Tuesday 10 November 2015

ஒருவனாயிரு!

''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'
என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13).

நாளைய  நற்செய்தியில் நாம் காண்பது   இயேசு தம் பணிக்காலத்தின்போது பல மக்களுக்கு நலமளித்தார். அவ்வாறு நலமடைந்தவர்களுள் தொழுநோயாளரும் இருந்தார்கள். இன்று நாம் தொழுநோய் என அறிவியல் முறையில் கருதுவது மட்டுமல்லாமல், எந்த விதமான தோல் நோயும் அக்காலத்தில் தொழுநோய் எனவே அழைக்கப்பட்டது.

இயேசு மக்களுக்குக் குணமளிக்கிறார் என்னும் செய்தியைக் கேட்ட பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகி அவர் தங்களைக் குணமளிக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறார்கள்; ஆனால் யூத சட்டப்படி அவர்கள் தங்கள் நோய் பிறருக்குப் பரவிவிடாமல் இருக்க தூரத்தில்தான் நிற்க வேண்டும்.


அவர்கள் பிற மக்களோடு தொடர்புகொள்ளக் கூடாது என்னும் சட்டம் இருந்ததால் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்டுத்தான் வாழ வேண்டியிருந்தது. இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர் இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு நினைத்தால் தங்களுக்குக் குணமளிக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களுக்குக் குணமளிக்கிறார்.

 பத்துப் பேர் நோய்நீங்கப் பெற்ற பிறகும் ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இவ்வாறு வந்தவர் அக்காலத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்ட சமாரியர் என்பது வியப்புக்குரியதே. ஆனால் இயேசு இந்தத் தாழ்த்தப்பட்ட மனிதரின் நம்பிக்கையைப் போற்றி உரைக்கிறார். ''உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்று பாராட்டிப் பேசுகிறார் (காண்க: லூக்கா 17:19).

இங்கே ''நலம்'' என வருகின்ற சொல்லுக்கு உடல் நலம் தவிர, உள நலம், ஆன்ம நலம், மீட்பு என்னும் ஆழ்ந்த பொருள் உண்டு. இயேசுவின் அருளால் உடல்நலம் பெற்ற சமாரியர் கடவுளோடு நல்லுறவு அடைந்தார். நன்றியோடு கலந்த மகிழ்ச்சியை அச்சமாரியர் அடைந்தார். கடவுளின் அன்பினை அவர் தம் உள்ளத்தில் அனுபவித்தார். இயேசுவின் சீடராகிய நாமும் நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்றால் நம் பிணிகள் யாவும் நீங்கிப் போக, நாம் ''முழு நலன்'' அடைவோம். இந்த அனுபவத்தைப் பெறுவோர் உண்மையில் பேறுபெற்றவர்களே'.


நீ அந்த ஒரு ஆளா? அல்லது ஒன்பது ஆட்களில் ஓருவனா?, ஒருத்தியா? நம் இறைவன் ஆள் பார்த்து தம் ஆசீரை வழங்குபவர் அல்ல. தன் பேரருட் பெருந்தன்மையால் எல்லோருக்கும் வாரி வழங்குகிறார். "அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்." (மத் 5 :45).


அவர் உனக்குச் செய்துள்ள நன்மைகளைச் சற்று அமர்ந்து சிந்தித்துப் பார். தினமும் உனக்கு, உன் குடும்பத்திற்கு அவர் தரும் ஆசீரையும் அருட்கொடைகளையும் நினைத்துப் பார். தொழுநோயைக் குணமாக்கினால்தான் கடவுள் உன்னில் செயல்படுவதாக நினைக்காதே. ஜலதோஷம், தும்மல், இருமல் இல்லாமல் உன்னைக் காப்பதும் அந்த தெய்வமே என்பதை உணர்ந்து கொள்.


இப்படி சிறியது முதல் பெரியது வரை பல நன்மைகளைப் பெற்றும் இறைவனைப்பற்றிய நினைவே இல்லாமல் வாழும்போது நீயும் அந்த ஒன்பதுபேரில் ஒருவன். நாளும் நம்மைக் காத்துவரும் நல்ல தேவனை, தினமும் கொஞ்சம் நேரம் போற்றிப் புகழ வேண்டும். இதைச் செய்யும்போது, நீயே அந்த ஒருவன். சுகம் கிடைத்ததும், வாழ்க்கைத் தரம் உயர்ந்ததும் வாரம் ஒருமுறையேனும் அந்த இறைவனை தேடி வந்து போற்றி புகழவில்லையென்றால், நீ அந்த ஒன்பதில் ஒருவன். வளம் நிறைந்த வேளையில் வாழ்வு தந்த தேவனை மறந்துவிடாமல் நன்றி சொல்ல அவர் பாதம் வந்தால், நீயே அந்த ஒருவன்.


ஆக ,ஒருவனாயிரு. ஒன்பதில் ஒருவனாகிவிடாதே.

No comments:

Post a Comment