Tuesday 4 October 2016

தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்!

இரண்டாம் உலகப்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அப்போது ஹிட்லரின் நாசிப் படையானது பிரான்சு நாட்டின் கடற்கரைப் பகுதியான டன்கிர்க்கை சுற்றி வளைத்துக்கொண்டது. அதில் மூன்று லட்சத்திற்கும் மேலாக மக்கள் இருந்தார்கள். இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டுப் படைவீரர்களும் ஏராளமானவர்கள் அங்கே தங்கி இருந்தார்கள். மிகக் குறைந்த அளவு படைவீரர்களை வைத்துக்கொண்டு நாசிப்படையை எப்படி எதிர்கொள்வதென்று நேசநாடுகளான பிரான்சும், இங்கிலாந்தும் செய்வதரியாமல் விழித்தார்கள்.

நாசிப்படை டன்கிர்க்கை சுற்றிவளைத்துக் கொண்ட செய்தி பிரான்சு நாட்டு அதிபருக்கும், இங்கிலாந்து நாட்டு அதிபரான வின்சென்ட் சர்ச்சிலுக்கும் சென்றது. அப்போது வின்சென்ட் சர்ச்சில் தன்னுடைய நாட்டு மக்களிடம் வானொலி வழியாக இவ்வாறு பேசினார்.

“அன்பு மக்களே நம்முடைய படைவீரர்களும், மக்களும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்காக இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் ஜெபம் செய்வதுதான். எனவே அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தீயோரிடமிருந்து விடுபடவேண்டும் என்று ஜெபியுங்கள்” என்றார். அதிபரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் டன்கிர்க் பகுதி மக்களுக்காக ஜெபித்தார்கள்.

அது கோடைகாலம். வெயில் வேறு வெளுத்து வாங்கியது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக டர்கிர்க் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டது. எதிரே யார் இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாட்டுப் போர்க்கப்பல்கள் டன்கிர்க் பகுதியில் நுழைந்து, நாசிப் படையினருக்குத் தெரியாமல் அங்கிருந்து மக்கள் அனைவரையும் வேறு இடங்களுக்கு இடம்மாற்றினார்கள். அவர்கள் மக்கள் அனைவரையும் இடமாற்றுவதற்கும் பனிப்பொழிவு நின்றுபோவதற்கும் சரியாக இருந்தது. ஒருவார காலம் இருந்த பனிப்பொழிவில் நேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் டன்விர்க் பகுதியில் இருந்த எல்லாரையும் அப்புறப்படுத்தினார்கள்.

பனிப்பொழிவு முடிந்து மக்களைப் பார்த்த நாசிப் படையினருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆம், டன்கிர்க் பகுதியில் யாருமே இல்லை.

ஆபத்திலிருந்து தங்களுடைய நாட்டுமக்களை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டியதால், இறைவன் அவர்களை அற்புதமாக எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார். டன்கிர்க் பகுதியில் நடந்த இந்த நிகழ்வு “Dankirk Miracle” என்று அழைக்கப்படுகிறது. இது வரலாற்றில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு.

துன்ப வேளையில் இறைவனை நோக்கி அழைத்தால் இறைவன் நம்முடைய வேண்டுதலுக்குப் பதில் தருவார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரை அணுகி வந்து, “யோவான் தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல்  எங்களுக்கும் கட்டுக்கொடும்” என்கிறார்கள்.. இதைக் கேட்ட இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத்தருகிறார்.

முதலாவதாக ஜெபம் என்றால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போவது கிடையாது, மாறாக குறைவான வார்த்தைகளாக இருந்தாலும் அவற்றை மனமுருகிச் சொல்லவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுக்கிறார். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நீண்ட நேரம் ஜெபித்தால்தான் ஜெபம் அல்லது ஜோடனையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் ஜெபம் என்ற தவறான கற்பிதத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியை நமக்கு முன் வைக்கிறார். அதுதான் குறைவான வார்த்தைகளானாலும், அவற்றை மனமுருகி ஜெபிக்கவேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து ஜெபிக்கக் கற்றுத் தரும்போது இறைவனை தந்தையே என்று அழைக்கக் கற்றுத்தருகிறார். இது யூத மரபைப் பொறுத்தளவில் மிகப்பெரிய புரட்சி என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் இறைவனின் திருப்பெயரைச் சொல்வது மிகப்பெரிய குற்றம் என்று நினைத்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படிப்பட்ட எண்ணத்தை புரட்டிப் போடுகிறார். இறைவனை அப்பா தந்தையே என அழைக்கச் சொல்லித்தருகிறார்.

நிறைவாக இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தைப் பொறுத்தளவில் முதல் பகுதி இறைப்புகழ்ச்சியாகும், இரண்டாவது பகுதி நமது தேவைகளுக்காக மன்றாடுவதாகவும் இருக்கின்றது. எப்போது நாம் இறைவனைப் புகழ்ந்து, அவர் செய்த நன்மையாக நன்றி செலுத்துகிறோமோ அப்போதுதான் நமது ஜெபம் முழுமை பெறும். வெறுமனே வேண்டுதல்களை அடுக்கிக்கொண்டே போவதால் மட்டும் நம்முடைய ஜெபம் முழுமை பெறாது.

எனவே முதலில் நாம் இறைவனைப் புகழ்வோம், அதன்பிறகு அன்றாட தேவைகளுக்காக மன்றாடுவோம்; தீயோனிடமிருந்து விடுவிக்கும்படியாக வேண்டுவோம். அப்போது இறைவன் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து நமது வாழ்வினை ஆசிர்வதிப்பார்.

இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் இந்த அற்புதமான ஜெபத்தின் மகிமையை உணர்வோம். இறைவனைப் புகழ்வோம், அதன்வழியாக இறையருள் பெற்று, இடர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.

No comments:

Post a Comment