப் நேரி தான்.


இறைவேண்டல் சபை உருவாக்குதல் :
ஃபிலிப் நேரி 1551ம் ஆண்டு மே 23ம் நாள் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.அதற்குமுன் அவர் கீழ்நிலைப் பட்டங்களையும் திருத்தொண்டர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.


குருவாகத் அருட்பொழிவு பெற்ற ஃபிலிப் நேரிக்கு இந்தியா சென்று அங்கு கிறிஸ்தவ மறையை அறிவிக்க வேண்டும் என்னும் பேரவா இருந்தது. ஆனால் அவருடைய நண்பர்கள் அவரிடம்கிறிஸ்தவத்தை அறிவிக்க இந்தியா போக வேண்டிய தேவையில்லைரோம் நகரிலேயே அவருக்கு போதுமான வேலை இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்துஅவர் ரோமிலேயே தமது பணியைத் தொடர்ந்தார்.


1556ம் ஆண்டு ஃபிலிப் நேரி ஒருசில பணித் தோழர்களோடு புனித ஜெரோம் கோவிலில் ஒரு சிறு குழுவைத் தொடங்கினார். அதுவே பின்னர் "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் பெயர் கொண்ட சபையாக மலர்ந்தது. தொடக்கத்தில் குழுவினர் மாலை வேளைகளில் கூடிவந்துஇறைவேண்டல் செய்வதிலும்திருப்பாக்கள் பாடுவதிலும்,விவிலியம்திருச்சபைத் தந்தையர்களின் நூல்கள் மற்றும் மறைச்சாட்சியர் வரலாறு ஆகிய ஏடுகளிலிருந்து வாசிப்பதிலும் ஈடுபட்டனர். பின்னர் மறை சார்ந்த உரை நிகழ்த்தப்படும். தொடர்ந்து மறை சார்ந்த பொருள்கள் விவாதிக்கப்படும்.


இறைவேண்டல் குழுவினர் கூடியபோது விவிலியம் விளக்குகின்ற மீட்பு வரலாற்றிலிருந்து சில காட்சிகள் இசையாக வழங்கப்பட்டன. இதிலிருந்தே "Oratorio" என்னும் இசைப் பாணி தோன்றியது. அக்குழுவினர் ரோம் நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாலை வேளையிலும் மறையுரை ஆற்றினர். இது முற்றிலும் புதியதொரு முயற்சியாக அமைந்தது.


ஃபிலிப் நேரி பல கோவில்களில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். இவ்வாறுபல மக்களைக் கடவுள்பால் ஈர்த்துஅவர்களை மறை நம்பிக்கையில் வளரச் செய்தார்.


பணி விரிவாக்கம் :
ரோமில் குடியேறியிருந்த ஃப்ளோரன்ஸ் நகர் மக்கள் 1564ல்தம் மண்ணின் மைந்தரான ஃபிலிப் நேரி புதிதாகக் கட்டப்பட்ட தங்கள் கோவிலாகிய "ஃப்ளோரன்ஸ் நகரத்தாரின் புனித யோவான்" (San Giovanni dei Fiorentini) ஆலயம் வந்து பணிபுரிய வேண்டும் என்று விரும்பி வேண்டினர். நேரி அவ்வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனால்திருத்தந்தை நான்காம் பயசின் இசைவோடு அப்பணியை ஏற்றார். ஆயினும் தொடக்கத்தில் இருந்த புனித ஜெரோம் கோவிலில்தான் அவருடைய சபை இருந்தது.


1574ல் ஃப்ளோரன்சு மக்கள் தம் கோவிலை அடுத்து ஒரு பெரும் நீளறை (Oratory) கட்டியெழுப்பிஅதை ஃபிலிப் நேரியின் சபையின் பயன்பாட்டுக்கு அளித்தார்கள். எனவே சபையின் தலைமையிடம் அங்கு மாற்றப்பட்டது. சபை வளர்ந்துஅதன் பணிகளும் விரிவடைந்தன. எனவே புதியதொரு கோவில் தேவைப்பட்டது. சாந்தா மரியா இன் வால்லிச்செல்லா என்னும் ஒரு சிறு கோவில் ஃபிலிப் நேரிக்கு அளிக்கப்பட்டது. அக்கோவில் ரோம் நகரின் மையத்தில் அமைந்தது.


ஆயினும் அக்கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் பெரிய அளவில் ஒரு புதுக்கோவில் அவ்விடத்தில் கட்டப்பட்டது. அக்கோவிலின் பொறுப்பை ஏற்றதும் 1575ம் ஆண்டுஜூலை 15ம் நாள் திருத்தந்தை கொடுத்த ஆணையேட்டின்படிஃபிலிப் நேரி "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் சபையை அதிகாரப்பூர்வமாக அமைத்தார். அதன் உறுப்பினர் மறைமாவட்ட குருக்கள் ஆவர்.


புதிய கோவில் 1557ல் அர்ச்சிக்கப்பட்டது. இறைவேண்டல் குழுக் குருக்கள் ஃப்ளோரன்ஸ் கோவிலின் பொறுப்பைத் துறந்தனர். ஃபிலிப் நேரி 1583வரையிலும் புனித ஜெரோம் கோவிலிலேயே இருந்தார். சபைத் தலைவரான அவர் சபையின் தலைமையிடத்தில் தங்கி இருப்பதே முறை என்று திருத்தந்தை ஆணை பிறப்பித்த பின்னரே ஃபிலிப் நேரி புதிய தலைமையிடம் சென்று தங்கினார். முதலில் அவர் மூன்று ஆண்டு பணிப்பொறுப்பு ஏற்றார். பின்னர் சபையினர் 1587ல் அவரை வாழ்நாள் முழுதும் தலைவராக இருக்கக் கேட்டுக்கொண்டனர்.


ஆனால் ஃபிலிப் நேரி சபை முழுவதற்கும் தாமே தலைவராக இருக்கவேண்டும் என்று கருதவில்லை. எனவேரோமுக்கு வெளியே நிறுவப்பட்ட சபை இல்லங்கள் தன்னாட்சி கொண்டு செயல்படும் என்று அறிவித்தார். அந்த இல்லங்கள் வேறு இல்லங்களை நிறுவினால் அவையும் தனித்து செயல்படும் என்று வழிவகுத்தார். இந்த முறை திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால்1622ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அரசியல் செயல்பாடு :
ஃபிலிப் நேரி தம் காலத்தில் வழக்கமாக அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை. ஒருமுறை மட்டும் அவர் அரசியலில் தலையிட்டார். 1593ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டு மன்னன் நான்காம் ஹென்றி (Henry IV of France ) கத்தோலிக்க சமயத்தைக் கைவிட்டு கால்வின் (Calvinism) சபையை ஆதரிக்கத் தொடங்கினார். எனவே திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் (Pope Clement VIII) மன்னனை சபைநீக்கம் செய்தார். மன்னனின் தூதுவரை ஏற்க மறுத்தார். மன்னன் தான் தவறுசெய்ததை ஏற்றுக்கொண்ட பிறகும் திருத்தந்தை தண்டனையை அகற்ற முன்வரவில்லை. திருத்தந்தை பிடிவாதமாக இருந்தால் மன்னன் மீண்டும் கத்தோலிக்க சபையை விட்டு அகன்றுபோகும் இடர் இருந்ததை ஃபிலிப் நேரி உணர்ந்தார். அதோடு ஃபிரான்ஸ் நாட்டில் உள்நாட்டுப் போர் எழும் ஆபத்தும் இருந்தது.


உடனேஃபிலிப் நேரி தம் குழுவைச் சார்ந்தவரும் திருத்தந்தைக்கு ஆன்ம ஆலோசகராகவும் இருந்த பரோனியுஸ் என்பவரை அழைத்துதிருத்தந்தை மன்னனுக்கு எதிரான தண்டனையை விலக்கிக் கொள்ளாவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்க வேண்டாம் என்றும்ஆன்ம ஆலோசகர் பதவியைத் துறந்துவிட வேண்டும் என்றும் பணித்தார். உடனடியாக திருத்தந்தை,கர்தினால்மார்களின் ஆலோசனைக் குழுவுக்கும் எதிராகச் சென்றுபிலிப்பு நேரியின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.


இவ்வாறு தமக்கு சார்பாக ஃபிலிப் நேரி துணிச்சலோடு செயல்பட்டதை மன்னன் ஹென்றி பல ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தார். சாதுரியமாகச் செயல்பட்ட ஃபிலிப் நேரிக்கு மன்னன் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.


தாம் உருவாக்கிய இறைவேண்டல் குழுவின் தலைமைப் பதவியை ஃபிலிப் நேரி தாம் இறக்கும்வரை வகித்தார். அவருக்குப் பின் பரோனியுஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.


இறப்பும் வணக்கமும் :
ஃபிலிப் நேரி 1595ம் ஆண்டு மே மாதம் 25ம் நாள் தம் எண்பதாவது வயதில் இறந்தார். அன்று நற்கருணைத் திருநாள் (Feast of Corpus Christi). நாள் முழுதும் அவர் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். தம்மைக் காணவந்தவர்களைப் பார்த்து உரையாடினார். ஏறக்குறைய நள்ளிரவில் ஃபிலிப் நேரிக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டது. பரோனியஸ் (Baronius) இறுதி மன்றாட்டுகளை செபித்தார். தம் குழு உறுப்பினரை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பரோனியஸ் கேட்டார். பேசும் திறனை இழந்துவிட்ட ஃபிலிப் நேரி கை சைகையால் சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர் வழங்கினார். அவரது உயிர் பிரிந்தது.

Thursday 25 May 2017

✠ வணக்கத்திற்குரிய புனிதர் பீட் ✠ (St. Bede the Venerable)

✠ வணக்கத்திற்குரிய புனிதர் பீட் ✠
(St. Bede the Venerable)


திருச்சபையின் மறைவல்லுநர், துறவி, வரலாற்றாசிரியர் :
(Doctor of the Church, Monk, Historian)


பிறப்பு : 673
மோன்க்டான் (Monkton)


இறப்பு : மே 26, 735
ஜாரோ, வட உம்ப்ரியா அரசு
(Jarrow, Kingdom of North Umbria)


ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்க ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)


புனிதர் பட்டம் : 1899ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார்.


முக்கிய திருத்தலங்கள் :
டர்ஹம் பேராலயம், இங்கிலாந்து
(Durham Cathedral, England)


நினைவுத் திருநாள் :
மே 25 (மேற்கத்திய திருச்சபைகள்)
மே 27 (மரபு வழி திருச்சபை)


பாதுகாவல் :
ஆங்கில எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இங்கிலாந்து


வணக்கத்திற்குரிய புனிதர் பீட், வடக்கு ஊம்ப்ரியா அரசிலுள்ள புனித பீட்டர் துறவு மடம் மற்றும் அதன் துணை துறவு மடமான புனித பவுல் துறவு மடம் ஆகியவற்றின் ஆங்கிலேயத் துறவியும் (Monastery of St. Peter and its companion Monastery of St. Paul in the Kingdom of Northumbria), அறிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவருடைய "ஆங்கிலேய மக்களின் திருச்சபை வரலாறு" (Ecclesiastical History of the English People) என்னும் படைப்பு இவருக்கு "ஆங்கிலேய வரலாற்றின் தந்தை" (The Father of English History) என்னும் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.


