Sunday 20 December 2015

உறவின் நேரம் !

''அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்'' (லூக்கா 1:39).

தான் கருத்தரித்த குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து ஈன்றளிக்கின்ற பேறு பெண்களுக்கு மட்டுமே உரிய அனுபவம். பேறுகால வேதனையும் மகிழ்ச்சியும் என்னவென்பதை மரியாவும் எலிசபெத்தும் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்தார்கள்.

அந்த இரு பெண்களின் வாழ்விலும் கடவுளின் அருள்செயல் தெளிவாக வெளிப்பட்டது. என்றாலும் அவர்கள் குழந்தைப் பேறு அடைந்ததில் வேறுபாடுகளும் உண்டு. எலிசபெத்து வயதில் முதிர்ந்தவர்; குழந்தை பெற இயலாதவர். குழந்தைப் பேறு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்றிருந்த அவருக்குக் குழந்தை பிறக்கிறது கடவுளின் அருள்செயலால்.

 ஆனால் மரியாவோ இளம் வயதுக் கன்னிப் பெண். உரிய காலத்தில் தமக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என அவர் நினைத்திருப்பார். ஆனால் கணவனோடு கூடி வாழும் முன்னரே அவருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கிறது கடவுளின் அருள்செயலால். மரியாவின் வாழ்வில் கடவுள் வல்லமையோடு செயல்பட்டார் என்பதற்குச் சான்று முதிர்ந்த வயதில் எலிசபெத்து குழந்தைப் பேறு பெற்றதாகும் (காண்க: லூக் 1:36).

எலிசபெத்து மரியாவின் வயிற்றில் கருவாக இருந்த குழந்தை ''ஆசி பெற்றது'' எனப் போற்றுகிறார்; மரியாவை ''என் ஆண்டவரின் தாய்'' என வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:42-43). அதுபோலவே, எலிசபெத்துக்கு மகனாகப் பிறந்த திருமுழுக்கு யோவான் மரியாவுக்கு மகனாகப் பிறந்த இயேசுவைப் பார்த்து, ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார்'' எனச் சான்று பகர்வார் (காண்க: லூக் 3:16).

 மரியா எலிசபெத்தைத் தேடிச் சென்றது எதற்காக? எலிசபெத்தின் பேறு காலத்தில் அவரோடு கூட இருந்து அவருக்கு உதவி செய்வதற்காகவே மரியா சென்றிருக்கலாம். அதே நேரத்தில் மரியாவுக்கும் எலிசபெத்தின் உதவி தேவைப்பட்டது.

திருமண உறவில் புகுமுன்னரே கருத்தரித்திருந்த மரியா எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை எனவும், அவருடைய வயிற்றில் வளர்ந்துவருகின்ற கரு தூய ஆவியின் வல்லமையால் ஏற்பட்டதே என அவருக்கு உறுதியளிக்கவும், இரு பெண்களும் இணைந்து கடவுளின் அருள்செயலை வியந்து போற்றிடவும் மரியா-எலிசபெத்து சந்திப்பு தேவைப்பட்டது.


நம் வாழ்விலும் நாம் கடவுளின் அருள்செயலை உணர்ந்துகொள்ள நம்மை அடுத்திருப்போர் பல சமயங்களில் துணை செய்கின்றனர். நம் கண்களுக்கு மறைந்திருப்பது பிறர் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்ற நேரங்கள் உண்டு. கடவுள் நம் வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்துகிறார் என்பதை நாம் சில வேளைகளில் நம்மைப் பார்த்துப் பிறர் கூறுவதிலிருந்தும் அறிந்துகொள்கிறோம். அதுவும் கடவுளின் செயலே.


அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்:
(1) விரைவு
(2) வாழ்த்து.
(3) மகிழ்ச்சியின் துள்ளல்
 (4) துhய ஆவியின் ஆட்கொள்தல்
(5) ஆசி வழங்கல்.

ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே துhய ஆவியின் துணை வேண்டும்.

நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம்.

 எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது,வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், துhய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும்.

1 comment: