Thursday 25 May 2017

✠ வணக்கத்திற்குரிய புனிதர் பீட் ✠ (St. Bede the Venerable)

✠ வணக்கத்திற்குரிய புனிதர் பீட் ✠
(St. Bede the Venerable)


திருச்சபையின் மறைவல்லுநர், துறவி, வரலாற்றாசிரியர் :
(Doctor of the Church, Monk, Historian)


பிறப்பு : 673
மோன்க்டான் (Monkton)


இறப்பு : மே 26, 735
ஜாரோ, வட உம்ப்ரியா அரசு
(Jarrow, Kingdom of North Umbria)


ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்க ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)


புனிதர் பட்டம் : 1899ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார்.


முக்கிய திருத்தலங்கள் :
டர்ஹம் பேராலயம், இங்கிலாந்து
(Durham Cathedral, England)


நினைவுத் திருநாள் :
மே 25 (மேற்கத்திய திருச்சபைகள்)
மே 27 (மரபு வழி திருச்சபை)


பாதுகாவல் :
ஆங்கில எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இங்கிலாந்து


வணக்கத்திற்குரிய புனிதர் பீட், வடக்கு ஊம்ப்ரியா அரசிலுள்ள புனித பீட்டர் துறவு மடம் மற்றும் அதன் துணை துறவு மடமான புனித பவுல் துறவு மடம் ஆகியவற்றின் ஆங்கிலேயத் துறவியும் (Monastery of St. Peter and its companion Monastery of St. Paul in the Kingdom of Northumbria), அறிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவருடைய "ஆங்கிலேய மக்களின் திருச்சபை வரலாறு" (Ecclesiastical History of the English People) என்னும் படைப்பு இவருக்கு "ஆங்கிலேய வரலாற்றின் தந்தை" (The Father of English History) என்னும் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.


1899ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் (Anglo - Saxons) மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.


இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர். இவருக்கு 7 வயது நடக்கும்போது 'வடக்கு ஊம்ப்ரியாவில்' (North Umbria) இருந்த துறவற மடத்தில், "பெனடிக்ட் பிஸ்காப்" (Benedict Biscop) என்பவரின் கண்காணிப்பில் பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுத் தேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம்.


சுமார் 692ல் தமது பத்தொன்பது வயதில் "ஹெக்ஸாம்" ஆயரான (Bishop of Hexham) "ஜான்" என்பவரால் இவர் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். சுமார் 702ல் தமது முப்பதாவது வயதில் அதே ஆயரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.


இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும்.


அவரது இறுதி நாளன்று, (இயேசுவின் விண்ணேற்ற விழா நாள்) அவரது மாணவர்களில் ஒருவராகிய 'வில்பெர்ட்' (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பீடை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதிக் கொண்டிருந்தோம்; அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பீட், "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பீட், இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். பின்னர், "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே பீட் உயிர் நீத்தார்.

No comments:

Post a Comment