Sunday 15 November 2015

ஒரு பொருள் இல்லை!

''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' (லூக்கா 18:42).

நாளைய நற்செய்தி நம் முன் எடுத்து வைக்கும் கருத்து இதுவே அதாவது  "ஒரு பொருள் இல்லை" என்றால் நாம் எவ்வளவு  சலித்துக்கொள்கிறோம். ஆனால்,இந்த நற்செய்தியில் வரும் பார்வை அற்றவரோ கண் இல்லை என்றால் என்ன காது,கைகள்,கால்கள் இருக்கின்றனவே என்று சந்தோசமாக வாழ்கிறார்.



கண் மட்டுமே செயலிழந்திருந்தது. "மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார்." (லூக் 18'36) காதைப் பயன்படுத்துகிறார். "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்." (லூக் 18'39) உரக்க கத்த தன் வாயை, தொண்டையை,உயிர் மூச்சை பயன்படுத்துகிறார்.

எரிக்கோ நகரத்து நடை பாதை அவனது மாளிகை. வருவோர் போவோர் கொடுத்த உணவும் பணமும் அவனை ஊட்டியது.கண் பார்வை இருண்டிருந்தது. ஆனாலும் வாழ்கைப் பாதை இருண்டிட அனுமதிக்கவில்லை. கிடைத்த இந்த வாழ்விலும் நிறைவடைந்து வாழ்ந்தான்.பெற்றுள்ள பிற புலன்களைப் பயன்படுத்தினான். நிறைவைத் தேடினான்.

இது இல்லையே,அது இல்லையே  என்று குறைபட்டுக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுதும் குறை சொல்லி வாழ்வும் குறைந்துகொண்டே போய்விடும். இருப்பதில் நிறைவுடன் வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் நிறைவாக இருக்கும்.


ஒரு புலனை இழந்ததால் துவண்டுவிடவில்லை. இருப்பதில் நிறைவடைந்து அவற்றைப் பயன்படுத்தி முழுமைகாண முயல்கிறார்.இறைவனும் அவனது முயற்சியை ஆசீர்வதிக்கிறார்.

ஒரு பொருள் இல்லை என்றால் எவ்வளவு சலித்துக்கொள்கிறோம்.ஆசைப்பட்டதை அடைய முடியவில்லையென்றால் ஆதங்கப்படுகிறோம். இருப்பதில் நிறைவடைந்து அவற்றைப் பயன்படுத்தி ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனநிறைவடைவோம். வாழ்க்கை இனிக்கும்.

No comments:

Post a Comment