Tuesday 20 September 2016

இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடத்தல்!

இராணுவ முகாமில் தங்கி பயற்சி எடுத்துக்கொண்டு வந்த கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த இராணுவ வீரன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல இரயில் நிலையத்தில் வேக வேகவேகமாக ஓடிவந்தான். எப்படியாவது இரயிலில் இடம் பிடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பில் இருந்ததால் அவன் எதிரே வந்த பழங்களைக் கூடையில் வைத்து விற்கும் சிறுவனைக் கவனிக்கவில்லை. அதனால் அவன் சிறுவன்மீது மோதி, சிறுவன் வைத்திருந்த பழங்கள் எல்லாம் சிதறி ஓடின.

ஒரு நிமிடம் அவன்  நிலைகுலைந்து நின்றான். நாம் இருக்கும் அவசரத்தில் இது வேறு நடக்கவேண்டுமா? என்று தன்னுடைய நிலையை நினைத்து நொந்துக்கொண்டான். பின்னர் அவன் அந்த சிறுவனைப் பார்த்தபோது அவனுடைய உள்ளத்தில் ஓர் இரக்க உணர்வு தோன்றியது. ஏனென்றால் அந்த சிறுவன் ஒரு பார்வையற்றவன். எனவே தன்னால் நடைபாதை எங்கும் சிதறிக் கிடக்கும் பழங்களை ஒன்றாக சேர்த்துத்தருவது என்று முடிவு செய்தான். அதன்படி ஆங்காங்கே சிதறிக் கிடந்த பழங்களை ஒன்றாகச் சேர்ந்து அவன் அந்த சிறுவனின் பழக்கூடையில் வைத்தான்.

இதை அறிந்து அந்தச் சிறுவன் இராணுவ வீரனின் கைகளை பிடித்துக்கொண்டு, “நீங்கள்தான் இயேசுவா?” என்று கேட்டான். அதற்கு அந்த இராணுவ வீரன், “இல்லை இல்லை. நான் இயேசு அல்ல, இயேசுவைப் போன்று வாழ முயற்சிப்பவன்” என்றான்.

ஆம், ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துவாழும்போது, வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது நாம் இயேசுதான், அவருடைய அன்புப்  பணியாளர்கள்தான்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப் போதித்துக் கொண்டிருகும்போது, அவரைக் காண அவருடைய தாயும், சகோதரர, சகோதரிகளும் வருகிறார்கள். இச்செய்தியை மக்கள் இயேசுவிடம் சொல்லியபோது அவர் அதற்கு பதில்மொழியாக, “இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்” என்கிறார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு பல உண்மைகளை எடுத்துக்கூறுகிறது. முதலாவதாக இயேசு இரத்த உறவுகளைக் கடந்தவராக இருக்கின்றார் என்பதே ஆகும். இயேசு தன்னுடைய தாய், சகோதர, சகோதரிகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு வாழவில்லை. இன்றைக்கு தங்களை மக்கள் பணியாளர்கள், எல்லாருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் தலைவர்களைப் போன்று அல்லாமல் இயேசு எல்லாரும் ஒரே குடும்பம் என்ற மனநிலையில் வாழந்தவர். அதனால்தான் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும் யாவருமே என்னுடைய தாயும், சகோதரர்களும் ஆவார்கள் என்கிறார்.

அடுத்ததாக நாம் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறவேண்டும் என்றால் தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று நடக்கவேண்டும் என்று சொல்கிறார். இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரிகளாக மாறுவது என்பது  மிகப்பெரிய கொடை, மிகப்பெரிய பாக்கியம்.  இது யாருக்குமே கிடைக்காத ஒரு வரம். அப்படிப்பட்ட வரத்தை ஆண்டவர் இயேசு தன்னுடைய தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக அடையலாம் என்கிறார்.

நிறைவாக ஒருவர் இயேசுவைப் பெற்று எடுப்பதானாலோ அல்லது இயேசுவோடு பிறப்பதனாலோர் இயேசுவுக்கு தாயாகவோ அல்லது சகோதர, சகோதரிகளாக மாறிவிடமுடியாது. யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வந்தார்கள். அவர்களின் நினைப்பு எல்லாம் தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வந்தாலும் கடவுளின் மக்கள் என்பதுதான். ஆனால் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, “ஆபிரகாம் எங்கள் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என்கிறார் (மத் 3:9).

இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்கும்போது ஒருவர் இயேசுவைப் பெற்றெடுப்பதனாலும், இயேசுவோடு பிறப்பதனாலும் அவருக்குத் தாயாக, சகோதர சகோதரிகளாக மாறிவிட முடியாது. மாறாக தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும்.

இயேசு கூறும் இந்த வரையறைகளை வைத்துப் பார்க்கும்போது அன்னை மரியா இயேசுவை பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்ததனாலும் இயேசுவுக்குத் தாயாகிறார். ஆகவே, நாம் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் நமக்கு மீட்பு உண்டு என்ற தவறான எண்ணத்தில் வாழாமல், உண்மையிலே தந்தைக் கடவுளின் திருவுளத்தை ஏற்று வாழ்வோம். இயேசுவின் தாயாகும், சகோதர சகோதரிகளாகும் பேற்றினைப் பெறுவோம்.

No comments:

Post a Comment