Monday 22 May 2017

✠ புனிதர் ரீட்டா ✠ (St. Rita of Cascia)

✠ புனிதர் ரீட்டா ✠
(St. Rita of Cascia)


தாய், விதவை, அருள் வடுவுற்றவர், அர்ப்பணிக்கப்பட்ட மறைப் பணியாளர் :
(Mother, Widow, Stigmatist, Consecrated Religious)


பிறப்பு : 1381
ரொக்கபொரேனா, பெருஜியா, உம்ப்ரியா, இத்தாலி
(Roccaporena, Perugia, Umbria, Italy)


இறப்பு : மே 22, 1457
கேஸியா, பெருஜியா, உம்பிரியா, இத்தாலி
(Cascia, Perugia, Umbria, Italy)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அக்லிபாயன் திருச்சபை (1902ல் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தது)
(The Aglipayan Church - Separated from the Roman Catholic Church in 1902)


அருளாளர் பட்டம் : 1626
திருத்தந்தை எட்டாம் ஊர்பான்
(Pope Urban VIII)


புனிதர் பட்டம் : மே 24, 1900
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ


முக்கிய திருத்தலங்கள் :
கேஸியா, இத்தாலி
(Cascia, Italy)


நினைவுத் திருநாள் : மே 22


சித்தரிக்கப்படும் வகை :
நெற்றியில் காயம், ரோஜா, தேனீக்கள்,
திராட்சைக் கொடி


பாதுகாவல் :
தொலைந்த மற்றும் இயலாத காரணங்கள், நோய்கள், காயங்கள், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், அதிகாரம், உரிமை, முதலியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல், தாய்மார்கள்


புனிதர் ரீட்டா, இத்தாலிய நாட்டின் விதவைப் பெண்ணும், அகஸ்தீனிய சபையின் (Augustinian nun) பெண் துறவியும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். திருமணமான இவர், இவரது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், தமது கணவனை தவறான பாதையிலிருந்து மீட்க முயற்சி செய்ததிலேயே முடிவடைந்தது.


வாழ்க்கைக் குறிப்பு :
ரீட்டா இத்தாலி நாட்டிலுள்ள கேஸியா நகருக்கு அருகிலுள்ள ரொக்கபொரேனா கிராமத்தில் கி.பி. 1381ல் பிறந்தார். அவரது பெற்றோர் "ஆண்டனியோ", "அமடா ஃபெர்ரி லோட்டி" (Antonio and Amata Ferri Lotti) ஆவர்.


இவர், கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்ப்ரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள்.


ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக் கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்க வேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா.

தன் பெற்றோரின் விருப்பப்படி "பவோலோ மன்சினி" (Paolo Mancini) என்பவரை தமது சிறு வயதிலேயே மணந்தார். செல்வம் படைத்த இவரது கணவர் எளிதில் சினமடையக் கூடிய, ஒழுக்கக்கேடான மனிதராக இருந்தார். இவருக்கு கேஸியா பிராந்தியத்தில் அநேக விரோதிகள் இருந்தனர்.


கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூர குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சா நெஞ்சத்துடன் அனைத்து துன்பங்களையும் ஏற்றுக் கொண்டார். கணவர் மனம் மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.பல ஆண்டுகளாக ரீட்டா சொல்லொணா அவமானங்களையும், உடல் ரீதியான வன்கொடுமைகளையும் மற்றும் துரோகங்களையும் சகித்தபடியே வாழ்ந்தார்.


பன்னிரண்டு வயதில் தமது முதல் குழந்தையை ஈன்றார். இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழிதவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார்.


இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனம் மாறவில்லை என்றால் இறைவன் அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.


ரீட்டா இவர்களின் இறப்பிற்குப் பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ, அற முயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார்.


ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள்.


அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார்.

ஆனால் இவரிடமிருந்து அருள் பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்ட பிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.


ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப் பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.


இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத் தணிக்கையில் இடம் பெற்றுள்ளது.


இப்புனிதர், 1457ம் ஆண்டு மே மாதம் 22ம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment