Wednesday 23 December 2015

வாழ்வு ஒரு பாடல்!

இயேசுவின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதா? இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டம் உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதா?

கிறிஸ்மஸ் விழாக்கள் உங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும், குறிப்பாக நீங்கள் விரும்பாதவைகள் குருக்கிடும்போது இறைவனைப் புகழ்ந்து, நன்றி செலுத்தி மகிழ்ந்து கொண்டாட முடிகிறதா?

செக்கரியா இயேசுவின் பிறப்பில் உண்மையான மகிழ்ச்சியை கண்டார். ஆகவே அவர் மகிழ்ந்து
பாடிய பாடல் இது. தன் வாழ்நாளில் பல இழப்புக்களைச் சந்தித்தார். பல அவமானங்களை, பழிச் சொற்களைக் கேட்டார்.கடவுளின் சாபமாகக் கருதப்பட்ட குழந்தை இல்லாத நிலையால் மனம் நொந்து நொடிந்து வாழ்ந்தார்.


 ஆயினும் கடவுளைவிட்டு ஒருபோதும் பிரியவில்லை. எல்லாவற்றையும் நல்லது என்றே கண்டார். தன் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சியிலும் நல்லவற்றையே தன் மனதில் கொண்டார். தான் விரும்பாதவற்றிலும் கூட, அதில் மறைந்திருக்கும் நல்லவற்றைத் தேடி கண்டு, அதிலே மகிழ்ந்து ஆண்டவனுக்கு நன்றி கூறி பாடிய பாடல் இது.

செக்கரியாவின் இந்த அணுகுமுறையை நம் வாழ்வில் கடைபிடிக்க முயல்வோம். எதிலும் நல்லது ஒன்று மறைந்திருக்கும், புதைந்திருக்கும். அங்குதான் ஆண்டவன் அமைதியையும் மகிழ்ச்சியையும் மறைத்து வைத்துள்ளார்.

அதைக் கண்டுபிடித்து வாழ்வதுதான் திறமை. ஆன்மீகம் நிறைந்தவர்கள், ஆண்டவனோடு தொடர்புடையவர்கள் எளிதில் இதை கண்டுபிடிப்பர். அவர்களுக்கு எங்கும் எதிலும் என்றும் எல்லாம் இன்பமே, மகிழ்ச்சியே. வாழ்வே இனிய பாடல்தான்.

No comments:

Post a Comment