Thursday 19 November 2015

ஆழ்ந்த உறவு!

"'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' ... ஆனால் நீங்கள் இதைக்
கள்வரின் குகையாக்கினீர்கள்'' (லூக்கா 19:46).

இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரைத் துரத்தியடித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் உண்டு. இருப்பினும், லூக்கா நற்செய்தியில் இந்நிகழ்ச்சி பற்றி வருகின்ற சில குறிப்புகள் கவனித்தக்கன. இந்நிகழ்ச்சியை லூக்கா மிகச் சுருக்கமாகவே தருகிறார்.

இயேசு சாட்டை பின்னி வியாபாரிகளை அடித்துத் துரத்தியதாகவோ, நாணயம் மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்துப்போட்டதாகவோ லூக்கா கூறவில்லை. மாறாக, பண்டைக் கால இறைவாக்கினர்களாகிய எசாயா, எரேமியா என்பவர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த கருத்துக்களை எடுத்துக்காட்டுகிறார் இயேசு.

கோவில் என்பது வழிபாட்டு இடம். அது ''இறைவேண்டல் வீடு'', அதாவது கோவிலுக்குச் செல்லும் மக்கள் கடவுளை நோக்கித் தம் மன்றாட்டுகளை எழுப்ப அங்கே செல்கிறார்கள் (காண்க: எசா 56:7). மாறாக, ''கள்வரின் குகை''யில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற ''வியாபாரப் போக்கு'' நிலவும் (காண்க: எரே 7:11). கடவுளின் இல்லம் கள்வரின் குகையாக மாற்றப்படலாகாது என்று இயேசு கூறியதன் பொருள் என்ன?


கடவுளின் இல்லம் ஒரு புனிதமான இடம். அங்கே செல்கின்ற மக்கள் கடவுளைச் சந்தித்து இறையனுபவம் பெறும் நோக்கத்தோடுதான் போகிறார்கள். இறையனுபவம் என்பது கோவிலில்தான் கிடைக்கும் என்பது முழு உண்மையல்ல என்றாலும், கடவுளுக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் தனித்தன்மை வாய்ந்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.

இடத்தின் புனிதம் அந்த இடத்தில் நாம் சந்திப்பவரின் புனிதத்தில் பங்கேற்கிறது. எனவே, இறைவனுக்கென்று குறிக்கப்பட்ட இடங்களை மரியாதையோடு அணுகுவது என்றுமே இருந்துவந்துள்ளது. கள்வரின் குகை என்றால் அங்கே நடக்கின்ற செயல்கள் முறைகேடானவை என்னும் பொருள் பொதிந்துள்ளது.

கள்வர் கொள்ளையடித்த பணத்தையும் பொருளையும் பகிர்ந்துகொள்ளும் இடம் புனித இடத்திற்கு நேர்மாறானது. அக்குகையில் நீதி நேர்மை போற்றப்படும் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இயேசு கடவுளின் இல்லத்தைத் தூய்மைப்படுத்தி அதை மீண்டும் கடவுளுக்கு உரிய இடமாக மாற்றுகின்றார்.

லூக்காவின் பார்வையில், இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தி, அதைத் தம் இடம் என உரிமைகொண்டாடுகிறார். ''இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார்'' (லூக்கா 19:47) எனக் கூறும் லூக்கா இயேசு தம் சொந்த இடமாக எருசலேம் கோவிலைக் கருதினார் என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறார்.

 பகலில் கோவிலில் கற்பித்த இயேசு இரவில் ஒலிவ மலைக்குச் சென்று இறைவேண்டல் செய்வது வழக்கம் (காண்க: லூக் 22:39-42). மக்களுக்குப் பணிபுரிவது கடவுளோடு நாம் கொள்கின்ற ஆழ்ந்த உறவு என்னும் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment