Wednesday 28 October 2015

மனிதனின் மறுபக்கம்

''அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும்;
ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்' என்று கூறினர்'' (லூக்கா 13:31).

நாளைய நற்செய்திப்பகுதி, நமக்கு ஆச்சரியமான செய்திகளைத்தருகிறது. அது பரிசேயர்களைப் பற்றிய செய்தி. பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிரிகளாக பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், இன்றைய நற்செய்தி, பரிசேயர்களிலும் நல்லவர்கள் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

பொதுவாக, நற்செய்திப் பகுதிகளைப் பார்க்கிறபோது, பரிசேயர்கள், இயேசுவுடன் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பது, தெளிவாக தெரிகிறது. ஆனால், அது முழுமையான உண்மையல்ல, என்பதை இன்றைக்கு வாசிக்கிற நற்செய்திப்பகுதி மூலம் நாம் உறுதிப்படுத்துகிறோம்.

சில பரிசேயர்கள் இயேசுவிடத்தில் வந்து, அந்த இடத்தைவிட்டு, அகலுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்கள். அவரது போதனை பிடிக்காததால் அல்ல, மாறாக, அவருடைய பாதுகாப்பிற்காக. 

ஏனென்றால், ஏரோது அந்திபாஸ், இயேசுவை கொல்லத்தேடுவதாக, அவர்களுக்கு உறுதியான தகவல் கிடைத்திருந்தது. மோசமானவர்கள், இயேசுவின் எதிரிகள், வெளிவேடக்காரர்கள் என்று, இயேசுவால் முத்திரைக்குத்தப்பட்ட பரிசேயர்களில் நல்லவர்கள் இருப்பதை, இன்றைய நற்செய்தி காட்டுவது, அருமையான செய்தியைத் தருகிறது.

எல்லா மனிதர்களிடமும், நிச்சயம் நல்ல குணங்கள் பல நிச்சயம் இருக்கும். அதை நாம் பார்க்க வேண்டுமே தவிர, மனிதர்களிடம் இருக்கிற கெட்ட குணங்களை அல்ல. நமது வாழ்வில் பல வேளைகளில், மற்றவர்களிடம் இருக்கிற சின்ன, சின்ன குறைகளைப் பார்த்து நாம் தீர்ப்பிடுகிறோம். 

இப்படித்தான் அவர் இருப்பார் என்று முத்தரை குத்துகிறோம். அவரைப்பற்றி மற்றவர்களிடம் இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் பேசுகிறோம். அது தவறு. ஒவ்வொரு மனிதரிடமும் நல்ல குணங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றை நாம் இனம் காண வேண்டும். அது ஒருவருடைய வாழ்வை மாற்றுவதற்கும், உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு  மனிதருக்கும் ஒரு மறுபக்கம் இருப்பதை உணர்வோம்.அந்த மறுபக்கத்தில் நானும் நல்லவன் அவனும் நல்லவன் என்ற கட்டிடத்தை கட்டுவோம்.   


ஆக, கட்டிடம் என்ற மறுபக்கத்தை நம்பிக்கையோடு கட்டி நன்றாய் வாழ்வோம்.பிறரையும் வாழ விடுவோம். 



2 comments: