Tuesday 22 December 2015

குழந்தையின் பெயர் !

''செக்கரியா என்ற அதன் பெயரையே குழந்தைக்குச் சூட்ட இருந்தார்கள்.
ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, 'வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்' என்றார்...
செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி,
'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார்'' (லூக்கா 1:60-63)


திருச்சபை வழக்கில் புனிதர்கள் நினைவாகத் திருவிழாக்கள் கொண்டாடுகிறோம். பொதுவாக இயேசு பிறந்த நாள் தவிர வேறு யாருக்கும் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில்லை; கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த புனிதர்களின் இறந்த நாளே அவர்களுடைய ''விண்ணகப்'' பிறந்த நாளாகக் கொண்டாடப்படும்.

ஆனால் அன்னை மரியாவும் திருமுழுக்கு யோவானும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இருவருக்குமே பிறந்த நாள் கொண்டாட்டம் திருச்சபையில் உண்டு. மரியா பிறந்த நாள் செப்டம்பர் 8ஆம் நாளும், திருமுழுக்கு யோவான் பிறந்த நாள் ஜூன் 24ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றன.

இதற்கு முக்கிய காரணம் மரியாவின் பிறப்பிலும் யோவானின் பிறப்பிலும் கடவுளின் வல்லமை தனிப்பட்ட முறையில் வெளிப்பட்டதுதான். பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது அவர்களுடைய முன்னோரின் பெயரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் நிலவியது.

முதுவயதில் பிறந்த குழந்தை ஆதலால் செக்கரியா என்று தந்தையின் பெயரையே குழந்தைக்கும் சூட்டலாம் என எல்லாரும் எண்ணிய வேளையில் அதன் தாய் மட்டும் ''குழந்தைக்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' (லூக் 1:60) எனக் கூறுகிறார்.

 வானதூதரும் அவ்வாறே ''யோவான்'' என்னும் பெயரைக் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் எனக் கேட்டிருந்தார் (லூக் 1:13). ஆனால், வானதூதர் அறிவித்த செய்தியை நம்ப மறுத்ததால் ''பேச்சற்றவராய்'' இருந்த செக்கரியா எழுது பலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ''இக்குழந்தையின் பெயர் யோவான்'' என எழுதுகிறார் (லூக் 1:63).

இவ்வாறு, வானதூதர் வழியாக அறிவிக்கப்பட்டு, எலிசபெத்தால் ஏற்கப்பட்ட பெயரை செக்கரியாவும் ஏற்ற பிறகுதான் ''செக்கரியாவின் வாய்திறந்து நா கட்டவிழ்ந்தது'' (லூக் 1:64).

 இழந்த பேச்சுத் திறனை மீண்டும் பெற்ற செக்கரியா மகிழ்ச்சியால் அக்களித்திருப்பார். அந்த மகிழ்ச்சி அவருடைய நாவில் ''கடவுளின் புகழாக'' உருவெடுக்கிறது: ''அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்'' (லூக் 1:64). கடவுள் நமக்கு வழங்கும் செய்தியை ஏற்க நாம் தயக்கம் காட்டுகின்ற நேரங்கள் உண்டு. அப்பொழுது நம் இதயத்தில் கடவுளுக்கு இடமளிக்க நாம் மறுக்கின்றோம்.

நம் இதயக் குரல் அடங்கிவிடுகிறது. ஒருவிதத்தில் நாம் செக்கரியாவைப் போல ''பேச்சற்றவர்களாக'' மாறிவிடுகின்றோம். மீண்டும் நம் உள்ளம் திறந்து கடவுளை நாம் அங்கே வரவேற்கும்போது நம் இதயம் மகிழ்ச்சிப் பாடல் இசைக்கத் தொடங்குகிறது; நாம் கடவுளின் புகழைப் பாடுகின்றோம்.

''யோவான்'' என்னும் பெயர் ''கடவுள் இரக்கம் காட்டினார்'' என்னும் பொருளைத் தரும். எனவேதான் அப்பெயரை ''அருளப்பன்'' எனத் தமிழாக்கம் செய்தனர். கடவுளின் அருளும் இரக்கமும் நம்மில் துலங்கி மிளிர வேண்டும் என்றால் நம் இதயத்தைத் திறந்து கடவுளுக்கு அங்கே நாம் உறைவிடம் அளித்திட வேண்டும். அப்போது நம் வாழ்வு முழுவதும் இறைபுகழாக ஊற்றெடுத்து வழிந்தோட நாமும் செழுமை பெறுவோம்.

ஒரு பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், அதன் இயல்பு மாறாதே என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், விவிலியப் பார்வையில் பெயர் என்பது பொருள் வாய்ந்தது. ஒரு மனிதனின் ஆளுமையையும், பணியையும், அவரது வாழ்வின் இலக்கையும் குறித்து நிற்பது. எனவேதான், விவிலிய மாந்தர் பலருக்கும் கடவுளே பெயர் சூட்டுவதைப் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அவ்வாறே செக்கரியா-எலிசபெத் தம்பதியரின் குழந்தைக்கும் இறைத் திருவுளத்தின்படியே பெயர் சூட்டப்படுகிறது. தாயின் வயிற்றிலேயே இறையருளைப் பெற்றதாய் இருந்தது அக்குழந்தை.

 இறைமகன் இயேசுவைத் தன் திருவயிற்றில் சுமந்த மரியாவின் வாழ்த்தொலி கேட்டு, துள்ளி மகிழ்ந்தது அக்குழந்தை. பின் வரும் நாள்களில் ஆண்டவர் இயேசுவின் முன்னோடியாய் பணி செய்து, இறையருளை அறிவிக்கும் குரலொலியாய் இருக்கப் போவது அக்குழந்தை. எனவே, அக்குழந்தை யோவான் என அழைக்கப்பட வேண்டும் என்பதே இறைத் திருவுளம்.

அதன்படியே, அதன் தாய், தந்தை இருவருமே யோவான் என்னும் பெயரையே முன்மொழிகின்றனர். நமது குழந்தைகளுக்கும் நாம் நல்ல பெயர்களைச் சூட்ட வேண்டும். கவர்ச்சியான, உச்சரிக்க இனிமையான பெயர்கள் என்று தெரிவுசெய்யாமல், வாழ்வின் இலக்கைச் சுட்டும், ஆளுமையை அறிவிக்கும் பொருளுள்ள நல்ல பெயர்களைக் கொண்டு அவர்களை அழைப்போம். நாமும் நமது பெயருக்கேற்ப வாழ்ந்து பெற்றோருக்கும், இறைவனுக்கும் பெருமை சேர்ப்போம்.



No comments:

Post a Comment