Monday 19 October 2015

இயேசுவை எதிர்கொள்ளும் வாழ்வு

நாளைய  நற்செய்திப்பகுதியை இரண்டு கண்ணோட்டங்களாக பார்க்கலாம். குறுகிய கண்ணோட்டத்தோடு பார்த்தால், இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயாரிப்பாக இதைப்புரிந்து கொள்ள முடியும். சற்று விரிவான கண்ணோட்டத்தோடு பார்த்தால், கடவுளை சந்திப்பதற்கு நம்மையே தயாரிப்பதற்கான ஓர் அழைப்பாகவும் இதைப்பார்க்கலாம்.

இடையை வரிந்து கட்டிக்கொள்வது என்பது, வேலை செய்வதற்கு தயாராக இருப்பதைக்காட்டுகிறது. மத்திய கிழக்குப்பகுதிகளில், நீண்ட தொங்கலான ஆடைகள் வேலை செய்வதற்கு இடைஞ்சலாக தோன்றும். எனவே, வேலை செய்கிறபோது, இடையை வரிந்து கட்டிக்கொண்டு செய்தால் சிறப்பாகச் செய்ய முடியும். அதேபோல், விளக்கில் எரியும் திரிக்காக பஞ்சைப்பயன்படுத்துவார்கள். அந்த பஞ்சுத்திரியை சிறிது நேரம் எரிந்தவுடன் சரிபடுத்த வேண்டும். இல்லையென்றால் அது அணைந்துவிடும். இதுவும் தயார் நிலையில் இருப்பதையே குறிக்கிறது. கடவுளை எதிர்கொள்வதற்கு நாம் எந்த நிலையிலும், எந்த வேளையிலும் தயாராக இருக்க வேண்டும் என்பதைக்குறிக்கிறது.

வாழும் ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து மகிழ்ந்து வாழ வேண்டும். நிறைவில்லாத வாழ்வாக நமது வாழ்வு இருக்கக்கூடாது. நாம் எப்போது இந்த உலக வாழ்வை முடிப்போம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒருநாள் நம் எல்லோருக்கும் முடிவு வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கேற்ப, நாம் நமது வாழ்வை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்வு நமக்குக்காட்டுகிறது.
''உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது
உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்'' (லூக்கா 12:35-36)

நாம் அதற்கு தயாராக இருக்கிறோமா ?


1 comment:

  1. "Well begun is half done." Congrats for this new endeavor. May you continue to inspire young minds for the better. Good day.

    ReplyDelete