Thursday 29 September 2016

மனம்மாறுங்கள்; கனிதரும் வாழ்க்கை வாழுங்கள்!

டாரி என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகச் சிறந்த போதகர் மற்றும் மறைப் பணியாளர் (Dr. B.A. Torrey, 1856– 1928). ஆனால் அவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் மிகவும் தாறுமாறாக வாழ்ந்துவந்தார்.  எந்தளவுக்கு என்றால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் தன்னுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துவந்தார்..

ஒருநாள் அவருடைய அன்னை அவரைக் கண்டிக்கவே, அவர் வீட்டைவிட்டே ஓடிப்போனார். அவர் ஓடிப்போகும் முன்பாக அந்த அன்னை அவரைப் பார்த்துச் சொன்னார், “அன்பு மகனே இப்போது நான் உனக்குச் சொல்வது மிகவும் கசப்பாக இருக்கலாம், எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள் நீ கடவுளைவிட்டுப் பிரிந்து வெகு தொலைவில் சென்று கொண்டிருக்கிறாய். ஒருநாள் நீ இந்த மண்ணுலகில் வாழவே முடியாது  என்றொரு நிலை வரலாம். அப்போது நீ கடவுளைப் பார்த்து ‘உம்மை விட்டுப் போன உதாரிப்பிள்ளையான என்னைக் காத்தருளும் என்று மட்டும் ஜெபி” என்று கூறினார்.

வீட்டை விட்டு ஓடிப்போன டாரி இன்னும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இந்த மண்ணகத்திலே எல்லாவகையான இன்பங்களையும் அனுபவித்து விடலாம் என்று ரீதியில் வாழ்ந்தான். ஆனால் அவன் இன்பத்தை அனுபவிப்பதாக நினைத்து, துன்பத்தில் விழுந்தான். ஆம், டாரி தன்னுடைய வாழ்க்கையில் ஒருவிதமான வெறுமையை உணர்ந்தபின்பு, தன்னுடைய அறைக்குச் சென்று, துப்பாக்கியை எடுத்து, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான். அப்போது அவன், “வாழ்வில் இக்காட்டான சூழ்நிலையை அடைந்தால் ‘கடவுளே என்னைக் காத்தருளும்’ என்று முன்பொரு காலத்தில் தாயானவள் தனக்குச் சொல்லிக்கொடுத்த ஜெபத்தை சொல்லிப்பார்த்தான். அப்போது அவன் தன்னிலே ஒரு மாற்றத்தை உணர்ந்தான்.

டாரி, தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போலியானது, பொய்யானது, அருவருக்கத் தக்கது என நினைத்து வருந்தி அழுதான். அதன்பிறகு தன்னுடைய வாழ்க்கையே மாற்றுக்கொண்டு மறைபோதகராகவும், நற்செய்திப் பணியாளராகவும் வாழத் தொடங்கினான்.

பாவ வாழ்க்கை வாழும் ஒவ்வொரும் தன்னுடைய தவறை உணர்ந்து, மனமாற வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொராசின் நகரையும் பெத்சாய்தா நகரையும் கப்பர்நாகும் நகரையும் கடுமையாகச் சாடுகின்றார். எதற்காக என்றால், அந்த நகர்களில் வாழ்ந்த மக்கள்தான் இயேசுவின் போதனையை அதிகமாகக் கேட்டவர்கள், அவர் ஆற்றிய புதுமையை, அற்புதத்தைக் கண்கூடாகப் பார்த்தவர்கள். அப்படியும் அவர்கள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழாததால்தான் இயேசு அந்த நகர்களில் வாழ்ந்த மக்கள்மீது கடுமையாகச் சினம் கொள்கிறார்.

இயேசுவைப் பார்ப்பதும், அவருடைய போதனையைக் கேட்பதும் காணக்கிடைக்காத ஒரு பாக்கியம். யூத மக்கள் அப்படிப்பட்ட பேற்றினை அதிகமாகப் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டும், அவர் ஆற்றிய புதுமைகளைக் கண்டும் மனம்மாறாததால்தான் அவர்கள் இயேசுவின் சினத்திற்கு ஆளாகிறார்கள். பல நேரங்கில் இறைவார்த்தையைக் கேட்டும், திருவிருந்தில் பங்கு கொண்டும் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாதவர்களாக இருக்கின்றோம்.

இறைவார்த்தை சொல்கிறது, “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சியளிக்கிறது” என்று. (யோவான் 15:8). ஆனால் நாம் உண்மையிலே கனிதரும் வாழ்க்கை வாழ்கிறோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

“உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். கிடைத்ததை நெஞ்சார வாழ்த்த வேண்டும். நம்பிக்கையோடு வளர்ச்சியை எதிர்கொள்ளவேண்டும். இதுவே வாழ்க்கை” என்று வாழ்க்கைக்கு நல்ல இலக்கணம் தருவார் புத்த பெருமான். நாம் அனைவரையும் நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பல நேரங்களில் நமக்கு இறைவனின் போதனையோ, அல்லது பெரியவர்களின் அறிவுரையோ எதுவுமே முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எதை நினைக்கிறோமோ அதனை நம்முடைய வாழ்க்கையில் செய்துவிடத் துடிக்கின்றோம் அது இறைத் திருவுளத்திற்கு எதிராக இருக்கிறது என்பதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் நாம் கடவுளின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகின்றோம்.

ஆகவே, கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்திருக்கும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ முயற்சிப்போம். பாவத்திலிருந்தும், தீய பழக்கவழத்திலிருந்தும் விடுதலை பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். 

No comments:

Post a Comment