Monday 23 November 2015

அருங்குறிகள் !

''நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்'' (லூக்கா 21:8).

வாழ்க்கை பாதையை கடக்க அடையாளங்கள்,அருங்குறிகள் தேவை.ஆனால் அடையாளங்களும், அருங்குறிகளும் நமது கடவுள் பக்தியாக மாறக்கூடாது, ஏமாறவும் கூடாது.

அவ்வாறு இருக்கும் தறுவாயில் நாம் படைத்தவரையே எந்த ஊர் என்று கேட்கத்தான் தோன்றும்.

இயேசுவை நம்புவோம்.நாமும் இயேசுவால்  நம்பப்படுவோம் என்பதை அறிவோம்.

நாளைய  வாசகங்கள் நமக்கு உரைக்கும் உண்மை இதுவே.மனிதர் எளிதில் ஏமாந்துபோவதுண்டு. ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால் இயேசு தருகின்ற எச்சரிக்கையில் ஓர் ஆழ்ந்த பொருள் உள்ளது. கடவுளைப் பற்றியும் கடவுளின் பண்புகள் பற்றியும் நமக்குத் தெரியும் என நாம் நினைத்து, கவலையற்றிருந்தால் நாம் ஏமாந்துவிட்டோம் என்றுதான் பொருள்.

அதுபோலவே, கடவுள் பற்றிய எல்லாம் எனக்குத் தெரியும்; எனவே நான் கூறுவதைக் கேட்டு நான் கேட்டதைச் செய்யுங்கள் என்று பிறரிடம் கோருவதும் ஏமாற்றத்திற்கு வழியே. நம் உள்ளத்தைக் கடவுளிடமிருந்து திருப்பி, நம் மனம் போன போக்கில் செல்வதற்கு நமக்கு சோhதனைகள் எழுவதுண்டு. அத்தகைய ஏமாற்றத்திற்கு ஆளாகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 ஏமாற்றங்கள் ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் எதிர்பார்ப்புக்கள் முறையின்றி அமைவதும், நம் சொந்த சக்தியால் எதையும் சாதித்துவிடலாம் என்று நாம் நினைத்துச் செயல்படுவதுமே. இந்த மனநிலை மாற வேண்டும். இயேசுவின் வருகை நிகழப்போகின்ற நேரத்தைத் துல்லியமாக அறிந்துகொள்ள நம்மால் இயலாது. இயேசுவும் தம் வருகை பற்றிய காலத்தையும் நேரத்தையும் பற்றிப் பேச மறுத்துவிட்டார். அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம் இராது. நாம் விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் கோரிக்கை.

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இயேசுவின் காலத்திலும் நானே மெசியா, நானே விடுதலை தருபவர், காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் பலர் இருந்தனர். இயேசு அவர்களைப் பற்றி எச்சரித்தார். அவர்கள் பின்னே போகாதீர்கள். ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கிறார்.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயேசுவின் பெயரால், அற்புதங்கள். அருங்குறிகள் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஏமாறும் மக்களின் கூட்டமும் பெருகத்தான் செய்கிறது. ஏன் இந்த நிலை? அருங்குறிகளிலும், அடையாளங்களிலும் மக்களுக்கு இருக்கும் அதிகபட்ச ஆர்வம்தான் இந்த ஏமாற்றலுக்குக் காரணம்.

அருங்குறிகள் தேடாமல், இறைவார்த்தையின்படி வாழும் ஆர்வத்தை ஏன் நாம் மக்களுக்கு வழங்கக்கூடாது. அற்புதங்களை நாடாமல், நேர்மையாக, மாதிரியாக வாழ்கின்ற முறையை விவிலியத்திலிருந்து கற்றுக்கொள்வோம். யாரும் நம்மை ஏமாற்றாதவாறு விழிப்புடன் வாழ்வோம்.


ஆக,  இன்றோடு கேப்பையில் நெய் வடிகிறது என்பதை கேட்பதையும், நம்புவதையும் நிறுத்துவோம். எல்லாவற்றையும் நிறுத்துவோம்.

கடவுளையும் அவரின் வார்த்தைகளையும் நம்புவோம்.


No comments:

Post a Comment