Friday 26 February 2016

வாழ்வில் உயர்ந்த மதிப்பீட்டைக் கடைப்பிடிப்போம்!

யூதச்சட்டப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் அவரது விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடியாது. சொத்துக்களை பிரிப்பதில் ஒருசில ஒழுங்குகளை அவர்கள் வகுத்திருந்தனர். இணைச்சட்டம் 21: 17 ல் சொல்லப்பட்டிருப்பதுபோல மூத்தமகனுக்கு சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், அடுத்தவருக்கு மீதியுள்ள ஒரு பங்கும் செல்லும்.

தந்தை இறப்பதற்குமுன் சொத்துக்களை பிரிப்பது என்பது அவர்களின் வழக்கத்தில் இல்லாத ஒன்று. நாளைய நற்செய்தியில் இளையமகன் கேட்பது, தன்னுடைய பங்கைத்தான். ஆனால், அவன் கேட்கிற முறையிலேயே, அவனுடைய தவறான ஒழுக்கமுறைகளும், பழக்கவழக்கங்களும் வெளிப்படுகின்றன.

தந்தை உயிரோடு இருக்கும்போதே சொத்துக்களை பங்குகேட்கிறான் என்றால், தந்தையின் உயிரை அவன் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனால், தந்தை முழுமையான அன்போடு அவன்கேட்டபொழுது மறுப்பேதும் இன்றி கொடுக்கிறார்.

தன்னுடைய மகன் துன்பத்தில்தான் வாழ்க்கைப்பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறர். அவனுக்கு முழுச்சுதந்திரம் கொடுக்கிறார். அதேபோல், அவன் திருந்தி வரும்போது அவனை ஏற்றுக்கொள்கிறார்.

நாளைய  நற்செய்தியில் ஊதாரி மைந்தனின் மனமாற்றமும், கடவுளின் மன்னிப்பும் அதிகமாக பேசப்பட்டாலும், இந்த உவமை மற்றொரு முக்கியமான கருத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது.

இந்த உவமை யாருக்கு சொல்லப்படுகிறது? என்பதில்தான் இந்தப்பகுதியின் முக்கியமான கருத்து அமைந்திருக்கிறது. இயேசு இந்த உவமையைச்சொன்னபோது, பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். (லூக்கா 15: 2).


இந்த உவமையில் வருகிற மூத்தமகன்தான் கவனிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறான். மூத்தமகனை பரிசேயர்களோடும், மறைநூல் அறிஞர்களோடும் இயேசு ஒப்பிடுகிறார். இந்த மூத்தமகன் தான் நேர்மையாளன் என்ற மமதையோடு காணப்படுகிறான். அவன் தன்னை முன்னிலைப்படுத்துகிறவனாக இருக்கிறான்.


தன்னுடைய மகன் திரும்பி வந்ததும் அவனை ஏற்றுக்கொள்கிற தந்தையின் மீது கோபம் கொள்கிறவனாக இருக்கிறான். அடுத்தவரை குறைகூர்கிறவனாக இருக்கிறான்.

தாங்கள் மட்டும்தான் நீதிமான், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று மக்கள் மத்தியில் காட்டிக்கொண்ட பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய சாட்டையடியாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் எப்போதுமே நம்மைப்பற்றி உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கிறோம். அது தவறில்லை. ஆனால், நம்மை முன்னிறுத்தி, மற்றவர்களை தரம்தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எப்போதும் மற்றவர்களைப்பற்றியும் உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான, பக்குவமடைந்த மனநிலையை. அத்தகைய மனநிலையை இறைவனிடம் வேண்டுவோம்.

No comments:

Post a Comment