Tuesday 17 November 2015

வட்டியோடு சேர்த்து!

''ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை?
நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே'' (லூக்கா 19:23).


மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ''தாலந்து உவமை'' (மத் 25:14-30) லூக்கா நற்செய்தியில் ''மினா நாணய உவமை'' என வருகிறது (லூக் 19:11-27). இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு விண்ணகம் சென்றார் என்றும், கடவுளின் மாட்சியில் வீற்றிருக்கிறார் என்றும் கிறிஸ்தவ சமூகம் நம்பியதை இந்த உவமையில் காண்கின்றோம்.


தொலை நாட்டிற்குப் புறப்பட்டுப் போய் ஆட்சி உரிமை பெற்றுவரச் சென்ற உயர்குடி மகன் (லூக் 19:12) இயேசுவைக் குறிக்கும் உருவகம். இவ்வாறு இயேசு தம் சீடர்களுக்குக் கட்புலனாகா வண்ணம் சென்றுவிட்டதால் சீடர்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களை விட்டுப் பிரிந்த தலைவர் ஆட்சி உரிமை பெற்று மீண்டும் வருவார்.


அவர் தம் சீடர்களுக்குப் பல கொடைகளை அளித்துச் செல்கிறார். அக்கொடைகளை (''மீனா'' என்னும் நாணயம்) பெற்ற சீடர்கள் அவற்றை நன்முறையில் பயன்படுத்தி, அவற்றைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். விழிப்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுகின்ற பணியாளர்களுக்குத் தலைவர் பெருந்தன்மையோடு பரிசளிப்பார் (லூக் 19:24).

ஆனால், கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளைப் பயன்படுத்தாமல் சோம்பேறியாய் இருப்போருக்கு ஒன்றுமே தரப்படமாட்டாது (லூக் 19:26).

 கடவுள் நமக்குத் தருகின்ற கொடைகள் பல. நம்மைப் படைத்துக் காத்துப் பேணிவருவது கடவுள் நமக்குத் தருகின்ற முதற்கொடை. கிறிஸ்துவின் வழியாக நம்மை மீட்டுத் தம் வாழ்வில் நமக்குப் பங்களிப்பது நம் உயிரைவிடவும் மேலான கொடை.


 மனித உறவுகளை வளர்த்துக் கொண்டு, ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாய் இருந்து, கடவுளின் அன்பை எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள நமக்குத் தரப்படுகின்ற வாய்ப்புக்களும் கடவுளின் கொடையே. இக்கொடைகளைப் பெறுகின்ற நாம் இயேசுவின் இரண்டாம் வருகையை நோக்கி விழிப்போடு எதிர்நோக்கிட அழைக்கப்படுகிறோம்.


 இறை மாட்சியோடு நம் அரசராகவும் நடுவராகவும் வரவிருக்கின்ற இயேசு எப்போது தோன்றுவார் என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், அவரது வருகைக்கு எப்போதுமே நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட கொடைகளை நன்முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கொடைகளை ''வட்டியோடு சேர்த்து'' நாம் கடவுளின் முன்னிலையில் திருப்பிக் கொடுக்க இயலும் (லூக் 19:23).

No comments:

Post a Comment