Friday 19 February 2016

அன்பு வாழ்வு!

பகைவர்களிடமும், துன்புறுத்துவோரிடமும் நம் அனைவரையும் அன்பு செய்ய இயேசு அழைப்பு விடுக்கின்றார். எதற்காக இத்தகைய அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்? நாம் கடவுளின் பிள்ளைகளாக, கடவுளைப்போல இருக்க வேண்டும் என்பதுதான், இயேசுவின் விருப்பம்.

அப்படி இருப்பதற்கு, பகைவரை அன்பு செய்ய வேண்டும். இங்கு இயேசுவின் ”உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்” என்கிற வார்த்தைகள் நினைவுகூறத்தக்கவை. நமக்குள்ளாக கேள்வி எழலாம்? விண்ணகத்தந்தையைப் போல நாம் எப்படி நிறைவுள்ளவராக முடியும் என்று? அதற்கான வழிதான், பகைவரை அன்பு செய்வது.

இயேசு கடவுளின் இரக்க குணத்தை உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்? கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழைபொழியச்செய்கின்றார். அவர் இஸ்ரயேலுக்கு வெயிலையும், புறவினத்தார்க்கு புயலையும் கொடுப்பதில்லை. அவருடைய இரக்கம் அனைவருக்கும் சமமே. யூத போதகர் நடுவில், கடவுளின் இரக்கக்குணத்திற்கு கதை ஒன்று சொல்லப்படுகிறது.

எகிப்தியப்படைகள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறபோது, செங்கடலிலே மூழ்கி இறக்க நேரிடுகிறது. அப்போது, வானதூதர்கள் எல்லாரும் இணைந்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிக்கிறார்கள். அதைப்பார்த்த கடவுள், “என்னுடைய படைப்பு தண்ணீரில் மூழ்கி சாகிறபோது, நீங்கள் இப்படியா மகிழ்ச்சியடைவீர்கள்?“ என்று அவர்களைப்பார்த்து கேட்கிறார். இதுதான் கடவுளின் அன்பு. இதுதான் கடவுளின் இரக்ககுணம்.

நம் அயலார் யார்? அடுத்திருப்பவரா? அல்லது தேவையிலிருப்பவரா! அயலார் யார் என்ற கேள்விக்கான பதிலை இயேசு நல்ல சமாரியன் உவமையில் தருகிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்பதே இயேசுவின் நிலைப்பாடு.சாதி,சமய,இன ,மொழிகளைத் தாண்டி மனித நேயத்தோடு எவர் ஒருவர் செயல்படுவாரோ,அவரே கடவுளுக்குரியவர்.


பகைவரை மன்னிப்பதற்கு வலிமையான உள்ளமும்,எளிமையான மனமும் வேண்டும்.தான் தோற்றாலும் பரவாயில்லை,தன பகைவர் தோற்க்கவேண்டும் என்ற வெறி ஒரு முரண்பாட்டுத் தத்துவம்.அது போருக்கான தத்துவம்.

அங்கே உறைந்திருக்கும் பிடிவாத குணம்,அகங்காரம் இவை ஒருவரது சுயமதிப்பின் தரத்தையும்,உறவின் தரத்தையும் பாதித்து பழுதடையச்செய்துவிடும்.

அன்பைப்பற்றித் தெரிந்துகொள்ள ஒருவர் விரும்பினால் மற்றவர்களுக்காகத் தியாகம் செய்தவர்களைப் பற்றிப் படிக்கவேண்டும்.இயேசு தியாகம் செய்தவர், அவரைப் பாடமக்குவோம்.அவருடைய குணங்களை நமதாக்குவோம்.

கடவுளின் சாயலைப்பெற்றிருக்கிற நாம் அனைவரும் அத்தகைய அன்பை மற்றவர் மீது காட்டுவதற்கு அழைக்கப்படுகிறோம். பகைமையும், வெறுப்புணர்வும் அதிகமாகிக்கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், அன்பு வாழ்வு வாழ்வோம்.

No comments:

Post a Comment