Wednesday 18 November 2015

உன்னைத் தேடி!

''கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' (லூக்கா 19:44).

இயேசு கண்ணீர் விட்டு அழுத மூன்று நிகழ்வுகளைப் புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறது. அவற்றுள் ஒன்றுதான் எருசலேம் நகரையும், கோவிலையும் பார்த்து அவர் அழுதது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள் இறைவனின் கோவில் அங்கே இருந்தாலும்கூட, இறைவனைவிட்டு வெகு தொலைவில் வாழ்ந்ததற்காக மனம் வருந்தி அவர் அழுதார்.

அது மட்டுமல்ல, கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை என்ற பரிதாப நிலையையும் மனதில் கொண்டு அவர் அழுதார்.

ஒருவேளை இன்று இயேசு நமக்காகவும்கூட அழலாம். இறைவன் நம்மைத் தேடிவந்து, அருளாசிகள் பல பொழிந்து, நன்மைகளால் நம் வாழ்வை நிரப்பியிருந்தும்கூட, நாம் அவரைக் கண்டுகொள்ளாமல், புறக்கணித்த காலங்களுக்காக இயேசு அழலாம்.

நாமே அந்த எருசலேம் என்பதை உணர்வோம். நமது வாழ்வில் பல்வேறு சூழல்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக இறைவன் நம்மைத் தேடிவருகிறார், அறிவுரைகள் தருகிறார், எச்சரிக்கையும் தருகிறார் என்பதை மறந்துவிட வேண்டாம்.


இயேசு உன்னைப் பார்த்து அழலாம். தப்பு இல்லை. உன் ஊரைப் பார்த்தும் அழலாம் பிரச்சினை இல்லை. இயேசு இரண்டு முறை அழுததாக நற்செய்தி நூல்கள் சான்றுபகர்கின்றன. யோவான்11:35 "அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்." இரண்டாவதாக லூக்கா 19:41, "இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்."

இலாசரின் கல்லறையில் அழுதபோது வேதனை இருந்தபோதும் மகிழ்ச்சியில் அழுதார். கடவுளின் மாட்சி வெளிப்படும் (யோவா 11:4) என்பதாலும் இலாசர் உயர்த்தெழுவான் (யோவா 11:11) என்ற நம்பிக்கையிலும் ஆனந்தத்தில் அழுதார்.

எருசலேமை நோக்கி அழுத போது வேதனையில் அழுதார்.விரக்தியில் அழுதார். "கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" என்பதால் அழுதார். இஸ்ராயேலரின் இறைவன் அந்த மக்களுக்குச் செய்தவைகளை எல்லாம் நினைத்து அழுதார்.

அனுப்பிய அரசர்கள், இறை வாக்கினர்கள், நீதித்தலைவர்கள் அனைவரையும் நினைத்து அழுதார். அம்மக்கள் படப்போகும் வேதனை, அந்நகர் சந்திக்க இருக்கும் அழிவு இவைகளை நினைத்து அழுதார். நன்றிகெட்ட மக்களை நினைத்து அழுதார்.

இப்படிதான் அழக் கூடாது. இலாசருக்கு அழுததுபோல அழுதால் நல்லது. முதல் வாய்ப்பு கிடைக்க பார்த்துக்கொள்வோம். இரண்டாது நிலை வருவதைத் தவிர்த்துவிடுவோம்.

நாமும் இயேசுவுக்காக வாழ வேண்டும் .  அப்போதுதான் இயேசுவும் நம்மோடு இருப்பார். 

No comments:

Post a Comment