Sunday 13 December 2015

அதிகாரம்!

''எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?'' (மத்தேயு 21:23)


 இயேசு புரிந்த அதிச செயல்களைக் கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். சிலர் அந்த வியப்பு உணர்வைத் தாண்டிச் சென்று, இயேசு யார் என்னும் கேள்வியை எழுப்பினார்கள். அவர்களுள் ஒரு சிலர் இயேசு அலகையின் உதவியோடுதான் புதுமைகள் செய்கிறார் என்றார்கள்.

வேறு சிலரோ இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்னும் உண்மையைக் கண்டுகொண்டார்கள். இவர்கள்தான் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டனர்''. இயேசுவை நம்புவோர் கடவுளின் வல்லமையை ஏற்கின்றனர்;

முற்காலத்தில் பல மனிதர் வழியாகத் தம்மையே வெளிப்படுத்திய கடவுள் நம் காலத்தில் தம் ஒரே மகன் இயேசுவை நம் மீட்பராக அனுப்பினார் எனவும், அவர் வழியாகவே நாம் வாழ்வு பெறுகிறோம் என்பதையும் இவர்கள் அறிந்துள்ளனர்.

என்றாலும், இயேசு ஓர் இறைவாக்கினர் போல மக்களுக்குக் கடவுளின் திட்டத்தை அறிவித்ததால் அவரைப் பற்றி அறிய மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இயேசுவின் செயல்பாடுகளுக்கும் பிற இறைவாக்கினருக்கும் இடையே நிலவிய ஒரு பெரிய வேறுபாடு இயேசு ''அதிகாரத்தோடு போதித்தார்'' என்பதாகும்.

 எருசலேம் கோவிலில் வாங்குவதும் விற்பதுமாக மக்கள் இருந்ததால் அங்கே பெரிய சந்தடி நிலவியது. இயேசு இதைக் கண்டித்தார். அங்கிருந்த வியாபாரிகளையும் பிறரையும் துரத்தினார். இதைக் கண்டதும் இயேசுவின் எதிரிகள் அவரிடம் கேட்ட கேள்வி இது:

''எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?'' இதற்கு இயேசுவின் வாழ்க்கையே பதிலாக அமைந்தது எனலாம். இயேசுவின் அதிகாரம் கடவுளிடமிருந்து அவருக்கு வந்த அதிகாரம்தான். எனவே, இயேசு கடவுளின் பெயரால் மட்டும் பேசவில்லை;

 மாறாக, கடவுளுக்கு எந்த அதிகாரம் உரித்தானதோ அதே அதிகாரம் தமக்கும் உண்டென இயேசு அறிவித்தார். இயேசுவின் அதிகாரம் கடவுளின் திருவுளத்திற்கு அவர் அமைந்த நடந்ததால் அவருக்கு வழங்கப்பட்டது. இன்றைய திருச்சபையும் இயேசுவின் பெயரால் அதிகாரத்தோடு போதிக்க அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சபை இருப்பதும் வாழ்வதும் தனக்காகவல்ல, மாறாக, இயேசுவின் வழியாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்னும் உண்மைக்குச் சான்று பகர திருச்சபை அழைக்கப்படுகிறது. திருச்சiபின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இப்பொறுப்பில் பங்குண்டு.

No comments:

Post a Comment