Thursday 17 December 2015

இறைக்குடும்பம்!

''அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க
விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்'' (மத்தேயு 1:19).

 யோசேப்பு தம் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத ஒரு நெருக்கடிக்கு உள்ளாகிறார். அவருடைய உள்ளத்தில் மாபெரும் கலக்கம். அவருக்கும் மரியாவுக்கும் மண ஒப்பந்தம் ஆகியிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கணவனும் மனையுமாகக் சுடி இல்லறம் நடத்தாத நிலையில் மரியா ஒரு குழந்தையைத் தம் வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறார்.


 யோசேப்புக்கு ஏற்பட்ட கலக்கமும் குழப்பமும் அவருடைய உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் அவர் ''நேர்மையாளராக இருந்தார்'' (மத் 1:19). எனவே, அவருடைய உள்ளத்தில் நேர்மையும் கண்ணியமும் குடிகொண்டிருந்தன. அவர் தம் மனைவியின் நல்ல பெயரையும் காப்பாற்ற எண்ணுகிறார். எனவே, மரியாவைப் பொதுமக்கள் முன்னிலையில் குற்றப்படுத்த அவருடைய மனது உடன்படவில்லை. மரியாவை மறைவாக விலக்கிவிட யோசேப்ப திட்டமிடுகிறார்.


 நம் வாழ்க்கையிலும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. அந்நேரங்களில் நாம் உள்ளம் கலங்குவதும் உண்டு. இவ்வாறு சலனமுற்றிருக்கின்ற வேளைகளில் நாம் அவசரப்பட்டு முடிவெடுக்கத்தான் தோன்றும்.

ஆனால் நாம் உணர்ச்சிக்கு அடிமையாகிவிடாமல் நிதானமாகச் சிந்தித்தால் சில வேளைகளில் நம் சிக்கல்களுக்கு ஒரு சரியான தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு. யோசேப்பின் வாழ்வில் ஏற்பட்ட பல துன்பங்களையும் அவர் நேர்மையான மனத்தோடு சந்தித்தார்.

கடவுளின் உதவியை நாடினார். அந்த உதவி அவருக்கு எப்போதுமே கிடைத்தது. கடவுளின் செய்தி யோசேப்புக்கு வானதூதர் வழியாக வழங்கப்பட்டது என நற்செய்தி கூறுகின்றது. நமக்கும் கடவுளின் உதவி உண்டு. ஆனால் நாம் அந்த உதவியை நாடுவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த சக்தியிலேயே நம்பிக்கை கொண்டு வழிதவறிப்போவதும் உண்டு. எங்கு நேர்மையான உள்ளம் இருக்கிறதோ அங்கே கடவுளுக்கு உகந்த முடிவெடுக்கின்ற பண்பும் இருக்கும்.


அருமையான ஆனந்தம் நிறைந்த குடும்ப வாழ்வை, ஆட்கள் பலர் குறுக்கிட்டு கெடுத்து குட்டிட் சுவராக்கிவிடுவர். சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள், கலையிழந்த மாளிகையாக்கிவிடும்.


சில ஆசைகள், கொள்கைகள் வண்ணம் காட்டி கண்ணை மறைத்து, குடும்பத்தை காரிருளில் தடுமாற வைத்துவிடும். ஆண்டவனும் கூட சில நேரங்களில் விழையாடலாம். இது போன்ற நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து, காவல்துறை, கோர்ட், விவாகரத்து என்ற விபரீதங்களில் சிக்கி, பெருமைமிக்க குடும்பங்களும் சிறுமையடைகின்றன.

யோசேப்பு, மரியாவின் குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. இறைவனின் திட்டத்தை புறியாதவரையில் புனிதனின் குடும்பமும் தப்பமுடியாது.மனைவியை விலக்கிவிடலாமா என்று சிந்திக்கிறார் யோசேப்பு. நேர்மையாளர். கடவுள் பக்தர்.

தன் குழப்பத்திற்குத் தீர்வு காண இறை உதவியைத் தேடுகிறார். அமைதியில், தூக்கத்தில், தியானத்தில் இறை உதவி, வெளிப்பாடு, தெளிவு அவருக்கு கிடைக்கிறது. இறை திட்டத்தை தெறிந்து கொள்கிறார். சமுதாயத்தில் தன் பங்கினை உணர்கிறார். தன் குடும்பச் சுமை இப்பொழுது சுவையாகத் தோன்றுகிறது.

குடும்பச் சுமைகள் நம்மை அழுத்தும் வேளைகளில் குடும்பங்களின் பாதுகாவலராம் புனித யோசேப்பின் துணை வேண்டுவோம். இறைவன் தன் தொண்டர்களை அனுப்பி உதவுவார். வாழ்க்கைப் பயணத்தில் குடும்பம் இப்பொழுது பல மடங்காக மகிழ்ச்சியை, நிறைவைத் தரும்.



No comments:

Post a Comment