Wednesday 10 February 2016

தூய லூர்தன்னைப் பெருவிழா!

எல்லோருடைய பிறப்பும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பார்கள்.ஆனால், என் வாழ்வில் அந்த நாளே அர்த்தமுள்ளதாக இருப்பதை நினைத்து எனக்கு மகிழ்ச்சி.அதுவும் அன்னையின் நாளாக இருப்பதை நினைத்து எனக்கு பெரும் மகிழ்ச்சி.

நாளை  தூய லூர்தன்னைப் பெருவிழா இந்த விழா பிப்ரவரி 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.இந்நாளை என் வாழ்வின் மிகப்பெரிய மகத்தான நாளாக கருதுகிறேன்.


இந்த நாளில் என்னை கரங்களில் தாங்கி கொண்டிருக்கும் கடவுளுக்கு நன்றி.மேலும் சிறப்பாக, என் சபை நிறுவனர்,என் சபையின் மூத்த சகோதரிகள், என் ஞான தந்தையர்கள்,என் ஆசான் தந்தை யேசு  ,என்னை வளர்த்து விட்ட என்னுடன் குழு வாழ்வில் இருந்த சகோதரிகள், சக தோழிகள்,என் பெற்றோர்கள்,என் சகோதரிகள்,சகோதரர்கள் அனைவரையும் 
நன்றியோடு நினைத்து பார்க்கின்றேன்.

இது அன்னை மரியாள் பெர்னதெத் சூபிரெஸ் என்ற சிறுமிக்கு, காட்சி அளித்ததை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுகிறது. அதுவும் பிப்ரவரி 11 முதல் ஜீலை 16, 1858 வரையில் இந்த காட்சியானது, அவளுக்கு காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவை மரியாளின் காட்சியளிப்பு என்று முதலில் கொண்டாடினர். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இதை தூய லூர்தன்னை நினைவு விழா என்று பெயரிட்டு, அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மாற்றியமைத்தது.

பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிருஸ். 1858 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்கச் சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்தவேளையில் பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார். அன்னை மரியாள் அழகிய இளம்பெண்ணாக அந்தக் குகையில் தோன்றினார்.

வெண்ணிற ஆடையை உடுத்தியிருந்தார். முக்காடும் அணிந்திருந்தார். நீலநிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். அவரது கையில் ஒரு செபமாலையும் வைத்திருந்தார். ”நானே அமல உற்பவம்” என்று தன்னைப் பற்றிக் கூறினார். செபமாலையின் மறையுண்மைகளை தியானிக்கச் சொன்னார்.

அன்னை மரியாள் என்றும் எந்நாளும் நம்மோடு இருக்கிறாள் என்பதை, இது நமக்கு வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நமக்கு உதவுவதற்காக, நமக்காக இறைத்தந்தையிடம், அவரது அன்பு மைந்தனிடம் பரிந்துபேசுவதற்காக அவர் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார். அவரது பரிந்துரையிலும், அரவணைப்பிலும் நம்பிக்கை வைப்போம்.


நமது வாழ்விலும் பல இக்கட்டான நேரங்களை நாம் எதிர்கொண்டிருக்கலாம். அந்த தருணங்களில் கடவுளின் அருட்கரம் நிச்சயம் நம் அருகில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவர் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். அவர் நம்மைக் காப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடம் நம்மையே நாம் ஒப்படைப்போம்.

உங்கள் எல்லோருக்கும் லூர்து அன்னை பெருவிழா வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment