Tuesday 27 October 2015

ஜெபமாலையும் நானும் - 2 (துயர் நிறை மறை உண்மைகள்)

துயர் நிறை மறை உண்மைகளை நினைக்கும் போதெல்லாம் எனக்கு என் மனதில் தோன்றுவது வியாகுல அன்னைதான். தன் ஒரே  மகனை சிலுவை சாவுக்கு கையளிக்கும் போது எந்த அளவுக்கு அவர் துயரத்தை தாங்கி இருப்பார் நாம்  அனைவரும் அறிவோம்.  

இந்த நேரத்தில் மரியாளின் துயரங்களை நினைவுகூர்வோம்.   
அன்னை மரியாளின் வாழ்வில் அவள் அடைந்த துன்பங்கள், அவளது விசுவாசத்திற்கு தடைக்கல்லாக அமையவில்லை. மாறாக, தனது துன்பங்களை தனது விசுவாசத்தின் படிக்கல்லாக அமைத்துக்கொண்டாள். அவள் சந்தித்த துன்பங்களுக்கு ஏற்ப, அவளது விசுவாசம் உறுதியாக மாறியது. அதைப்போல நமது துன்பங்களும் நமது விசுவாசத்தை வளர்த்தெடுப்பதாக அமையட்டும்.

துயர் நிறை மறை உண்மைகள்:
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!

மேற்கூறிய துயர் நிறை மறை உண்மையில்  நம் பாவங்களுக்காக மனத்துயர் அடையவும் ,புலன்களை அடக்கி வாழவும்  ,நம்மையே ஒடுக்கி நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும்,வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழவும்,இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்  நம்மை அழைக்கின்றது.இவைகளை எல்லாம் நம் அன்னை மிக எளிமையாக செய்தாள்.இதன் மூலமாகத்தான் தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றினார். 
இதை நம் வாழும் சமுதாயத்தில் பார்த்தோம் என்றால்  எத்தனையோ அன்னையர் தங்கள் குழந்தைகளின் துன்ப துயர நேரங்களிலெல்லாம் அருகிருந்து பிள்ளைகளின் வேதனையைத் தமதாக்கி தாய்மைக்குப் பெருமை சேர்ப்பதை அறிவோம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நம் அன்னையர்கள் நம் துன்பங்களிலெல்லாம் நம்மோடு பங்குகொள்ளும்போது தள்ளாடும் வயதிலும் தாய்மையின் தனிச் சிறப்பை அனுபவிக்கிறோம்.
ஏன் என்  தாயும் உங்கள் தாயும் அவ்வாறே !
இன்று  துன்புறும் மனிதனோடு உடன்இருக்க ஆள் இல்லை. மனிதனின் கஷ்டங்களில் பங்குகொள்ள யாருமில்லை. துன்புறும் மனிதனைக்கண்டு ஓடிவிடும் நிலை. ஆனால் இங்கு ஒரு பெண். தாய்மைக்கு தனியொரு இலக்கணமாய் திகழும் நம் அன்னை மரியா. தாய் என்ற பெருனையை ஒதுக்கிவிட்டு, துன்புறும் மனிதன் என்ற உறவோடு சிலுவையடியில் நிற்கிறாள். நம் பாவங்களுக்காக  தன் ஒரே மகனையும் பலி கொடுக்கிறாள்.

உங்களின் துன்ப வேளைகளில் உங்கள் அருகில், உங்களோடு இருப்பவள். இந்த அன்னை உங்கள் துன்ப வேளையில் உங்களை விட்டு விலகுபவள் அல்ல. இயேசுவைப்போல நம் துன்பத்தை, பிணியை, பாரங்களைத் தன் உடலிலும் உள்ளத்திலும் நமக்காகச் சுமப்பவள்.

சிலுவையடியிலும், அதற்கு முன்பு வாழ்வு முழுவதும், அன்னை மரியா அனுபவித்த துன்பங்களை எண்ணிப் பார்க்கும் நாம், நமது அன்னையரையும் கண்ணோக்கிப் பார்த்து அவர்களின் துன்பங்களைக் குறைக்க முன்வருவோம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறள் மொழிக்கேற்ப, அன்னையரைப் பெருமைப்படுத்தும் பிள்ளைகளாக வாழ்வோம்.
எங்கள் சுமைகளைத் தாங்கும் அன்னையே, தம் பிள்ளைகளின் வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கும் ஒவ்வொரு தாயையும் தாங்கி வழிநடத்தும் அனனையே.
இதைத்தான் இந்த துயர்  நிறை மறை உண்மைகள் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் உணர்த்தும் உண்மை. 


1 comment:

  1. dear kalai it is very good thought you have taken to share the valuable thoughts. At a time you may one idea. so that the viewers read thoughtfully. Well thought.

    ReplyDelete