Wednesday 17 February 2016

இறை ஆற்றலைத்தருவது செபம்!

செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம்.

செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள்.


 யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.

செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இயேசு இங்கே தருகிற எடுத்துக்காட்டு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு. அதாவது, ஒரு மகன் ஊதாரித்தனமாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.


வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல், தான்தோன்றித்தனமாக திரிகிறான். தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறான். குற்றங்கள் பல செய்கிறான். அப்படி ஒருவருடைய மகன் இருப்பதால், அந்த தந்தை அவனை வெறுத்து விடுவாரா? ஒருவேளை அந்த மகனுக்கு அடிபட்டு விட்டது, அல்லது அவன் தவறுசெய்தது தெரிந்து காவல்துறை அழைத்துச்சென்று விட்டது, அல்லது நோயுற்று இருக்கிறான்.

அவனுடைய தந்தை சும்மா விட்டுவிடுவாரா? எப்படி இருந்தாலும் தன் மகன் என்ற பாசம் அவரை உடனடியாக அவனுக்கு உதவ உந்தித்தள்ளாதா? எப்படி இருந்தாலும் தன் இரத்தம் என்கிற அந்த உணர்வு அவனைக்காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்குமா?

சாதாரண மனிதர்களுக்கே இந்த உணர்வு என்றால், படைப்பின் சிகரமான மனிதனை தன் முழுமையான அன்பில், தனது சாயலில் படைத்த இறைவனுக்கு நம்மீது எவ்வளவு அன்பிருக்கும்? நாம் கேட்பதை தராமல் இருப்பாரா? நம்மை தேவையில் இருக்கவிடுவாரா? என்பதுதான் இயேசுவின் கேள்வி.

இறைவன் நிச்சயம் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் தந்தால் அவர் நல்ல தந்தையாக இருக்க முடியாது. மாறாக, நமக்குத் தேவையானதை தருவார். அதுவும் நாம் விரும்புகிறபடியெல்லாம் அல்ல, அவரது திருவுளத்தின்படி.

ஏனென்றால் அவர் முக்காலமும் அறிந்தவர். நம்முடைய தேவைகளை நிறைவாகத் தெரிந்தவர். எனவே, கடவுள் நிச்சயம் நமக்குத் தேவையானதை, அவருடைய வழியில் தருவார் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

இறைவன் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல, பராமரித்து பாதுகாக்கிறவரும் கூட. நமக்கு பார்த்து பார்த்து நல்லது செய்கிறவர். நம்முடைய தேவை அறிந்து நமக்கு உதவி செய்கிறவர்.

 இறைவனை நம்பிக்கையோடு அணுகுவதுதான் கடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவரின் பிள்ளைகளாகிற நம் அனைவரின் கடமையாகும்.

No comments:

Post a Comment