1899ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் (Anglo - Saxons) மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.


இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர். இவருக்கு 7 வயது நடக்கும்போது 'வடக்கு ஊம்ப்ரியாவில்' (North Umbria) இருந்த துறவற மடத்தில், "பெனடிக்ட் பிஸ்காப்" (Benedict Biscop) என்பவரின் கண்காணிப்பில் பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுத் தேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம்.


சுமார் 692ல் தமது பத்தொன்பது வயதில் "ஹெக்ஸாம்" ஆயரான (Bishop of Hexham) "ஜான்" என்பவரால் இவர் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். சுமார் 702ல் தமது முப்பதாவது வயதில் அதே ஆயரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.


இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும்.


அவரது இறுதி நாளன்று, (இயேசுவின் விண்ணேற்ற விழா நாள்) அவரது மாணவர்களில் ஒருவராகிய 'வில்பெர்ட்' (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பீடை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதிக் கொண்டிருந்தோம்; அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பீட், "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பீட், இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். பின்னர், "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே பீட் உயிர் நீத்தார்.

Wednesday 24 May 2017

✠ புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி ✠ (St. Mary Magdalene de' Pazzi)

✠ புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)


கன்னியர் :
(Virgin)


பிறப்பு : ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)


இறப்பு : மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)


அருளாளர் பட்டம் : 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)


புனிதர் பட்டம் : ஏப்ரல் 28, 1669
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)


முக்கிய திருத்தலம் :

புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி’யின் துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)


நினைவுத் திருவிழா : மே 24


பாதுகாவல் :
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)


புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.


“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலேன் தே பஸ்ஸி, ஏப்ரல் 2, 1566ல் ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

1580ல் பஸ்ஸி “மால்டா சபையினர்’ (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கர்மேல் சபையை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். 1583ல் புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலேன்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI)) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

1607ல், தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.


புனிதர் பட்டமளிப்பு :
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் ஆட்சியில் 1626ல் வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால், ஏப்ரல் 28, 1669 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.


நினைவுத் திருவிழா நாள் :
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, 25 மே எனக் குறிக்கப்பட்டது. ஆனால் 1725ல் அந்நாள் புனித திருத்தந்தை எட்டாம் கிரகோரிக்கு ஒதுக்கப்பட்டதால் மே 29க்கு நகர்த்தப்பட்டது. 1969ல் நடந்த மாற்றத்தில் மீண்டும் மே 24க்கு நகர்த்தப்பட்டது.

Tuesday 23 May 2017

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠ (St. Gregory VII)

✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)


திருத்தந்தை :
(Pope)


பிறப்பு : c. 1015
சொவானா, டுஸ்கனி, தூய ரோமப் பேரரசு
(Sovana, Tuscany, Holy Roman Empire)


இறப்பு : 25 மே 1085
சலேர்னோ, அபுலியா
(Salerno, Duchy of Apulia)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


நினைவுத் திருவிழா : மே 23


முக்திப்பேறு பட்டம் : 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)


புனிதர் பட்டம் : மே 24, 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)


"சொவானா நகரின் ஹில்டப்ராண்ட்" (Hildebrand of Sovana) எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஏழாம் கிரகோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 ஏப்ரல் 1073 முதல் 1085ல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார்.


கத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தூய ரோமப் பேரரசர் நான்காம் ஹென்றி (Holy Roman Emperor Henry IV) மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றி'யை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து இருமுறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்ட்'டை, ஹென்றி எதிர்-திருத்தந்தையாக நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.


திருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.


திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி 1584ல் முக்திப்பேறு பட்டமும், 1728ல் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் புனிதர் பட்டமும் அளித்தனர்.

Monday 22 May 2017

✠ புனிதர் ரீட்டா ✠ (St. Rita of Cascia)

✠ புனிதர் ரீட்டா ✠
(St. Rita of Cascia)


தாய், விதவை, அருள் வடுவுற்றவர், அர்ப்பணிக்கப்பட்ட மறைப் பணியாளர் :
(Mother, Widow, Stigmatist, Consecrated Religious)


பிறப்பு : 1381
ரொக்கபொரேனா, பெருஜியா, உம்ப்ரியா, இத்தாலி
(Roccaporena, Perugia, Umbria, Italy)


இறப்பு : மே 22, 1457
கேஸியா, பெருஜியா, உம்பிரியா, இத்தாலி
(Cascia, Perugia, Umbria, Italy)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அக்லிபாயன் திருச்சபை (1902ல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தது)
(The Aglipayan Church - Separated from the Roman Catholic Church in 1902)


அருளாளர் பட்டம் : 1626
திருத்தந்தை எட்டாம் ஊர்பான்
(Pope Urban VIII)


புனிதர் பட்டம் : மே 24, 1900
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ


முக்கிய திருத்தலங்கள் :
கேஸியா, இத்தாலி
(Cascia, Italy)


நினைவுத் திருநாள் : மே 22


சித்தரிக்கப்படும் வகை :
நெற்றியில் காயம், ரோஜா, தேனீக்கள்,
திராட்சைக் கொடி


பாதுகாவல் :
தொலைந்த மற்றும் இயலாத காரணங்கள், நோய்கள், காயங்கள், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், அதிகாரம், உரிமை, முதலியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல், தாய்மார்கள்


புனிதர் ரீட்டா, இத்தாலிய நாட்டின் விதவைப் பெண்ணும், அகஸ்தீனிய சபையின் (Augustinian nun) பெண் துறவியும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். திருமணமான இவர், இவரது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், தமது கணவனை தவறான பாதையிலிருந்து மீட்க முயற்சி செய்ததிலேயே முடிவடைந்தது.


