Tuesday 16 May 2017

✠ புனிதர் ஆண்ட்ரூ பொபோலா ✠(St. Andrew Bobola)

✠ புனிதர் ஆண்ட்ரூ பொபோலா ✠
(St. Andrew Bobola)


போலந்து நாட்டின் மறைசாட்சி :
(Martyr of Poland)


பிறப்பு : 1591
சண்டோமிர் பலடைன், போலந்து அரசு
(Sandomir Palatine, Kingdom of Poland)


இறப்பு : மே 16, 1657
ஜானாவ், போலந்து
(Janow, Poland)


ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம் : அக்டோபர் 30, 1853
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)


புனிதர்பட்டம்: ஏப்ரல் 17, 1938
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
(Pope Pius XI)


நினைவுத் திருநாள் : மே 16


பாதுகாவல் :
போலந்து, வார்சாவ் உயர்மறை மாவட்டம்
(Poland, Archdiocese of Warsaw)


புனித ஆண்ட்ரூ, ஒரு போலிஷ் மறைப்பணியாளரும், இயேசு சபையின் மறைசாட்சியும் (Martyr of the Society of Jesus) ஆவார். லித்துவானியாவின் அப்போஸ்த்தலர் என்றும், "ஆன்மாக்களை வேட்டையாடுபவர்" (Apostle of Lithuania and the "Hunter of souls") என்றும் அறியப்படுகிறார்.


1591ல் பிறந்த பொபோலா, 1611ல் தமது இருபதாம் வயதில் "விளினஸ்" எனும் இடத்திலுள்ள இயேசு சபையில் (Society of Jesus in Vilnius) இணைந்தார். 1622ல் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்ட இவர், ஆலோசகராகவும், போதகராகவும் இயேசு சபை இல்ல தலைவராகவும் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.


1652 முதல் கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்களால் போலந்து நாட்டில் குழப்ப சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் லித்துவேனியாவில் (Lithuvenia) மறைபணியாளராக பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. பிரிவினையாளர்கள் வெறி பிடித்தவர்களைப் போல நடந்துகொண்டனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், பணிவுடன் மறைப் பணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் பரவியபோது, நோயுற்ற மக்களை பரிவுடன் கவனித்துக்கொண்டார்.


கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார்.


அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம், நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், "நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பன்மடங்கு துன்புறுத்தினர். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப் பிரமாணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.


இவரின் விசுவாசத்தைக் கண்ட அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து துன்புறுத்தினர். இறுதியாக இரக்கமற்றவர்களின் துன்புறுத்தல்களை தாங்கமுடியாமல், மே 16, 1657 அன்று புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

No comments:

Post a Comment