Thursday 18 February 2016

கோபம் அகற்றுவோம்!

விடுதலைப்பயணம் 20: 13 சொல்கிறது: கொலை செய்யாதே. இயேசு இதற்கு மாற்றாக ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார்.
 “தம் சகோதரர், சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார்” (5: 22).

மற்றவரிடம் கோபப்படுதலே நம்மை தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாக்கும் என்பது இயேசுவின் வாதம். கோபம் என்றால் என்ன? விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கோபம் என்ற வார்த்தையின் உண்மையான பொருளென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கிரேக்க மொழியில் ‘கோபம்’ என்ற பொருளுக்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் வார்த்தை: ‘துமோஸ்’. காய்ந்த வைக்கோற்புல்லில் எரிவதற்கு சமமாக இதனைப் பொருள்படுத்தலாம். காய்ந்த வைக்கோற்புல் உடனடியாக எரியக்கூடியது. அதேபோல் எரிந்த வேகத்தில் அணையக்கூடியது.

இந்த வகையான கோபம் உடனடியாக வந்து, வந்த வேகத்தில் மறைந்துவிடக்கூடியது. இரண்டாம் வார்த்தை: ‘ஓர்கே’. இது ஆழமானது. நீண்டநாள் இருக்கக்கூடியது. இந்த வகையான கோபம் எளிதில் மறையாத, வைராக்யம் நிறைந்தது. இங்கே இயேசு பயன்படுத்துகிற வார்த்தை இந்த இரண்டாம் வகையான வார்த்தையாகும். இதனை இயேசு கண்டிக்கிறார்.

விவிலியத்தின் ஆங்காங்கே கோபம் கண்டிக்கப்படுகிறது. யாக்கோபு 1: 20 சொல்கிறது: “மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது”. கொலோசையர் 3: 8 ல் பார்க்கிறோம்: “நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள்”

கோபம் கடவுளுடைய அருளைப் பெற தடையாயிருக்கிறது என்று இறைவார்த்தை சொல்கிறது. அப்படியென்றால், கோபம் எந்த அளவுக்கு நமக்கு அழிவைத்தர வல்லது என்பது இதிலிருந்து புலனாகிறது. கோபத்தை அறவே நம்மிடமிருந்து அகற்ற நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் கடவுளின் வல்லமையை நாம் பெற முடியும்.

இயேசு கூறுவது முற்றிலும் உண்மை. கொலை மட்டுமே மனிதனின் நிம்மதி வாழ்வைக் குலைத்துவிடுவதாக நினைக்கக் கூடாது. சினம், இன்னும் ஒரு படி இறங்கிச் சென்றால், கடின வார்த்தை மனிதனின் வாழ்வைக் கெடுத்துவிடுகிறது.

எனவேதான் இயேசு இறை வெளிப்பாட்டின் நிறைவை இத்தகைய மாற்றங்கள் வழியாக வளங்குகிறார். எனவே கொலை செய்வதுதான் பாவம் என்னும் பழைய ஏற்பாட்டு நியதியை மாற்றி, கோபமும் கடின வார்த்தையும் கொலைக்குச் சமமானது என வலியுறுத்துகிறார்.

இவ்வாறு கடின வார்த்தைகளால், கடுஞ்சினத்தால் கொலைக்குச் சமமான மன இருக்கத்தையும் அழுத்தத்தையும் தனக்கும் அயலானுக்கும் கொடுத்து அவர்களில் வாழ்வை அழித்துவிடுவதால், கடினவார்த்தையும் கோபமும் கொலைக்குச் சமமானவை.

இச் சூழல்களில் ஆலயம் வந்தால் அந்த மன இருக்கமும் அழுத்தமும் குறைந்துவிடும். பாவ மன்னிப்பும் பரிகாரப்பலியும் செலுத்தினால் குற்றமும் குறையும் நீங்கிவிடும்,உண்மைதான்.

ஆயினும் இயேசு உணர்த்தும் உண்மை பெரிது. வெறும் சடங்கும் ஆச்சாரப் பலியையும்விட, ஆண்டவனோடு மனம் ஒன்றித்து,செய்த தவறுக்காக மனம் வருந்தி, மனமாற்றம் அடைந்து, வருத்திய நபரோடு நல்லுறவை ஏற்படுத்திய பின் ஆண்டவனுக்குச் செலுத்தும் பலியே இறைவனுக்கு ஏற்புடைய பலியாகும் என்பது முற்றிலும் சரியான புதிய வெளிப்பாடு மட்டுமல்ல. எல்லோருடைய வாழ்வுக்கும் உகந்தது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

No comments:

Post a Comment