வாழ்க்கைக் குறிப்பு :
ரீட்டா இத்தாலி நாட்டிலுள்ள கேஸியா நகருக்கு அருகிலுள்ள ரொக்கபொரேனா கிராமத்தில் கி.பி. 1381ல் பிறந்தார். அவரது பெற்றோர் "ஆண்டனியோ", "அமடா ஃபெர்ரி லோட்டி" (Antonio and Amata Ferri Lotti) ஆவர்.


இவர், கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்ப்ரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள்.


ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக் கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்க வேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா.

தன் பெற்றோரின் விருப்பப்படி "பவோலோ மன்சினி" (Paolo Mancini) என்பவரை தமது சிறு வயதிலேயே மணந்தார். செல்வம் படைத்த இவரது கணவர் எளிதில் சினமடையக் கூடிய, ஒழுக்கக்கேடான மனிதராக இருந்தார். இவருக்கு கேஸியா பிராந்தியத்தில் அநேக விரோதிகள் இருந்தனர்.


கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூர குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சா நெஞ்சத்துடன் அனைத்து துன்பங்களையும் ஏற்றுக் கொண்டார். கணவர் மனம் மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.பல ஆண்டுகளாக ரீட்டா சொல்லொணா அவமானங்களையும், உடல் ரீதியான வன்கொடுமைகளையும் மற்றும் துரோகங்களையும் சகித்தபடியே வாழ்ந்தார்.


பன்னிரண்டு வயதில் தமது முதல் குழந்தையை ஈன்றார். இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழிதவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார்.


இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனம் மாறவில்லை என்றால் இறைவன் அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.


ரீட்டா இவர்களின் இறப்பிற்குப் பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ, அற முயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார்.


ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள்.


அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார்.

ஆனால் இவரிடமிருந்து அருள் பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்ட பிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.


ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப் பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.


இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத் தணிக்கையில் இடம் பெற்றுள்ளது.


இப்புனிதர், 1457ம் ஆண்டு மே மாதம் 22ம் நாள் இறந்தார்.

✠ புனித யூஜின் டி மசெனோட் ✠ (St. Eugene de Mazenod)

✠ புனித யூஜின் டி மசெனோட் ✠
(St. Eugene de Mazenod)


மர்சேல் ஆயர்/ அமலமரித் தியாகிகள் சபை நிறுவனர் :
(Bishop of Marseille/ Founder of Missionary Oblates of Mary Immaculate)


பிறப்பு : ஆகஸ்ட் 1, 1782
ஈக்ஸ்-என்-பிராந்தியம், ஃபிரான்ஸ்
(Aix-en-Provence, France)


இறப்பு : மே 21, 1861 (அகவை 78)
மார்செயில், ஃபிரான்ஸ்
(Marseille. France)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


முக்கிய திருத்தலங்கள் :
நொட்ரே-டேம் டி லா கார்டே, மார்செயில், ஃபிரான்ஸ்
(Shrine of Notre Dame de la Garde, Marseille, France)


அருளாளர் பட்டம் : அக்டோபர் 19, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)


புனிதர் பட்டம் : டிசம்பர் 3, 1995,
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)


நினைவுத் திருவிழா : மே 21


பாதுகாவல் : சிதைந்த குடும்பங்கள்


புனிதர் யூஜின் டி மசெனோட், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975 அக்டோபர் 19ல் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1995 டிசம்பர் 3ல் திருத்தந்தை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.


யூஜின் டி மசெனோட் ஃபிரான்சில் பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தந்தை பெயர் "சார்ள்ஸ்" (Charles Antoine de Mazenod) ஆகும். இவரது தாயார், "மேரி ரோஸ்" (Marie Rose Joannis) ஆவார். 1790ம் ஆண்டு ஏற்பட்ட ஃபிரான்ஸ் புரட்சியை அடுத்து, புரட்சியாளர்களின் வற்புறுத்தலால் தமது குடும்பத்தினருடன் இத்தாலி நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றார். கையிருப்பிருந்த பணம் கரைந்ததாலும், நிதிச் சுமையாலும் யூஜினின் பெற்றோர் பிரிந்தனர். அவரது தாயாரும் சகோதரியும் ஃபிரான்ஸ் திரும்பினர். அக்காலத்திய புரட்சியாளரின் சட்டப்படி, அவர்கள் விவாகரத்து பெற்றால் அபகரிக்கப்பட்ட அவர்களது சொத்துக்கள் திரும்ப அவர்களிடமே தரப்படும் என்பதால் யூஜினின் தாயார் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அதனை பெற்றார். இத்தாலியிலும் நிரந்தரமாக வாழ வழியற்ற யூஜின், வெனிஸ், நேப்பிள்ஸ், இறுதியில் சிசிலியிளுள்ள பலெர்மோ (Venice, Naples, Palermo in Sicily) ஆகிய இடங்களில் வசித்தபின்னர் தமது இருபது வயதில் ஃபிரான்ஸ் திரும்பினார். 1808ம் ஆண்டு குரு மடத்தில் இணைந்து இறையியல், மெய்யியல் கல்விகளைக் கற்று 21 டிசம்பர் 1811ல் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.


