Monday 15 February 2016

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்!

‘பாவம்’ என்கிற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டிலே ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஐந்து வார்த்தைகளின் பொருளை நாம் பார்ப்போம்.

1.‘hamartia’ இதன் பொருள் இலக்கிலிருந்து தவறுவது. இலக்கை நோக்கி குறிவைத்து சுடும்போது, இலக்கு தவறுவது. அதாவது, நாம் அடைய வேண்டிய இலக்கிலிருந்து வழிதவறிச்செல்வது பாவம்.

2. ‘parabasis’ இந்த வார்த்தையின் பொருள், வரைமுறையைக்கடந்து செல்வது. இதுதான் நமது வரைமுறை என்று தெரிந்திருந்தும், அதற்குமேல் செல்வது பாவம்.

3. ‘paraptoma’ என்பது, தவறி விழுவது. சகதி நிறைந்த சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நம்மையறியாமல் திடீரென்று வழுவி கீழே விழுந்துவிடுகிறோம்.

4. ‘anomia’ என்பது, சட்டத்தை மீறுவது. நன்மை எது? தீமை எது? என்று நமக்கு நன்றாகத்தெரியும். இருந்தும், வேண்டுமென்றே தீமையைத்தேர்ந்தெடுப்பது.

5. ‘opheilema’ என்பது, கடமையில் தவறுவது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடமையில் இருந்து தவறுவது.

நாளைய   நற்செய்தியிலே இயேசு கற்றுத்தந்த செபத்திலே இடம்பெற்றிருக்கிற பாவம் (குற்றம்) என்கிற சொல்லுக்கு பொருளாக மேற்கண்ட ஐந்தாவது வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதாவது கடமையில் தவறுவது (opheilema’).

கடவுளுக்கும், நம் அயலாருக்கும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஒரு தந்தையாக, தாயாக, சகோரனாக, சகோதரியாக, உறவினராக, ஒரு நாட்டின் குடிமகனாக, நமக்கென்று பல்வேறு கடமைகள் இருக்கிறது. இந்த உலகத்திலே இருக்கிற யாரும், நான் என்னுடைய கடமையை முழுமையாகச்செய்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

அத்தகைய கடமையில் இருந்து நான் தவறும்போது, இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஆனால், இறைவன் நம்முடைய குறைகளை, குற்றங்களை அறிந்தவராக, நம்மையெல்லாம் மன்னிக்கிறவராக இருக்கிறார்.

நாம் செய்த தவறுகளை கடவுள் மன்னிக்கத்தயாராக இருப்பதுபோல, நாமும் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் எதிர்பார்ப்பு.

கடவுள் என்னை மன்னிக்க வேண்டும், எனதுநிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிற நான், மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும், மற்றவர்களின் நிலையையும் அறிந்துகொள்ள முன்வர வேண்டும்.

சிலுவையில் கடினமான வேதனைகளுக்கு நடுவிலும், தான் தண்டிக்கப்படுவது முறையே அல்ல என்று தெரிந்திருந்தும், தன்னுடைய இந்த அவலநிலைக்குக் காரணமானவர்களை, இயேசு முழுமனதோடு மன்னித்து, மன்னிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவை மன்னிக்கின்ற உள்ளங்கள். நாம் அனைவரும் இறைவன் நம்மை மன்னிப்பது போல, மற்றவர்களை மன்னிக்கும் வரம் வேண்டுவோம்.

No comments:

Post a Comment