Friday 30 September 2016

இயேசுவின் குழந்தை தெரசா விழா!

இன்று திருச்சபையானது புனிதையும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியுமான தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

குழந்தைத் தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  2 ஆம் நாள்  பிரான்சு நாட்டில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசித்து வந்த லூயிஸ் மார்டின் என்பவருக்கு கடைசி மகளாகப் பிறந்தாள். தெரசாவின் குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். இவருடைய சகோதரிகள் இருவர் ஏற்கனவே கார்மேல் மடத்தில் சேர்த்து துறவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களைப் பார்த்து வளர்ந்த தெரசா தானும் கார்மேல் மதத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு துறவுமடத்தில் சேர்வதற்கான போதிய வயது வராத காரணத்தினால் அவர் துறவு மடத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தெரசாவும், அவருடைய பெற்றோரும் ரோம் நகரில் அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் லியோவின் குருத்துவ வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார்கள். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது தெரசா எழுந்து, கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டுமே. குழந்தைத் தெரசாவிடம் இருந்த ஆர்வத்தை பார்த்த திருத்தந்தை அவர்கள், அவரை கார்மேல் மடத்தில் துறவியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் என்ற ஒப்புதல் அளித்தார். அன்று குழந்தைத் தெரசா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

1890 ஆம் ஆண்டு தெரசா கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கே ஒரு சாதாரண வாழ்க்கையை, அசாதாரண முறையில் வாழ்ந்துகாட்டினார். ஆம், தெரசா கன்னியர் மடத்தில் செய்த அனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் செய்தார். இது அவரை மற்ற துறவிகளிடமிருந்து பிரித்துக்காட்டியது. ஒருநாள் இவரைச் சந்தித்த இல்லத் தலைவி அக்னேஸ், துறவு மடத்தில் நீ சந்திக்கின்ற ஒவ்வொரு அனுபவத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வடிக்கச் சொன்னார். இல்லத் தலைவியின் வேண்டுகோளுக்கு இணங்க தெரசா தன்னுடைய துறவற வாழ்க்கையில் சந்திக்க அனுபத்தை எல்லாம் “ஓர் ஆன்மாவின் கதை” (The Story of Soul) என்ற புத்தகமாகப் படைத்தார்.

“ஓர் ஆன்மாவின் கதை” என்ற அந்தப் புத்தகத்தில் தெரசா குறிப்பிடும் மிக முக்கியமான காரியம் “சிறிய வழி” (Little Way) என்பதாகும். அதாவது நாம் செய்யும் சிறு செயலாக இருந்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால், அதன்வழியாக ஓர் ஆன்மாவை மீட்டெடுக்க முடியும் என்பதே குழந்தைத் தெரசா உணர்ந்தும் உண்மையாகும்.  அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை “To Pick up a pin for love can convert a soul” என்பதாகும்.

தெரசா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடும் இன்னொரு உண்மை யாதெனில், அவர் நான்கு சுவர்களுக்குள் இருந்துகொண்டு பல்வேறு நாடுகளில் மறைப்பணி செய்துகொண்டு வந்த குருக்களுக்காகச் ஜெபித்தார்; உலக மக்களுக்காகச் ஜெபித்தார். அந்த ஜெபத்தின் வழியாக அவர் ஆன்மாக்களை இறைவன்பால் கொண்டு வந்து சேர்த்தார். இவ்வாறு அவர் துறவு மடத்தில் வாழ்ந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராளமான ஆன்மாக்கள் மனந்திரும்பக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட புனிதை தன்னுடைய  இருபத்தி நான்காம் வயதில் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.

இவருடைய வாழ்வைப் பார்த்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1999 ஆம் ஆண்டு இவரை மறைபரப்பு நாடுகளுக்குப் பாதுகாவளியாக ஏற்படுத்தினார்.

தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவருடைய வாழ்வைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், அவருடைய வாழ்க்கை நமக்கு எத்தகைய செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்றுதான். அது மீட்பை, இறைவனின் அருளைப் பெற பெரிய பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, மாறாக சிறிய காரியங்களைச் செய்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால் அதுவே போதுமானதாகும் என்பதாகும். ஆண்டவர் இயேசுகூட நம்மை பெரிய பெரிய காரியங்களைச் செய்யச் சொல்லவில்லை. மாறாக பசித்தோருக்கு உணவிடச் சொல்கிறார், தாகமாக இருப்போருக்கு தண்ணீர் தரச் சொல்கிறார், நோயாளியைக் கவனிக்கச் சொல்கிறார், சிறையில் இருப்போரைப் பார்க்கச் சொல்கிறார்..... (மத் 25:40) இப்படிச் செய்வதனால் நாம் விண்ணரசைப் பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதியும் தருகிறார். எனவே நாம் சிறிய சிறிய காரியங்களை குழந்தைத் தெரசாவைப் போன்று இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இயேசுவின் அன்புக்கு உரியவர்களாவோம்.

இறுதியாக ஒரு நிகழ்வைச் சொல்லி நிறைவு செய்வோம். ஒருமுறை பத்திரக்கையாளர் ஒருவர் எட்மன்ட் ஹிலாரியிடம், “உங்களோடு பணிசெய்யும் குழுவை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், “சின்னதாகவோ, பெரிதாகவோ செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன்” என்றார். தொடர்ந்து அவர் அவரிடம்,. சிறிய முயற்சிகளில் சிறப்பாகச் செய்தவர்கள் பெரிய முயற்சிகளில் பரிமளிப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதனால்தான் நான் சிறிய விசயங்களில் பொறுப்புள்ளவர்களாக இருப்பவர்களை, பெரிய விசயங்களுக்கு பொறுப்பாளர்களாக அமர்த்துகிறேன்” என்றார்.

இதனை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெற்றி என்பது உடனே கிடைத்துவிடகூடிய ஒன்று அல்ல, அது படிப்படியாக கிடைப்பது. நாம் சிறிய சிறிய காரியங்களை முனைப்போடு செய்தால் பெரிய பெரிய காரியங்கள் நமக்கு ஒருநாள் கைகூடும்.

ஆகவே தூய குழந்தை தெரசாவைப் போன்று சிறிய சிறிய காரியங்களை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இறைவன் நம்மை பெரிய காரியங்களுக்கு பொறுப்பாளராக உயர்த்துவார்.

1 comment:

  1. குழந்தை தெரசாவை போல புனித வாழ்க்கை வாழ இயேசுவே அருள்புரியும்.எங்கள் அருள் வாழ்வி யம் (அன்பியம்) புனித குழந்தை தெரசாள்.இதற்காக பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. திருத்தலம் அமலோறபவ அன்னை ஆலயம்.விமலபுரம்
    . நட்டாலம் PO. கன்னியாகுமரி Dist
    மார்த்தாண்டம் மறைமாவட்டம்

    ReplyDelete