அமலமரியின் தியாகிகள் சபை உருவாக்கல்:
ஏழைகள் வாழும் சேரிப்புறம், வைத்தியசாலை, சிறைச்சாலை போன்ற இடங்களில் சென்று பணியாற்றினார். தனது பணியின் தேவையை உணர்ந்த இவர் ஒரு புதிய சபையை உருவாக்கினார். 1816ம் ஆண்டில் "மிகவும் கைவிடப்பட்டவர்களுக்கான குழு" (Group for most abandoned of Provence) என்ற பெயருடன் புதிய குழுவாக மறை மாவட்டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 5 குருக்கள் மாத்திரமே இருந்தார்கள்.


1826ம் ஆண்டு ஃபெப்ரவரி 17ம் நாள் இக்குழுவின் பெயர் "அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள்" (Missionary Oblates of Mary Immaculate) என மாற்றப்பட்டது. 1832ம் ஆண்டு இவர் மார்செயில் ஆயராக பதவி உயர்வு பெற்றார்.


இலங்கையில் அமலமரித் தியாகிகள்:
1847ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பெரும் சவால்களை எதிர்நோக்கியது. அவர்களின் பணியின் தேவை அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு குருக்களின் தேவையும் அதிகரித்தது. அப்பொழுது இருந்த ஆயர் ஒராசியோ பெற்றக்கினி குருக்களைத் தேடி ஐரோப்பா சென்றார். ஃபிரான்ஸில் அவர் ஆயர் யூஜினை சந்தித்து, அவரை இலங்கையில் பணியாற்ற சில குருக்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.


இதனை ஏற்றுக் கொண்ட யூஜின் டி மசெனோட் மூன்று அமலமரித் தியாகிகளை இலங்கைக்கு அனுப்ப முன்வந்தார். முதன் முதலில் 1847, நவம்பர் 28ல் அருட்தந்தை செமேரியாவின் தலைமையில் மூன்று அமலமரித் தியாகிகள் தென்னிலங்கையின் காலி துறைமுகத்தை வந்தடைந்தார்கள். இவர்கள் அங்கிருந்து 1848, பெப்ரவரி 4ல் வடக்கே மன்னாரை வந்தடைந்தார்கள். பின் ஊர்காவற்றுறைக்கு சென்றார்கள். அமலமரித் தியாகிகளின் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விரிந்தது. அமலமரித் தியாகிகளே 1862ல் திருக்குடும்ப கன்னியர் சபையினரை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.

Saturday 20 May 2017

✠ புனிதர் பெர்னார்டினோ ✠ (St. Bernardino of Siena)

✠ புனிதர் பெர்னார்டினோ ✠
(St. Bernardino of Siena)


இத்தாலிய மதகுரு/ ஃபிரான்சிஸ்கன் மறைப்பணியாளர்:
(Italian Priest and Franciscan Missionary)


பிறப்பு : செப்டம்பர் 8, 1380
மஸ்ஸா மரிட்டிமா, இத்தாலி
(Massa Marittima, Italy)


இறப்பு : மே 20, 1444 (வயது 63)
இத்தாலி


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


புனிதர்பட்டம் : மே 24, 1450
திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலஸ்
(Pope Nicholas V)


நினைவுத் திருநாள் : மே 20


பாதுகாவல் :
விளம்பரதாரர்கள் (Advertisers), "அகுய்லா" (Aquila),
இத்தாலி (Italy), நெஞ்சு பிரச்சினைகள் (Chest problems),
சூதாட்ட அடிமைகள் (Gambling addicts),
கலிஃபோர்னியா (California),
"சேன் பெர்னார்டினோ மறை மாவட்டம்" (Diocese of San Bernardino)


புனிதர் பெர்னார்டினோ ஓர் இத்தாலிய மதகுருவும் ஃபிரான்சிஸ்கன் சபை மறைப்பணியாளரும் ஆவார். பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் கத்தோலிக்க விசுவாசத்தினை புனரமைத்ததில் இவரது ஒப்பற்ற முயற்சிகளுக்காக இவர் இத்தாலியின் அப்போஸ்தலர் (The Apostle of Italy) என்றழைக்கப்பட்டார். சிறந்த நாவன்மை கொண்ட இவர், தமது பேச்சாற்றலால் சிறந்த மறை பரப்பாளர் என பெயர் பெற்றார்.


1380ல் இத்தாலி நாட்டின் "மஸ்ஸா மரிட்டிமா" (Massa Marittima) என்ற இடத்தின் அப்போதைய ஆளுநரான (Governor) "ஆல்பெர்ட்டோ" (Albertollo degli Albizeschi) என்பவரின் மகனாக பிறந்த பெர்னார்டினோ தமது ஆறு வயதிலேயே அனாதையாக விடப்பட்டார். பக்தியுள்ள தமது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார்.


1397ல், "அர்ச். மரியா டெல்லா ஸ்காலா பேராலயத்தின்" (Santa Maria della Scala Church) மருத்துவமனையின் "அன்னை மரியாளின் கூட்டுறவு" (Confraternity of Our Lady) எனும் அமைப்பில் இணைந்தார். மூன்று வருடங்களின் பிறகு, தமது 20 வயதில் ஏராளமான இளைஞர்களை நண்பர்களாகக் கொண்டிருந்த பெர்னார்டினோ "பிளேக்" (Plague) நோய் பரவியபோது, தமது நண்பர்களின் ஒத்துழைப்புடன் சமூகசேவை செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றார். அங்கு நாள்தோறும் குறைந்தது 20 பேர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பலியானார்கள். ஆனால் பெர்னார்டினோ இந்நோயைக் கண்டு பயப்படாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் தொண்டு புரிந்தார்.


