Thursday 25 February 2016

இறைவன் தரும் சுதந்திரம்!

இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். எசாயா 5: 7 “படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே”. பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

கரடி போன்ற கொடூரமான காட்டுவிலங்குகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு திராட்சைத்தோட்டத்திலும் அகன்ற, வாய்திறந்த தொட்டி, மேல் ஒன்றும், அதை ஒட்டி கீழேயும் அமைக்கப்பட்டிருந்தது. மேல் உள்ள தொட்டி திராட்சைப்பழங்களைப் பிழிவதற்கும், கீழே உள்ள தொட்டி பிழிந்த சாறுகளை எடுப்பதற்கும் பயன்பட்டது.

இரண்டு தொட்டிகளையும் குழாய்போன்ற அமைப்பு இணைத்தது. அதுமட்டுமல்லாது, திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை.


இயேசு இந்த உவமையை தலைமைக்குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும் கூறுகிறார். அதாவது கடவுள் மக்களை வழிநடத்தும் பொறுப்பைக்கொடுத்தவர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, கடவுளுக்கு கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றனர். கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி அவர்களின் பொறுப்புக்களை நினைவூட்டுகிறார்.

அவர்களோ கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, தன்னுடைய மகனை அனுப்பினாலாவது திருந்திவிடுவார்கள் என நினைக்கிறார். ஆனால், அவர்களோ அவரைக்கொன்றுவிடுகிறார்கள். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கொன்ற அவருடைய மகன் வழியாக, இந்த உலகத்திற்கு கடவுள் வாழ்வுகொடுக்கிறார்.

இங்கே நமக்கு சிந்தனையாக தரப்படுவது, கடவுள் நமக்குத்தருகிற முழுமையானச்சுதந்திரம். கடவுள் எப்போதுமே நம்மை வற்புறுத்துவது கிடையாது. நமக்குத்தேவையான அனைத்தையும் கொடுத்து முழுமையானச் சுதந்திரத்தை அவர் எப்போதும் தருகிறார்.

ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. தொடக்கநூலில் நம்முடைய முதல்பெற்றோர் செய்த பாவமும் இதுதான்.

இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக்கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.

No comments:

Post a Comment