Friday 20 November 2015

மரியாள் உறவின் பாலம்!

 இந்த விழா ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21 ம் தேதி, கொண்டாடப்படுகிறது. எருசலேமில் கி.பி.543 ல், நவம்பர் 21 ம் நாள், சாந்தா மரியா நோவா ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டது. இந்த திருவிழா தான், அன்னை மரியாள் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருவிழாவைக் கொண்டாடுவதற்கு ஆதாரமாக இருக்கிறது.


இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம்  காணிக்கை அன்னையின் பெயரை தாங்கிய காணிக்கை மாதா அருட்சசகோதரிகள்  நாளை தங்களது சபை விழாவை கொண்டாட இருக்கிறார்கள்.இந்த சபை   கோவை மறைமாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டுள்ளது.

மேலும்   இச்சபை கோவையை தலைமை இடமாகவும்
 கொண்டுள்ளது. கோவையில் மட்டும் 52 மடங்கள் உள்ளன.ஆக காணிக்கை அன்னையின் பெயரை தாங்கிய இந்த சபையினருக்கு எனது திருவிழா வாழ்த்துக்களும் ஜெபங்களும்.

காணிக்கை அன்னை என்ற பெயரில் அழைக்கப்படும் அன்னை மரியாளின் பெயர், இந்த திருவிழாவில் பெறப்பட்டதுதான். இதற்கு விவிலிய ஆதாரங்களோ, இறையியலோ கிடையாது.

இது மரபின் அடிப்படையில் கொண்டாடப்பட்ட திருவிழாவாகும். இம்மரபின்படி, அன்னை மரியாள், அவளது மூன்றாம் வயதில், தன்னுடைய பெற்றோரால் மூன்று வயதில் கோவிலில் இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டாள்.

அன்றிலிருந்து, ஆலயத்தில் தங்கி, ஆண்டவரின் பணியைச்செய்வதற்கு உதவி செய்தாள் என்று இந்த பாரம்பரியம் சொல்கிறது. இந்த விழா, கி.பி. எட்டாம் நூற்றாண்டில், கான்ஸ்டான்டிநோபிளில் கொண்டாடப்பட்டதற்கான, சான்றுகள் உள்ளன.

மரபின் அடிப்படையில் என்பதால், திருத்தந்தையர்கள் இந்த திருவிழாவை அதிகாரபூர்வமாக்கத் தயங்கினார்கள். ஆயினும், திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இவ்விழாவினை வழிபாட்டு நாட்குறிப்பேட்டில் சேர்த்தார்.


ஆனால், மரியாள் எருசலேம் ஆலயத்தில் கன்னியாகவே வாழ்ந்தார், என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடையாது என்பது முற்றிலும் உண்மை. திருவழிபாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த, இரண்டாம் வத்திக்கான சங்கம், புனைக்கதைகளை ஒட்டி கொண்டாடப்படும் பல திருவிழாக்களை, திருவழிபாட்டிலிருந்து நீக்கியது. ஆனால், இந்த திருவிழாவை நீக்கவில்லை.

அன்னை மரியாள் சிறுவயதிலேயே, தன்னுடைய வாழ்வை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறார். சிறு வயதிலிருந்தே, ஆலயப்பணிகளில் தன்னை இணைத்துக்கொள்கிறாள்.

ஆண்டவரின் அடிமை, என்று சொன்ன அவளுடைய வார்த்தைகள், அந்த நேரத்தில் வந்தது அல்ல. அது தான் அவளது ஆன்மீகமாகவே இருந்தது. அந்த ஆன்மீகத்திற்கான அடித்தளம், இந்த விழாவிலிருந்து தான், அவளுக்குப்பிறக்கிறது. அதேபோல, நமது வாழ்விலும், கடவுளிடம் நாம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், நமது அனுபவத்தின் வெளிப்பாடான வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

பிறப்பால் , இரத்த உறவால் உறவுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. சொந்தமும் பந்தமும் அதே உறவின் எல்லையை சற்று அகலமாக்குகிறது. பழக்கங்கள் நட்புகள் இந்த வட்டத்தை இன்னும் சற்று விரிவடையச் செய்கிறது.ஆனால் பரிதாபம். இன்று பணம்தானே அத்தனை உறவுகளுக்கும் அடித்தளம். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துவது பணம்தானே.

சொத்தைக் கொடுத்தால்தானே தந்தை. அனைத்தையும் அள்ளிக்கொடுத்தால்தானே அம்மா. கொண்டு வந்தால்தானே மனைவி. கொடுத்து வாங்கினால்தானே உறவுகள். உதவினால்தானே நண்பன். இவ்வாறு உறவை, இரத்தத்தை விலைபேசும் இந்தச் சமுதாயம் சந்திக்கும் இடர்கள் ஏராளம் ஏராளம். பெற்ற தாயை, தந்தையை, உடன்பிறப்புகளை, உறவுகளை, நட்பை உதறி ஊதாரியாய் அலைகின்றவர்கள் ஏராளம், அலையவைப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

இச் சூழலில் நம் இறைவன் இயேசு உறவின் உச்ச நிலையை நமக்குஅன்னை மரியாளை வைத்து  அறிமுகம் செய்கிறார். கொள்வதும் கொடுப்பதும் அல்ல, பந்தமும் பாசமும் அல்ல.

இறை வார்த்தையில் தந்தை இறைவனின் திருவுளத்தை கண்டு கடைபிடித்து வாழ்வதில் உருவாகும் ஆன்மீக உறவே உயரந்தது. அங்கே மனித மாண்பும் மதிப்புறும், இறை அருளும் பெருகும். இத்தகைய இறை உணர்வில் உருவாகும் உறவு, மனிதனின் வாழவில் வசந்தத்தை எப்போதும் வீசச்செய்யும்.

இதற்காகத்தான் அன்னை மரியாளை உறவின் பாலமாக நமக்கு தாரை வார்த்து தருகிறார் இறைவன்.

தெய்வமே! இத்தெய்வீக உறவில் மனிதம் மலர்ந்து மணம்பரப்பும் நாள் வாராதோ!


உங்கள் அனைவருக்கும் காணிக்கை அன்னையின் திருவிழா  வாழ்த்துக்கள்!


1 comment:

  1. dear Akka today' thoughts about mother is good .by read this i have learned some thing newly. so thank you verymuch

    ReplyDelete