1403ல் ஃபிரான்சிஸ்கன் சபையின் இளம் துறவியர் சபையில் (Order of Friars Minor) இணைந்தார். 1404ல் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர் பல இடங்களுக்கும், கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரை ஆற்றினார். ஃபிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். நாளடைவில் திருத்தந்தையின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மக்களிடையே மறையுரையாற்றத் தொடங்கினார். உத்தம மனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது காலத்தில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லும்போது புண்ணியம் அடைகிறோம் என்றும், அன்னை மரியாளைப் பற்றியும், தூய வளனாரைப் பற்றியும் ஏராளமாக எடுத்துரைத்து மறையுரையாற்றினார். IHS என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுருக்கம் என்றுணர்ந்து, இந்த 3 எழுத்துக்களையும் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து, அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.


இவரது அர்த்தமுள்ள, உருக்கமான மறையுரையைக் கேட்க, சில வேளைகளில் 50,000 பேருக்கும் மேலாக ஆலயத்திலும், வெளியிலும் காத்திருப்பார்கள். குருக்களைப் பற்றியும், கன்னியர்களைப் பற்றியும் பொதுநிலையினர் எப்போதும் தவறாக பேசாமல், மிகவும் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களைப் பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித் திரியக்கூடாது என்றும் இவர் எப்போதும் அறிவுரை கூறி வந்துள்ளார். இவர் IHS என்ற இயேசுவின் பெயருக்கு காட்டிய சிறப்பு பக்தி விளக்கம், விரைவில் மக்களிடையே பரவியது. இச்சின்னம் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதனால் இவர்மேல் பொறாமைக் கொண்ட சிலர் இவரைப்பற்றி மூன்று முறை திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம், இக்குற்றச்சாட்டுகளின் நடுவே, முந்தைய நிலையைவிட மிகவும் அதிகமாகவே கூடியது. இவர் இத்தாலி நாட்டிலேயே மிகச்சிறந்த மறைபோதகப் பேச்சாளராக திகழ்ந்தார்.


இவர் சபைத்தலைவராக இருக்கும்போது வெறும் 300 பேர் மட்டுமே இச்சபையில் இருந்தனர். பல சீர்திருத்தம் பெற்றதன்பின், இச்சபை ஆல்போல் தழைத்து, இவரது இறுதி நாட்களில் ஏறக்குறைய 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. தன் மறைபோதக பணியால் பலரை இறைவன்பால் ஈர்த்த பெர்னார்டினோ இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாளன்று மரித்தார்.

Friday 19 May 2017

✠ புனிதர் ஐந்தாம் செலஸ்டின் ✠ (St. Selestine V)

 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் 
(St. Selestine V)

192ம் திருத்தந்தை :
(192nd Pope)

பிறப்பு : 1215
இசேர்னியா அருகே, சிசிலி அரசு
(Near Isernia, Kingdom of Sicily)

இறப்பு : மே 19 1296 (அகவை 80–81)
ஃபெரென்டினோ, திருத்தந்தை நாடுகள்
(Ferentino, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம் : மே 5, 1313
திருத்தந்தை ஐந்தாம் கிளமென்ட்
(Pope Clement V)

நினைவுத் திருவிழா : மே 19

"பியேட்ரோ ஆன்ஜெலோரியோ" (Pietro Angelerio) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஐந்தாம் செலஸ்டின், கத்தோலிக்க திருச்சபையில் ரோம் ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஜூலை 5, 1294 முதல் டிசம்பர் 13, 1294 வரை ஆட்சி செய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 192ம் திருத்தந்தை ஆவார். சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே திருத்தந்தைப் பொறுப்பை வகித்த செலஸ்டின்,தாமாகவே முன்வந்து திருத்தந்தைப் பணியைத் துறந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார். அடிப்படையிலேயே ஒரு துறவியான இவர், "பெனடிக்டைன்" (Benedictine order) சபையின் கிளை சபையான "செலஸ்டின்ஸ்" (Celestines) சபையின் நிறுவனர் ஆவார்.

பிறப்பும் இளமைப் பருவமும் :
இவர் இத்தாலியின் அப்ரூசி பகுதியில் 1209/10 அல்லது 1215ல் பிறந்தார். அவருடைய பெற்றோர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவருடைய பெற்றோருக்கு அவர் பதினொன்றாம் பிள்ளை.

பியேட்ரோவின் தந்தை ஆஞ்செலோவின் இறப்புக்குப் பின் அவர் வேளாண்மையில் ஈடுபட்டார். ஆனால் பியேட்ரோவின் அன்னை மரியா தன் அன்புப் பிள்ளை பியேட்ரோவின் எதிர்காலத்தை வேறுவிதமாக நினைத்துப்பார்த்தார்.

சிறுவயதிலிருந்தே பிறரின் நலனில் ஆர்வம் கொண்டிருந்த பியேட்ரோ தமது 17வயதில் புனித பெனடிக்ட் சபைத் துறவியானார். பின்னர் மொரோனே பகுதியில் ஒரு குகைக்குச் சென்று அங்கு தனிமையில் தவம் செய்தார். ஐந்து ஆண்டுகள் தவ வாழ்க்கைக்குப் பின் அவர் தம் தோழர் இருவரை அழைத்துக்கொண்டு மயேல்லா குன்றுப் பகுதியில் (அப்ரூசி பிரதேசம்) ஒரு குகையில் கடுமையான தவத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு தவ வாழ்க்கை நடத்தியபோது, பியேட்ரோ தாமே ஒரு துறவற சபையைத் தோற்றுவித்தார். அது பின்னர் அவரது பெயரால் "செலஸ்டின் சபை" என்று அழைக்கப்பட்டது. அத்துறவற சபை உறுப்பினர் தவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அச்சபைக்கு திருத்தந்தை நான்காம் அர்பன் ஒப்புதல் அளித்தார். பின்னர், புதிதாகத் தொடங்கப்பட்ட துறவற சபைகளை நிறுத்துவதற்கான சட்டம் செயலுக்கு வரக்கூடும் என்று அஞ்சி, பியேட்ரோ அப்போது திருத்தந்தையாக இருந்த பத்தாம் கிரகோரி அவர்களை அணுகி, தம் சபையை புனித பெனடிக்ட் சபையின் ஒரு கிளையாக மாற்றி, அதிகக் கடுமையான ஒழுங்குகளுக்கு உட்படுத்துவதாக வாக்களித்து திருத்தந்தையின் ஒப்புதலையும் பெற்றார். அச்சபைக்குத் தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட்டது.

பியேட்ரோ தொடங்கிய துறவற சபை விரைவாக வளர்ச்சியுற்றது. 36மடங்களும் 600க்கு மேற்பட்ட துறவிகளும் அச்சபையில் இருந்தனர். பியேட்ரோ சபைத் தலைவராக இருந்தார். ஆனால் அவர் தனிமையாகச் சென்று தவம் செய்வதிலேயே கருத்தாய் இருந்ததால், சபைப் பொறுப்பை ராபர்ட் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, குகைக்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டார்.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் :
திருத்தந்தை நான்காம் நிகோலாஸ் என்பவர் 1292, ஏப்பிரல் 4ம் நாள் இறந்ததைத் தொடர்ந்து புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் 12 கர்தினால்கள் தேர்தலில் பங்கேற்றனர். ஆனால் இத்தாலியின் ஒர்சீனி, கொலோன்னா என்ற இரு சக்திவாய்ந்த குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக எந்தவொரு வேட்பாளருக்கும் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் பல மாதங்களாக புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படாத நிலை நீடித்தது.

இதற்கிடையில், ரோமிலும் ஓர்வியேத்தோ பகுதியிலும் குழப்பமான நிலை எழுந்தது. சிசிலி மற்றும் நேப்பிள்ஸ் அரசர் இரண்டாம் சார்லஸ் என்பவரும் திருத்தந்தை விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பியேட்ரோ தெல் மொரோனே என்ற தவத் துறவி, கர்தினால்மார் விரைந்து புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் கடவுளின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்று எச்சரித்து இறைவாக்கு உரைத்திருந்தார். அப்பின்னணியில் இத்தாலியின் பெரூஜியா நகரில் கர்தினால்கள் கூடி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர். பியேட்ரோ உரைத்திருந்த இறைவாக்கைக் கர்தினால்களுக்கு, கர்தினால் குழுத் தலைவரான இலத்தீனோ மாலாபிரான்கா என்பவர் சுட்டிக்காட்டினார். பின்னர் அவரே, தாம் பியேட்ரோ தெல் மொரோனே என்ற தவத் துறவியைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும், பிற கர்தினால்கள் ஒருவர்பின் ஒருவராக பியேட்ரோவுக்கு ஆதரவு அளித்தனர். இறுதியில் பியேட்ரோவுக்கு ஒருமனதான ஆதரவு கொடுத்து அவரையே திருத்தந்தையாக 1294ம் ஆண்டு சூலை 5ம் நாள் தேர்ந்தெடுத்தனர். அப்போது அவருக்கு வயது 79.

திருத்தந்தை பதவி தமக்கு வேண்டாம் என்று மறுத்தவர்:
பியேட்ரோ தெல் மொரோனோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அச்செய்தியை அவருக்குத் தெரிவிக்க சில கர்தினால்கள் சென்றனர். ஆனால் அவர் அப்பொறுப்பு தமக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இருப்பினும், கர்தினால்கள் அவரைத் திருத்தந்தைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்தியதால் விருப்பக் குறைவாக அப்பொறுப்பை அவர் ஏற்றார்.

சிசிலி மற்றும் நேப்பிள்ஸ் மன்னன் இரண்டாம் சார்லசும் அவருடைய மகனும் புதிய திருத்தந்தையை ஆக்விலா என்னும் நகருக்குக் அழைத்துச் சென்றனர். அந்நகரம் மன்னன் சார்லசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அங்கே, அரச குடும்பத்துக்குரிய கோல்லேமாஜ்ஜியோ புனித மரியாள் கோவிலில் புதிய திருத்தந்தைக்கு 1294 ஆகஸ்ட் 29ம் நாள் ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. அவரும் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, ஐந்தாம் செலஸ்டின் என்ற பெயரைச் சூடிக்கொண்டார்.

மன்னன் இரண்டாம் சார்லசு புதிய திருத்தந்தையான ஐந்தாம் செலஸ்டின் வழியாகத் தமக்கு விருப்பமானவர்கள் பதவிகளைப் பெற ஏற்பாடு செய்தார். திருத்தந்தை ரோம் ஆயர் ஆதலால் ரோமிலிருந்தே ஆட்சி செய்வது வழக்கம். ஆனால், இரண்டாம் சார்லசின் வற்புறுத்தலுக்கு இணங்கி திருத்தந்தை செலஸ்டின், மன்னனின் ஆட்சிப் பகுதியான நேப்பிள்ஸ் நகரில் ஆட்சிப்பீடம் அமைத்தார்.

