Sunday 28 February 2016

அவரின் போதனையும், தாக்கமும்!

நாளைய நற்செய்தியில்  இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது.

தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது.

இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது.

யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர்.

அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை.

தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை, இயேசு தெரிந்திருந்தாலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், அதன் மூலமாக மக்களை சிந்திக்க வைப்பதிலும் இயேசு கருத்தோடு செயல்படுகிறார்.

இன்றைக்கு மக்களை சிந்தனையில்லாத மழுங்கட்டைகளாக இருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். எனவே தான், தொலைக்காட்சியைக் கொடுத்து, அவர்களின் வாழ்வை கெடுத்துக் கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

மக்கள் சிந்திப்பதை மறந்து, ஒருவிதமான மயக்கநிலையிலும், அடிமைநிலையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு நமது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் போதிக்க, முயற்சி எடுப்போம்.

No comments:

Post a Comment