Friday 6 November 2015

வாழ்த்து!


"தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். ".உரோமை(16:16)

பொதுவாகவே வாழ்த்துக்களை பற்றி பார்த்தோம் என்றால் வாழ்த்துக்கள் பல வகைப்படும்.அவை யாவை ?
 
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    காதலர் தினம் வாழ்த்துக்கள்
    திருமண  நாள்  வாழ்த்துக்கள்
    பொங்கல் வாழ்த்துக்கள்
     உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
    காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
    காலை வணக்கம் வாழ்த்துக்கள்
    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
     தைப் பொங்கல்  வாழ்த்துக்கள்
    தீபாவளி வாழ்த்துக்கள்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ஆங்கிலப் புத்தாண்டு  வாழ்த்துக்கள்
    மாட்டுப் பொங்கல்  வாழ்த்துக்கள்
    பண்டிகை வாழ்த்துக்கள்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
    பெண்கள் தினம் வாழ்த்துக்கள்
    மாலை வணக்கம் வாழ்த்துக்கள்
    போகி பண்டிகை வாழ்த்துக்கள்

      ஆனால் நாளைய முதல் வாசகத்தில்  கூறப்படும் வாழ்த்துக்கள் மிக மிக வித்தியாசமானது.அந்த வித்தியாசமான வாழ்த்துக்களை தூய  பவுல் நமக்கு எவ்வாறு சுட்டிக்காட்டுகிறார் என்று பார்ப்போம்.

அவர் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் எந்த ஒரு வேறுபாடும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை.ஏனென்றால் ,முகமலர்ச்சியுடன் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பதே அவர் நோக்கமாக உள்ளது  நாளைய முதல் வாசகத்தில்.

வாழ்த்து தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் எந்நாளும் அவர்களுடன் சமாதானமாகவும் வாழ்கிறார். அதாவது போதிப்பதை வாழ்ந்தும் காட்டுகிறார்.எனக்கு தூய பவுலின் மனமாற்றத்தை படிக்கும் போதெல்லாம் என் மனமாற்றத்தையும் நான் மதம் மாரியதுமே ஞாபகத்திற்கு வரும்.

நான் கிறிஸ்துவை தழுவி துறவறத்தை மேற்கொண்டிருக்கும்  இந்நாள் வரைக்கும் எனக்கு நிறைய பேர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். என் பிறந்த நாள் வாழ்த்து,என் துறவற வார்த்தைபாட்டு நாள் வாழ்த்து ,என் படிப்பின் வாழ்த்து  மற்றும் என் பணியினால் பெற்ற வாழ்த்து இவைகள் எல்லாவற்றையும் விட எனக்கு பிடித்த வாழ்த்து நான் மதம் மாறி கிறிஸ்துவை தழுவிய அன்றைக்கும் இன்றைக்கும் வாழ்த்தும் என் ஊர் மக்களின் வாழ்த்து தான் என் வாழ்வின் மிகப்பெரிய வாழ்த்து.

ஏனென்றால் இன்று நான் இறைவார்த்தையை கொண்டு இந்த பதிவை எழுதுகிறேன் என்றால் அன்று என் மக்கள் எனக்கு ஊட்டிய வாழ்த்து என்னும் டானிக் தான்.  இந்த வாழ்த்து மேலோங்கவே இன்று  துறவற வாழ்க்கையை வாழ்த்தும்  அளவுக்கு வாழ்கிறேன்.

 அதுபோல அவரவர் அழைப்புக்கேற்றவாறு நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கீர்கள் ஆக தூய பவுல் உங்களையும் எல்லோரையும் ஒரே போலே தூய உள்ளத்துடன் வாழ்த்துகிறார்.

மேலும் அவர்  தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள் என்றும் கூறுகிறார்.தூய முத்தம் என்று சொல்லும் போது யூதாஸ் இயேசுவுக்கு கொடுத்த முத்தம் அல்ல.ஏனென்றால் அது  காட்டிக்கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தர்ப்ப முத்தம் அதில் தூய்மை இல்லை என்று இறைமகன் இயேசுவுக்கே தெரியும் .

எனவே, நாம் பிறருடன்  ஏற்படுத்தும்  ஒவ்வொரு நிகழ்வுகளையும்  தூயதாக மாற்றுவோம் அவ்வாறு தூயதாக இருக்கும் பட்சத்தில் கிறிஸ்து நம்மில் இருப்பார். நாமும் கிறிஸ்துவை பிறருக்கு கொடுக்க முடியும்.இதுவே நாம் பிறருக்கு கொடுக்கும் தூய முத்தம்.  


அவரின் வாழ்த்தில் எந்த ஒரு கவலையும் காண முடியவில்லை.மாறாக எல்லோரையும் சந்தோசமாக வாழ்த்துகிறார் என்பது நம் எல்லோருக்கும் தேர்ந்த ஒன்றே.பிறகு அவர் உள்ளொன்று வைத்து புறமொன்றும் பேசவில்லை வாழ்த்தவும் இல்லை அவரவருக்கு உரிய வாழ்த்தை திறந்த மனதுடனும் பரந்த மனப்பான்மையுடனும் தெரிவிக்கிறார்.  

நம்முடைய வாழ்த்தும்  சந்திப்பும் எப்படி இருக்க வேண்டும் என்றால் மரியாள் ,எலிசபெத் சந்திப்புகளும் ,வாழ்த்துக்களும் போன்று இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் வாழ்கையில் பிறருக்கு உண்மையான வாழ்த்துக்களையும் அர்த்தமுள்ள சந்திப்புக்களையும் கொடுக்க முடியும் .இதை தான் நாளை முதல் வாசகத்தில் தூய பவுலும் செய்தார் என்பதை உரோமையருக்கு எழுதிய திருமுகம் நமக்கு உரைக்கிறது.  

 ஆக, தூயதாக இருக்க கூடிய   பிறருக்கு நன்மை பயக்க கூடிய எல்லாவற்றையும் நாம் நமக்கும் பிறருக்கும் இன்றே செய்வோம்.வாழ்த்துவோம் .வாழ்த்துவோமா?
ஆம், வாழ்த்துவோம்,வாழ்வோம்  சகோதரர்களாக !சகோதரிகளாக!   



1 comment:

  1. Hi Thank you for sharing your personal experience and highlighting the meetings of Elizabeth and Mary.

    ReplyDelete