திருத்தந்தை ஆட்சிக் காலம் :
தமது குறுகிய ஆட்சிக் காலத்தில் செலஸ்டின், இரண்டாம் சார்லசு மன்னனின் மகனான லூயி என்பவரைத் துலூசு நகர் ஆயராக நியமித்தார். குறிப்பாக,திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் சீர்திருத்தம் கொணர்ந்தார்.

செலஸ்டினுக்கு முன்னால் 1272-1276 ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த பத்தாம் கிரகோரி, திருத்தந்தை தேர்தலுக்கான சில வழிமுறைகளை வகுத்திருந்தார். அந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று செலஸ்டின் சட்டம் இயற்றினார். குறிப்பாக, கர்தினால்கள் ஒரு குழுவாகக் கூடி வந்து, இரகசிய வாக்கெடுப்பு மூலம் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் சட்டம் வகுத்தார்.

திருத்தந்தை செலஸ்டினுக்கு போதிய நிர்வாகத் திறமையோ தேர்ச்சியோ இருக்கவில்லை. சில சமயங்களில் ஒரே பதவிக்கு இரண்டு பேரை அவர் நியமித்ததும் உண்டு.

அவர் பதவி ஏற்று சில மாதங்களே ஆனவுடனேயே, திருவருகைக் காலம் நெருங்கிவந்த வேளையில், திருத்தந்தை செலஸ்டின் தனியாகச் சென்று தவ முயற்சியில் ஈடுபட விரும்பினார். எனவே, மூன்று கர்தினால்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் திருச்சபையின் ஆளுகைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தாம் தவ முயற்சி செய்யப் போவதாகத் தெரிவித்தார். அந்தத் திட்டம் முறையானதன்று என்று கூறி, அவருடைய ஆலோசகர்கள் மறுத்துவிட்டனர்.

உடனே திருத்தந்தை செலஸ்டின், திருச்சபைச் சட்ட நிபுணரான கர்தினால் பெனடெட்டோ கயத்தானி (பிற்காலத்தில் திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ்) என்பவரிடம், திருத்தந்தை பதவியிலிருந்து தாம் பதவி துறப்பது முறைதானா என்று ஆலோசனை கேட்டார். அதற்கு இசைவு தெரிவித்து, ஊக்கமும் கொடுத்து, கர்தினால் கயத்தானி, திருத்தந்தை பதவிதுறப்பதற்கான ஆவணங்களையும் அறிக்கையையும் தயாரித்துக் கொடுத்தார்.

திருத்தந்தை செலஸ்டின் கர்தினால்களின் குழுவைக் கூட்டினார். அவர்கள் முன்னிலையில், தாம் திருத்தந்தை பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து, ஏற்கனவே கர்தினால் கயத்தானி தயாரித்துக் கொடுத்திருந்த அறிக்கையையும் வாசித்தார். அதோடு, திருத்தந்தை பதவியோடு சேர்ந்த அனைத்து அணிகளையும் கழற்றிக் கொடுத்தார். மேலும், கர்தினால்மார் காலம் தாழ்த்தாமல் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டார்.

திருத்தந்தை தம் பணியைத் துறந்தது சட்டப்படி செல்லுமா செல்லாதா என்று உடனே விவாதம் எழுந்தது. சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

திருத்தந்தை செலஸ்தீனின் இறப்பு :
ஐந்தாம் செலஸ்தீன் தாமாகவே முடிவுசெய்து, திருத்தந்தைப் பணியைத் துறந்ததும் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கர்தினால்மார் வாக்கெடுப்புக்காகக் கூடினர். அந்த வாக்கெடுப்பில், முன்னர் செலஸ்தீன் பணித்துறப்பதே நல்லது என்று ஆலோசனை கூறியிருந்த அதே கர்தினால் கயத்தானியே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எட்டாம் போனிஃபாஸ் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.

பணிதுறந்த செலஸ்தீன் தமக்குப் பிடித்தமான தவ வாழ்க்கையைத் தொடர்வதற்காக மொரோனே குன்றில் அமைந்த குகைக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அவர் அங்கு சென்றால் சிலர் அவரோடு சேர்ந்துகொண்டு தமது பதவிக்குப் போட்டியாக வந்துவிடுவார்களோ என்றும், அதனால் திருச்சபையில் பிளவு ஏற்பட்டுவிடுமோ என்றும் புதிய திருத்தந்தை போனிஃபாஸ் அஞ்சினார். எனவே, செலஸ்தீன் காவலில் வைக்கப்பட்டார். செலஸ்தீனோ சில மாதங்களுக்குப் பின் காவலிலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் போனிஃபாஸ் செலஸ்தீனை மீண்டும் பிடித்து ஃபூமோனே கோட்டையில் சிறைப்படுத்தினார். அங்கே செலஸ்தீன் நல்லமுறையில் நடத்தப்பட்டார் என்றாலும், அவருடைய காலில் புண் ஏற்பட்டு,நோய்த்தொற்றின் காரணமாக அவர் 1296 மே மாதம் 19ஆம் நாள் இறந்தார்.

புனிதர் பட்டமும் திருவிழாவும் :
திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட், திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீனுக்கு 1313,மே 5ம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனித ஐந்தாம் செலஸ்தீனின் திருவிழா அவர் இறந்த மே 19ம் நாள் கொண்டாடப்படுகிறது.